Showing posts with label நவீன நீர் பாசனம். Show all posts
Showing posts with label நவீன நீர் பாசனம். Show all posts

Thursday, April 2, 2015

நீர் பரிசோதனை அவசியம் (Neer Parisothanai Avasiyam) - Water Quality Testing is Necessary

சிறந்த வேளாண்மைக்கு மண் பரிசோதனை எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு பாசன நீர் பரிசோதனையும் மிகவும் அவசியம்.

முற்றிலும் ஏரி, குளங்களில் தேக்கிய மழைநீரைக் கொண்டு விவசாயம் செய்த நிலை மாறி வருகிறது. ஆறுகள் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்களாலும், தொழிற்சாலைகளாலும் பெருமளவுக்கு மாசுபடுத்தப்படுகின்றன.
தற்போது நாம் திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரைப் பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நீரின் தன்மை இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது. நிலம் வளமானதாக இருந்தாலும் பாசன நீரின் தன்மையால் நிலவளம் மாறுபடுகிறது. மோசமான நீர், வளமான நிலத்தையும் பயிரிடத் தகுதியற்றதாக மாற்றிவிடும்.
இரு தன்மைகள்
  • திறந்த வெளிக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் புதிதாக அமைத்த உடனேயே நீரின் பண்புகளை ஆராய்ந்து அறிவது விவசாயத்துக்கு நல்லது. பாசன நீரில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை உவர் தன்மை, களர் தன்மை.
  • பாசன நீரில் கால்சியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களின் குளோரைடுகள், சல்பேட்டுகள் அதிகம் இருந்தால் உவர் தன்மை ஏற்படும்.
  • சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், மெக்னீஷியம் கார்பனேட் ஆகிய உப்புகள் அதிகம் இருந்தால் பாசன நீரில் களர் தன்மை ஏற்படும்.
  • பாசன நீரை ஆய்வு செய்யும் போது அந்த நீரால் பாசன வசதி பெறும் நிலத்தில் உள்ள மண்ணையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை பரிந்துரைக்கிறது.


பரிசோதனை  செய்வது எப்படி
  • கிணற்றில் பம்புசெட் பொருத்தப்பட்டு இருந்தால், அரைமணி நேரம் மோட்டாரை ஓடவிட்டு பின்னர் கிடைக்கும் நீரை மாதிரியாகச் சுத்தமான பாட்டிலில் காற்றுக் குமிழிகள் இல்லாமல் சேகரிக்க வேண்டும்.
  • சேகரிக்கும் முன், அதே நீரைக் கொண்டு முதலில் பாட்டிலைக் கழுவ வேண்டும். தாமதம் இல்லாமல் விரைவில் ஆய்வுக் கூடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
  • பம்பு செட் இல்லாத கிணறாக இருந்தால், மேல்மட்ட நீரைச் சேகரிக்காமல் வாளியைக் கொண்டு, ஆழத்தில் உள்ள நீரைச் சேகரிக்க வேண்டும்.
  • கவலை பொருத்தப்பட்ட கிணற்றில், ஒரு மணி நேரம் நீரை இரைத்து விட்டு, பின்னர் நீர் மாதிரியைச் சேகரிக்க வேண்டும். பாசன நீர் மாதிரியுடன் விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் சர்வே எண், திறந்த வெளிக் கிணறா? ஆழ்குழாய்க் கிணறா? குளம் அல்லது ஆற்று நீரா? கிணற்றின் ஆழம் எவ்வளவு மண்ணின் விவரம் போன்றவற்றைத் தெரிவிக்க வேண்டும்.
  • பாசன நீரை ஆய்வு செய்து, உவர்நிலை, களர் நிலை, கார்பனேட், பை கார்பனேட், குளோரைடு, சல்பேட் ஆகியவற்றின் நிலை, கால்ஷியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் எஞ்சிய சோடியம் கார்பனேட் மற்றும் சோடியம் ஈர்ப்பு விகிதம், மெக்னீஷியம் கால்சியம் விகிதம், நீரின் ரசாயனத் தன்மை, ஆகிய விவரங்கள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கிப்படுகின்றன.
  • பாசன நீரை ஆய்வு செய்த பிறகு விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய உழவியல் முறைகள், தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப சாகுபடி முறைகள், உர நிர்வாகம், நீர் நிர்வாகம் ஆகியவைகளும் வேளாண் அலுவலர்களால் சிபாரிசு செய்யப்படுகின்றன.

