Thursday, February 27, 2014

முயல் வளர்ப்பு - 2



இனப்பெருக்கம் 

இனப்பெருக்கத்திற்கான முயல்களைத் தெரிவு செய்தல்

நல்ல, ஆரோக்கியமான முயல்களிடமிருந்து தான் வளமான குட்டிகளைப் பெற முடியும். ஆகவே சிறந்த இனங்களைத் தேர்வு செய்தல் அவசியம்.






ஆண் முயல்

இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தம் ஆண் முயலுக்கு குறைந்தது 8 மாத வயதாவது இருக்கவேண்டும். நல்ல கிடா முயலானது 3 வருடங்கள் வலை நல்ல இனவிருத்தித் திறன் பெற்றிருக்கவேண்டும். இளம் கிடாக்கள் 3 (அ) நான்கு நாட்கள் இடைவெளிவிட்டு ஒரு பெட்டை முயலுடன் சேர்க்கலாம். 12 மாத வயதிற்குப் பிறகு வாரத்திற்கு 4-6 பெட்டைகளுடன் சேர்க்கலாம். 6 வருடத்திற்குப் பின்பு அதன் விந்தணு உற்பத்தி மிகவும் குறைந்து விடும். ஆதலால் அதைப் பண்ணையிலிருந்து கழித்து விட வேண்டும். கிடாக்களின் இனவிருத்தித் திறன் குறையாமல் இருக்க நல்ல உணவூட்டமும், பராமரிப்பும் அவசியம். புரதம், தாதுக்கள், விட்டமின்கள் நிறைந்த உணவளித்தல் அவசியம். அதோடு கிடாக்களைத் தனித்தனியே பராமரித்தால் அவை சண்டையிட்டுக் கொள்வதைத் தடுக்கலாம்.


பெண் முயல்
இனவிருத்திக்குப் பயன்படுத்தும் பெண் முயல் பெட்டை முயல் எனப்படும். இது அதிக ஆரோக்கியமும் இனவிருத்தித்திறனும் பெற்றிருத்தல் அவசியம். பெட்டை முயலானது தட்பவெப்பநிலை, இனம் மற்றும் உணவூட்ட அளவு ஆகியவற்றைப் பொறுத்தே அதன் இனப்பெருக்கத்திறன் அமையும். பெரிய இனங்களை விடச் சிறிய இனங்கள் விரைவிலேயே பருவமடைந்து விடுகின்றன. சிறிய இனங்கள் 3-4 மாதங்களிலும், எடை மிகுந்த இனங்கள் 8-9 மாதங்களிலும் பருவமடைகின்றன. 3 வருடங்கள் வரை மட்டுமே பெண் முயல்களை இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தவேண்டும்.

இனப்பெருக்கம்
கருமுட்டை வெளிப்படுதல்

முயல்களில் கருமுட்டை வெளிப்படுவது தன்னிச்சையாக நடப்பதில்லை. இவைகளில் ஓஸ்டிரஸ் சுழற்சி காணப்படுவதில்லை. எனவே இனச்சேர்க்கை மூலம் கருமுட்டை வெளிவருமாறு தூண்டப்படுகிறது. இனச்சேர்க்கைத் தூண்டலானது இனக்கலப்பினாலோ, வெளிப்புறத் தூண்டலினாலோ, இனப்பெருக்க அணு உற்பத்தித் தூண்டுதல் மூலமாகவோ, கருமுட்டை வெளிவருதல் மூலமாகவோ நடைபெறுகிறது. சில முறை பெண் முயல்களே ஒன்றையொன்று தூண்டிக் கொள்வதும் உண்டு. இதனால் பொய்ச்சினை மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு.

இனச்சேர்க்கை செய்த 10 மணி நேரம் கழித்துதான் கருமுட்டை வெளிவரும். ஆண்டு முழுவதும் முயல்கள் இனச்சேர்க்கைக் கொண்டாலும், சுரப்பிகள் விரிந்து பின்பு பின்னோக்கிச் செல்லும் சுழற்சியின் 15-16 நாட்களில் தான் அவற்றின் கருமுட்டை வெளிப்படுவது அதிகமாக இருக்கும். பிற நாட்களில் பெண் முயல்கள் இனச்சேர்க்கையை விரும்பவதில்லை. சினைப்பையை இயந்திரம் மூலம் தூண்டி விடுவதன் மூலமாகவும் கரு முட்டை வெளிவருவதைத் துரிதப்படுத்தலாம்.


இனச்சேர்க்கை

சூட்டில் இருக்கும் முயல்களைக் கண்டுபிடிப்பது கடினம். எனினும் சில சமயங்களில் அமைதியின்மை, நடுக்கம், வாயை அடிக்கடி தேய்த்தல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். பெண் உறுப்பு தடித்து, கருஞ்சிவப்பு நிறத்தில் ஈரமாக இருக்கும். சரியான பருவத்தில் உள்ள பெண் முயல் வாலைத்தூக்கி ஆண்முயலின் இனச்சேர்க்கையை ஏற்றுக்கொள்ளும்.

