Showing posts with label பால் பண்ணை. Show all posts
Showing posts with label பால் பண்ணை. Show all posts

Thursday, July 9, 2015

பால் உற்பத்தியில் சுகாதாரம் பேணுவது எப்படி? (Paal Urpathiyil Sugaadhaaram) - Milk Production

பால் உற்பத்தியில் சுகாதாரமும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ள நிலையில், அதைப் பின்பற்றும் எளிய முறைகள் குறித்து கால்நடை பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் ச.சரஸ்வதி, ப.ராஜேஷ்குமார், ஆர்.ராஜ்குமார் ஆகியோர் தெரிவித்த யோசனைகள்:


பால் கறக்கும் முறை:
  • பசுக்கள்இடப்பக்கத்திலிருந்தே பால் தரும் இயல்புடையவை. இவற்றின் மடியில் பால் கறக்கும்போது முன்னிரு, பின்னிரு காம்புகளிலோ அல்லது பக்கங்களில் உள்ள காம்புகளிலோ இரண்டு கைகளையும் பயன்படுத்திக் கறப்பது நல்லது.
  • முதல் சில துளிகளை பாத்திரத்தில் விடாமல் பீய்ச்சிக் கீழே விட்டுவிட வேண்டும். இத்துளிகளில் அதிகமாக பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதால் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
  • இரு விரல்களை பயன்படுத்தியோ, முழு விரல்களையும் பயன்படுத்தியோ பால் கரக்கலாம். இரு விரல் முறையில் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து சிறிது அழுத்தம் தந்து கீழே இழுப்பதன் மூலம் பால் கறக்கலாம். முழு விரல்களைப் பயன்படுத்தும்போது, ஒரு கை விரல்களால் காம்பினைப் பிடித்து உள்ளங்கையின் மீது அழுத்துவதால் கன்றுக்கு ஊட்டுவது போல் எல்லாப் பக்கமும் ஒரே அழுத்தம் ஏற்பட்டு பால் கறக்கும்.
  • இருவிரல் முறையில் ஒரே அழுத்தம் கிடைக்காது என்பதால் காம்பின் மேல்பாகம் பாதிக்கப்பட்டு சிறு காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். காம்புகள் மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே இருவிரல் முறையைப் பயன்படுத்துவது நல்லது. மிக முக்கியமாக ஈரமான கைகளால் பால் கறப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 சுத்தமான பால்:
  • பசுவின் மடியில் அதிகம் அழுக்கு சேரும். எனவே பால் கரப்பதற்கு முன் மடியை நன்றாக கழுவ வேண்டும். பால் காம்புகளும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். முடிந்தால் நல்ல துணி மூலம் கழுவிய மடியை துடைப்பதும் நல்லது. ஒருமுறை பயன்படுத்தும் கைதுடைப்பு காகிதங்களை பயன்படுத்துவது சிறந்தது.
  •  பால் கறக்கும்போது உரோமங்கள் பாலில் விழுவதைத் தவிர்க்க அவ்வப்போது குளிப்பாட்டும்போது நன்கு தேய்த்து உடலில் உதிரும் ரோமங்களை அகற்ற வேண்டும். மாட்டுச் சாணத்தால் ஈக்கள் மொய்க்கும்.
  •  எனவே மாட்டுத் தொழுவம் அவ்வப்போது கிருமிநாசினியால் கழுவப்படுவதன் மூலம் அப்பகுதி சுகாதாரத்தைப் பேண முடியும். முக்கியமாக பால் கரக்கும் பாத்திரம் ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். கொதிக்கும் நீரை பால் கறக்கும் பாத்திரத்தில் ஊற்றினால் 2 நிமிடத்தில் பாத்திரத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து பாத்திரம் சுத்தமாகிவிடும்.
  •  இந்த நடைமுறைகளை பின்பற்றுவதால் பாலில் பாக்டீரியாக்களின் பாதிப்பை தவிர்த்து சுத்தமான பாலை நுகர்வோருக்கு அளிக்க முடியும். பால் கெடாத தன்மை நீண்டநேரம் நீடிக்கும்.
  • மாடுகளுக்கும், தொழுவம் முழுவதும் அவ்வப்போது சாம்பிராணி போடுவதன் மூலம் நோய்த் தொற்றுகளைத் தவிர்க்க முடியும்.
  • மாட்டுத் தொழுவத்தின் மிக அருகே தண்ணீர் தேங்கினால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். எனவே மாட்டுத் தொழுவம் சற்று மேடான இடத்தில் அமைவது நல்லது.
  • பால் கறக்கும்போது மணம் வீசும் தீவனங்களை மாடுகளுக்கு அளிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் பாலில் அந்த வாடை எளிதில் தொற்றிக் கொள்ளும்.
 மனித சுகாதாரம்:
  • மாடுகளை பராமரிப்போர், பால் கறப்போர் காச நோய், டைஃபாய்டு, டிப்தீரியா போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக மாடுகளிடம் நெருங்கக் கூடாது. இது மாடுகளுக்கும், சுகாதாரமான பால் கறவைக்கும் நல்லது.
  • பால் கறப்பவர்கள் கண்டிப்பாக விரல் நகங்களை வெட்டி, விரல் நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 பால் பாத்திரங்கள்:
  • பால் கறவை, பால் சேமிப்புக்கான பாத்திரங்கள் இடுக்குகள், மடிப்புகள் இன்றி எளிதில் தூய்மை செய்யக் கூடிய வகையிலான அமைப்பில் இருக்க வேண்டும்.
  • அயோட்போர் போன்ற ரசாயனக் கலவை மூலம் அடிக்கடி இந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதும் அவசியம். பாலைக் கறந்ததும் அதை மிதமான வெப்பநிலையில் வைக்க வேண்டும். அதிக வெப்பநிலை உள்ள இடத்தில் வைத்தால் எளிதில் கெட்டுவிடும்.

Tuesday, June 9, 2015

பண்ணைப் பதிவேடுகள் (Pannai Pathivedugal) - Farm Records

கால்நடைப் பதிவேடுகள் பராமரித்தல்:


ஒரு நல்ல இலாபகரமான பண்ணைப் பராமரிப்பிற்கு கீழ்க்கண்ட பதிவேடுகள் அவசியம் ஆகும்.

1) கால்நடைகளை அடையாளம் காண உதவும் கையேடு.

2) வளர்ச்சிப் பதிவேடு.

3) உடல்நலம் பற்றிய பதிவேடு.

4) கால்நடை இழப்பு / இறப்பு குறித்த பதிவேடு.

5) கன்றுகளின் இறப்பு பற்றிய பதிவேடு.

6) இனக்கலப்பு மற்றும் கன்று ஈனுதல் பற்றிய தகவல்
அடங்கிய பதிவேடு.

7) கறவை மாடுகளின் பால் உற்பத்தி பற்றிய பதிவேடு.

8) அடர் மற்றும் கலப்பு தீவனங்கள் பற்றிய பதிவேடு.

9) வேலை ஆட்களின் பதிவேடு.

10) நீர்ப் பயன்பாடு / தேவை குறித்த பதிவேடு.

11) சரியான வளர்ச்சியற்ற மாடுகள் (நீக்கிய மாடுகள்) பற்றிய பதிவேடு.

12) விற்ற கால்நடைகள் பற்றிய தகவல் பதிவேடு.

13) வாங்கிய கால்நடைகள் பற்றிய தகவல் பதிவேடு.

