Showing posts with label இயற்கை பூச்சி விரட்டி. Show all posts
Showing posts with label இயற்கை பூச்சி விரட்டி. Show all posts

Tuesday, November 29, 2016

பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை


ஆவாரை, புங்கன், வேம்பு, எருக்கன், நொச்சி, நித்யகல்யாணி ஆகியவற்றின் இலைகளை தலா 3 கிலோ எடுத்து ஒன்றாகச் சேர்த்து நன்கு இடித்து, இவை மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீர் ஊற்றி மூடி வைத்து 20 நாட்கள் தினமும் கலக்கி வர வேண்டும்.
இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் வாசனையுடைய 5 கிலோ வேப்பம் பிண்ணாக்குடன் 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரைக் கலந்து 20 நாட்களுக்கு ஊற வைக்கவேண்டும். பிறகு இரண்டு கரைசல்களையும் ஒன்றாகக் கலந்து.. 100 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம். இது, குருத்துப்பூச்சி, இலைப்பேன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.

பப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு மூன்று எண்ணெய் கரைசல்


பப்பாளி சாகுபடியில் இரண்டாவது மாதத்தில் இருந்தே உற்று கவனிக்க வேண்டும். இலைக்கு மேல்புறம், இலைக்கு பின்புறம் என வெள்ளை நிறத்தில் மாவுப்பூச்சி தென்படும். மாவுப்பூச்சி எப்போது தென்பட்டாலும் தண்ணீரை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
தண்ணீர் தெளித்த இரண்டு மணி நேரத்துக்குள், 10 லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 50 மில்லி, புங்கன் எண்ணெய் 50 மில்லி, இலுப்பை எண்ணெய் 50 மில்லி ஆகியவற்றைக் கலந்து, இதோடு சிறிதளவு காதி சோப் சேர்த்து கைத்தெளிப்பானால் தெளித்துவிட வேண்டும்.

வெண்டையில் பூச்சி தாக்குதலுக்கு தீர்வு


10 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா!
விதை நடவு செய்த 15-ம் நாளில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். 20-ம் நாளிலிருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் தண்ணீருக்கு 6 லிட்டர் பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து சொட்டுநீர் மூலம் கொடுக்க வேண்டும். பஞ்சகவ்யா, செடி வளர சிறந்த பயிர் ஊக்கியாகச் செயல்படும். வேறு எந்த இடுபொருளும் தேவையில்லை.
மாவுப்பூச்சிக்கு இஞ்சி-பூண்டு கரைசல்
வெண்டையில் மாவுப்பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க வருமுன் காப்போம் முறையில் நடவு செய்த 25-ம் நாளில் இருந்தே, வாரம் ஒரு முறை பூச்சி விரட்டியைத் தெளித்து வர வேண்டும்.
இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றில் தலா அரைக்கிலோ எடுத்து அவற்றை உரலில் இடித்து வெள்ளைத் துணியில் கட்டி, 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் ஊறவைக்க வேண்டும். 5 நாட்கள் ஊறிய பிறகு கரைசலை எடுத்து வடிகட்டினால் இஞ்சி-பூண்டு கரைசல் தயார். இதை 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி என்ற அளவில் கலந்து பயன்படுத்த வேண்டும். 2 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப்பைத் தூளாக்கிப் போட்டுக் கலக்க வேண்டும். அதனுடன், 200 கிராம் கல் உப்பைச் சேர்த்துக் கலக்கி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இக்கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற கணக்கில் கலந்து பயன்படுத்த வேண்டும்.
இந்த இரண்டு கரைசல்களையும் சுழற்சி முறையில் வாரம் ஒரு முறை கைத்தெளிப்பானால் தெளித்து வந்தால் பூச்சித்தாக்குதல் இருக்காது. அதோடு சோலார் விளக்குப் பொறிகளையும் அமைத்துவிட்டால் அனைத்து வகையான தீமை செய்யும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தி விட முடியும்.
தவிர, வரப்பில் தட்டைப்பயறு, செண்டுமல்லி, காராமணி ஆகிய செடிகளை நடவு செய்து விட்டால்.. பயிரைத் தாக்க வரும் மாவுப்பூச்சி, அசுவினி, வெள்ளை ஈ, இலைத்துளைப்பான் ஆகியவை வரப்போரப் பயிரில் அமர்ந்துவிடும். இதனால் முதன்மைப் பயிரான வெண்டையை பூச்சிகளில் இருந்து காப்பாற்றி விடலாம்.