கட்டணம் எவ்வளவு?
  • பாசன நீரை ஆய்வு செய்வதற்கு மாதிரி ஒன்றுக்கு, 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  பாசன நீர் ஆய்வுக்காக, மாதிரிகளை சேகரித்து அந்தந்தப் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் அளவிலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண் பல்கலைக்கழக கிளை அலுவலகங்களிலும், கூட்டுறவுத் துறை மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள வேளாண் சேவை மையங்களிலும் பாசன நீர் ஆய்வுக் கூடங்கள் உள்ளன.
  • நீரை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில், 1,700 ஆய்வு மையங்களை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.

நிலப்போர்வை அமைத்து விவசாயம் (Nilapporvai Amaithu Vivasayam) - Mulching in Agriculture

கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலப்போர்வை எனப்படும் “மல்ச்சிங்’ முறையை விவசாயிகள் கடைபிடித்தால், அதிக மகசூல் பெற முடியும்.



கோடை காலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்படுவது இயற்கையே.

மின்வெட்டு மற்றும் தண்ணீர் பிரச்னையை விவசாயிகள் கட்டாயம் சமாளித்தாக வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பகுதியில் உள்ள விவசாயிகள் நிலப்போர்வை முறையில் தர்ப்பூசணி, மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர்.



சேலம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இன்பராஜ் கூறியதாவது:

  • கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்.
  • பயிர்களை காப்பாற்ற நிலப்போர்வை (மல்ச்சிங்) (“Mulching“) அமைக்க வேண்டும்.
  • பிளாஸ்டிக் மல்ச்சிங், இயற்கை உர மல்ச்சிங் என்ற இரண்டு முறையின் மூலம் விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியும்.
  • பிளாஸ்டிக் மல்ச்சிங் முறை மூலம், நீர் ஈரப்பதம் பராமரிக்கப்படுவதால், பயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
  • மழை காலத்தில் செடியில் உள்ள வேரில் நீர் தேங்காமல் இருப்பதால், அழுகல் நோயிலிருந்தும் தப்பலாம்.
  • அசுவின் என்ற பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும் முடியும்.
  • “மல்ச்சிங்’ முறையை கடைபிடிப்பதன் மூலம் மூன்று நாட்களுக்கு முன்பாகவே மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
  • நிலப்போர்வை அமைக்க, தமிழக அரசு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது.
  • தேசிய தோட்டக்கலை திட்டத்தின் மூலம், நிலப்போர்வை வாங்க, 10 ஆயிரம் ரூபாய் மானியம் அளிக்கப்படுகிறது.
  • விவசாய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் நிலப்போர்வை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
  • ஒரு போகம் முடிந்ததும், நிலத்தை மீண்டும் களைக்காமல், மற்றொரு போகம் பயிர் செய்ய முடியும்.
  • சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள விவசாயிகள் மிளகாய், தக்காளி, தர்ப்பூசணி போன்ற பயிர்களை நிலப்போர்வை மூலம் பயிரிட்டுள்ளனர்.
  • இந்த பகுதியில், 50 எக்டர் பரப்பளவில் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
  • நிலப்போர்வை முறையில், சொட்டு நீர் பாசனம் பயன்படுத்துவதால், தண்ணீர் செலவு குறைகிறது. மகசூல் அதிகம் கிடைக்கிறது.
  • விவசாயிகள் உரிய ஆவணங்களுடன், அந்தந்த வட்டார உதவி வேளாண் இயக்குனர்களை சந்தித்து, விண்ணப்பங்களை கொடுக்கலாம்.
    இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, March 31, 2015