பண்ணையின் பொருளாதாரப் பண்புகள் (Pannaiyin Porulaathaara Panbugal) - Dairy Farming Day Today Activities

பால்பண்ணையின் பல்வேறு பொருளாதாரப் பண்புகளாவன:

  1. ஒரு கன்றுப் பருவத்தில் பால் உற்பத்தி அளவு
  2. ஒரு பருவக் காலத்தில் பால் தரும் நாட்கள் / பால் உற்பத்திக் காலம்
  3. பால் உற்பத்தி நிலைத்தன்மை
  4. முதல் கன்று ஈனும் வயது
  5. சினைப் பருவம்
  6. பால் வற்றிய நாட்கள்
  7. அடுத்தடுத்த கன்றுகள் ஈனுவதற்கு இடையே உள்ள இடைவெளி
  8. இனப்பெருக்கத் திறன்
  9. தீவனம் உட்கிரகிக்கும் நாள்
  10. நோய் எதிர்ப்புத் திறன்
1.ஒரு பருவத்தில் பால் உற்பத்தி அளவு

ஒரு கன்று ஈனும் பருவத்தில் பெறப்பட்ட மொத்தப் பால் உற்பத்தியே ஒரு பருவ பால் உற்பத்தி ஆகும். பொதுவாக அயல்நாட்டு இனங்களை விட நம் நாட்டுப் பசுக்களில் உற்பத்தி குறைவு. இது மொத்தம் ஈன்ற கன்றுகள், பால் கறக்கும் இடைவெளி மற்றும் பாலின் நிலைத்தன்மையைப் பொறுத்தது. முதல் பருவத்திலிருந்து போகப்போக 3 - 4 வது பருவம் வரை பால் உற்பத்தி 30 - 40 சதவிகிதம் அதிகரிக்கிறது. அதன் பின்பு குறைய ஆரம்பிக்கும். இரு இனங்களுக்கிடையே பால் உற்பத்தியின் அளவை ஒப்பிட அதன் பால் உற்பத்திக் கொழுப்பு சரிசெய்யப்பட வேண்டும். 4 சதவிகிதம் கொழுப்பு சரிசெய்த பால் = 0.4 மொத்த பால் + 15 மொத்தக் கொழுப்பு கன்று ஈன்ற (Parturition) பிறகு பால் உற்பத்தி அதிகரித்து ஈன்ற 2 - 4 வாரங்களுக்கு உற்பத்தி மிக அதிகமாக இருக்கும்.
இதுவே அப்பருவத்தின் (நிறை) அதிக உற்பத்தி அளவாகும். இந்த அதிக உற்பத்தி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நம் இந்திய இனங்களில் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும்.

2.பால் உற்பத்திக் காலம்

ஒரு கன்றுப் பருவத்தில் பால் தரும் மொத்த நாட்கள் பால் உற்பத்திக் காலம் ஆகும். சராசரி பால் உற்பத்தி நாட்கள் ஒரு வருடத்திற்கு 305 நாட்கள் ஆகும். குறுகிய காலமாக இருந்தால் 33 நாட்கள் குறையும். குறுகிய இந்திய இனங்கள் குறைந்த உற்பத்திக் காலமே கொண்டவை. சில இனங்களில் உற்பத்திக்காலம் அதிகமாக இருந்தாலும் பால் மிகக்குறைந்தளவே இருக்கும்.

3.பால் உற்பத்தியின் நிலைத்தன்மை.

அதிக உற்பத்தியால் பாலின் உற்பத்திக்காலம் குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் 2-4 வாரங்களில் வரும் பாலின் உற்பத்தி விரைவில் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுவதே நிலைத்தன்மை, பால் குறையும் தன்மை குறைந்தளவே இருக்குமாறு பராமரித்தல் அதிக உற்பத்திக்கு உதவும்.

4.முதல் கன்று ஈனும் வயது

அதிக நாள் உற்பத்திக்கு முதல் கன்று ஈனும் வயது முக்கியமான ஒன்று. இந்திய இனங்களில் முதல் கன்று ஈனும் வயது 3 வருடங்கள். கலப்பினங்களில் 2 வருடங்கள். எருமை மாடுகளில் மூன்றரை வருடங்கள் ஆகும். முதல் கன்று ஈனும் வயது அதிகமாக இருந்தால் பால் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். ஆனால் மொத்தம் ஈனும் கன்றுகள் அளவு குறைவதால் பால் பருவமும் குறையும்.

5.சினைக்காலம்ள

இது கன்று ஈன்று பால் வற்றிய பின்பும் அடுத்த கருத்தரிப்புக்கும் உள்ள இடைவெளியாகும். சரியான நேரத்தில் சினை எய்த வைத்தல் மன அழுத்தத்தைப் போக்கிப் பசுவை ஆரோக்கியமாக வைக்கும். மேலும் இனப்பெருக்க உறுப்புக்கள் சரியான வயதில் தன்னிலை எய்தவும் இது உதவுகிறது. சராசரி சினைக்காலம் 60-90 நாட்கள். இந்நாட்கள் நீடித்தால், அடுத்த கன்று ஈனுவதும் தள்ளிப்போகும். அதே சமயம் மிகக் குறைவாக இருந்தாலும், பசுவின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உடனடி கர்ப்பத்தால் பால் உற்பத்தி குறையும். எனவே சரியான இடைவெளியுடன் இருத்தல் வேண்டும்.

6.பால் / மடி வற்றிய நாட்கள்

இது பால் கறப்பது நின்ற நாளிலிருந்து அடுத்தக் கன்று ஈனும் நாள் வரை உள்ள காலமாகும். முந்தய ஈற்றில் இழந்த சத்துக்களைத் திரும்ப பெற்றுக் கொள்ள சிறிது ஓய்வு தேவை. இக்காலமானது இரண்டிலிருந்து இரண்டரை மாதங்கள் இருக்கலாம். இவ்வாறு போதிய இடைவெளி இல்லையெனில் பசுவின் பால் உற்பத்தி படிப்படியாகக் குறைவதோடன்றி பிறக்கும் கன்றும், ஆரோக்கியமாக இருக்காது.

7.கன்று ஈனும் இடைவெளி

அடுத்தடுத்த இரு கன்றுகள் ஈனுவதற்கு இடையே உள்ள இடைவெளி கன்று ஈனும் இடைவெளியாகும். மாடுகளில் ஆண்டுக்கு 1 கன்றும், எருமை மாடுகளில் 15 மாதங்களுக்கு ஒரு கன்றும் ஈனுதல் வேண்டும். கன்றுகளுக்கிடையே இடைவெளி அதிகமாக இருந்தால், அதன் மொத்தம் ஈனும் கன்றுகள் எண்ணிக்கை குறையும்.

8.இனப்பெருக்கத் திறன்

பசுவின் அதிகக் கன்றுகள் ஈனும் திறன், அதன் இனப்பெருக்கத் திறனைப் பொறுத்தது. இனப்பெருக்கத் திறன் மரபியல் குணாதிசியங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்து அமையும். பசுவின் இனப்பெருக்கத் திறனை முதல் கன்று ஈனும் வயது, அடுத்தடுத்த கன்று இடைவெளி, சினையாகும் காலம் போன்றவற்றின் மூலம் அறியலாம். சில மரபியல் பண்புகளால் ஒவ்வொரு கால்நடைக்கும் இத்திறன் மாறுபடுகிறது. சாதகமற்ற சூழ்நிலையில் குறைந்த பால் உற்பத்தி செய்யும் மாடுகள் அதிக உற்பத்தி உள்ள மாடுகள் அளவு பாதிக்கப்படாது.

