வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

விவசாயிகளுக்கு மிகப்பெரிய எதிரி என்றால் அது எலிகள் தான். வீட்டிலும், வயலிலும், தானிய சேமிப்பு கிடங்குகளிலும் எலிகள் புகுந்து நாசத்தை விளைவிக்கின்றன. உயிரினங்களில் மிகுந்த புத்திக்கூர்மையும், சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வதிலும் எலிகள் தனித்திறன் வாய்ந்தவை. ஒரு மனிதன் உண்ணும் உணவை ஆறு எலிகள் சேர்ந்து உண்டு அழிப்பதுடன் 20 மடங்கு உணவை வீணடிக்கவும் செய்கின்றன. இவ்வாறு அதிக சேதாரத்தை உண்டு பண்ணும் எலிகளை கீழ்க்கண்ட முறைகளில் கட்டுப்படுத்தலாம்.



வரப்பு வெட்டி அழித்தல்
நெல் அறுவடை முடிந்த ஒரு வாரத்திற்குள் வரப்பில் உள்ள ஈரத்தை கொண்டு வரப்புகளை வெட்டி எலிகளை அவற்றின் குட்டிகளுடன் பிடித்து அழிக்கலாம்.

விஷம் வைத்து அழித்தல்
எலிகள் சந்தேகப் பிராணிகள். தனக்கு வரும் ஆபத்தை எளிதில் கணிக்க வல்லவை. கூச்ச சுபாவம் உடையவை. தனக்கான உணவுப் பொருளில் திடீர் மாறுதல்களை கண்டால் அவற்றை தவிர்க்க கூடியவை. இது போன்ற நிலையில் விஷத்தை பயன்படுத்தும் முன்பாக அவற்றுக்கு அரிசிப்பொறி, கருவாடு, வதக்கிய வெங்காயம் போன்றவற்றை எலி நடமாடும் இடங்களில் அவ்வப்போது வைத்து பழகி வரவேண்டும். பிறகு இந்த உணவில், அதாவது 49 பங்கு உணவுப் பொருளுடன் 1 பங்கு சிங்க் பாஸ்பைடு என்ற அளவில் விஷ உணவு தயாரிக்க வேண்டும். உணவுப் பொருளுடன் அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை கலக்க வேண்டும். ஒரு ஏக்கரில் 30 இடங்களுக்கு குறையாமல் எலி நடமாட்டமுள்ள இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு கொட்டாச்சியில் 10 கிராம் என்ற அளவில் விஷ உணவை வைக்க வேண்டும். இது போல 15 நாட்கள் இடைவெளியில் 5 அல்லது 6 முறை வைத்தால் எலிகள் மடிந்து போகும்.

கிட்டி வைத்து பிடித்தல்
தஞ்சாவூர் கிட்டிகள் அல்லது மூங்கில் கிட்டிகள் ஏக்கருக்கு 20 எண்களை நிலத்தில் வைக்கவும். நிலத்தில் ஓர் அங்குலம் தண்ணீர் இருக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கிட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள் - புதிய தொழில் வாய்ப்பு


கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்ற பயிர்கள் சிறுதானியப் பயிர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தானியங்களில் அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதை விட 7 முதல் 12 சதம் புரதமும், 1.3 முதல் 4.7 சதம் வரை கொழுப்பு போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது தவிர சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாவுச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுதானியங்களின் மகத்துவத்தை அறிந்த சில சுயஉதவிக்குழுவினர் இந்த தானியங்களை தனித்தனியாக வாங்கி இடித்து மாவாக்கி அதனை தோசை மற்றும் புட்டு மாவாக விற்பனை செய்து வருகின்றனர். வளர்ந்த நகரங்களில் உள்ள சிறிய உணவகங்கள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை சிறுதானிய உணவுகளுக்கு தற்போது புதிய சந்தை ஏற்பட்டுள்ளது. இந்த தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் சிறுகுழந்தைகள், பெரியவர்களின் உடல் நலனுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சிறுதானியப்பயிரின் உற்பத்தியை பெருக்கி விவசாயிகள் அதிக லாபத்தை காணமுடியும். 

கேழ்வரகு
கேழ்வரகு மானாவாரி மற்றும் குறைந்த நீரைப் பயன்படுத்தி பயிரிடப்படக் கூடிய ஒரு பயிராகும். ஆண்டு முழுவதும் நல்ல விளைச்சல் தருவது இதன் சிறப்பம்சம். தமிழக கிராமப்புற மக்களின் உணவில் கேழ்வரகு முக்கிய இடம் வகிக்கிறது. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் பருமன், இதயநோய்களை கட்டுக்குள் வைக்கிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையுள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. குடலில் ஏற்படும் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகிறது. உடலுக்கு தேவையான மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பிற நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை தவிர்க்கிறது. 

