Showing posts with label தொழில். Show all posts
Showing posts with label தொழில். Show all posts

Tuesday, April 28, 2015

முப்போகம் பலன் தரும் திசு வாழை (Thisu Vaalai) - Effective Banana Tissue Culture


விவசாயத்தை பெரிதாக நினைத்து வாழ்ந்த விவசாயிகள் எல்லாம் அவற்றை பிளாட் போட்டு விற்று வருகின்றனர். விளை நிலத்தை சீரமைத்து வாழை விவசாயம் மூலம் வருமானத்தை பெருக்கி வருகிறார் காரைக்குடி, அரியக்குடி வளன் நகர் விவசாயியும் முன்னாள் ராணுவ வீரருமான ஆரோக்கியசாமி.

மொத்தமுள்ள 4 ஏக்கரில் ஒரு ஏக்கரில் வாழை, 1.5 ஏக்கரில் நெல், ஒரு ஏக்கரில் தென்னை விவசாயம் மேற்கொண்டுள்ளார். தினந்தோறும் வாழ்வாதாரத்தை வாரி வழங்கும் வெண்டை, கத்தரி விவசாயத்தை அரை ஏக்கரில் செய்து வருகிறார். திசுவாழை பயிரிட்டுள்ள இவர் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் லாபம் பார்த்து வருகிறார்.

அவர் கூறியது:
ஜி-9 வகை திசு வாழை தோட்டக்கலை துறை உதவி வேளாண் அலுவலர் மங்களசாமி மூலம் எனக்கு கிடைத்தது. கன்றுகள் நம்முடைய வாழை போன்று அல்லாமல் சிறிய செடி போல இருக்கும். 11 மாதத்தில் காய்ப்பு எடுக்க ஆரம்பித்து விடலாம். பச்சை பழ வாழை பயிரிட்டுள்ளேன். ஒரு தாரில் 135 முதல் 140 காய்கள் இருக்கும். தற்போதைய நிலையில் தார் ஒன்று ரூ.500 முதல் 600 வரை விற்பனையாகிறது.

ஒரு வாழை காய்த்து முடிந்தவுடன் அதை வெட்டிவிட்டு, அதன் பக்க கன்று மூலம் அடுத்த வாழை உருவாகிறது. ஒரு வாழை வைத்தால், மூன்று முறை மகசூல் பெற முடியும். ஆறு அடிக்கு ஒரு கன்று நட வேண்டும். 15-வது நாளில் ஒரு வாழைக்கு 5 கிலோ மாட்டு சாண உரம், 200 கிராம் டி.ஏ.பி., 200 கிராம் பொட்டாஷ் இட வேண்டும். 40-வது நாள் இதே அளவு உரம் இட வேண்டும்.


150-வது நாள் 10 கிலோ மாட்டு சாணம் மட்கியது வைக்க வேண்டும். திசு வாழையை பொறுத்தவரை நீர் சத்து அதிகம் தேவை. இதனால் சொட்டு நீர் பாசனம் சிறந்தது.

இந்த வாழை 6-வது மாதம் பூக்கும். 8-வது மாதம் காய்க்க துவங்கும். ஒரு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் செலவாகும். ஆனால், வருமானமோ ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் லாபமாக கிடைக்கும். வாழையின் ஊடே காய்கறி விவசாயமும் மேற்கொள்ளலாம்.

அதே போல், நெல் விவசாயம் உரம் போடாமல் இயற்கை விவசாயம் மூலம் மேற்கொண்டு வருகிறேன். நெல் நடவுக்கு முன்பு, வேம்பு இலை, வாகை இலை ஆகியவற்றை நிலத்தில் போட்டு உழுது அதன்பிறகு நடவு பணி துவங்குகிறது. இதனால், இயற்கையான அரிசி நமக்கு கிடைக்கிறது, என்றார்.

இவரை தொடர்பு கொள்ள 09487413100.
டி.செந்தில்குமார், காரைக்குடி.

Friday, March 27, 2015

தென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக ஏழு ரக வாழை சாகுபடி (Thennaiyil Uudu Payiraga Vaalai) - Coconut + Banana Intercropping


அசத்தும் ஜீரோ பட்ஜெட் விவசாயி!

ஊடுபயிர் என்றைக்குமே  விவசாயத்தை உயர்த்தும் பயிர் என்பதில் சந்தேகமே இல்லை என்று அடித்தச் சொல்கிறார். சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள தார்க்காடு பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி, தெய்வம் வரதராஜன். இவர், தனது தென்னந்தோப்புக்குள் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து வருகிறார்.