9.தீவனம் உட்கொள்ளும் எடுக்கும் மற்றும் உட்கிரகிக்கும் திறன்

மாடானது நிறைய தீவனம் உட்கொள்வதோடு அதை நன்கு உட்கிரகித்துப் பாலாக மாற்றும் திறனுடையதாக இருக்க வேண்டும்.

10.நோய் எதிர்ப்பு

இந்திய இனங்கள் அயல் நாட்டு இனங்களை விட நோய் எதிர்ப்புத் திறன் மிகுந்தவையாக உள்ளன. கலப்பினச் சேர்க்கை மூலம் அயல் இனங்களில் இப்பண்பைப் பெறலாம்.

(ஆதாரம் : http://bieap.gov.in/)

Friday, June 5, 2015

கறவை மாடு வளர்ப்பு உத்திகள் (Karavai Maadu Valarppu) - Dairy Cow


கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் கன்று, பால் உற்பத்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
எனவே, கறவை மாடுகளை உரிய முறையில் பராமரித்து விவசாயிகள் லாபம் அடையும் வழிமுறைகளை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.சினைப் பசுக்களை நன்றாக கவனித்து வளர்த்தால் தான் ஆரோக்கியமான கன்றுக் குட்டியை ஈனும், நல்ல பால் உற்பத்தியை பெருக்க முடியும்.


முக்கிய பராமரிப்பு உத்திகள்:
  • சினை ஊசி போட்ட பசுக்களுக்கு 3 மாதத்தில் கால்நடை மருத்துவர் மூலம் உரிய சினைப் பரிசோதனையை செய்து உறுதிசெய்து தோராயமாகக் கன்று ஈனும் காலத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • சினை மாடுகளை அடிக்கடி அடித்துத் துன்புறுத்துதல், அதிக தொலைவு நடக்க வைத்தல் கூடாது. ஏழாவது மாதம் முடிந்த உடன் சினைப் பசுவை தனியாகப் பிரித்தெடுத்து கொட்டகையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். நாய்களை சினை மாடுகளின் அருகில் அண்ட விடக் கூடாது.
  • கருவில் வளரும் இளங்கன்றின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும், பால் உற்பத்திக்குத் தேவையான சத்துகளையும் உடலில் சேமித்து வைக்க வேண்டியுள்ளதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரிவிகித சத்தான உணவை வழங்க வேண்டும்.
  • ஏழாவது மாத சினை முடிந்தவுடன் பாலை வற்றச் செய்ய வேண்டும். பால் வற்றிய சினை மாட்டின் காம்புகளின் வழியே நுண்மக் கொல்லி (ஆன்டிபயாடிக்) மருந்தை டியூப் மூலம் செலுத்தினால் மடிவீக்க நோயை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
தீவனப் பராமரிப்பு:
  • சினை மாடுகளுக்கு தீவனம் அளிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாவிடில் கீழ்க்கண்ட விளைவுகள் ஏற்படும்.
  • கன்று வீசுதல், குறைமாத கன்றுக் குட்டியை ஈனுதல், 20 கிலோவுக்கு குறைவாக உள்ள கன்று பிறக்கும். நஞ்சுக்கொடி விழாமல் கருப்பையில் தங்கிவிடும். கருப்பை வெளித்தள்ளுதல், பால் காய்ச்சல் போன்ற நோய்கள் வரும். பால் உற்பத்தி குறையும்.
  • இதைத் தடுக்க சரிவிகித தீவனம் கொடுக்க வேண்டும். ஒரு சினை மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிக்க வேண்டும். கலப்புத் தீவனம் 8-வது மாத சினையில் தினமும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வீதமும், 9-ஆவது மாதம் ஒன்றரை முதல் 2 கிலோ வீதமும் கன்று ஈனும் வரை வழங்க வேண்டும்.
  • இவற்றுடன் தாது உப்புக்கள் 25- 30 கிராம் தினமும் கொடுக்கலாம். கன்று ஈனுவதற்கு முன்னால் ஒரு கிலோ கோதுமைத் தவிடும் கொடுக்கலாம். மேலும் 450 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூள் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
  • கன்று ஈனும்போது காணும் அறிகுறிகள்: நிறைமாத சினை ஆனவுடன் மாட்டின் வயிறு, மடி பெருத்துக் காணப்படும். மாட்டின் இடுப்பு, தொடைப் பகுதியில் உள்ள தசைகள் தளர்ந்து காணப்படும். வாலுக்கு அடியில் குழி உண்டாகும். இதைச் சட்டம் உடைதல், தட்டு உடைதல் அல்லது குழி விழுதல் எனக் கூறுவர். இந்த அறிகுறி தென்பட்ட 24 முதல் 48 மணி நேரத்தில் கன்று ஈனும்.
  • மாட்டில் சளி போன்ற திரவம் அதிகளவில் வடியும். மாடுகள் அடிக்கடி படுத்துக் கொண்டும், தலையை தோண்டிக் கொண்டு இருக்கும். சினைக் கிடேரிகள் வயிற்றில் உதைத்துக் கொள்ளும்.
  • இந்த அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மாட்டை சுத்தமான, சமமான இடத்தில் அழைத்துச் சென்று கட்ட வேண்டும். கன்று ஈனுவதற்கு முன் கலப்பின பசுக்களில் நெஞ்சில் இருந்து மடி வரை நீர் கோர்த்துக் காணப்படும். இதனால் எந்தத் தீங்கும் இல்லை. கன்று ஈன்றவுடன் தானாக அவை மறைந்து விடும்.
  • பனிக்குடம் உடைந்த ஒரு மணி நேரத்தில் மாடு கன்றை ஈன வேண்டும். கன்று ஈன்ற 6 மணி நேரத்தில் நஞ்சுக் கொடி விழ வேண்டும். இதுபோல் முறையாக சினைப் பசுவைப் பராமரிக்க வேண்டும்.

Thursday, April 30, 2015

பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் (Paal Valathai Perukkm Kambu Neapiar Ottu Pull) - Napier grass for milch cows

பசுக்கள் வளர்க்கும் விவசாயிகள் கம்பி நேப்பியர் ஒட்டுப்புல் என அழைக்கப்படும் சி.என். 4 ரகபுல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதால் பால் உற்பத்தியை எளிதாகப் பெருக்கலாம்.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இந்த ரகம், குறைந்த பரப்பில் அதிக மகசூல் தரும் புல் ரகமாகும்.


