Showing posts with label ஆட்டுக்குட்டி. Show all posts
Showing posts with label ஆட்டுக்குட்டி. Show all posts

Monday, January 12, 2015

ஆடு வளர்ப்பு தொழில்

ஆட்டுக் கொட்டில் பராமரிப்பு

ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உனி, பேன் போன்ற ஒட்டுண்ணி ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் அளவு எளிய கொட்டகை அமைப்பே போதுமானது. கிராமங்களில் பெரும்பாலும் மரத்தடி (அ) குடிசை நிழலில் தான் ஆடுகளை வளர்க்கின்றனர்.

ஆட்டுக்குட்டிகள் வளர்ந்து ஓடும் வரை ஒரு பெரிய தலைகீழான கூடையைப் போட்டு மூடப்படுகின்றன. பொதுவாக ஆண் மற்றும் பெண் குட்டிகள் ஒன்றாகவே அடைக்கப்படுகின்றன.

வெள்ளாடுகளின் பால், இறைச்சி, உற்பத்திக்கு ஏற்றவாறு உள்ள ஒரு எளிமையான அமைப்பே போதுமானது. நகரங்களில் வசிப்போர் அல்லது அதிக அளவில் ஆடுகளை வளர்ப்போர் நல்ல காற்றோட்டமுள்ள, வடிகால் வசதியுடன், தேவையான இட வசதியுள்ள கொட்டகை அமைத்தல் நலம்.
                                               

நீண்ட முகப்பு கொண்ட முறை

இம்முறை மிகவும் குறைந்த செலவில் வெள்ளாடுகளுக்கு ஏற்ற வகையில் அமைக்க வல்லது. ஏற்கெனவே உள்ள கட்டிடத்தில் 1.5 மீட்டர் அகலமும் 3 மீ நீளமும் கொண்ட இடம் இரண்டு ஆடுகளுக்கு போதுமானது. இதில் 0.3 மீ அளவு தீவனத் தொட்டிக்கும் 1.2 மீ ஆட்டிற்கும் இடம் ஒதுக்கப்படுகிறது. 1.5 மீ இடம் இரண்டு பெட்டை ஆடுகளுக்கும் இடையே ஒரு சிறிய பிரிப்புச் சுவருடன் அமைக்கலாம். ஓடு அல்லது அட்டையிலான, குடிசை போன்ற மேற்கூரை அமைக்கலாம். பக்கங்களில் அடைக்காமல் உள்ளே ஆடுகளைக் கயிற்றில் கட்டி வைக்கலாம். அல்லது பெரிய ஜன்னல் போன்ற அமைப்புகளுடன் ஆடுகளைக் கட்டாமலும் விட்டு விடலாம். தரைப்பகுதி மண்ணாக இருப்பதை விட சிமெண்ட் பூச்சாக இருந்தால் குளிர்காலங்களில் ஆடுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

ஆடுகளைத் தனித்தனியே பராமரிப்பதானால் 1.8 மீ x 1.8 மீ இட அளவுடன் நல்ல காற்றோட்டமுள்ள 2.5 செ.மீ தடிமனுள்ள ஓட்டைகளுடன் கூடிய பலகையின் பக்கங்களிலும் இரும்பு வாளி போன்ற அமைப்பை தீவனத்திற்காகவும், நீருக்காவும் பயன்படுத்தலாம். இந்த வாளியை தரையிலிருந்து 50-60 செ.மீ அளவு உயரத்தில் வைக்கலாம்.

வெப்பப் பகுதிகளிலும், மழை அதிகமுள்ள பகுதிகளிலும் தரையிலிருந்து சிறிது உயரத்தில் கொட்டகையை அமைத்தல் நலம். அப்போது நல்ல காற்றும் கிடைக்கும், மழைக்காலங்களில் மழை நீர் கொட்டகையிலும் தேங்காமலும், சாரல் அடிக்கமால் இருக்கவும் இம்முறை மிகவும் ஏற்றது. தரையானது மரக்கட்டைகளால் சிறு இடைவெளியுடன் அமைந்து இருந்தால் ஒட்டுண்ணிகள் போன்ற நோய் பரப்பும் கிருமிகள், எளிதில் ஆடுகளைத் தாக்காமல் பாதுகாக்கலாம்.