தினை
மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் தினை முக்கியமானது. மிகவும் கடினமான வறட்சியைக் கூட தாங்கி வளரக்கூடியது. பலவகையான மண் வகையிலும் நன்கு வளரும் தன்மை உடையது. மண்வளம் குறைவான நிலங்களிலும் கூட தினை வளர்ந்து பலனை அளிக்கிறது. மனித நாகரீகம் தோன்றிய தொடக்க காலத்திலிருந்தே உடல் பலத்தை தரும் முக்கிய உணவாக தினை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தேனும், தினைமாவையும் கலந்து சாப்பிடும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே காணப்படுகிறது.

நல்ல லாபம் தரும் எளிய தொழிலான வண்ணக்கோழி வளர்ப்பு



சிறிய இடம் இருந்தால் கூட அதில் ஒரு லாபகரமான தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். வண்ணக் கோழி வளர்ப்பு இத்தகைய ஒரு தொழில் வாய்ப்பு ஆகும். நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக் கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வண்ணக் கோழி இனங்கள் பார்ப்பதற்கு நாட்டுக் கோழி போன்றே காணப்படும். ஆனால் இவற்றுக்கு நாட்டுக் கோழிகளை விட பல சிறப்பான இயல்புகள் உண்டு. குறிப்பாக இந்த வகை கோழிகளுக்கு கரையான்களை உணவாக பயன்படுத்துவதன் மூலம் இவை எளிதில் அதிக புரதச்சத்தை பெற்று வேகமாக எடை அதிகரிக்கும். இந்த கோழிகளை புறக்கடையில் வளர்ப்பதன் மூலம் வீட்டில் உள்ள பெண்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், நிலமற்ற விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோர் பொருளாதார வளத்தை பெறலாம்.

சிறப்பு அம்சங்கள்

வண்ணக் கோழி வளர்ப்பில் ஈடுபடும் முன்பு அவற்றின் சிறப்பம்சங்களை அறிந்து கொள்வது நல்லது. 

1. நாட்டுக் கோழிகளை விட துரிதமாக எடை கூடும்.
2. நாட்டுக் கோழி இறைச்சியின் சுவையை விட அதிக சுவையுள்ளது.
3. எல்லா இடங்களிலும், எல்லா தட்பவெப்ப நிலைகளையும் தாங்கி வளரக் கூடியது.
4. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
5. அதி நவீன வளர்ப்பு முறைகளை பயன்படுத்தி வளர்க்க தேவையில்லை. சாதாரண நாட்டுக் கோழி போல் புறக்கடை வளர்ப்பாக வளர்க்க முடியும்.
6. நாட்டுக் கோழிகளை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியும், அதிக முட்டைகள் இடும் திறனும் கொண்டது. இதன் முட்டைகள் நாட்டுக் கோழி முட்டைகளை போலவே பழுப்பு நிறம் கொண்டதால் நாட்டுக் கோழி முட்டைகளின் விலைக்கே விற்பனை செய்யலாம்.

கரையான் உணவு
கரையான்களில் 36 சதவிகிதம் புரதம், 44 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. இவை இரண்டும் கோழியின் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும். கரையான்களை உணவாக கொடுப்பதால் கோழிகளின் வளர்ச்சி விகிதம் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது. இதனால் தீவனச் செலவு பெரும்பகுதி குறைந்து விடும். கரையான்களை வீட்டின் அருகிலேயே உற்பத்தி செய்யலாம். கிழிந்த கோணிப்பை, பழைய துணி, காய்ந்த மாட்டு சாணம், உலர்ந்த இலை, இற்றுப் போன மரக்கட்டைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மண்பானைக்குள் போட்டு அந்த பானையில் அடைத்து, நீர் தெளித்து தரையில் கவிழ்த்து வைக்கவும். 24 மணி நேரத்தில் இதில் கரையான் உற்பத்தி ஆகி இருக்கும். 