  • இந்த தீவனப் பயிரை உற்பத்தி செய்வதால் குறைந்த இடத்தில் அதிக பசுந்தீவன புல்லை உற்பத்தி செய்து பால் உற்பத்தியைப் பெருக்கலாம் என காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் தெரிவித்துள்ளார்.
  •  கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், அதிகத் தூர்களுடன் வளரக்கூடிய ஒரு பல்லாண்டு தீவனப் பயிராகும். தண்டுகள் மிகவும் மிருதுவான, இனிப்பான, சாறு நிறைந்த, குறைந்த நார்ச்சத்தைக் கொண்டவை.
  • அதிக தூர்களுடன் (செடிக்கு 30 முதல் 35 தூர்கள்) சாயாத் தன்மை கொண்டது. அகலமான, மிருதுவான இலைகள் அதிக இலை தண்டு விகிதம் கொண்டவை.
  • இவ்வகை பயிரை எளிதில் பூச்சிகள், நோய்கள் தாக்காது. அதிக உலர் தீவன மகசூல், புரதச்சத்து கொண்டவை. ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம். இதனால் ஏக்கருக்கு 350 முதல் 400 டன் அளவுக்கு மகசூல் பெறலாம்.
  • கால்நடைகளுக்குப் பசுந்தீவனப் புற்கள் கொடுப்பதால் பால் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் ஏ எனும் உயிர்ச்சத்து கிடைக்க வழிவகை ஏற்படுகிறது. கால்நடைகளின் கண்பார்வை, சுவாச மண்டலத்தின் செயல்பாடுகள் மேம்படுகிறது. மேலும், கால்நடைகளின் கரு உருவாவதற்கும், உருவான கருவைத் தக்க வைப்பதற்கும் பசுந்தீவனப் புற்கள் வழிவகை செய்கின்றன.
சாகுபடி தொழில்நுட்பம்:
  • ஆண்டு முழுவதும் எல்லா வகை மண் வகைகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் புல்லைப் பயிரிடலாம். நிலத்தை இரும்புக் கலப்பையைக் கொண்டு 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும்.
  • மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்களை இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால், 1 ஏக்கருக்கு அடியுரமாக 25 டன் மக்கிய தொழுஉரம், 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதால் மகசூலை நிலை நிறுத்தலாம்.
  • பாத்திகள் அமைக்கப்பட்ட நிலத்தில் நன்கு நீர்ப் பாய்ச்சிய பின் தண்டுக்கரணையை 60-க்கும் 50 செ.மீ. இடைவெளியில் செங்குத்தாக நடவு செய்ய வேண்டும்.
  • இவ்வாறு நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 33 ஆயிரத்து 333 கரணைகள் தேவைப்படும். கரணை நட்ட 3ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
  • பிறகு 10 நாள்களுக்கு 1 முறை நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
  • கரணை நட்ட 20ஆவது நாள் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். நடவுக்குப் பின் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அடுத்தடுத்து 45 நாள்களிலும் தீவனப் பயிர்களை அறுவடை செய்யலாம்.
  • இவ்வாறு சாகுபடி மேற்கொண்டால், 1 ஹெக்டேரில் 1 ஆண்டுக்கு 7 அறுவடைகளில் 350 முதல் 400 டன் பசுந்தீவன மகசூல் உற்பத்தி செய்யலாம். எனவே கறவைமாடு வளர்க்கும் விவசாயிகள் குறைந்தபட்ச நிலத்திலாவது, கோ (சிஎன்) 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தியை எளிதாக பெருக்கலாம். மேலும் நகர்புற அருகில் உள்ள விவசாயிகள் இப்புல்லை உற்பத்தி செய்து, பசும்புல்லை, ஒரு கிலோ ரூ. 3 வரையில் விற்பனை செய்யலாம். இந்தப் புல்லில் தண்டுக்கரணை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.
  • மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியரை 09884402613 என்ற கைப்பேசி எண்ணிலோ, 0442745 2371 என்ற தரைவழி தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, April 28, 2015

கறவை மாடுகளை தேர்வு செய்வது எப்படி? (Karavai Maadugalai Thearvu Seiyum Murai) - How to choose milch cows?

பால் பண்ணைத் தொழில் மீதான ஆர்வம் விவசாயிகள் மட்டுமன்றி, பலதரப்பட்ட மக்களிடமும் அதிகரித்து வருகிறது. அதனால், பால் பண்ணைகள் அமைத்து லாபகரமாக நடத்திட தரமான பசுக்களைத் தேர்வு செய்து வளர்ப்பது அவசியமாகும்.

தரமான பசுக்களைத் தேர்வு செய்வது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறை இணைப் பேராசிரியர் த.ஆனந்த பிரகாஷ்சிங் கூறியது:
  • ஒரு தனிப்பட்ட பசுவின் உற்பத்தித் திறனை பாரம்பரிய உற்பத்தித் திறன், தனி மாட்டின் உற்பத்தித் திறன், சந்ததியரின் குணாதிசயங்கள் ஆகிய மூன்று காரணிகளால் அறிய முடியும்.
  • இருப்பினும், இந்த மூன்று அளவுகோல்களும் எப்போதும் கிடைப்பதில்லை. அத்தகைய சமயங்களில் பசுவின் தோற்றத்தைக் கொண்டு, அதன் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்கலாம்.
  • பால் பண்ணைத் தொழிலுக்கு பண்ணைகளில் பராமரிக்கப்படும் பசுக்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.
  • கறவை மாடுகளை வாங்கும்போது கலப்பின மாடாகவும் (ஜெர்ஸி அல்லது ப்ரிசியன் கலப்பினம்), முதல் ஈத்து மாடாக அல்லது இரண்டாவது ஈத்துக்குத் தாண்டாத மாடாகவும் இருக்க வேண்டும்.
  • பால் மாடுகளில் உற்பத்தித் திறன் இரண்டாவது ஈத்தில் இருந்து 4ஆவது ஈத்து வரை அதிகரிக்கும். அதன்பிறகு, பாலின் அளவு குறையக்கூடும்.
  • எனவே, பால் அதிகம் தரக்கூடிய ஈத்துள்ள 2 முதல் 4ஆவது ஈத்தில் உள்ள மாடுகள் பண்ணையில் இருப்பது அவசியம்.
  • தவிர, மாடுகள் 5, 6 ஈத்துக்களைத் தாண்டும் போது, 8 முதல் 10 வயதைக் கடந்திருக்கும் என்பதால், அவற்றைப் பராமரிப்பது லாபகரமானதாக இருக்காது.
  • மாடுகளை கன்று போட்ட 10 முதல் 15 நாள்களுக்குள் வாங்கிட வேண்டும்.
  • ஒரு மாட்டைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் கண்கள் பிரகாசமாகவும், மாடுகள் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.
  • வெளி உறுப்புகளிலிருந்து எந்தவித திரவம், சீழ் வரக் கூடாது.காயங்கள், புண்கள் போன்றவை இருக்கக் கூடாது.
  • கால்கள் நன்றாக அமைந்து வலுவாக இருக்கவும், மாடு அசை போட்டுக் கொண்டு இருக்கவும், மேல் உதடு ஈரமாக வியர்வைகளைக் கொண்டிருக்கவும் வேண்டும்.
  • பால் மடியானது நன்றாக விரிந்து உடலோடு ஒட்டி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • பாலைக் கறந்தவுடன் சுத்தமாக சுருங்கிட வேண்டும்.
  • 4 காம்புகள் இருக்க வேண்டும். அவை சம அளவுகளாகவும், சம இடைவெளிகளுடனும் அமைந்திருக்க வேண்டும்.
  • வயிற்றின் அடிப் பகுதியில் பால் மடிக்கு முன் இருக்கும் பால் நரம்புகள் நன்றாகத் தடித்து வளைந்து நல்ல ரத்த ஓட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
  • பால் மாடுகளின் நெஞ்சுப்பகுதியை விட வயிற்றுப் பகுதி அகன்று இருக்க, கால் முட்டிகளுக்கு இடையே இடைவெளி அதிகமாகவும், வயிற்றுப் பகுதி அகலமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நிறைய தீவனத்தை உள்கொண்டு அதிக அளவு பாலை உற்பத்தி செய்யும்.
  • கறவை மாடுகளை சந்தையில் வாங்குவதைத் தவிர்த்து, மாட்டின் உரிமையாளரின் இடத்துக்கு நேரடியாகச் சென்று மாட்டின் கறவை அளவை தொடர்ந்து மூன்று முறை கறந்து பார்த்து வாங்க வேண்டும்.
  • தவிர, மாடு விற்பனையாளரிடம் மாட்டுக்கு இதுவரை தரப்பட்ட தீவனக் கலவை, தீவனம் அளவு குறித்து தெரிந்து கொண்டு, அதே கலவையில் தர வேண்டும்.
  • மாடுகளுக்கு தீவனத்தை திடீரென மாற்றக் கூடாது. மாற்றினால் ஜீரண சக்தி இழந்து பால் உற்பத்தி குறையக்கூடும்.
  • அதேபோல, மாடுகளுக்கு முறையாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