தெளிப்பு நீர் பாசனம் (Thelippu Neer Paasanam) - Sprinkler Irrigation

தெளிப்பு நீர் பாசன முறை பற்றி விவரிக்கும் விவசாயி ராஜேந்திரன்:

  • விழுப்புரம் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். பெரும்பாலும், சோளம், கம்பு, மணிலா போன்ற பயிர்களை தான் பயிரிடுவோம்.
  • கடந்த சில ஆண்டுகளாக, உரிய மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகளும் வற்றின. அதனால், விவசாயம் செய்வதே, பெரும் சவாலாக இருந்தது.
  • இச்சூழலில், குறைந்த நீரில் தெளிப்பு நீர்ப்பாசனத்தின் மூலம், பயிர்களை சாகுபடி செய்து லாபம் பெறலாம் என்பதை, திண்டிவனம் வேளாண் பொறியியல் துறையின் வல்லுனர்கள் வாயிலாக அறிந்தேன்.
  • அதுமட்டுமின்றி, தெளிப்புநீர்ப் பாசனத்திற்கான கருவிகளை, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருவதும் தெரிந்தது.
  • இதற்காக விண்ணப்பித்த போது, 5 ஏக்கருக்கு மேல் எனக்கு நிலம் இருப்பதால், 75 சதவீத மானியத்தில், தெளிப்புநீர்ப் பாசனத்திற்கான ரெயின்கன் கருவியையும், 30 மீட்டர் நீளமுள்ள டியூப் பைப்பையும், வேளாண் பொறியியல் வல்லுனர்கள் வழங்கினர்; மேலும், கருவியை பொருத்துவது குறித்த பயிற்சியையும் அளித்தனர்.
  • வயலில் உள்ள மோட்டார் பைப்பில், டியூப் பைப்பை இணைத்து, அதனுடன் ரெயின் கன் கருவியின் பைப்பை இணைத்து, மோட்டாரை ஆன் செய்தால், நிலம் முழுவதும் சுழற்சி முறையில், 64 மீ., பரப்பளவிற்கு சாரல் மழை பொழிவது போன்று, நீர் தெளிக்கப்படும்.
  • ரெயின் கன் கருவியை, சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்பதால், அதிகபட்சமாக மூன்று முதல், நான்கு மணி நேரத்திற்குள், ஒரு ஏக்கரில் பயிர்களுக்கு நீர் அளித்து விடலாம்.
  • கடந்த பருவத்தில், உளுந்து மற்றும் எள் பயிரை தெளிப்பு நீர்ப் பாசனத்தில் பயிர் செய்திருந்த போது, அதிகபட்சமாக, நான்கு முறை மட்டுமே நீர் அளித்தேன்.
  • விதைப்புக்கு முன் ஒருமுறையும், அதன் பின், 15 நாட்கள் இடைவெளியிலும், பயிர்களுக்கு நீர் அளித்தேன்.
  • வழக்கமாக பெரும் மகசூலைவிட தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் பயிர் செய்தபோது, அதிக அளவில் மகசூல் கிடைத்தது.
  • மணிலா, உளுந்து, எள் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் மண், 2 அங்குலம் உயரத்திற்கு ஈரப்பதத்துடன் இருந்தால், பயிர்களைப் பாதுகாத்து விடலாம்.
  • தெளிப்பு நீர் பாசன முறையில், 5 எச்.பி., திறன் கொண்ட மோட்டார் மூலம், கருவியைப் பயன்படுத்தி, வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், விவசாயிகள் லாபம் பெறலாம்.