பாதை காட்டிய பசுமை விகடன்!
எனக்குப் பூர்வீகமே கொளத்தூர்தானுங்க. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்து முடித்து கையோடு, விவசாயத்திற்கு வந்துவிட்டேன். இப்போது 30 வருடமாகிறது. தென்னைக்கு இடையில் 18 வருடமாக வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்துக் கொண்டிருக்கிறேன். கோடைக் காலங்களில் கிணற்றுப் பாசனம், மழைக் காலங்களில் ஏரிப்பாசனம். ஆரம்பத்தில் நானும் ரசாயன விவசாயம் தான். சம்பாதிப்பதில் முக்கால் வாசியை உரக் கடைக்குத்தான் கொடுக்க வேண்டியிருந்தது. அதில்லாமல் கட்டுபடியான விலையும் கிடைக்கவில்லை.

உற்பத்திச் செலவை எப்படிக் குறைப்பது என்பதை  யோசனை செய்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாற்று வழியைக் காட்டியது ‘பசுமை விகடன்’தான். அதில் வெளியான இயற்கை விவசாயம் சம்பந்தமான கட்டுரைகள் என்னை மிகவும் ஈர்த்தது. தொடர்ந்து, பசுமை விகடன் நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்புகள், ‘இனியெல்லாம் இயற்கையே’ களப்பயிற்சிகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டு. இயற்கை வேளாண்மை பற்றிய விஷயங்களைத் தெளிவாக தெரிந்துகொண்டேன். அதன் பிறகு  முழு இயற்கை விவசாயியாக மாறினேன். இப்போது மூன்று வருடமாக ஜீரோ பட்ஜெட் முறையில்தான் விவசாயம் செய்கிறேன். 10 ஏக்கர் தென்னந்தோப்பில் 8 ஏக்கரில் மட்டும் ஏழு ரக வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்து கொண்டிருக்கிறேன். அதனால் உற்பத்திச் செலவு வெகுவாக குறைந்திருக்கிறது.

வெயில் கிடைக்கும் இடங்களில் மட்டும் ஊடுபயிர்!
தோப்பில் 27 அடி இடைவெளியில் மொத்தம் 700 நாட்டு தென்னை மரங்கள் இருக்கு. எல்லாமே, 30 வயது முதல் 40 வயது வரைக்கும் உள்ள மரங்கள், தோப்பிற்குள்ளே ஏகத்திற்கும் சூரிய வெளிச்சம் கிடைத்ததால் ஊடுபயிராக வாழை போட்டிருக்கிறேன். தனிப்பயிராக வாழையை நட்டால், ஏக்கருக்கு 1,000 மரங்கள் முதல் 1,200 மரம் வரைக்கும் பிடிக்கும். ஆனால், ஊடுபயிராக செய்யும்போது அதில் பாதிதான் நடமுடியும். வெயில் கிடைக்கும் இடங்களில் மட்டும்தான் நடவு செய்ய வேண்டும். இரண்டு தென்னைக்கு இடையில் ஒரு வாழை என்று நட்டிருக்கிறேன்.

பூவன், தேன்வாழை, செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், நேந்திரன், ஜி – 9 என்று ஏழு ரகங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 800 வாழைகள் இருக்கு (பூவன் -1,000 செவ்வாழை-500. தேன்வாழை-1,000, ரஸ்தாளி-500, நேந்திரன் – 500, ஜி -9 -800, மொந்தன்-500). மூன்று வருடமாக தோப்பில் உழவே செய்யவில்லை. தட்டைப்பயிரை ஏகத்திற்கும் விதைத்து விடுவதால் களைகள் கட்டுப்படுவதோடு, தழைச்சத்தும் கிடைக்கிறது. அங்கங்கே செண்டு மல்லிச் செடிகள் இருப்பதால் நூற்புழுத் தொந்தரவும் இல்லை. தொடர்ந்து பாசனத்தோடு ஜீவாமிர்தத்தைக் கொடுக்கிறேன். இயற்கை முறை என்பதால் நோய்களே வருவதில்லை.


வாழையில் இது மூன்றாவது தழைவு. தாய் வாழையைச் சுற்றி நிறைய பக்கக் கன்றுகள் வளரும். இரண்டு மாதம் வளர்ந்த பிறகு, அதில் ஒன்றை மட்டும் விட்டுட்டு, மற்றக் கன்றுகளை அப்புறப்படுத்திவிடவேண்டும். இந்த இரண்டு மாதத்திற்குள் பக்கக் கன்றுகள் கிடைக்கும் இலைகளை அறுத்து விற்கலாம். பக்கக் கன்று வளர வளர, அறுவடை செய்த தாய் வாழை வாடி, பழுத்து தானா கீழே சாய்ந்துவிடும். அப்போது அதை வெட்டி, தோட்டத்தில் பரப்பிட்டால் உரமாகிவிடும்.