உற்பத்தி ஆவதில்லை
கரையான்களில் உற்பத்தியானது அடைமழைக் காலங்களில் மட்டும் பாதிக்கப்படுவதுண்டு. இது தவிர பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட இடங்களில் கரையான்கள் உற்பத்தி ஆவது இல்லை. இது தவிர, எறும்பு புற்று அதிகமாக உள்ள இடங்களிலும் கரையான்கள் உற்பத்தியாகாது. எனவே, கரையான்களை உற்பத்தி செய்ய முற்படும் போது இது போன்ற இடங்களை தவிர்க்க வேண்டும். 

மழை இல்லாத கோடையிலும் விவசாயம்



எதிர்பாராத வறட்சி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. வறட்சி வரும் என்பதை கணித்து அதில் இருந்து பயிர்களை தற்காத்துக் கொள்ள நமது முன்னோர்கள் பல உத்திகளை கையாண்டுள்ளனர். அதில் பண்ணைக் குட்டைகள் என்ற நீர் சேமிப்பு குழிகளும் ஒரு வகை உத்தி ஆகும்.

மழை காலத்திலும், கோடை மழை காலங்களிலும் பெய்யும் மழைநீரை பண்ணைகுட்டை எனப்படும் குழிகளில் தேக்கி வைத்தனர். வறட்சி காலத்தில் பயிர்களுக்கு இதில் சேமிக்கப்பட்டிருக்கும் நீரை பயன்படுத்தியுள்ளனர்.சில நேரங்களில் இதே குழிகளில் விவசாய கழிவுகளை மக்க வைத்து உரமாக மாற்றி இயற்கை உரமாக பயிர்களுக்கு அளித்து நல்ல மகசூலையும் பெற்று வந்துள்ளனர்.

வேளாண்மையின் உயிர்நாடிகள்
போதிய நீரும், வளமான மண்ணும் வேளாண்மையின் உயிர் நாடி ஆகும். புவியியல் அமைப்பு அடிப்படையில் தமிழகம் மிகக் குறைந்த நிலத்தடி நீரை கொண்டதாக இருக்கிறது. மழைநீரை நம்பித்தான் பெரும்பாலான விவசாயிகள் பயிர் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. பொதுவாக, மானவாரி நிலங்களில் மழைநீரை சேமித்து பயிர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. மேலும், அதிக மழை பொழியும் காலங்களில் நிலத்தில் விழுந்து ஓடும் மழைநீரும் அதனால் ஏற்படும் மண்அரிமானமும் மண்ணின் வளத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி வழிந்து ஓடும் நீரை கட்டுப்படுத்த வயல் தோறும் ஒரு பண்ணைக்குட்டையை அமைக்கலாம். குறிப்பிட்ட நீள, அகல மற்றும் ஆழத்தில் அமைக்கப்படும் இந்த அமைப்பில் மழை நீரை சேமித்து வைப்பதன் மூலம் பயிரிடப்படும் நிலங்களில் மண் அரிப்பை தடுக்கலாம்.

எருக்குழி
மழை பெய்யும் போது, நிலத்தில் வழிந்தோடும் நீரால் பயிரிடப்படும் மண்ணில் உள்ள சத்துக்கள் நீரால் அரித்து செல்லப்படும். அப்போது அந்த மண்ணில் பயிரிட தேவையான சத்துக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். அப்போது, நிலத்தில் மக்கு மற்றும் தொழுஉரங்களை இட்டு மீண்டும் மண்ணில் பயிர் செய்வதற்கான போதிய சத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது. 

பொதுவாக, இது போன்ற நிலைகளில் விவசாயிகள் அவசர நிலை கருதி நன்கு மக்காத எருவை வயலில் இடுவார்கள். அப்போது, அந்த மக்காத எருவில் இருக்கும் களைவிதைகளும் நிலத்தில் விழுந்து முளைக்க தொடங்குகின்றன. இந்த நிலையில் முக்கிய பயிரை சாகுபடி செய்யும் போது அதனுடன் சேர்ந்து நிலத்தில் முளைத்திருக்கும் களைகளும் உணவுக்கும், ஊட்டச்சத்திற்கும் போட்டி போடுகின்றன. இதனால் மகசூல் குறைகிறது. 

