Showing posts with label ஊடுபயிர். Show all posts
Showing posts with label ஊடுபயிர். Show all posts

Friday, March 27, 2015

தென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக ஏழு ரக வாழை சாகுபடி (Thennaiyil Uudu Payiraga Vaalai) - Coconut + Banana Intercropping


அசத்தும் ஜீரோ பட்ஜெட் விவசாயி!

ஊடுபயிர் என்றைக்குமே  விவசாயத்தை உயர்த்தும் பயிர் என்பதில் சந்தேகமே இல்லை என்று அடித்தச் சொல்கிறார். சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள தார்க்காடு பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி, தெய்வம் வரதராஜன். இவர், தனது தென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து வருகிறார்.


பாதை காட்டிய பசுமை விகடன்!
எனக்குப் பூர்வீகமே கொளத்தூர்தானுங்க. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்து முடித்து கையோடு, விவசாயத்திற்கு வந்துவிட்டேன். இப்போது 30 வருடமாகிறது. தென்னைக்கு இடையில் 18 வருடமாக வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்துக் கொண்டிருக்கிறேன். கோடைக் காலங்களில் கிணற்றுப் பாசனம், மழைக் காலங்களில் ஏரிப்பாசனம். ஆரம்பத்தில் நானும் ரசாயன விவசாயம் தான். சம்பாதிப்பதில் முக்கால் வாசியை உரக் கடைக்குத்தான் கொடுக்க வேண்டியிருந்தது. அதில்லாமல் கட்டுபடியான விலையும் கிடைக்கவில்லை.

உற்பத்திச் செலவை எப்படிக் குறைப்பது என்பதை  யோசனை செய்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாற்று வழியைக் காட்டியது ‘பசுமை விகடன்’தான். அதில் வெளியான இயற்கை விவசாயம் சம்பந்தமான கட்டுரைகள் என்னை மிகவும் ஈர்த்தது. தொடர்ந்து, பசுமை விகடன் நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புகள், ‘இனியெல்லாம் இயற்கையே’ களப்பயிற்சிகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டு. இயற்கை வேளாண்மை பற்றிய விஷயங்களைத் தெளிவாக தெரிந்துகொண்டேன். அதன் பிறகு  முழு இயற்கை விவசாயியாக மாறினேன். இப்போது மூன்று வருடமாக ஜீரோ பட்ஜெட் முறையில்தான் விவசாயம் செய்கிறேன். 10 ஏக்கர் தென்னந்தோப்பில் 8 ஏக்கரில் மட்டும் ஏழு ரக வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்து கொண்டிருக்கிறேன். அதனால் உற்பத்திச் செலவு வெகுவாக குறைந்திருக்கிறது.

வெயில் கிடைக்கும் இடங்களில் மட்டும் ஊடுபயிர்!
தோப்பில் 27 அடி இடைவெளியில் மொத்தம் 700 நாட்டு தென்னை மரங்கள் இருக்கு. எல்லாமே, 30 வயது முதல் 40 வயது வரைக்கும் உள்ள மரங்கள், தோப்பிற்குள்ளே ஏகத்திற்கும் சூரிய வெளிச்சம் கிடைத்ததால் ஊடுபயிராக வாழை போட்டிருக்கிறேன். தனிப்பயிராக வாழையை நட்டால், ஏக்கருக்கு 1,000 மரங்கள் முதல் 1,200 மரம் வரைக்கும் பிடிக்கும். ஆனால், ஊடுபயிராக செய்யும்போது அதில் பாதிதான் நடமுடியும். வெயில் கிடைக்கும் இடங்களில் மட்டும்தான் நடவு செய்ய வேண்டும். இரண்டு தென்னைக்கு இடையில் ஒரு வாழை என்று நட்டிருக்கிறேன்.

பூவன், தேன்வாழை, செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரன், ஜி – 9 என்று ஏழு ரகங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 800 வாழைகள் இருக்கு (பூவன் -1,000 செவ்வாழை-500. தேன்வாழை-1,000, ரஸ்தாளி-500, நேந்திரன் – 500, ஜி -9 -800, மொந்தன்-500). மூன்று வருடமாக தோப்பில் உழவே செய்யவில்லை. தட்டைப்பயிரை ஏகத்திற்கும் விதைத்து விடுவதால் களைகள் கட்டுப்படுவதோடு, தழைச்சத்தும் கிடைக்கிறது. அங்கங்கே செண்டு மல்லிச் செடிகள் இருப்பதால் நூற்புழுத் தொந்தரவும் இல்லை. தொடர்ந்து பாசனத்தோடு ஜீவாமிர்தத்தைக் கொடுக்கிறேன். இயற்கை முறை என்பதால் நோய்களே வருவதில்லை.


