Showing posts with label கறவை மாடு வளர்ப்பு. Show all posts
Showing posts with label கறவை மாடு வளர்ப்பு. Show all posts

Thursday, July 9, 2015

பால் உற்பத்தியில் சுகாதாரம் பேணுவது எப்படி? (Paal Urpathiyil Sugaadhaaram) - Milk Production

பால் உற்பத்தியில் சுகாதாரமும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ள நிலையில், அதைப் பின்பற்றும் எளிய முறைகள் குறித்து கால்நடை பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் ச.சரஸ்வதி, ப.ராஜேஷ்குமார், ஆர்.ராஜ்குமார் ஆகியோர் தெரிவித்த யோசனைகள்:


பால் கறக்கும் முறை:
  • பசுக்கள்இடப்பக்கத்திலிருந்தே பால் தரும் இயல்புடையவை. இவற்றின் மடியில் பால் கறக்கும்போது முன்னிரு, பின்னிரு காம்புகளிலோ அல்லது பக்கங்களில் உள்ள காம்புகளிலோ இரண்டு கைகளையும் பயன்படுத்திக் கறப்பது நல்லது.
  • முதல் சில துளிகளை பாத்திரத்தில் விடாமல் பீய்ச்சிக் கீழே விட்டுவிட வேண்டும். இத்துளிகளில் அதிகமாக பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
  • இரு விரல்களை பயன்படுத்தியோ, முழு விரல்களையும் பயன்படுத்தியோ பால் கரக்கலாம். இரு விரல் முறையில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து சிறிது அழுத்தம் தந்து கீழே இழுப்பதன் மூலம் பால் கறக்கலாம். முழு விரல்களைப் பயன்படுத்தும்போது, ஒரு கை விரல்களால் காம்பினைப் பிடித்து உள்ளங்கையின் மீது அழுத்துவதால் கன்றுக்கு ஊட்டுவது போல் எல்லாப் பக்கமும் ஒரே அழுத்தம் ஏற்பட்டு பால் கறக்கும்.
  • இருவிரல் முறையில் ஒரே அழுத்தம் கிடைக்காது என்பதால் காம்பின் மேல்பாகம் பாதிக்கப்பட்டு சிறு காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காம்புகள் மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே இருவிரல் முறையைப் பயன்படுத்துவது நல்லது. மிக முக்கியமாக ஈரமான கைகளால் பால் கறப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 சுத்தமான பால்:
  • பசுவின் மடியில் அதிகம் அழுக்கு சேரும். எனவே பால் கரப்பதற்கு முன் மடியை நன்றாக கழுவ வேண்டும். பால் காம்புகளும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். முடிந்தால் நல்ல துணி மூலம் கழுவிய மடியை துடைப்பதும் நல்லது. ஒருமுறை பயன்படுத்தும் கைதுடைப்பு காகிதங்களை பயன்படுத்துவது சிறந்தது.
  •  பால் கறக்கும்போது உரோமங்கள் பாலில் விழுவதைத் தவிர்க்க அவ்வப்போது குளிப்பாட்டும்போது நன்கு தேய்த்து உடலில் உதிரும் ரோமங்களை அகற்ற வேண்டும். மாட்டுச் சாணத்தால் ஈக்கள் மொய்க்கும்.
  •  எனவே மாட்டுத் தொழுவம் அவ்வப்போது கிருமிநாசினியால் கழுவப்படுவதன் மூலம் அப்பகுதி சுகாதாரத்தைப் பேண முடியும். முக்கியமாக பால் கரக்கும் பாத்திரம் ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். கொதிக்கும் நீரை பால் கறக்கும் பாத்திரத்தில் ஊற்றினால் 2 நிமிடத்தில் பாத்திரத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து பாத்திரம் சுத்தமாகிவிடும்.
  •  இந்த நடைமுறைகளை பின்பற்றுவதால் பாலில் பாக்டீரியாக்களின் பாதிப்பை தவிர்த்து சுத்தமான பாலை நுகர்வோருக்கு அளிக்க முடியும். பால் கெடாத தன்மை நீண்டநேரம் நீடிக்கும்.
  • மாடுகளுக்கும், தொழுவம் முழுவதும் அவ்வப்போது சாம்பிராணி போடுவதன் மூலம் நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க முடியும்.
  • மாட்டுத் தொழுவத்தின் மிக அருகே தண்ணீர் தேங்கினால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். எனவே மாட்டுத் தொழுவம் சற்று மேடான இடத்தில் அமைவது நல்லது.
  • பால் கறக்கும்போது மணம் வீசும் தீவனங்களை மாடுகளுக்கு அளிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் பாலில் அந்த வாடை எளிதில் தொற்றிக் கொள்ளும்.
 மனித சுகாதாரம்:
  • மாடுகளை பராமரிப்போர், பால் கறப்போர் காச நோய், டைஃபாய்டு, டிப்தீரியா போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக மாடுகளிடம் நெருங்கக் கூடாது. இது மாடுகளுக்கும், சுகாதாரமான பால் கறவைக்கும் நல்லது.
  • பால் கறப்பவர்கள் கண்டிப்பாக விரல் நகங்களை வெட்டி, விரல் நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 பால் பாத்திரங்கள்:
  • பால் கறவை, பால் சேமிப்புக்கான பாத்திரங்கள் இடுக்குகள், மடிப்புகள் இன்றி எளிதில் தூய்மை செய்யக் கூடிய வகையிலான அமைப்பில் இருக்க வேண்டும்.
  • அயோட்போர் போன்ற ரசாயனக் கலவை மூலம் அடிக்கடி இந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதும் அவசியம். பாலைக் கறந்ததும் அதை மிதமான வெப்பநிலையில் வைக்க வேண்டும். அதிக வெப்பநிலை உள்ள இடத்தில் வைத்தால் எளிதில் கெட்டுவிடும்.