ஒரு தார் குறைந்தபட்சமாக 100 ரூபாய்க்கு விற்கும். அந்தக் கணக்கில் 4 ஆயிரத்து 800 தார் மூலமாக வருடத்திற்கு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இலை மூலமாக 48 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. இடுபொருள் தயாரிக்க, பயிருக்கு கொடுப்பதற்கு என்று ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கான கூலி, வருடத்திற்கு 75 ஆயிரம் ரூபாய். ஆரம்பத்தில் நடும்போது உழவு, குழி என்று ஒரு கன்னுக்கு 15 ரூபாய் செலவாகிறது. வியாபாரிகளே அறுவடை செய்து கொள்வதால் அறுவடைச் செலவு கிடையாது. எப்படியும் தென்னை வருமானம் இல்லாமல், ஊடுபயிர் மூலமாகவே எட்டு ஏக்கரிலிருந்து வருடத்திற்கு நான்கு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது.

விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் தரும் எலுமிச்சை மற்றும் வாழை (Elumichaiyil Uudu Payiraga Vaalai) - Lemon + Banana Intercropping


ஏற்றம் தரும் எலுமிச்சை.. வாரிக் கொடுக்கும் வாழை!


சுவைமிகு கூட்டணி


வேலையாட்கள் பிரச்சனை, மின்சாரப் பிரச்சனை, தண்ணீர் தட்டுப்பாடு.. என அனைத்தையும் தாண்டி விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கொடுத்துக் கொண்டிருக்கும் பயிர்களில் முக்கிய இடத்தில் இருப்பவை, எலுமிச்சை மற்றும் வாழை ஆகியவை. இவை இரண்டையுமே ஒன்றாக இணைத்து சாகுபடி செய்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே இருக்கும் பாப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன்.

குடை பிடித்துக் கொண்டிருந்த எலுமிச்சை மரங்கள், சாமரம் வீசி வரவேற்புக் கொடுத்துக் கொண்டிருந்த வாழை மரங்கள் என, விரிந்து கிடந்த தோட்டத்திலிருந்த சந்திரசேகரன் “பத்தாவது வரைக்கும்தான் படித்தேன். அதற்கு மேல் படிக்கப் பிடிக்காததால், தேங்காய் மண்டியில் வேலைக்குச் சேர்ந்தேன். அதுவும் எனக்கு சரிப்பட்டு வரவில்லை. அதனால், அப்பாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பித்தேன். அப்போது, கரும்பு சாகுபடி செய்து கொண்டிருந்தோம். நாங்களே வெல்லமாக காய்ச்சி விற்றுவிடுவோம். ஆரம்பத்தில் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால், போகப்போக மகசூலும் குறைந்துவிட்டது. வெல்லத்தோட விலையும் குறைந்தது. வேறு சாகுபடிக்கு மாறலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தப் போதுதான், ஒரு நண்பர் எலுமிச்சை  போடுவதற்கு யோசனை சொன்னார். அவரும் எலுமிச்சை போட்டிருந்ததால் அவருடைய தோட்டத்திற்குப் போய் நேரடியாக பார்த்து விவரங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டு.. இரண்டரை ஏக்கரில் எலுமிச்சை சாகுபடியை ஆரம்பித்தேன். இப்போது பன்னிரண்டு வருடமாகிறது. முதல் மகசூல் கிடைக்க ஆரம்பித்தப்போது, கொஞ்சம் விற்பனைக்குக் கஷ்டமாக இருந்தது. இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு ஏக்கர் வெகுமதி கொடுத்த எலுமிச்சை!
மூன்று வருடம் வரைக்கும் எலுமிச்சைக்கு இடையில் ஊடுயிராக வாழையையும் போட்டிருந்தேன். ஆரம்பத்தில் இது மூன்றிலும் கிடைத்த லாபத்தை வைத்து, ஒரு வீட்டு மனை, இரண்டு ஏக்கர் நிலம் என்று வாங்கிப்போட்டிருக்கிறேன். இப்போது மொத்தம் கையில் 13 ஏக்கர் நிலம் இருக்கு. இரண்டரை ஏக்கரில் தென்னை, 7 ஏக்கரில் மா, எலுமிச்சை, வாழை இருக்கு. ஒரு ஏக்கரை நெல் சாகுபடிக்காக தயார் செய்து வைத்திருக்கிறேன். மீதி இரண்டரை ஏக்கரில் 250 எலுமிச்சை மரங்களும் அதில் ஊடுபயிராக ஆயிரம் கற்பூரவல்லி வாழை மரங்களும் இருக்கிறது என்ற சந்திரசேகரன், எலுமிச்சை மற்றும் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