வாழையில் இது மூன்றாவது தழைவு. தாய் வாழையைச் சுற்றி நிறைய பக்கக் கன்றுகள் வளரும். இரண்டு மாதம் வளர்ந்த பிறகு, அதில் ஒன்றை மட்டும் விட்டுட்டு, மற்றக் கன்றுகளை அப்புறப்படுத்திவிடவேண்டும். இந்த இரண்டு மாதத்திற்குள் பக்கக் கன்றுகள் கிடைக்கும் இலைகளை அறுத்து விற்கலாம். பக்கக் கன்று வளர வளர, அறுவடை செய்த தாய் வாழை வாடி, பழுத்து தானா கீழே சாய்ந்துவிடும். அப்போது அதை வெட்டி, தோட்டத்தில் பரப்பிட்டால் உரமாகிவிடும்.

ஒரு தார் குறைந்தபட்சமாக 100 ரூபாய்க்கு விற்கும். அந்தக் கணக்கில் 4 ஆயிரத்து 800 தார் மூலமாக வருடத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இலை மூலமாக 48 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. இடுபொருள் தயாரிக்க, பயிருக்கு கொடுப்பதற்கு என்று ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கான கூலி, வருடத்திற்கு 75 ஆயிரம் ரூபாய். ஆரம்பத்தில் நடும்போது உழவு, குழி என்று ஒரு கன்னுக்கு 15 ரூபாய் செலவாகிறது. வியாபாரிகளே அறுவடை செய்து கொள்வதால் அறுவடைச் செலவு கிடையாது. எப்படியும் தென்னை வருமானம் இல்லாமல், ஊடுபயிர் மூலமாகவே எட்டு ஏக்கரிலிருந்து வருடத்திற்கு நான்கு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது.

விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் தரும் எலுமிச்சை மற்றும் வாழை (Elumichaiyil Uudu Payiraga Vaalai) - Lemon + Banana Intercropping


ஏற்றம் தரும் எலுமிச்சை.. வாரிக் கொடுக்கும் வாழை!


சுவைமிகு கூட்டணி


வேலையாட்கள் பிரச்சனை, மின்சாரப் பிரச்சனை, தண்ணீர் தட்டுப்பாடு.. என அனைத்தையும் தாண்டி விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் முக்கிய இடத்தில் இருப்பவை, எலுமிச்சை மற்றும் வாழை ஆகியவை. இவை இரண்டையுமே ஒன்றாக இணைத்து சாகுபடி செய்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே இருக்கும் பாப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன்.

குடை பிடித்துக் கொண்டிருந்த எலுமிச்சை மரங்கள், சாமரம் வீசி வரவேற்புக் கொடுத்துக் கொண்டிருந்த வாழை மரங்கள் என, விரிந்து கிடந்த தோட்டத்திலிருந்த சந்திரசேகரன் “பத்தாவது வரைக்கும்தான் படித்தேன். அதற்கு மேல் படிக்கப் பிடிக்காததால், தேங்காய் மண்டியில் வேலைக்குச் சேர்ந்தேன். அதுவும் எனக்கு சரிப்பட்டு வரவில்லை. அதனால், அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பித்தேன். அப்போது, கரும்பு சாகுபடி செய்து கொண்டிருந்தோம். நாங்களே வெல்லமாக காய்ச்சி விற்றுவிடுவோம். ஆரம்பத்தில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால், போகப்போக மகசூலும் குறைந்துவிட்டது. வெல்லத்தோட விலையும் குறைந்தது. வேறு சாகுபடிக்கு மாறலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தப் போதுதான், ஒரு நண்பர் எலுமிச்சை  போடுவதற்கு யோசனை சொன்னார். அவரும் எலுமிச்சை போட்டிருந்ததால் அவருடைய தோட்டத்திற்குப் போய் நேரடியாக பார்த்து விவரங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டு.. இரண்டரை ஏக்கரில் எலுமிச்சை சாகுபடியை ஆரம்பித்தேன். இப்போது பன்னிரண்டு வருடமாகிறது. முதல் மகசூல் கிடைக்க ஆரம்பித்தப்போது, கொஞ்சம் விற்பனைக்குக் கஷ்டமாக இருந்தது. இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு ஏக்கர் வெகுமதி கொடுத்த எலுமிச்சை!
மூன்று வருடம் வரைக்கும் எலுமிச்சைக்கு இடையில் ஊடுயிராக வாழையையும் போட்டிருந்தேன். ஆரம்பத்தில் இது மூன்றிலும் கிடைத்த லாபத்தை வைத்து, ஒரு வீட்டு மனை, இரண்டு ஏக்கர் நிலம் என்று வாங்கிப்போட்டிருக்கிறேன். இப்போது மொத்தம் கையில் 13 ஏக்கர் நிலம் இருக்கு. இரண்டரை ஏக்கரில் தென்னை, 7 ஏக்கரில் மா, எலுமிச்சை, வாழை இருக்கு. ஒரு ஏக்கரை நெல் சாகுபடிக்காக தயார் செய்து வைத்திருக்கிறேன். மீதி இரண்டரை ஏக்கரில் 250 எலுமிச்சை மரங்களும் அதில் ஊடுபயிராக ஆயிரம் கற்பூரவல்லி வாழை மரங்களும் இருக்கிறது என்ற சந்திரசேகரன், எலுமிச்சை மற்றும் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