Tuesday, June 9, 2015

பண்ணைப் பதிவேடுகள் (Pannai Pathivedugal) - Farm Records

கால்நடைப் பதிவேடுகள் பராமரித்தல்:


ஒரு நல்ல இலாபகரமான பண்ணைப் பராமரிப்பிற்கு கீழ்க்கண்ட பதிவேடுகள் அவசியம் ஆகும்.

1) கால்நடைகளை அடையாளம் காண உதவும் கையேடு.

2) வளர்ச்சிப் பதிவேடு.

3) உடல்நலம் பற்றிய பதிவேடு.

4) கால்நடை இழப்பு / இறப்பு குறித்த பதிவேடு.

5) கன்றுகளின் இறப்பு பற்றிய பதிவேடு.

6) இனக்கலப்பு மற்றும் கன்று ஈனுதல் பற்றிய தகவல்
அடங்கிய பதிவேடு.

7) கறவை மாடுகளின் பால் உற்பத்தி பற்றிய பதிவேடு.

8) அடர் மற்றும் கலப்பு தீவனங்கள் பற்றிய பதிவேடு.

9) வேலை ஆட்களின் பதிவேடு.

10) நீர்ப் பயன்பாடு / தேவை குறித்த பதிவேடு.

11) சரியான வளர்ச்சியற்ற மாடுகள் (நீக்கிய மாடுகள்) பற்றிய பதிவேடு.

12) விற்ற கால்நடைகள் பற்றிய தகவல் பதிவேடு.

13) வாங்கிய கால்நடைகள் பற்றிய தகவல் பதிவேடு.

Friday, June 5, 2015

கறவை மாடு வளர்ப்பு உத்திகள் (Karavai Maadu Valarppu) - Dairy Cow


கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும் வழிமுறைகளை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈனும், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும்.


