Tuesday, April 28, 2015

வாழையில் வாடல் நோய் (Vaalaiyil Vaadal Nhooi) - Banana wilt disease

வாழையில் ஏற்படும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார். 

அறிகுறிகள்
  • தாக்கப்பட்ட மரங்களின் அடி இலைகள் திடீரென முழுவதும் பழுத்து, தண்டுடன் சேரும் இடத்தில் சுற்றிலுமாக ஒடிந்து, மடிந்து வாழைத் தண்டைச் சுற்றிலும் துணி கட்டியதுபோல் காட்சியளிக்கும்.
  • பின் தண்டின் அடிப்பாகத்தில் மண்ணிலிருந்து மேல்நோக்கி நீள வாக்கில் வெடிப்பு ஏற்படும்.
  • கிழங்கினைக் குறுக்கே வெட்டிப்பார்த்தால், செம்பழுப்பு நிறத்தில் வட்ட வட்டமாக இப்பூஞ்சாணம் தாக்கி அழிந்துள்ள பகுதிகளைக் காணலாம்.
  • செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி மற்றும் பல உள்ளூர் ரகங்களை இந்நோய் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றது. நூற்புழு பாதிப்பு இருக்கும் தோட்டத்தில் வாடல் நோயின் அறிகுறிகள் அதிக அள வில் காணப்படுகின்றன.
  • வாடல் நோயின் வித்துக் கள் மண்ணில் பல ஆண்டுகள் உயிருடன் இருக்கும் தன்மையுடையது.
  • பூஞ்சாண வித்துக்கள் முளைத்து பக்க வேர்கள் மூலமாக கிழங்குப் பகுதியைத் தாக்கும். நோய் தாக்கிய கிழங்குகள் மூலமாகவும், பாசன நீர் மூலமாகவும் இந்நோய் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பரவுகிறது.
மேலாண்மை முறைகள்:
  • வாடல் நோய் அதிக அளவில் காணப்படும் நிலங்களில் இந்நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பூவன் (கதலி), ரொபஸ்டா, கை போன்ற வாழை ரகங்களைப் பயிரிடலாம்.
  • வாழைக் கன்றுகளை நோய் தாக்காத தோட்டங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். விதைக்கிழங்குகளைப் பரிசோதித்து செந்நிறப் பகுதிகள் இல்லாதவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
  • கிழங்குகளை நடுவதற்கு முன் களிமண் குழம்பில் நனைத்த கிழங்கின் மீது பத்து கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் பூசணக்கொல்லியினைச் சீராகத் தூவ வேண்டும்.
வாழை பனாமா வாடல் நோய் தடுக்க
  • ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 20 கிலோ உலர்ந்த சாண எரு அல்லது மணலுடன் கலந்து ஒவ்வொரு வாழைக்கும் தூர்ப் பகுதியைச் சுற்றிலும் இடவேண்டும்.
  • காப்சூல் எனப்படும் மாத்திரை குப்பிகளில் 50 மில்லி கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் நிரப்பி நட்ட ஐந்தாம் மற்றும் ஏழாம் மாதங்களில் கிழங்கினுள் செலுத்த வேண்டும்.
  • வாழைக்கிழங்கில் 45 டிகிரி சாய்வாக 10 செ.மீ. ஆழ துளையிட்டு உள்ளே செலுத்த வேண்டும். வாழைத்தண்டில் செலுத்தினால் பயன் இல்லை. குப்பியினைச் செலுத்தியபின் களிமண் உருண்டை கொண்டு துளை வாயிலை மூடிவிடவும்.
  • மாத்திரை குப்பி வைப்பதை தக்க ஆலோசனை பெற்று வைக்க வேண்டும். நோய் தாக்கிய மரங்களை கிழங்கோடு பிடுங்கி அழித்துவிட வேண்டும். அக்குழியில் போதிய அளவு சுண்ணாம்பு (குழிக்கு 1-2 கிலோ) இடவேண்டும்.

  • கடலூர் மாவட்டத்தில், சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழையில் குறிப்பாக நாடு மற்றும் ஏலக்கி ரகங்களில் புதிய வகை வாடல் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
  • நோய் தாக்கப்பட்டு குலை தள்ளும் நிலையிலுள்ள வாழை மரங்களில் இலைகள் பழுத்து காணப்படும்.
  • வாழை மரத்தைத் தொட்டவுடன் இற்றுப்போய் சாய்ந்து விடும்.
  • தாக்கப்பட்ட மரங்களை வேருடன் அகற்றிவிட்டு குழிகளில் 50 கிராம் வீதம் பிளீச்சங் பவுடர் தூவ வேண்டும்.
  • அருகாமையிலுள்ள மரங்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பிளீச்சிங் பவுடர் என்ற அளவில் கலந்து மரத்தைச் சுற்றி ஊற்ற வேண்டும்.
  • இந்த நோய் விரைவில் பரவும் தன்மையுள்ளதால் வாழை விவசாயிகள் தனி கவனம் செலுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும்.
  • மேலும், விவரங்களுக்கு அருகாமையிலுள்ள தோட்டக்கலை துறை, வட்டார மையங்களில் களப்பணியாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • முனைவர்
    எஸ்.ஜெயராஜன் நெல்சன்,
    ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.

No comments:

Post a Comment