வடிகால் வசதி அவசியம்!
எலுமிச்சை சாகுபடி செய்ய, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்வகைகளும் ஏற்றவை. ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உள்ள காலம், நடவுக்கேற்றப் பருவம். இந்தப் பருவத்தில் நடவு செய்யும் போது, நாற்றுகள் பழுதில்லாமல் நல்ல முறையில் வேர் பிடித்து வளரும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் எலுமிச்சை பதியன் செடிகளை வாங்கி நடவு செய்து கொள்ளலாம். 



20 அடி இடைவெளி!
20 அடிக்கு 20 அடி இடைவெளியில், 2 கன அடி அளவிற்க்குக் குழிகள் எடுத்து ஒரு வாரம் வரை ஆறப்போட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, 40 நாட்கள் வயதுள்ள பதியன் செடிகளை, குழியின் மையத்தில் ஒரு அடி ஆழத்தில் இருப்பது போல், நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க, ஒவ்வொரு செடிக்கு அருகிலும் ஒரு நீளமான குச்சியை ஊன்றி, அதனுடன் செடியை இணைத்துக் கட்ட வேண்டும்.

வாரம் ஒரு பாசனம்!
நடவு செய்து 15 நாட்கள் வரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் தண்ணீர் விட வேண்டும். அதற்குப் பிறகு, மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நேரடிப் பாசனம் செய்தால் போதுமானது. 3 ஆண்டுகள் வரையில்  எலுமிச்சைச் செடிகளுக்கு இடையில் கனகாம்பரம் போல் ஏதாவது ஒரு பயிரை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம். 4 –ம் ஆண்டில் எலுமிச்சைக்கு இடையில் வாழையை நடவு செய்யலாம். வாழைக்கு, ஆறரை அடி இடைவெளி விட வேண்டும். 7 அண்டுகளில் எலுமிச்சை மரங்கள் நன்கு வளர்ந்து பரவி விடும். அதனால், அதற்குப் பிறகு இடைவெளி உள்ள இடங்களில் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய வேண்டும். ஊடுபயிர் சாகுபடிக்கு ஏலக்கி, பூவன், செவ்வாழை, கற்பூரவல்லி போன்ற ரகங்கள் ஏற்றவை. வாழையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அழித்துவிட்டு, புதிய கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா!
எலுமிச்சை மரங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து, ஒரு அடி இடைவெளிவிட்டு அரையடி விட்டத்தில் வட்டப்பாத்தி எடுத்து உரம் வைக்க வேண்டும். இப்படி வட்டப்பாத்தியில் உரம் வைப்பதால், மரங்களுக்கு உடனே சத்துக்கள் சென்று சேரும். அதாவது, ஒவ்வொரு வட்டப்பாத்தியிலும் ஒரு  கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம்... யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., ஜிப்சம் ஆகியவற்றையும் சேர்த்து கலந்து வைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்பகுதியில் இருந்து இரண்டு அடி இடைவெளிவிட்டு இதேபோல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உரம் வைத்து வர வேண்டும்.

வாழை மரங்களுக்கு 3-ம் மாதத்தில்... ஒரு மரத்திற்கு ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். 8-ம் மாதத்தில் ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால்கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம் பொட்டாஷ், டி.ஏ.பி., யூரியா, ஜிப்சம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மரத்தில் இருந்து அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 80 லிட்டர் தண்ணீருக்கு.. ஒரு லிட்டர் பஞ்சகவ்யா வீதம் கலந்து ‘ராக்கர்’ தெளிப்பான் மூலம் தேவையான அளவிற்க்கு தெளிக்க வேண்டும். கொசு மற்றும் வெள்ளை ஈ தாக்குதலை சமாளிக்கப் பரிந்துரைக்கப்படும் பூச்சிக் கொல்லியைத் தெளிக்க வேண்டும்.