Saturday, March 28, 2015

பால் உற்பத்திக்கு பயன்படும் அயல்நாட்டின மாட்டினங்கள் (Paal Urpathiku Payanpadum Ayal Naatu Maatinangal) - Foreign Cow Breeds which is used for Milking

பால் உற்பத்திக்கு பயன்படும் அயல்நாட்டின மாட்டினங்கள
  1. ஜெர்சி
  • இங்கிலாந்தின் ஜெர்சி தீவில் உருவான சிறிய மாட்டினம்.
  • இந்தியாவின் தட்பவெப்பநிலைக்கு  இந்த இன மாடுகள் நன்கு ஏற்றவையாக உள்ளன. எனவே இவை இந்தியாவின் நாட்டு மாடுகளின் கலப்பினத்திற்கு பொதுவாக உபயோகிக்கப்படுகின்றன.
  • இம்மாடுகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் காணப்படும்.
  • இம்மாடுகள் தட்டையான முன்பகுதி தலையுடன், கச்சிதமான உடலமைப்புடனும் காணப்படும்.
  • இம்மாட்டினங்களின் பாலில் 5.3 % கொழுப்பு மற்றும் 15% இதர திட சத்துக்களும் இருக்கிறது.

  2. ஹோல்ஸ்டியன் –ஃபிரீசியன்
  • இம்மாட்டினம் நெதர்லாந்தின் வட பகுதிகளில் குறிப்பாக ஃபிரீஸ்லாந்து பகுதியில் உருவானது.
  • இவை நன்கு உருவான உடலமைப்புடன், பெரிய பால் மடிகளையும் கொண்டவை.
  • இவை அதிக பால் கொடுக்கும் பெரிய மாட்டினங்களாகும். நன்கு வளர்ந்த மாடுகள் 700 கிலோ உடல் எடை வரை இருக்கும்.
  • இவற்றின் உடல் கருப்பு மற்றும் வெள்ளை நிற திட்டுகளுடன் காணப்படுவதால் இவற்றை எளிதில் அடையாளம் காணமுடியும்.
  • ஒரு கறவை காலத்தில் இவற்றின் சராசரி பால் உற்பத்தி 6000-7000 கிலோவாக இருக்கும். ஆனால் இம்மாட்டினங்களின் பாலில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும் (3.45%).

  3. பிரவுன் ஸ்விஸ்
  • இம்மாட்டினங்கள் ஸ்விட்சர்லாந்தின் மலைப்பகுதிகளிலிருந்து தோன்றியவை.
  • ஸ்விட்சர்லாந்தில் இம்மாட்டினங்கள் பெயர்பெற்றவை. மேலும் இவற்றின் உடல் நன்கு பெரியதாகக் காணப்படுவதுடன், இவற்றின் பால் உற்பத்தியும் அதிகம்.
  • கரன் ஸ்விஸ் எனப்படும் மாட்டினம் இந்தியாவின் நாட்டு மாடுகளுடன் பிரவுன் ஸ்விஸ் மாட்டினங்களை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த கலப்பின மாட்டினமாகும்.

  4. ரெட் டேன்
  • டேனிஸில் உருவான இம்மாட்டினங்களின் உடல் சிவப்பு நிறத்துடனோ அல்லது சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடனோ அல்லது அடர்ந்த பழுப்பு நிறத்துடனோ காணப்படும்.
  • இவை நன்கு வளர்ந்த பெரிய மாட்டினங்களாகும். காளைகள் 950 கிலோ உடல் எடை வரை இருக்கும். பசு மாடுகள் 600 கிலோ வரை உடல் எடையுடன் இருக்கும்.
  • ரெட் டேன் மாடுகளின் பால் உற்பத்தி 3000-4000 கிலோ, 4 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட கொழுப்புச்சத்துடன் இருக்கும்.

  5. ஆயிர்ஷையர்
  • இம்மாட்டினங்களின் தாயகம் ஸ்காட்லாந்திலுள்ள ஆயிர்ஷையர் ஆகும். இவை பால் உற்பத்தி செய்யும் அழகான மாட்டினங்களாகும். இவை மிகுந்த சுறுசுறுப்புடன் இருப்பதால் இவற்றை மேலாண்மை செய்வது கடினம்.
  • இவற்றின் பால் உற்பத்தி குறிப்பிடும் படியாக இல்லை, மேலும் பாலின் கொழுப்புச்சத்தும் மற்ற மாட்டினங்களை போலவே (4%) இருக்கும்.
  • இந்த மாட்டினம் டன்லப் மாடு அல்லது கன்னிங்ஹாம் மாடு என்றும் அழைக்கப்படுகிறது.

  6. கர்ன்சி
  • இம்மாட்டினங்கள் பிரான்சின் கர்ன்சி எனும் தீவிலிருந்து தோன்றியவை.
  • இவற்றின் பாலில் அதிக அளவு புற்றுநோயினைத் தடுக்கும் பீட்டா கரோட்டின் எனப்படும் சத்து இருப்பதால் பொன்னிறத்துடன் இருக்கும்.
  • இம்மாட்டினங்களின் பாலில் அதிக அளவு கொழுப்புச்சத்தும் (5%), அதிக அளவு புரதச்சத்தும் (3.7%) இருக்கிறது.
  • கர்ன்சி மாடுகள் ஒரு வருடத்தில் 6000 லிட்டர்கள் வரை பால் உற்பத்தி செய்யும்.
  • இம்மாட்டினங்கள் அதிக பால் உற்பத்தி செய்வதாலும், கன்று ஈனும் போது மிகக்குறைந்த சிரமங்களே இருப்பதாலும், நீண்ட நாள் வாழ்வதாலும் இவற்றை வளர்க்கும் பால் பண்ணையாளர்களுக்கு அதிக நன்மைகள் உண்டு.

 கலப்பு இனங்கள்

 கலப்பின ஜெர்சி
  • வகைப்படுத்தாத உள்நாட்டு மாட்டினங்களை ஜெர்சி இன விந்துக்களை கொண்டு
    கருவூட்டல் செய்யும் போது ஜெர்சி கலப்பின மாடுகள் உருவாக்கப்படுகின்றன.
  • ஜெர்சி கலப்பின மாடுகள் நமது நாட்டின் சமவெளிப்பகுதிகளுக்கு ஏற்ற மாட்டினங்கள்.
  • இவைகள் சுமாரான உடல் அமைப்பையும், அதிக வெப்பம் தாங்கும் திறனையும் பெற்றுள்ளன.
  • உள்நாட்டு இனங்களின் பால் உற்பத்தி திறனுக்கு ஏற்ப, ஜெர்சி கலப்பின மாடுகள் 2 முதல் 3 மடங்கு அதிக பால் உற்பத்தி திறனை கொண்டிருக்கும்.

கலப்பின ஹோல்சியன் ஃபிரீசியன்
  • கலப்பின ஹோல்சியன் பிரிசியன் மாடுகள் குறைந்த வெப்பம் தாங்கும் திறனை பெற்றிருப்பதால், இவைகள் நம் நாட்டின் குளிர் பிரதேசங்களுக்கும், மலைப்பகுதிகளுக்கும் மிகவும் ஏற்றவை.
  • இவைகள் ஜெர்சி கலப்பின மாடுகளைவிட குறைவான நோய் எதிர்ப்புத் திறனை பெற்றுள்ளன.
  • இவைகள் அதிக பால் உற்பத்திதிறனை பெற்றிருந்தாலும், ஜெர்சி கலப்பின மாடுகளை விட பாலில் குறைவான கொழுப்பு சத்து கொண்டவை.