ஏக்கருக்கு 80ஆயிரம் தரும் கருவேப்பிலை



கருவேப்பிலை இல்லாத சமையல் இருக்காது. கருவேப்பிலை சாகுபடி எப்போதும் நல்ல லாபம் தருவதாக இருக்கிறது. தொடக்கத்தில் பயிரிட்டு வளர்ப்பது கடினம் போல் தோன்றினாலும், வளர தொடங்கி விட்டால் விவசாயிகளை வியாபாரிகள் நிலத்திற்கு தேடிவந்து எடை போட்டு பணத்தை கொடுத்து வாங்கி செல்கிறார்கள். கருவேப்பிலை களர்நிலம் தவிர மற்ற நிலங்களில் நன்றாக வளரக்கூடியது. செம்மண்ணில் சிறப்பாக வளரும். விதைகளை சேகரித்து எடுத்துக் கொண்டு சிறிய பாலிதீன் பைகளில் மண்நிரப்பி அதில் விதைகளை ஊன்ற வேண்டும். ஆடி மாதத்தில் விதை வாங்கி வந்து நாற்று விட்டு, ஐப்பசி மாதத்தில் வயலில் எடுத்து நட வேண்டும். ஆடி மாதத்தினை தவிர மற்ற காலங்களில் விதை எடுக்க கருவேப்பிலை பழங்கள் கிடைக்காது. விதை ஊன்றும் போது அரை விதை மண்ணின் உள்ளேயும், மீதி விதை வெளியேயும் இருக்குமாறு ஊன்ற வேண்டும். விதை சற்று ஆழமாக மண்ணிற்குள் புதைந்து விட்டால் முளைக்காமல் போய்விடும். ஏக்கருக்கு எட்டாயிரம் பாலிதீன் பைகள் கொண்ட விதை நாற்றுகளை தயார் செய்யலாம். இப்படி விதை ஊன்றப்பட்ட பைகளின் மேல் வைக்கோலினை பரப்பி 15 நாள்கள் வரை வைக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு பிறகு வைக்கோலினை நீக்கி விட வேண்டும். தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை நீர் விட்டு வரவேண்டும். இந்த நிலையில் அரை அடி உயரத்திற்கு செடி வளர்ந்திருக்கும். இந்த கட்டத்தில் செடிகளை எடுத்து வயலில் நடவேண்டும். 

ஒவ்வொரு செடிக்கும் இரண்டு அடி இடைவெளி இருக்க வேண்டும். தண்ணீர் செல்லும் பாரின்அளவு இரண்டரை அடி இருக்க வேண்டும். செடியினை அரை அடி ஆழத்தில் குழி தோண்டி நடவேண்டும். செடி வைத்த உடன் தண்ணீர் விட வேண்டும். பிறகு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டு வர வேண்டும். கருவேப்பிலை வறட்சியை தாங்கி வளரும் பயிர் ஆகும். முதல் அறுவடை செய்ய ஆறு மாதம முதல் எட்டு மாதம் ஆகும். அதன் பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்லது எண்பது நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். 

கருவேப்பிலையை இலைப்புள்ளி மற்றும் அசுவனி போன்ற நோய்கள் தாக்குவதுண்டு. இந்த நோயை அகற்ற மோனோசில், பெவிஸ்டின், ஸ்பார்க், செப்டோசைக்கிள் போன்ற மருந்துகளை தெளிக்கலாம். கராத்தே அல்லது மோனோசில் மருந்துடன், பெவிஸ்டின் பவுடர் 25 கிராம் அல்லது செப்டோ 25 கிராம் கலந்து கைத்தெளிப்பான் கலந்து தெளிக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை 20:20 பாக்டம்பாஸ் உரம் இடவேண்டும். (ரசாயன உரம் பயன்படுத்த விரும்பாதவர்கள் கடைகளில் கிடைக்கும் இயற்க்கை பூச்சி கொல்லிகளை பயன்படுத்தலாம்) ஆண்டிற்கு ஒரு முறை அறுவடைக்கு பின் தொழுஉரம் அல்லது கோழி உரம் இட்டு மாட்டு ஏர் மூலம் பார் போட வேண்டும். 

மூன்று மாதத்திற்கு ஒருமுறை தரை மட்டத்திலிருந்து ஒரு இன்ச் விட்டு மீதி உள்ள இலைகளை அறுத்து எடுத்துக்  கொள்ள வேண்டும். இந்த நிலையில் ஏக்கருக்கு குறைந்த பட்சம் நான்குடன் முதல் 5 டன் வரை மகசூல் கிடைக்கும். சித்திரை மாதத்திலிருந்து ஆவணி மாதம் வரை கருவேப்பிலை நன்றாக வளரும். அதாவது வெயில் காலத்தில் நல்ல மகசூல் இருக்கும். விலை எட்டு ரூபாயிலிருந்து 12 ரூபாய் வரை இருக்கும். இதனால் ஏக்கருக்கு80 ஆயிரம் முதல் 1 லட்சத்திற்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.