முக்கிய பராமரிப்பு உத்திகள்:
  • சினை ஊசி போட்ட பசுக்களுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து உறுதிசெய்து தோராயமாகக் கன்று ஈனும் காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது. ஏழாவது மாதம் முடிந்த உடன் சினைப் பசுவை தனியாகப் பிரித்தெடுத்து கொட்டகையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். நாய்களை சினை மாடுகளின் அருகில் அண்ட விடக் கூடாது.
  • கருவில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும், பால் உற்பத்திக்குத் தேவையான சத்துகளையும் உடலில் சேமித்து வைக்க வேண்டியுள்ளதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரிவிகித சத்தான உணவை வழங்க வேண்டும்.
  • ஏழாவது மாத சினை முடிந்தவுடன் பாலை வற்றச் செய்ய வேண்டும். பால் வற்றிய சினை மாட்டின் காம்புகளின் வழியே நுண்மக் கொல்லி (ஆன்டிபயாடிக்) மருந்தை டியூப் மூலம் செலுத்தினால் மடிவீக்க நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
தீவனப் பராமரிப்பு:
  • சினை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாவிடில் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.
  • கன்று வீசுதல், குறைமாத கன்றுக் குட்டியை ஈனுதல், 20 கிலோவுக்கு குறைவாக உள்ள கன்று பிறக்கும். நஞ்சுக்கொடி விழாமல் கருப்பையில் தங்கிவிடும். கருப்பை வெளித்தள்ளுதல், பால் காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். பால் உற்பத்தி குறையும்.
  • இதைத் தடுக்க சரிவிகித தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு சினை மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிக்க வேண்டும். கலப்புத் தீவனம் 8-வது மாத சினையில் தினமும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வீதமும், 9-ஆவது மாதம் ஒன்றரை முதல் 2 கிலோ வீதமும் கன்று ஈனும் வரை வழங்க வேண்டும்.
  • இவற்றுடன் தாது உப்புக்கள் 25- 30 கிராம் தினமும் கொடுக்கலாம். கன்று ஈனுவதற்கு முன்னால் ஒரு கிலோ கோதுமைத் தவிடும் கொடுக்கலாம். மேலும் 450 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
  • கன்று ஈனும்போது காணும் அறிகுறிகள்: நிறைமாத சினை ஆனவுடன் மாட்டின் வயிறு, மடி பெருத்துக் காணப்படும். மாட்டின் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்து காணப்படும். வாலுக்கு அடியில் குழி உண்டாகும். இதைச் சட்டம் உடைதல், தட்டு உடைதல் அல்லது குழி விழுதல் எனக் கூறுவர். இந்த அறிகுறி தென்பட்ட 24 முதல் 48 மணி நேரத்தில் கன்று ஈனும்.
  • மாட்டில் சளி போன்ற திரவம் அதிகளவில் வடியும். மாடுகள் அடிக்கடி படுத்துக் கொண்டும், தலையை தோண்டிக் கொண்டு இருக்கும். சினைக் கிடேரிகள் வயிற்றில் உதைத்துக் கொள்ளும்.
  • இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மாட்டை சுத்தமான, சமமான இடத்தில் அழைத்துச் சென்று கட்ட வேண்டும். கன்று ஈனுவதற்கு முன் கலப்பின பசுக்களில் நெஞ்சில் இருந்து மடி வரை நீர் கோர்த்துக் காணப்படும். இதனால் எந்தத் தீங்கும் இல்லை. கன்று ஈன்றவுடன் தானாக அவை மறைந்து விடும்.
  • பனிக்குடம் உடைந்த ஒரு மணி நேரத்தில் மாடு கன்றை ஈன வேண்டும். கன்று ஈன்ற 6 மணி நேரத்தில் நஞ்சுக் கொடி விழ வேண்டும். இதுபோல் முறையாக சினைப் பசுவைப் பராமரிக்க வேண்டும்.