வடிகால் வசதி அவசியம்!
எலுமிச்சை சாகுபடி செய்ய, வடிகால் வசதியுள்ள அனைத்து மண்வகைகளும் ஏற்றவை. ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உள்ள காலம், நடவுக்கேற்றப் பருவம். இந்தப் பருவத்தில் நடவு செய்யும் போது, நாற்றுகள் பழுதில்லாமல் நல்ல முறையில் வேர் பிடித்து வளரும். அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் எலுமிச்சை பதியன் செடிகளை வாங்கி நடவு செய்து கொள்ளலாம். 



20 அடி இடைவெளி!
20 அடிக்கு 20 அடி இடைவெளியில், 2 கன அடி அளவிற்க்குக் குழிகள் எடுத்து ஒரு வாரம் வரை ஆறப்போட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கூடை எரு மற்றும் மேல் மண் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். பிறகு, 40 நாட்கள் வயதுள்ள பதியன் செடிகளை, குழியின் மையத்தில் ஒரு அடி ஆழத்தில் இருப்பது போல், நடவு செய்ய வேண்டும். செடிகள் சாய்ந்து விடாமல் இருக்க, ஒவ்வொரு செடிக்கு அருகிலும் ஒரு நீளமான குச்சியை ஊன்றி, அதனுடன் செடியை இணைத்துக் கட்ட வேண்டும்.

வாரம் ஒரு பாசனம்!
நடவு செய்து 15 நாட்கள் வரை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் தண்ணீர் விட வேண்டும். அதற்குப் பிறகு, மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நேரடிப் பாசனம் செய்தால் போதுமானது. 3 ஆண்டுகள் வரையில்  எலுமிச்சைச் செடிகளுக்கு இடையில் கனகாம்பரம் போல் ஏதாவது ஒரு பயிரை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம். 4 –ம் ஆண்டில் எலுமிச்சைக்கு இடையில் வாழையை நடவு செய்யலாம். வாழைக்கு, ஆறரை அடி இடைவெளி விட வேண்டும். 7 அண்டுகளில் எலுமிச்சை மரங்கள் நன்கு வளர்ந்து பரவி விடும். அதனால், அதற்குப் பிறகு இடைவெளி உள்ள இடங்களில் மட்டும்தான் வாழை சாகுபடி செய்ய வேண்டும். ஊடுபயிர் சாகுபடிக்கு ஏலக்கி, பூவன், செவ்வாழை, கற்பூரவல்லி போன்ற ரகங்கள் ஏற்றவை. வாழையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அழித்துவிட்டு, புதிய கிழங்குகளை நடவு செய்ய வேண்டும்.

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா!
எலுமிச்சை மரங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து, ஒரு அடி இடைவெளிவிட்டு அரையடி விட்டத்தில் வட்டப்பாத்தி எடுத்து உரம் வைக்க வேண்டும். இப்படி வட்டப்பாத்தியில் உரம் வைப்பதால், மரங்களுக்கு உடனே சத்துக்கள் சென்று சேரும். அதாவது, ஒவ்வொரு வட்டப்பாத்தியிலும் ஒரு  கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம்... யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி., ஜிப்சம் ஆகியவற்றையும் சேர்த்து கலந்து வைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்பகுதியில் இருந்து இரண்டு அடி இடைவெளிவிட்டு இதேபோல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உரம் வைத்து வர வேண்டும்.

வாழை மரங்களுக்கு 3-ம் மாதத்தில்... ஒரு மரத்திற்கு ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால் கிலோ வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். 8-ம் மாதத்தில் ஒரு கூடை ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், கால்கிலோ வேப்பம் பிண்ணாக்கு, தலா 200 கிராம் வீதம் பொட்டாஷ், டி.ஏ.பி., யூரியா, ஜிப்சம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மரத்தில் இருந்து அரையடி இடைவெளியில் வைத்து மண் அணைக்க வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 80 லிட்டர் தண்ணீருக்கு.. ஒரு லிட்டர் பஞ்சகவ்யா வீதம் கலந்து ‘ராக்கர்’ தெளிப்பான் மூலம் தேவையான அளவிற்க்கு தெளிக்க வேண்டும். கொசு மற்றும் வெள்ளை ஈ தாக்குதலை சமாளிக்கப் பரிந்துரைக்கப்படும் பூச்சிக் கொல்லியைத் தெளிக்க வேண்டும்.

