மண் இல்லாமல் பயிர் வளருமா? வளராது என்பதே நம்மில் பலருக்கும் தோன்றும் கருத்து. ஆனால், மண் இல்லாமல் பயிர் வளரும் என்பதை அறிவியல் நிரூபித்துவிட்டது. ஆஹா, அப்படியா? அது நிச்சயம் செலவு அதிகம் பிடிக்கும் விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைப்போம்.
கேரள மாநிலம், கோட்டயம் செல்லும் வழியில் பலா என்ற சிறு ஊரின் அருகில் வசிக்கும் என் நண்பர் திரு.டோனி மைக்கேல் அவர்களைச் சந்தித்தபோது, அவர் அப்போதுதான் மண் இல்லா தீவன அமைப்பை நிறுவியிருந்தார். தினமும் 100 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் அந்த இயந்திரத்தின் அப்போதைய (2010-ல்) விலை சுமார் ரூபாய் 6.5 லட்சம். ஏகப்பட்ட கலர் கலர் பட்டன்கள், மீட்டர்கள் என பார்க்கவே பயமுறுத்தின.
சரி, வந்துவிட்டோம். பத்திரிகைக்கு ஒரு பேட்டி எடுக்கலாமே என்று நினைத்து அவரைப் பேட்டி கண்டு, ஒரு வேளாண்மைப் பத்திரிகையில் வெளியிட்டதில், வாசகர்களிடையே அமோக வரவேற்பு. அதற்குப் பின், பல முறை பல தரப்பிலான நண்பர்களுடன் அவரது பண்ணையைப் பார்க்க வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ரூ.6.5 லட்சம் முதலீட்டில், ஒவ்வொரு முறையும் 100 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யக்கூடிய இந்த முறையை, சாமானிய கால்நடை வளர்ப்பவர்களும் எளிய முறையில் பயன்படுத்த முடியுமா என்று பலமுறை யோசித்தேன். அதுபற்றி நண்பர் டோனியிடம் கேட்டேன். முடியாது, நிச்சயம் முடியாது, முடியவே முடியாது என்று அவர் உறுதியுடன் சொன்னபோது, மண் இல்லா தீவனப் பயிர் வளர்ப்பை எளிய முறையில் செய்ய வேண்டும் என்ற உறுதியை என் மனத்தில் விதைத்துக்கொண்டேன்.
2013-ல் கடுமையான தீவன பற்றாக்குறை. மேல் மழையில்லை. கிணறு வறண்டுபோகும் நிலை. போதுமான உலர் தீவனமும் இருப்பு இல்லை. பசுக்கள் தீவனத்துக்கு ஏங்கி இளைத்துவிடும்முன் விற்றுவிடலாம் என முடிவு செய்து பசுக்களை விற்கத் தொடங்கினேன். தலைமுறை தலைமுறையாக மாடு வளர்க்கும் நாம், தீவன விஷயத்தில் எந்த இடத்தில் தோற்றோம் என ஆராய்ந்தேன். கவனக் குறைவு, சரியான திட்டமிடல் இல்லாதது, தீவன சேமிப்பில் அக்கறை காட்டாதது, இயற்கையின் சதி என பல காரணங்கள் வரிசை கட்டி நின்றன.
எல்லாப் பசுக்களையும் விற்க முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. இரண்டு சோனிப் பசுக்கள், ஒரு வண்டிக் காளையை விற்க முடியவில்லை. என் வீட்டோடு தங்கிவிட்ட இந்த மூன்று வாயில்லா ஜீவன்களை காப்பாற்றியே ஆக வேண்டிய கட்டாயச் சூழல். போனதெல்லாம் போகட்டும். இனி இருக்கும் ஜீவன்களை காப்பாற்ற என்ன செய்யலாம் என யோசிக்கும்போது, ஹைட்ரோஃபோனிக்ஸ் என அழைக்கப்படும் மண் இல்லா தீவன வளர்ப்பை எளிய முறையில் செய்து பார்க்கலாமே என்று தோன்றியது.
மனத்தில் ஏற்கெனவே விதைக்கப்பட்டிருந்த உறுதியுடன், இன்டர்நெட்டில் தகவல்களைத் தேடினேன். கென்யாவில் ஒருவர் எளிய முறையில் மண் இல்லா தீவன உற்பத்தியைச் செய்வதாகத் தெரிந்தது. அவருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு பேசியதில், தெளிவான பதில் கிடைக்கவில்லை. 2000 அமெரிக்க டாலர் (சுமார் ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் ரூபாய்) அனுப்பினால், தொழில் ரகசியத்தைச் சொல்கிறேன் என்றார். அவ்வளவு பெரிய தொகையை யாரோ கண்ணுக்குத் தெரியாத ஆப்பிரிக்கருக்குக் கொடுப்பதைவிட, அந்தப் பணத்தை வைத்து நாமே முயற்சிக்கலாமே என்று முடிவு செய்தேன். இரண்டு மாதங்களுக்கும் மேலாக, மண் இல்லா தீவன வளர்ப்பு முறையைப் பற்றிப் படித்தேன். குறிப்புகள் எடுத்தேன். கால்நடை தகவல் மற்றும் விற்பனை மையம் எனப்படும் முகநூல் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் செய்திகள் சேகரித்துக் கொடுத்தனர்.
ஒரு சுபயோக சுபதினத்தில் எனது முயற்சியைத் தொடங்கினேன். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும் என்பது மண் இல்லா தீவன வளர்ப்பில் நான் கண்ட உண்மை. முதல் தட்டு தீவனம் உற்பத்தி செய்த நாளில் என் மனத்தில் தோன்றிய உணர்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நான் என்ன செய்தேன், என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டேன், எது சரி, எது தவறு? கடைசியில் வெற்றியை ருசித்தது எப்படி...
உங்களுக்கும் சொல்கிறேன்.
இந்த மண் இல்லா தீவன வளர்ப்புக்கு...
* குறைந்த இடம்
* குறைந்த தண்ணீர்
* குறைந்த நேர கவனிப்பு
* குறைந்த உடல் உழைப்பு
* குறைந்த முதலீடு
* பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, ரசாயன உரம் எதுவும்
தேவையில்லை.
இப்படி குறைவாகப் பயன்படுத்தி, குறைந்த இடத்தில் அதிக அளவில் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதுதான் இதில் உள்ள வெற்றியே. இது எல்லாவற்றுக்கும் ஒன்றே ஒன்றுதான் வேண்டும். அது, விடாமுயற்சி.
எங்கள் வீட்டு மாட்டுக்கொட்டகையில் 10 * 8 அடிக்கு ஓர் இடம் இருந்தது. ஓடு வேய்ந்த இடம். ஓட்டுக் கூரை தூசி கீழே விழாமல் இருக்க, சீலிங்குக்குப் பச்சை நிழல் வலை அடித்தேன். உள்ளே வெளிச்சம் வர வேண்டும், ஆனால் உள்ளே இருக்கும் குளிர் நிலையும், காற்றின் ஈரப்பதமும் மாறக்கூடாது என்பதற்காக ஒளி ஊடுறுவும் கனமான பாலிதீன் ஷீட்டால் சுற்றிலும் மூடி, உள்ளே சென்று வர ஒரு கதவு. இதுதான் மண் இல்லா தீவன வளர்ப்புக்காக நான் அமைத்துக்கொண்ட அறையின் அமைப்பு.