ஏழைகளின் மரம் மூங்கில் சாகுபடி



மூங்கில் மரங்களை ஏழைகளின் மரம் அல்லது மக்களின் நண்பன் என்பார்கள். இந்திய காடுகளின் பரப்பளவில் 12.8 சதவீதம் மூங்கில் இனங்கள் உள்ளன. நமது நாட்டின் பொருளாதாரத்தில் மூங்கில் பெரும் பங்கு வகிக்கிறது. மனிதனின் அன்றாட தேவைக்கு மூங்கில் ஒரு இன்றியமையாத பொருளாக பயன்பட்டு வருகிறது. கைவினை பொருட்கள் செய்யவும், கிராமிய தொழிற்சாலைகள் மற்றும் காகித ஆலைகளுக்கு மூலப்பொருளாக மூங்கில் இருக்கிறது. மனிதனுக்கு பல்வேறு வகையிலும் பயன்படும் மூங்கிலை பச்சைத்தங்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் மூங்கிலானது, சேர்வராயன் மலைகள், கொல்லி மலைகள், கல்வராயன் மலைகள்,சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், பொள்ளாச்சி, முதுமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயிரிடப்பட்டு வருகிறது.

சாகுபடி முறைகள்( மண் மற்றும் தட்பவெப்ப நிலை)
நல்ல வடிகால் வசதியுடைய மண் வகைகளில் பயிரிடலாம். குறிப்பாக வண்டல் மண், படுகை நிலங்கள், கண்மாய் கரை மண், மணற்பாங்கான நிலங்கள், மலைச்சரிவுகள் மற்றும் வெப்பநிலை 8 டிகிரி முதல் 45 டிகிரி வரை உள்ள இடங்கள்.

நடவு முறை
நிலத்தை நன்றாக உழுது பருவ மழைக்கு முன் நாற்று நட குழிகளைத் தோண்டி தயார் செய்ய வேண்டும். 3க்கு 3 அடி ஆழ, அகலத்தில் குழிகளை தோண்ட வேண்டும். 15 அடி இடைவெளி இருத்தல் வேண்டும். குழியில் தொழு உரம் 10 கிலோ,பாஸ்போ பாக்டீரியா 50 கிராம், அசோஸ்பைரில்லம் 25 கிராம், டி.ஏ.பி 50 கிராம் என்ற அளவில் இட வேண்டும். 

மூங்கில் தூர் பராமரிப்பு
முதலாம் ஆண்டிலிருந்து பராமரிக்க வேண்டும். தூர் பராமரிப்பில் கழிகள் நேராக வளர்ந்து அதிக லாபம் தரும். பக்க கிளைகள் நேராக வளராத கிளைகளை அகற்றவும். தூர்களில் கிளைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். மண் அரிப்பு ஏற்படும் பகுதிகளில் தூர்களில் மண் அணைத்தால் அதிக கழிகள் உண்டாகும். உதிரும் மூங்கில் இலைகளை தோப்பினுள் பரப்பி உழுது விடவும். இதனால் மண் வளம அதிகரிப்பதுடன் நீர் பிடிப்பை அதிகரிக்கும். 

லாபம் தரும் எண்ணெய் பனை சாகுபடி



மிழகத்தில் மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசின் வேளாண்மை துறை மூலம் எண்ணெய்ப்பனை வளர்ச்சி திட்டத்தை தேசிய எண்ணெய்பனை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பாமாயில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.


பாமாயில் மரம் என்று அழைக்கப்படும் எண்ணெய்ப்பனை என்பது பனை மர குடும்பத்தை சார்ந்தது. எண்ணெய்ப்பனை ஒரு ஆண்டிற்கு எக்டரில் 4 முதல் 6 டன்கள் வரை எண்ணெய் கொடுக்கக்கூடிய ஒரு மரப்பயிராகும். இது மற்ற எண்ணெய் வித்துபயிர்களுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிக எண்ணெய் மகசூல் தரவல்லது.


பொதுவாக ஒரு எக்டரில் பயிரிடப்படும் கடலையில் இருந்து 375 கிலோ அளவும், கடுகு பயிரிலிருந்து 560 கிலோவும், சூரியகாந்தியிலிருந்து 545 கிலோவும், எள்ளிலிருந்து 160 கிலோவும், தேங்காயிலிருந்து 970 கிலோ அளவுக்கு தான் எண்ணெய் கிடைக்கிறது. ஆனால் ஒரு எக்டரில் பயிரிடப்படும் எண்ணெய் பனையிலிருந்து 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கிலோ எண்ணெய் கிடைக்கிறது.