இனக்கலப்பிற்கான பெண் முயலின் வயது 5-6 மாதங்கள் அதிகாலை, அந்திமாலை நேரங்கள் இனக்கலப்பிற்கு மிகவும் ஏற்றவை. பொதுவாக பெண் முயல்களை ஆண் முயலின் கூண்டிற்கு எடுத்துச் சென்று கலப்பிற்கு விடவேண்டும். புது இடங்களில் ஆண் முயலானது சரியாக இனச்சேர்க்கை செய்யாது. இனச்சேர்க்கை நடந்தவுடன் ஓரிரு நிமிடத்தில் ஆண் முயல் கிரீச் என்ற சப்தத்துடன் ஒரு புறமாகவோ அல்லது பின்புறமாகவோ விழும். இதுவே சரியான இனச்சேர்க்கை ஆகும். சரியாக இனச்சேர்க்கை நடக்காவிடில் பெண் முயல்களை இனச்சேர்க்கை முடியும் வரை 3-4 நாட்களில் ஆண் முயல் கூண்டுக்குள்ளேயே விட்டு வைக்கவேண்டும்.

நல்ல இலாபம் ஈட்ட ஒரு முயலானது 5 முறை ஆண்டொன்றிற்கு குட்டிகள் ஈனவேண்டும். அதற்குக் குட்டிகளை 6 வார வயதில் தாயிடமிருந்து பிரித்துவிட்டு உடனே பெண் முயலை அடுத்த இனச்சேர்க்கைக்கு விடவேண்டும். ஒவ்வொரு இனப்பெருக்க காலமும் 65-75 நாட்கள், இதற்கு குட்டி ஈன்ற 21வது நாளில் அடுத்த கலப்புச் செய்வதால் ஈற்றுக்களை அதிகப்படுத்தலாம்.

சினைக்காலம்

முயல்களின் சினைக்காலம் 28-32 நாட்கள் ஆகும். பெண் முயல் கூண்டுக்குள் வைக்கோல், புற்கள் போன்ற பொருட்கள் வைப்பதால் சினை முயல் தன் குட்டிகளுக்கு படுக்கையைத் தயார் செய்து கொள்ளும். குட்டி ஈனுவதற்கு ஒரு வாரம் முன்பே வைக்கோல், புற்கள், மரத்துண்டுகள் போன்ற பொருட்களை உள்ளே போட்டு வைத்துக் கொள்ளவேண்டும். மரத்தூளைப் படுக்கை தயார் செய்ய தனது சொந்த முடியையே பிய்த்துக் கொள்ளும். சரியான தீவனம் மற்றும் தூய தண்ணீர் சினைக்காலத்தில் வழங்கப்படவேண்டும். சூழ்நிலை மாற்றங்கள் சினை முயல்களைப் பாதிக்காமல் பாதுகாத்தல் அவசியம்.

சினையை உறுதிப்படுத்தும் சோதனைகள்

வயிற்றை அழுத்திப் பார்க்கும்போது கலப்பு செய்த 2வது வாரத்தில் இளம் சினைக்கருக்கள் கையில் தட்டுப்பட்டால் சினையை உறுதி செய்து கொள்ளலாம்.சினையான முயலுடன் ஆண் முயல் கலப்பு செய்து விடாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். 

கருப்பை பெருத்தல் : கலப்பு செய்து 9 நாட்களுக்குப் பிறகு 12 மி.மீ அளவு கருப்பை வீங்கி இருக்கும். இது 13 நாட்களில் 20 மி.மீ அளவு மேலும் பெருத்துக் காணப்படும். நன்கு அனுபவமிக்கவர்கள் இதைப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும்.

உடல் எடை அதிகரிப்பு

கலப்பு செய்து 30 நாட்கள் கழித்து உடல் எடை 300-400 கிராம் எடை (பெரிய இனங்களில்) கூடி இருக்கும்.

குட்டி ஈனுதல்

பொதுவாக முயல்கள் இரவில் தான் குட்டி ஈனுகின்றன. அவை குட்டி ஈனும் போது எந்த ஒரு தொந்தரவையும் விரும்புவதில்லை. 7 - 30 நிமிடத்திற்குள் குட்டி ஈனுதல் நடைபெற்று முடிந்து விடும். சில சமயம் எல்லாக் குட்டிகளும் தொடர்ந்து வெளி வராமல், சில குட்டிகள் பல மணி நேரம் கழித்தும் வெளிவரலாம். அச்சமயத்தில் ஆக்ஸிடோசின் ஊசி போடப்பட்டு குட்டிகள் வெளிக்கொணரப்படும். குட்டி போட்டவுடன் தாய் முயல் குட்டிகளை நக்கி சினைக்கொடியை உண்டு விடும். பிறந்த குட்டிகள் தாயிடம் பாலூட்ட முயலும். அவ்வாறு பாலூட்ட இயலாத குட்டிகள் உடல் நலம் குன்றி குட்டியிலேயே இறந்து விடும். தாய் முயலானது வேண்டுமளவு அதன் விருப்பத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும். அப்போது தான் குட்டிகளுக்குத் தேவையான அளவு பால் கிடைக்கும். தாய் முயல் இரவில் தான் குட்டிகள் பால் குடிக்க அனுமதிக்கும். ஒரு ஈற்றில் 6-12 குட்டிகள் வரை ஈனலாம்.

No comments:

Post a Comment