எருமை மாட்டின் பால் உற்பத்தி (Erumai Maattin Paal Urpathi) - Livestock Buffalo Milking

பால் கறக்கும் காலமும் அளவும்
எருமையானது கன்ற ஈன்றவுடன் பால் கறக்க ஆரம்பிக்கிறது. முதல் ஓரிரு வாரங்களில் கறக்கும் பாலிலிருந்து அந்த எருமையின் பாலின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.  5-6 வாரங்களில் அதிக அளவு பால் தரும். இந்த அளவு சில வாரங்களில் வரை தொடர்ந்து பின் குறைய ஆரம்பிக்கும். பின்பு கறவையின் பால் வற்ற ஆரம்பித்துவிடும்.

எருமைகள் நான்காவது கன்று ஈனும் போது அதன் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். பின்பு குறைந்து விடும். பால் கறக்கும் கால அளவு தீவனம், பராமரிப்பு, பால் கறக்கும் இடைவெளி, நோய்த்தாக்கம் போன்ற காரணிகளைப் பொறுத்தது. பல்வேறு இன எருமைகளின் பால் உற்பத்திக் காலம் அட்டவணை 10ல் கொடுக்கப்பட்டுள்ளது. முர்ரா இன எருமைகளில் பால் உற்பத்திக் காலம் 262-295 நாட்கள் வரை ஆகும்.


எருமையில் பால் கறத்தல்

பால் உற்பத்தியானது மரபியல் மற்றும் இதர பிற காரணிகளைச் சார்ந்துள்ளது. மரபியல் காரணிகளான இனங்கள், இனப்பொருக்கத் திறன், சினையாகும் திறன், அடுத்தடுத்த கன்று ஈனும் இடைவெளி போன்றவற்றைச் சாாந்து வேறுபடுகிறது. மேலும் இவை தவிர பராமரிப்பு, தீவனத்தின் தரம், அளவு, வளர்ப்பாளரின் சூட்டைக் கண்டு சினைப்படுத்தும் திறன் போன்றவற்றவைப் பொறுத்தும் பால் உற்பத்தி அளவும், காலமும் வேறுபடுகிறது.

தேவையான அளவு ஆற்றல், புரதம், தாதுக்கள், நீர் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ள தீவனம் முறையாக அளிக்கப்படவேண்டும். அதே போல் எருமைகளில் எந்த அளவு கன்று ஈனும் இடைவெளி உள்ளதோ, அந்த அளவு பால் கறக்கும் காலமும், அளவும் அதிகமாக இருக்கும். எனினும் மொத்தம் ஈனும் கன்றுகளின் அளவு குறைவாக இருக்கும்.

பால் கறக்கும் இடைவெளி பால் அளவு மற்றும் தன்மையைப் பாதிக்கும். முர்ரா இன எருமைகளில் நாளொன்றுக்கு இரு முறை பால் கறப்பதை விட 3 முறை கறக்கும் போது பாலின் அளவு 31 சதவிகிதமும், பால் கொழுப்புச் சத்தின் அளவு 26 சதவிகிதமும் அதிகமாக கிடைக்கிறது.

பால் வற்றிய காலம்


எருமைகளில் 2-3 மாதங்கள் அடுத்த கன்று ஈனும் முன்பு பால் வற்றிவிடும். அந்த இடைவெளியில் மடிக்கு ஓய்வு கொடுத்து புண்பட்ட செல் மற்றும் திசுக்களை புதுப்பித்துக் கொள்ளும்.



அதிக பால் உற்பத்தி கொண்ட எருமை மந்தைகளில் (நாளொன்றுக்கு  10 கி.கி அதிகமாக) அடுத்த கன்று ஈனுவதற்கு 3 மாதங்கள் முன்பே பால் அளவு நாளொன்றுக்கு 2.5 கி.கி குறைந்து பின்பு வற்றிவிடும். இது போன்று வற்றும் கறவையில் புதிதாக பிறந்த சில கன்றுகளை ஊட்டச் செய்யலாம். ஒரு எருமையில் பிறந்து சில வாரங்களான 1 அல்லது 2 கன்றுகளை ஊட்டச்செய்யலாம்.