பால் உற்பத்திக்கு பயன்படும் உள் நாட்டின் மாட்டினங்கள் (Paal Urpathiku Payanpadum Ul Naatin Maatinangal) - Indian Cow Breeds which is used for the Milking

பால் உற்பத்தி மற்றும் வேலைக்குப் பயன்படும் உள் நாட்டின் மாட்டினங்கள்

   1. தார்பார்க்கர்
  • தென்கிழக்கு பாகிஸ்தானிலுள்ள தார்பார்க்கர் மாவட்டத்தில் இம்மாட்டினங்கள் தோன்றியவை.
  • இவை வெள்ளை சிந்தி, சாம்பல் சிந்தி, தாரி என்றும் அறியப்படுகின்றன.
  • இம்மாட்டினங்களின் தோல் வெள்ளை மற்றும் வெளிறிய சாம்பல் நிறத்துடன் காணப்படும்.
  • இம்மாட்டினங்களின் காளைகள் வண்டி இழுப்பதற்கும்,  உழுவதற்கும் பயன்படுகின்றன. பசு மாட்டினங்கள் அதிக பால் உற்பத்திக்கு பெயர் பெற்றவை (1800-2600 கிலோ).
  • முதல் கன்று ஈனும் வயது 38-42 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 430-460 நாட்களாக இருக்கும்.

  2. ஹரியானா 
  • ஹரியானா மாநிலத்தின் ரோடக், ஹிசார், ஜின்த் மற்றும் குவார்கன் மாவட்டங்களிலிருந்து இம்மாட்டினம் தோன்றியது.
  • இவற்றின் கொம்புகள் சிறியதாக இருக்கும்.
  • காளை மாடுகள் வேலை செய்யும் திறனுக்கு பெயர் பெற்றவை.
  • இவ்வினத்தினைச் சேர்ந்த பசு மாடுகளின் பால் கொடுக்கும் திறன் அதிகம். நாள் ஒன்றுக்கு ஒரு மாடு சராசரியாக  1.5 கிலோ பால் உற்பத்தி செய்யும். கறவை காலம் 300 நாட்கள்.
  • ஒரு கறவை காலத்தில் 600-800 கிலோ பால் உற்பத்தி செய்யக்கூடியவை. முதல் கன்று ஈனும் வயது சராசரியாக 40-60 மாதங்கள்.

   3. காங்ரெஜ்
  • இவ்வின மாடுகள் வாட்தாத் அல்லது வேஜ்ட் அல்லது வாட்தியார் என்ற பெயர்களாலும் அறியப்படுகின்றன.
  • குஜராத் மாநிலத்தின் வடகிழக்கு கட்ச் வளைகுடா பகுதியிலும் அதன் அருகிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மற்றும் ஜோட்பூர் மாவட்டங்களிலிருந்தும் இம்மாட்டினங்கள் தோன்றின.
  • இம்மாட்டினங்கள் வெள்ளை கலந்த சாம்பல் நிறம் அல்லது அடர்ந்த கருப்பு நிறத்துடன் காணப்படும்.
  • காங்ரெஜ் மாட்டினங்கள் வேகமான, அதிக திறனுடைய வேலைகளுக்கு பெயர் பெற்றவை. உழவிற்கும் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன.
  • இம்மாட்டினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி 1360 கிலோவாகும்.

  4. ஓங்கோல் 
  • இம்மாட்டினங்கள் நெல்லூர் என்றும் அறியப்படுகின்றன.
  • இவற்றின் தாயகம் ஆந்திரபிரதேசத்தின் ஓங்கோல் வட்டம் மற்றும் குண்டூர் மாவட்டமாகும்.
  • இவற்றின் சராசரி பால் உற்பத்தி 1000 கிலோ. முதல் கன்று ஈனும் வயது 38-45 மாதங்கள். கன்று ஈனும் இடைவெளி 470 நாட்களாகும்.

   5.கிருஷ்ணா பள்ளத்தாக்கு
  • கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றின் வடிகால் பகுதியிலுள்ள கரிசல் மண் பகுதிகளிலிருந்து இவ்வினம் தோன்றியது.
  • இம்மாடுகள் பெரிய உடலமைப்புடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் இருக்கும்.
  • இவ்வினத்தினைச் சேர்ந்த மாடுகளின் வால் தரையினை தொடும் அளவு வளர்ந்திருக்கும்.
  • பொதுவாக இவ்வின மாடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படுவதோடு, இவற்றின் முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால் பகுதிகளில் அடர்ந்த சாம்பல் நிறம் காணப்படும். வளர்ந்த பசு மாடுகள் வெள்ளை நிறத்துடன் காணப்படும்.
  • இம்மாட்டினங்களின் காளை மாடுகள் நல்ல வேலைத்திறன் மிக்கவையாதலால் உழவிற்கும், இதர விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
  • இவ்வினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி சுமாராக இருக்கும். இவற்றின் சராசரி பால் கொடுக்கும் அளவு 916 கிலோவாகும்.

  6.டியோனி 
  • இந்த மாட்டினங்கள் டோங்கார்பட்டி, டோங்காரி, வான்னெரா, வாக்ட், பலன்க்யா, சிவேரா என்ற பல பெயர்களால் அறியப்படுகின்றன.
  • இம்மாட்டினம் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மாரத்வாடா பகுதியிலிருந்தும், அருகிலுள்ள கர்நாடகா மற்றும் மேற்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்தும் தோன்றியது.
  • இவற்றின் தோல் புள்ளிகளுடன் கூடிய கருப்பு அல்லது வெள்ளை நிறத்துடன் காணப்படும்.
  • முதல் கன்று ஈனும் வயது 894-1540 நாட்களாகவும் சராசரியாக 940 நாட்களாக இருக்கும்.
  • இம்மாட்டினங்களின் பால் உற்பத்தி 636-1230 கிலோவாகவும், சராசரியாக 940 கிலோவாக இருக்கும்.
  • கன்று ஈனும் இடைவெளி 447 நாட்களாக இருக்கும்.

எருமை மாட்டினங்கள் (Erumai Maadu Enangal) - Buffalo breeds

உள்நாட்டு எருமை மாட்டினங்கள்

   1. முர்ரா
  • மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த இன எருமை மாட்டினம் ஹரியானா மாநிலத்தின் ரோட்டக், ஹிசார் மற்றும் ஜின்த் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் நபா, பாட்டியாலா மாவட்டங்களிலிருந்தும், தில்லி மாநிலத்தின் தெற்கு பகுதியிலிருந்தும் தோன்றியவை.
  • இவை தில்லி, குந்தி, காலி என்றும் அறியப்படுகின்றன.
  • இவற்றின் உடல் அடர்ந்த கருப்பு நிறமாகக் காணப்படும். வாலிலும், முகத்திலும், சில சமயங்களில் கால்களிலும் வெள்ளை நிறம் காணப்படும்.
  • இவற்றின் கொம்புகள் நன்கு வளைந்திருப்பதே இந்த இன எருமைகளின் முக்கியமான பண்பாகும்.
  • இவ்வின எருமைகள் அதிக பால் உற்பத்திக்கும், பாலில் உள்ள அதிக கொழுப்புச்சத்திற்கும் இந்தியாவில் பெயர் பெற்றவை.
  • முர்ரா இன எருமைகளின் பாலில் 7 சதவிகித கொழுப்புச்சத்து இருக்கும். இவற்றின் சராசரி பால் உற்பத்தி அளவு 1500-2500 கிலோவாகும். மேலும்  இவற்றின் ஒரு நாள் சராசரி பால் உற்பத்தி 6.8 கிலோ.
  • குறைந்த உற்பத்தி கொண்ட நாட்டு எருமையினங்களை கலப்பினம் செய்வதற்கும் இவ்வின எருமைகள் பயன்படுகின்றன.