இந்த மரம் நட்ட மூன்றாம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 25 ஆண்டுகள் வரை மகசூல் தரக்கூடியது. எண்ணெய்ப்பனை மரத்திலிருந்து இரண்டு விதமான எண்ணெய் கிடைக்கிறது. பழத்தின் சதைப்பகுதியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சுத்திகரிக்கப்படாத பாமாயில் எனவும், பழத்தில் உள்ள கொட்டையில் உள்ள பருப்பில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பருப்பு எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது.

தீவனப்பயிர் உற்பத்தி - அசோலா

அசோலா பற்றி

  • தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழைக்கப்படுகிறது.
  • பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம்.
  • மிக மிக சிறிய இலையையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை. தண்டு மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும்.
  • பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • வேகமாக வளரும் தன்மை கொண்டவை.

அசோலா- தீவனமாக

  • அசோலாவில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன.
  • உலர்ந்த நிலையிலுள்ள அசோலாவில் புரத சத்து - 25-35 %, தாதுக்கள் - 10-15% மற்றும் அமினோ அமிலங்கள் - 7-10 % உள்ளன.
  • அசோலாவின் செரிக்கும் தன்மை கால்நடைகளில் மிகவும் நன்றாக இருக்கிறது.
  • அசோலாவை தனியாகவும் அல்லது அடர்தீவனத்துடன் கலந்தும் கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.
  • செம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், கோழிகள் மற்றும் முயல்களுக்கும் தீவனமாக அளிக்கலாம்.

மண் புழு உரம் தயாரிப்பு

கழிவுகள் என்பது நாம் முறையாக பயன்படுத்த தவறிய மூலப்பொருள்கள் ஆகும். பொதுவாக வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் குவித்து வைக்கும் பொழுது கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் இருந்து அதிக அளவிலான இயற்கை எருவை உருவாக்க முடியும். இந்த மதிப்புள்ள மூலப்பொருள்களை முறையாக மட்கவைப்பதின் மூலம் நமக்கு மதிப்பூட்டப்பட்ட எரு கிடைக்கிறது. இவ்வாறு அங்ககக் கழிவுகளை மக்கவைத்து வளம் குன்றிய மண்ணை பேணிக்காப்பதே மண்புழு உரத்தின் முதன்மையான பயனாகும்.


உள்ளுர் இரக மண்புழுக்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்

உலக அளவில் சுமார் 2500 மண்புழு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 500 வகை இனங்கள் இந்தியாவில் உள்ளன. வெவ்வேறு மண்வகைக்கு ஏற்ப மண்புழு உரங்கள் மாறுபடும். எனவே மண்புழு உரம் தயாரிக்க அந்தந்த மண்ணிற்கு ஏற்ற மண்புழுக்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ் மற்றும் லேம்பீட்டோ மெளருட்டி என்ற இரு இனங்களை பயன்படுத்துகிறோம். மண்புழுக்களை வளர்ப்பதற்கு, குழிகளையோ, தொட்டிகளையோ அல்லது வளைவான கட்டமைப்புகளையோ பயன்படுத்தி கொள்ளலாம்.

 எவ்வாறு உள்ளூர்ரக மண்புழுக்களை தேர்வு செய்யமுடியும்?

   1. மண்ணின் மேற்பரப்பில் தென்படக்கூடிய, புழுக்களின்  ஆக்கிரமிப்புள்ள மண்ணை கண்டறிய வேண்டும்.
   2. 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும்.
   3. வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும்.
   4. 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
   5. அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
எரு-குழி தயாரித்தல்

எரு-குழி தயாரிப்பதற்கு பல முறைகள் இருந்தாலும், நாம் நம் வசதிக்கேற்ற வடிவமைப்பில், வீட்டின் பின்புறத்திலோ, தோட்டத்திலோ அமைக்கலாம். செங்கற்கள் கொண்டு ஒரு குழி, இரு குழி அல்லது வசதிக்கேற்ற அளவிளான தொட்டிகள் போன்றவற்றை முறையான நீர் வெளியேற்றக் குழாய்களுடன் அமைக்க வேண்டும். வேளாண் கழிவுகள் மற்றும் இதர பொருட்களின் கொள்ளவைக் கொண்டு தொட்டிகளின் அளவை தீர்மானம் செய்ய வேண்டும். தொட்டிகளின் சுவரின் நடுவில் சிறு குழிகளில் நீர் தேக்கம் செய்வதன் மூலம் புழுக்களை எறும்பு தாக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.