Saturday, March 28, 2015

நாட்டு பசுவின் மகிமை (Naatu Pasuvin Magimai) - Benefits of Cow

அந்தக் குடுவைக்குள் பொன்னிறத் திரவம் நிறைந்திருந்தது. அதன் அடியில் தேங்கி நிற்கும் குருணைப் படலம். சுவை பார்த்த கையில் சில மணி நேரம் நீடிக்கும் நெய்யின் முறுகிய மணம்.
“வட இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நாட்டு பசுக்களின் பாலில் இருந்து உற்பத்தி செய்யட்ட நெய் இது. இதில் செயற்கையான நிறமூட்டிகள் மணமூட்டிகள், பதனப்பொருட்கள் என எதுவும் சேர்க்கப்படவில்லை’’ என்கிறார் அரியா (ARIA) பால் பண்ணையின் நிறுவனரும் மேலாண் இயக்குநருமான அஹ்மத். அப்படி இந்த மாடுகளில் என்ன சிறப்பு உள்ளது எனக் கேட்டதற்கு நீண்ட விளக்கம் அளித்தார்.
“பொதுவாக நமது நாட்டில் நாம் அருந்தும் பாலில் 60 சதவீதம் வரை ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்ஸி போன்ற பல இன பசுக்களிலிருந்து கிடைக்கும் பால் ஆகும். இந்த இறக்குமதி இன பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலில் புரதத் துணுக்கு (A1 beta-casein) இயற்கையான பாரம்பரிய மரபணுவைக் கொண்டது அல்ல. இது பிறழ்ந்த மரபணுவைக் கொண்டதாகும் .
இந்தப் பாலை அருந்தும்போது நமது உடலில் உள்ள நரம்பு மண்டலத்திலும் நாளமில்லா சுரப்பிகளிலும் நோய் தடுப்பு மண்டலத்திலும் பல உபாதைகள் ஏற்படுகின்றன. தமனியில் படலம் படிதல், தமனி அடைப்பு, இதய நோய், மனச்சிதைவு, மதி இறுக்கம், முதல் நிலை வகை நீரிழிவு போன்ற நோய்களையும், குழந்தை இறப்பையும் அத்துடன் மனித உடல் இயற்கையாகவே பெற்றுள்ள நோய் எதிர்ப்பு திறனில் குறைபாட்டையும் ஏற்படுத்து கின்றன. பசுவின் பாலுக்கு அமிர்தம் என்ற பெயருண்டு. அமிர்தத்திற்கு நஞ்சு போக்கும் பொருள் எனவும் பொருளுண்டு. ஆனால் நாம் அமிர்தம் என்ற பெயரில் நஞ்சை அருந்துகின்றோம்.
பிரச்சினைக்குரிய இந்த ஏ1 பிறழ்வு புரதம் இந்திய மண்ணுக்கே உரிய நாட்டு மாடுகளில் இருப்பதில்லை. மாறாக எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத ஏ2 இணை மரபணு புரதம் மட்டுமே காணப்படுகின்றது.
எனவேதான் எங்கள் பண்ணையில் உள் நாட்டு பசுவை மட்டும் வளர்க்கின்றோம். வட இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட 80 கறவை மாடுகள் உள்பட மொத்தம் 196 உயர் ரக மாடுகள் தற்போது எங்களிடம் உள்ளன. அவைகளுக்கு ஹார்மோன்கள் உட்பட எந்தவிதமான ஊக்க மருந்து ஊசிகளும் போடப்படுவதில்லை.
மாடுகளுக்கு நெல்லின் உமி, தவிடு, வைக்கோல், கோது மையின் உமி, தவிடு, கோ 4, வேலி மசாலா, சோளத்தட்டை, சோள மாவு, அகத்திக்கீரை, கடலைப் பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை பிண்ணாக்கு போன்ற இயற்கையான நல்ல தீவனங்களை கொடுப்பதன் வழியாக மட்டுமே பாலின் தரத்தை நாங்கள் மேம் படுத்துகின்றோம்.
எங்கள் பண்ணையில் கிடைக் கும் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.65-க்கு மேல் விற்பனை ஆகும் வகையில் பெரும் சந்தை வாய்ப்பு உள்ளது. பாலை அப்படியே விற்பனை செய்யாமல், நெய் போன்ற பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும்போது விவசாயிகள் இன்னும் அதிக லாபம் பெறலாம்.
ஒரு சராசரி நாட்டு மாட்டின் விலை ரூ.35,000. உயர் ரக நாட்டு மாட்டின் விலை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை ஆகிறது, என்கிறார்’’ அஹ்மத்.
திண்டிவனம் நகரின் அண்மையில் ஜி.எஸ்.டி, சாலை அருகே அமைந்துள்ள கீழ் பசார் கிராமத்தில் இவரின் ஒருங்கிணைந்த விவசாய பால் பண்ணை அமைந்துள்ளது . 200 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ள இந்த பண்ணையை 2011-ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகின்றார். மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்திலிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் கட்டமைப்பையும் தனது பண்ணையில் நிறுவி வருகின்றார்.
மீதமுள்ள ஏக்கரில் மாட்டுத் தீவனம், மேஞ்சியம் வெட்டு மரம், நெல்லி, மா, பப்பாளி, சாத்துக்குடி, நாவல், கொய்யா, சப்போட்டா, நாரத்தை, பம்பளிமாஸ் போன்ற வற்றை இயற்கை முறையில் பயிரிட்டுள்ளார். அஹ்மத் வைர வணிகம் செய்து வரும் குடும்ப பின்னணியைக் கொண்டவர். ஐ.டி. நிறுவனம், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்த இவர், தற்போது இயற்கை வேளாண்மை மற்றும் பால் பண்ணை தொழிலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “முதலில் முழுக்க முழுக்க லாப நோக்கத்தில்தான் இந்த இயற்கை வேளாண்மையை தேர்ந்தெடுத்தேன். ஆனால் அது தொடர்பான ஆய்வில் ஈடுபடும் போது இயற்கை வேளாண்மை என்பது வணிகம் என்பதையும் தாண்டியது என்பது புரிந்தது. அது ஒரு தற்சார்பான நீடித்த தன்மை கொண்ட முழுமையான வாழ்க்கை முறையாக எழுச்சி கொண்டு என்னை கவர்ந்து கொண்டது’’ என்றார்.
நாட்டு பசுவின் மகிமையை நமக்கு   முதலில் சொல்லியவர் இயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வாரும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை அறிமுக படுத்திய பாலகரும்  ஆவர். ஒரு விவசாயி, ஒரு நாடு பசுவை வைத்து கொண்டு முப்பது ஏகர் விவசாயம் செய்ய முடியும், ஒரு விதமான இடு பொருளும் வாங்காமல். கோமூத்திரம், சாணி, போன்றவையே போதும்
மேலும் விவரங்களுக்கு 09884166253 என்ற எண்ணிலும், ahmad@ariafarms.inஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.