எருமைப்பாலில் உள்ள முக்கிய நுண்ணுட்டச் சத்துக்கள்
முக்கிய நுண்ணூட்டச் சத்துக்கள்


சோடியம்
750
317
பொட்டாசியம்
1390
908
கால்சியம்
2030
1880
மெக்னீசியம்
200
91.9
இரும்பு
-
0.325
பாஸ்பரஸ்
1290
-
ஜிங்க்
-
626
தாமிரம்
-
0.303

சீம்பாலின் சத்துக்கள்
கன்று ஈன்ற முதல் மூன்று நாட்களில் எருமையானது சீம்பாலைச் சுரக்கும். இதில் கன்றுக்கு அவசியமான இம்யூனோ குளோபுலின் நோய் எதிர்ப்பொருளும், சாதாரண பாலில் உள்ளதை விட தாமிரம், இரும்புச்சத்துக்கள் அதிக அளவிலும் உள்ளன.


அட்டவணை 2 சீம்பாலின் ஊட்டச்சத்துக்கள்
நீர் (சதவீதம்)
கொழுப்பு (சதவீதம்)
மொத்த புரதம் (சதவீதம்)
லேக்டோஸ்
(சதவீதம்)
விட்டமின் எ மைக்ரோ கிராம் / கி.கி
68
15
13.6
3.1
-
73
9.55
9.59
7.54
1.8

பாலின் தன்மை மாறுதல்
பாலின் தன்மை பால் பீய்ச்சும் முன்போ, அல்லது எருமையின் மடியிலேயே மாறலாம். பாலானது பீய்ச்சும் போதே தன்மை மாறி இருந்தால், அது ஏதேனும் நோய்த்தாக்கம் அல்லது நோயைக் குணப்படுத்த அளித்த மருந்தின் ஒவ்வாமையாக இருக்கலாம். சில சமயங்களில் சூழ்நிலை மாற்றம், தீவன மாற்றம் கூட பாலின் தன்மை மாறக் காரணமாக இருக்கலாம்.


தீவனத்தின் தன்மை
உலர்தீவனங்கள் பால் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். அதே வேளையில் அடர் தீவனங்கள் அதிகமாகக் கொடுத்தால் புரப்பியோனிக் அமிலம் உண்டாகி பாலின் கொழுப்பு அளவைக் குறைக்கும். அதிக நார்ச்சத்துள்ள உலர் தீவனங்களில் அசிட்டிக் அமிலம் சுரப்பதால் தான் பாலின் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது.

அதிக ஆற்றல் உள்ள தீவனங்கள் பாலின் உறையும் (கெட்டி) தன்மையை அதிகரிக்கிறது.


கடுகு எண்ணெய் மற்றும் அக்குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களை கால்நடைகளுக்கு அளிக்கும் போது அதில் உள்ள குளுக்கோஸினேட்ஸ் (Glucosinolates) கால்நடைகளின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளால்

ஹைட்ரோலஸ் (Hydrolize) செய்யப்பட்டு தையோசையனேட், ஐசோ தையோசையனேட் போன்ற பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இப்பொருட்கள் வயிற்றில் அதிகமாகும் போது அதன் பாலை அருந்தும் மனிதர்களுக்கு தைராய்டு வீங்குதல் போன்ற விளைவுகள் ஏற்படுகிறது. எனவே கடுகுத் தாவரங்களையோ அல்லது புண்ணாக்கையோ அதிக அளவில் கால்நடைகளுக்குக் கொடுக்கக்கூடாது.

நோய்களும் மருந்துகளும்
கால்நடை நோய்கள் பால் அளவையும், தன்மையையும் பெரிதும் பாதிக்கின்றன. நோய் எதிர்ப்பொருள் இரசாயனங்கள் கிருமி நாசினிகள் பயன்படுத்தும் போது அவை பாலுடன் கலக்கின்றன. உதாரணமாக டையஸினான் என்ற மருந்தை வெளிப்புற ஒட்டுண்ணிகள் நீக்க பயன்படுத்திய பிறகு 48 மணி நேரம் கழித்து கறந்த பாலில்  அம்மருந்தின் இராசயனத் தன்மை கலந்திருந்தது.

பால் கறத்தல்



பல நூற்றாண்டுகளாக எருமைகள் பால் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எருமைகளைப் பராமரித்தல் எளிது. மேலும் இதன் பால், மாட்டுப் பாலை விட தரமானது. எருமை மடியின் இயக்கம் மற்றும் உள்ளமைப்பியல் மாடுகளிலிருந்து வேறுபட்டிருப்பதால் பால் கறத்தல் எளிதாகிறது.