  2. சுர்தி 
  • இம்மாட்டினங்களின் தாயகம் குஜராத் மாநிலத்தின் கெய்ரா மற்றும் பரோடா மாவட்டங்களாகும்.
  • இவற்றின் தோலிலுள்ள முடி பழுப்பு நிறம் முதல் சாம்பல் நிறம் வரை வேறுபடும். தோல் கருப்பு அல்லது பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
  • இவற்றின் கொம்புகள் அரிவாள் போன்று வளைந்து, நீண்டு தட்டையாகக் காணப்படும்.
  • தாடையைச் சுற்றியும், இரண்டு கால்களுக்கும் இடையில் உள்ள நெஞ்சுப்பகுதியிலும் வெள்ளை நிறம் காணப்படுவது இவ்வின எருமைகளின் தனியான குணநலனாகும்.
  • இவற்றின் பால் உற்பத்தி 900-1300 கிலோவாகும்.
  • இவ்வின எருமைகளின் பால் அதிக கொழுப்புச் சத்துக்கு பெயர் பெற்றது (8-12%).

   3. ஜஃப்ராபாடி
  • இவ்வின எருமைகளின் தாயகம், குஜராத் மாநிலத்தின் கிர் காடுகள், கட்ச், ஜாம் நகர் மாவட்டங்களாகும்.
  • இவற்றின் கொம்புகள் திடமாக வளர்ந்து, கழுத்து வரை சாய்ந்து பின் நேராக வளைந்து கூர்மையாக இருக்கும்.
  • இவற்றின் பால் உற்பத்தி 100-200 கிலோக்களாகும்.
  • இவ்வின காளைகள் அதிக உடல் எடையுடன் இருப்பதால் உழவுக்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்த எருமையினங்கள் பொதுவாக நாடோடி மக்களான மல்தாரிகள் என்பவர்களால் வளர்க்கப்படுகின்றன.

  4. பாதாவாரி 
  • இவ்வின எருமைகளின் தாயகம் உத்திரப்பிரதேசத்தின் ஆக்ரா மற்றும் எட்டாவா மாவட்டங்களும், மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டமுமாகும்.
  • இவற்றின் உடல் செம்பு நிறத்தில் காணப்படுவது இவற்றின் தனிச்சிறப்பாகும். இவற்றின் கண் இமைகள் பொதுவாக செம்பு நிறத்திலோ அல்லது வெளிறிய பழுப்பு நிறத்திலோ காணப்படும்.
  • இவற்றின் கழுத்தின் அடிப்பகுதியில் இரண்டு வெள்ளை நிறக்கோடுகள்  காணப்படும்.
  • இவற்றின் சராசரி பால் உற்பத்தி 800-1000 கிலோவாகும்.
  • இந்த எருமையினக் காளைகள் வேலைத்திறனுக்கும் அதிக வெப்பத்தினைத் தாங்குவதற்கும் பெயர் பெற்றவை.
  • இந்த எருமையினங்களின் பாலில் கொழுப்புச்சத்து 6-12.5சதவிகிதம் காணப்படும். இந்த எருமையினங்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த தீவனத்தை அதிக கொழுப்புச்சத்து மிகுந்த பாலாக மாற்றும் திறனுடையவை.

   5.நிலிராவி
  • இந்த எருமையினம் பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் சட்லெஜ் நதி கரையிலும், பாகிஸ்தானின் சாகிவால் மாவட்டத்திலும்(ராவி ஆற்றின் கரை) தோன்றியது.
  • இந்த எருமையினங்களின் தனிச்சிறப்பு இவற்றின் கண்களாகும்.
  • இவ்வின எருமைகளின் பால் உற்பத்தி ஒரு கறவை காலத்தில்  1500-1850 கிலோவாகும்.
  • கன்று ஈனும் இடைவெளி 500-550 நாட்களாகவும், முதல் கன்று ஈனும் வயது 50 மாதங்களாகவும் இருக்கும்.

  6. மேசானா 
  • மேசானா இன எருமைகள் பால் உற்பத்திக்காக குஜராத்தின் மேசானா நகரிலும், அருகிலுள்ள மகாராஷ்ட்டிரா மாநிலத்திலும் வளர்க்கப்படுகின்றன.
  • மேசானா இன எருமைகள் சுர்தி மற்றும் முர்ரா எருமைகளை கலப்பினம் செய்ததால் தோன்றிய எருமையினமாகும்.
  • இவற்றின் பால் உற்பத்தி 1200-1500 கிலோவாகும்.
  • கன்று ஈனும் இடைவெளி 450-550 நாட்களாகும்.

   7. நாக்பூரி
  • மகாராஷ்டிராவின் நாக்பூர், அகோலா மற்றும் அம்ராவாடி மாவட்டங்கள் இந்த எருமையினங்களின் பூர்வீகமாகும்.
  • இவை கருப்பு நிறத்துடன், கால்கள், முகம் மற்றும் வாலில் வெள்ளை நிறத்திட்டுகளுடன் காணப்படும்.
  • இந்த எருமையினங்கள் எலிட்ச்புரி அல்லது பார்பாரி என்றும் அறியப்படுகின்றன.
  • இந்த எருமையினங்களின் முதல் கன்று ஈனும் வயது 45-50 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 450-550 நாட்களாகும்.

  8. தோடா 
  • தோடா இன எருமைகள் தென்னிந்தியாவின் நீலகிரி மலைப்பகுதியிலுள்ள தோடா என்ற பழங்குடிகள் பெயரைக் கொண்டவை.
  • இவை பெரும்பாலும் பழுப்பு நிறத்துடன் அல்லது சாம்பல் நிறத்துடன் காணப்படும்.
  • நீலகிரியிலிருந்து தோன்றியதால் இந்த எருமையினங்கள் மற்ற எருமையினங்களிலிருந்து வேறுபட்டவை.
  • இவற்றின் உடலில் அடர்த்தியாக ரோமங்கள் காணப்படும்.
  • இவை எப்பொழுதும் அலைந்து கொண்டே இருக்கும் தன்மையுடையவை.

Friday, March 27, 2015

எருமை மாட்டின் பால் உற்பத்தி (Erumai Maattin Paal Urpathi) - Livestock Buffalo Milking

பால் கறக்கும் காலமும் அளவும்
எருமையானது கன்ற ஈன்றவுடன் பால் கறக்க ஆரம்பிக்கிறது. முதல் ஓரிரு வாரங்களில் கறக்கும் பாலிலிருந்து அந்த எருமையின் பாலின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.  5-6 வாரங்களில் அதிக அளவு பால் தரும். இந்த அளவு சில வாரங்களில் வரை தொடர்ந்து பின் குறைய ஆரம்பிக்கும். பின்பு கறவையின் பால் வற்ற ஆரம்பித்துவிடும்.

எருமைகள் நான்காவது கன்று ஈனும் போது அதன் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். பின்பு குறைந்து விடும். பால் கறக்கும் கால அளவு தீவனம், பராமரிப்பு, பால் கறக்கும் இடைவெளி, நோய்த்தாக்கம் போன்ற காரணிகளைப் பொறுத்தது. பல்வேறு இன எருமைகளின் பால் உற்பத்திக் காலம் அட்டவணை 10ல் கொடுக்கப்பட்டுள்ளது. முர்ரா இன எருமைகளில் பால் உற்பத்திக் காலம் 262-295 நாட்கள் வரை ஆகும்.