கூரைகள் மூங்கில், தென்னங்கீற்று, பனை இலை, கோரைப்புல், வைக்கோல் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று கொண்டு அமைக்கலாம். ஆடுகளின் புழுக்கை, சிறுநீரை வெளியேற்றுவதற்கு சரியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.


Sunday, January 11, 2015

ஆட்டுக்குட்டி பராமரிப்பு


இன்றைய ஆட்டுக்குட்டியே வருங்கால உணவுத்தேவையைப் பூர்த்தி செய்யவும், வலிமையான சந்ததிகளை உருவாக்கும் தூண்களாகவும் இருக்கும். ஆகவே, இளம் குட்டிகளைக் கண்ணும் கருத்துமாகப் பண்ணையாளர்கள் பேணவேண்டும். சினை ஆடுகள் குட்டி போடும் நாள் நெருங்கும் பொழுது சுத்தமான தனிச் சூழ்நிலைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். அவை தங்கும் அறைகள் கிருமிநாசினி கொண்டு முதலிலேயே சுத்தம் செய்யப்பட்டு தனித்தனி அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.


தொப்புள் கொடியை வெட்டுதல்:

குட்டி பிறந்தவுடன் வால் மற்றும் நாசி துவாரத்தில் காணப்படும் பிசுபிசுப்பான திரவத்தைச் சுத்தமான துணி கொண்டு துடைத்துவிட வேண்டும். சரியாக மூச்சுவிடாத குட்டிகளின் பின்கால்களை மேலே தூக்கி சுற்ற வேண்டும். குட்டிகள் பிறந்தவுடன் தொப்புள் கொடியை 2 செ.மீ. அளவு நீளம் விட்டு மெல்லிய நூலினால் கட்டியபிறகு அதற்குக் கீழே கத்தரிக்கோலால் கத்தரித்தபின் டிங்சர் அயோடின் மருந்துகொண்டு தடவ வேண்டும்.

சீம்பால்:

குட்டிகள் பிறந்து 30 நிமிடம் முதல் 45 நிமிடங்களுக்குள் எழுந்து தாயிடம் பால் குடிக்க முயற்சிக்கின்றன. அப்படி அவையாக எழுந்திருக்க முடியவில்லை என்றால் அவற்றுக்கு உதவ வேண்டும். சீம்பாலில் சாதாரண பாலைவிட ஏழுமடங்கு புரதச்சத்தும், இரண்டு பங்கு மொத்த திடப்பொருட்களும் உள்ளன. இதில் நோய் எதிர்ப்புசக்தி உள்ளது. இது குட்டிகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். பிறந்த ஒவ்வொரு குட்டியும் தனித்தனியாகக் கவனிக்கப்பட வேண்டும். குட்டிகளின் சிறுகுடல் சுவர்கள், நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்களை உட்கிரகிப்பதற்கு வசதியாக அமைந்திருக்கும். நேரம் செல்லச்செல்ல சிறுகுடலின் உட்கிரகிக்கும் திறன் குறைந்துவிடும். எனவே சீம்பாலைக் குட்டி பிறந்த உடனே 15 நிமிடங்களுக்குள் குட்டிகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டும்.

அடையாளக் குறியிடுதல்:

சிறந்த பராமரிப்புக்காகக் குட்டிகளுக்கு நிரந்தர அடையாளக் குறியிடவேண்டும். இதைக் காதில் உலோகக் (அலுமினியம்/பித்தளை) காதணிகளை அணி வித்துச் செயல்படுத்தலாம். கழுத்தில் அடையாளக் குறித்தகடுகளைச் சங்கிலிமூலம் தொங்கவிடலாம்.