எருமை மாடு பால் பண்ணை (Erumai Maadu Paal Pannai) - Dairy Buffalo

ஊருக்குள் நுழைந்து, எருமை மாடு வளர்க்கிறார் என்று ஆரம்பித்தாலே சிறு குழந்தைகள் கூட அடையாளம் காட்டிவிடுகின்றனர், ஸ்டீபனின் எருமைப் பண்ணையை! அந்தளவிற்கு தஞ்சாவூர்  மாவட்டம், திருவையாறு, காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்டீபனின் பால் பண்ணை ஏக பிரபலாம். பண்ணையை நெருங்கும் போதே, மேனகா.. இந்தப்பக்கம் வந்து நில்லு. ராஜகுமாரி .. நீ தண்ணீர் குடிக்க மாட்டியா? என்று பாலர் பள்ளிக்கூடத்தில் கேட்பது போன்ற செல்ல அதட்டல்கள். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் ஸ்டீபன். எருமைகள் நம்ம சொல்லிற்கு கட்டுப்படாது. வளர்ப்பது சிரமம் என்று  சொல்வார்கள். ஆனால், அதெல்லாம் தப்பான கருத்து. நாம் நன்றாக பழகினால் எல்லா பிராணிகளும் நன்றாகவே பழகும். அதற்கு எருமைகளும் விதிவிலக்கல்ல என்றார் ஸ்டீபன்.



அன்று மூன்று மாடுகள் ! இன்று 31 மாடுகள்!
1998ம் வருடம், கறவையிலிருக்கும் நாட்டு எருமைகள் கன்னுக்குட்டிகளோட  வாங்கினேன். நான் வாங்கியது மூன்று மாடுகள. அதிலிருந்து பெருகி, இப்போது 17 கிடேரி எருமை, 8 கிடேரி கன்னுக்குட்டி, 6 கிடா கன்னுக்குட்டிகள் என்று மொத்தம் 31 உருப்படிகள் இருக்கு.

சுத்தம் அவசியம் !
எங்க பண்ணையை எப்பவும் சுத்தமாக இருக்கிற மாதிரி பார்த்துக்குவோம். முழுமையாக மேய்ச்சல் மூலமாகத்தான் மாடுகளை வளர்க்கிறோம். அதனால், எல்லா மாடுகளுமே நோய் நொடி இல்லாமல் நன்றாக இருப்பதோடு பராமரிப்புச் செலவும் குறைகிறது.

கொட்டகை இருந்தால் ஆரோக்கியம் !
பொதுவாக எருமை மாடுகளை திறந்த வெளியில்தான் கட்டி வைப்பாங்க. நாங்க கொட்டகை போட்டுதான் வளர்க்கிறோம். அப்போதுதான் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். 40 அடி நீளம், 30 அடி அகலம், 14 அடி உயரத்தில் கொட்டகை போட்டிருக்கிறோம். கொசு, மாதிரியான பூச்சிகள்கிட்டயிருந்து காப்பத்தருதுக்காக தினமும் ராத்திரியில் கரனட்டில் இயங்கும் கொசு விரட்டிகளை போட்டு வைப்போம்.

மேய்ச்சல் முறையில் செலவு குறைவு!
தினமும் காலையில் ஆறு மணிக்குள் பாலைக் கறந்துவிடுவோம். ஏழு மணியிலிருந்து மதியம் பன்னிரண்டு மணி வரைக்கும் மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம். வெயில் ஏறிடுச்சுனா.. பக்கத்தில் இருக்கும் குளத்திற்குள் இறக்கி விட்டுவிடுவோம். திரும்ப மூன்று மணிக்கு பண்ணைக்கு அழைச்சுட்டு வந்து பால் கறந்துவிட்டு திரும்பவும் மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம். பொழுது சாய்ந்த பிறகு பண்ணைக்கு அழைச்சுட்டு வந்து, குழாயில் தண்ணியைப் பீய்ச்சி அடித்து மாடுகளைச் சுத்தப்படுத்தி கொட்டகையில் கட்டிடுவோம். கோதுமைத் தவிடை ஊற வைத்து பருத்திக் கொட்டையைக் கலந்து வைத்துவிடுவோம். முழு மேய்ச்சல் என்பதால் தீவனச் செலவும் மிகவும் குறைவுதான். ஆரம்பத்தில் நான் வாங்கின மாடுகளில் இரண்டு மாடுகளுக்கு கிட்டத்தட்ட 20 வயசு நெருங்கிடுச்சு. இரண்டுமே பதிமூன்று முறை கன்று போட்டிருக்கு. ஆனாலும், அந்த மாடுகள் இன்னமும் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது. முறையாக பராமரிப்பதுதான் இதற்கு காரணம்.