எருமையில் பால் கறத்தல்

பால் உற்பத்தியானது மரபியல் மற்றும் இதர பிற காரணிகளைச் சார்ந்துள்ளது. மரபியல் காரணிகளான இனங்கள், இனப்பொருக்கத் திறன், சினையாகும் திறன், அடுத்தடுத்த கன்று ஈனும் இடைவெளி போன்றவற்றைச் சாாந்து வேறுபடுகிறது. மேலும் இவை தவிர பராமரிப்பு, தீவனத்தின் தரம், அளவு, வளர்ப்பாளரின் சூட்டைக் கண்டு சினைப்படுத்தும் திறன் போன்றவற்றவைப் பொறுத்தும் பால் உற்பத்தி அளவும், காலமும் வேறுபடுகிறது.

தேவையான அளவு ஆற்றல், புரதம், தாதுக்கள், நீர் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ள தீவனம் முறையாக அளிக்கப்படவேண்டும். அதே போல் எருமைகளில் எந்த அளவு கன்று ஈனும் இடைவெளி உள்ளதோ, அந்த அளவு பால் கறக்கும் காலமும், அளவும் அதிகமாக இருக்கும். எனினும் மொத்தம் ஈனும் கன்றுகளின் அளவு குறைவாக இருக்கும்.

பால் கறக்கும் இடைவெளி பால் அளவு மற்றும் தன்மையைப் பாதிக்கும். முர்ரா இன எருமைகளில் நாளொன்றுக்கு இரு முறை பால் கறப்பதை விட 3 முறை கறக்கும் போது பாலின் அளவு 31 சதவிகிதமும், பால் கொழுப்புச் சத்தின் அளவு 26 சதவிகிதமும் அதிகமாக கிடைக்கிறது.

பால் வற்றிய காலம்


எருமைகளில் 2-3 மாதங்கள் அடுத்த கன்று ஈனும் முன்பு பால் வற்றிவிடும். அந்த இடைவெளியில் மடிக்கு ஓய்வு கொடுத்து புண்பட்ட செல் மற்றும் திசுக்களை புதுப்பித்துக் கொள்ளும்.



அதிக பால் உற்பத்தி கொண்ட எருமை மந்தைகளில் (நாளொன்றுக்கு  10 கி.கி அதிகமாக) அடுத்த கன்று ஈனுவதற்கு 3 மாதங்கள் முன்பே பால் அளவு நாளொன்றுக்கு 2.5 கி.கி குறைந்து பின்பு வற்றிவிடும். இது போன்று வற்றும் கறவையில் புதிதாக பிறந்த சில கன்றுகளை ஊட்டச் செய்யலாம். ஒரு எருமையில் பிறந்து சில வாரங்களான 1 அல்லது 2 கன்றுகளை ஊட்டச்செய்யலாம்.


எருமைப்பாலில் உள்ள முக்கிய நுண்ணுட்டச் சத்துக்கள்
முக்கிய நுண்ணூட்டச் சத்துக்கள்


சோடியம்
750
317
பொட்டாசியம்
1390
908
கால்சியம்
2030
1880
மெக்னீசியம்
200
91.9
இரும்பு
-
0.325
பாஸ்பரஸ்
1290
-
ஜிங்க்
-
626
தாமிரம்
-
0.303

சீம்பாலின் சத்துக்கள்
கன்று ஈன்ற முதல் மூன்று நாட்களில் எருமையானது சீம்பாலைச் சுரக்கும். இதில் கன்றுக்கு அவசியமான இம்யூனோ குளோபுலின் நோய் எதிர்ப்பொருளும், சாதாரண பாலில் உள்ளதை விட தாமிரம், இரும்புச்சத்துக்கள் அதிக அளவிலும் உள்ளன.


அட்டவணை 2 சீம்பாலின் ஊட்டச்சத்துக்கள்
நீர் (சதவீதம்)
கொழுப்பு (சதவீதம்)
மொத்த புரதம் (சதவீதம்)
லேக்டோஸ்
(சதவீதம்)
விட்டமின் எ மைக்ரோ கிராம் / கி.கி
68
15
13.6
3.1
-
73
9.55
9.59
7.54
1.8

பாலின் தன்மை மாறுதல்
பாலின் தன்மை பால் பீய்ச்சும் முன்போ, அல்லது எருமையின் மடியிலேயே மாறலாம். பாலானது பீய்ச்சும் போதே தன்மை மாறி இருந்தால், அது ஏதேனும் நோய்த்தாக்கம் அல்லது நோயைக் குணப்படுத்த அளித்த மருந்தின் ஒவ்வாமையாக இருக்கலாம். சில சமயங்களில் சூழ்நிலை மாற்றம், தீவன மாற்றம் கூட பாலின் தன்மை மாறக் காரணமாக இருக்கலாம்.


தீவனத்தின் தன்மை
உலர்தீவனங்கள் பால் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். அதே வேளையில் அடர் தீவனங்கள் அதிகமாகக் கொடுத்தால் புரப்பியோனிக் அமிலம் உண்டாகி பாலின் கொழுப்பு அளவைக் குறைக்கும். அதிக நார்ச்சத்துள்ள உலர் தீவனங்களில் அசிட்டிக் அமிலம் சுரப்பதால் தான் பாலின் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது.

அதிக ஆற்றல் உள்ள தீவனங்கள் பாலின் உறையும் (கெட்டி) தன்மையை அதிகரிக்கிறது.


கடுகு எண்ணெய் மற்றும் அக்குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களை கால்நடைகளுக்கு அளிக்கும் போது அதில் உள்ள குளுக்கோஸினேட்ஸ் (Glucosinolates) கால்நடைகளின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளால்

ஹைட்ரோலஸ் (Hydrolize) செய்யப்பட்டு தையோசையனேட், ஐசோ தையோசையனேட் போன்ற பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இப்பொருட்கள் வயிற்றில் அதிகமாகும் போது அதன் பாலை அருந்தும் மனிதர்களுக்கு தைராய்டு வீங்குதல் போன்ற விளைவுகள் ஏற்படுகிறது. எனவே கடுகுத் தாவரங்களையோ அல்லது புண்ணாக்கையோ அதிக அளவில் கால்நடைகளுக்குக் கொடுக்கக்கூடாது.

நோய்களும் மருந்துகளும்
கால்நடை நோய்கள் பால் அளவையும், தன்மையையும் பெரிதும் பாதிக்கின்றன. நோய் எதிர்ப்பொருள் இரசாயனங்கள் கிருமி நாசினிகள் பயன்படுத்தும் போது அவை பாலுடன் கலக்கின்றன. உதாரணமாக டையஸினான் என்ற மருந்தை வெளிப்புற ஒட்டுண்ணிகள் நீக்க பயன்படுத்திய பிறகு 48 மணி நேரம் கழித்து கறந்த பாலில்  அம்மருந்தின் இராசயனத் தன்மை கலந்திருந்தது.

பால் கறத்தல்



பல நூற்றாண்டுகளாக எருமைகள் பால் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எருமைகளைப் பராமரித்தல் எளிது. மேலும் இதன் பால், மாட்டுப் பாலை விட தரமானது. எருமை மடியின் இயக்கம் மற்றும் உள்ளமைப்பியல் மாடுகளிலிருந்து வேறுபட்டிருப்பதால் பால் கறத்தல் எளிதாகிறது.