ஆண்டுக்கு 15,000 லிட்டர் பால்!
காலை... மாலை இரண்டு வேளையும் ஒவ்வொரு லிட்டர் பாலை கன்னுக்குட்டிக்காக விட்டுட்டுத்தான் கறப்போம். ஒரு எருமையில் இருந்து எட்டு மாதம் வரை பால் கிடைக்கும். எட்டு மாதத்தில் ஒரு மாடு மூலமாக 1,000 லிட்டர் வரை கிடைக்கிறது. போன வருடம் என்கிட்டயிருந்த மாடுகள் மூலமாக மொத்தம் 14 ஆயிரம் லிட்டர் கிடைத்தது
கறவை குறைவதற்கு, முதல் ஈத்து என்று கணக்குப் பார்த்தால், வருடத்திற்கு சராசரியாக எப்படியும் 15 ஆயிரம் லிட்டர் பால் கிடைத்துவிடும். ஒரு லிட்டர் பால் 25 ரூபாய் என்று வைத்து கொண்டால் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வருமான் கிடைக்கும். தீவனம், பராமரிப்புக்கு 50 ஆயிரம் ரூபாய் போ 3 லட்சத்து 25 ஆயிரம் லாபமாக கிடைக்கும். இதில்லாமல் கிடைக்கும் கிடா கன்னுக்குட்டிகளை இரண்டு வயது வரைக்கும் வளர்த்து விற்றுவிடுவோம். ஒரு கிடாவுக்கு, 10 அயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும். கிடேரிக் கன்னுகளை நாங்களே வைத்துக் கொள்வோம். மாடுகள் மூலமாக சம்பாதிக்க பணத்தில்.. இப்போது மூன்றரை ஏக்கர் நிலம் வாங்கி இருக்கோம். அதில் பசுந்தீவனங்களை சாகுபடி செய்யலாம் என்று இருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று வருடத்திற்குள் பண்ணையில் 100 எருமைகளை நிப்பாட்டணும் என்பது என்னோட இப்போதைய கனவு.

எருமை மாடுகளை வளர்ப்பதற்கு ஸ்டீபன் தரும் ஆலோசனைகள்
காற்றோட்டம் முக்கியம் : வளர்க்கப் போகும் மாடுகளின் எண்ணிக்கைக்கேற்ற அளவிற்கு கொட்டகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். மேற்கூரை உயரமாக இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் காற்றோட்டம் இருக்கும். தினமும் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிய பிறகு கொட்டகைகளைச் சுத்தப்படுத்த வேண்டும். காலை சூரியன் உதிப்பதற்கு முன்னரும், மாலை மூன்று மணியளவிலும் பாலைக் கறந்துவிட வேண்டும். கன்றுகளுக்கு போதுமான அளவு பால் விட வேண்டியது அவசியம். நீர் நிலைகள் இருக்கும் பகுதியில்தான் மாடுகளை மேய்க்க அனுப்ப வேண்டும். நன்பகல் நேரத்தில் மாடுகளை நீர்நிலைகளில் இறக்கிக் குளிப்பாட்ட வேண்டும்.

வைக்கோல் கவனம் : 2 கிலோ பருத்திக்கொட்டையை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து, அதனுடன் 10 கிலோ கோதுமைத் தவிடைச் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இரவில் கொட்டகையில் அடைப்பதற்கு முன், பெரிய மாடுகளுக்கு இந்தக் கலவையில் தினமும் கால் கிலோ அளவிற்க்கு தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். வளரும் கன்றுகளுக்கு 100 கிராம் அளவிற்க்கு கொடுக்க வேண்டும்
என்னுடைய அனுபவத்தில் எருமைகளுக்கு வைக்கோல் கொடுப்பதைக் காட்டிலும் பசுந்தீவனம் கொடுப்பதுதான் லாபகரமாக இருக்கிறது. நமது வயலில் கிடைக்கும் பட்சத்தில் வேண்டுமானால் வைக்கோல் கொடுப்பதில் தவறில்லை. அப்படிக் கொடுக்கும் போது, கண்டிப்பாக ஈரமான வைக்கோலைக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் பூஞ்சணத்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.