குறைந்த நீரில் அதிக விவசாயம் (Kuraintha Neeril Athiga Vivasayam) - Water Conservation Methods for Agriculture

காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் கொடுத்தால் தான் விளைச்சல் அபரிமிதமாக இருக்கும் எனக் கூறும், தமிழ்நாடு மண் மற்றும் நீர் ஆராய்ச்சி நிலைய நீர் மேலாண்மை வல்லுனர் முனைவர் பொற்பாவை:


  • நமக்குக் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி, அதற்குத் தகுந்த பயிர்களைத் தேர்வு செய்து, பயிர் செய்தால், நல்ல மகசூல் எடுக்க முடியும்.
  • உதாரணத்திற்கு, 1 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய தேவையான நீரை வைத்து, 3 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம். இதுபோல கிடைக்கும் தண்ணீருக்கு ஏற்ப திட்டமிட்டு விவசாயம் செய்யும்போது, விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும்.
  • மேலும், நமக்குக் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி, அதற்கேற்ப நாம் நடவுமுறையைப் பயன்படுத்தலாம்.
  • திருந்திய நெல் சாகுபடியில் நடவு செய்யும்போது, நாற்றங்கால், நடவு போன்றவற்றில் பெருமளவு தண்ணீர் தேவை குறையும்; அதிக லாபமும் ஈட்ட முடியும்.
  • டெல்டா மாவட்டங்களில் எப்போதெல்லாம் தண்ணீர் குறைவாக வந்ததோ, அப்போதெல்லாம் விளைச்சல் அதிகமாக இருந்திருக்கிறது.நீர்க்கட்டு என்பதுதான், நெல்லுக்கு தாரக மந்திரம்.

  • நெல் நடவு செய்த வயலில் தூர் கட்டும் வரை, 2 முதல் 2.5 செ.மீ., உயரம் தண்ணீர் கட்டினால் போதும்.
  • தூர் கட்டும் பருவத்தில் நீரை வடிகட்ட வேண்டும்; அப்போதுதான் அதிக அளவில் தூர் வெடிக்கும்.
  • அதுபோல, பூ பூக்கும் சமயத்தில், பூ பூப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பும், பூத்த பின்பும், 5 செ.மீ., தண்ணீர் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல முறையில் பூக்கள் பூத்து, பால் வைக்கும்.
  • அதன் பின், தொடர்ச்சியாக, 2 செ.மீ., உயரம் தண்ணீர் இருந்தால் போதுமானது.
  • அதுபோல அவ்வப்போது தண்ணீரை வடித்து, வயலை நன்கு காயவிட்டு, பின் தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்; அப்போதுதான் அதிக அளவில் விளைச்சல் இருக்கும்.
  • தொடர்ச்சியாக வயலில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது, பயிரின் வேர்களுக்கு காற்றோட்டம் செல்வதில்லை.மேலும், தண்ணீரை வடித்து வடித்துக் கட்டும்போது, அதிக விளைச்சல் கிடைக்கும்.
 

  • தண்ணீர் சிக்கனத்திற்கு உளுந்து சிறந்த பயிராக உள்ளது; இது, 65 நாட்கள் பயிர் தான். இதற்கு, 300 மி.மீ., தண்ணீர் போதுமானது.
  • கரும்பு சாகுபடி செய்யும்போது, தண்ணீர் சிக்கனத்திற்காக சொட்டுநீர்ப் பாசனம் செய்யலாம்.
  • அதுபோல தென்னை, வாழை போன்ற நீண்ட காலப் பயிர்களுக்கும், சொட்டுநீர்ப் பாசன முறை சிறந்த பயன் தருகிறது.இதுபோல சிறு தானியங்கள், காய்கறிகள், பூ வகைகள் போன்றவற்றை மாற்றுப்பயிராக செய்யும்போது, குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு அதிக அளவில் விவசாயம் செய்ய முடியும்.

உப்பு நீரை பாசனத்திற்கு பயன்படுத்துவது எப்படி? (Uppu Neerai Paasanthuku Yeatrapadi Maatrum Murai) - Process for the conversion of salt water for irrigation purposes

களரிப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம் உதவிப் பேராசிரியர் வேல்முருகன் தெரிவிக்கும் நுட்பங்கள்:

  • குறிப்பாக ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வரும் உப்புநீரை பாசனத்திற்கு  பயன்படுத்துவது எப்படி என்று கேள்வி. ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் மழைநீரைச் சேகரிக்க பண்ணைக்குட்டை அல்லது மழைநீர் சேகரிப்பு, தொட்டிகள் அமைக்கலாம் என்கிறார் பேராசிரியர் வேல்முருகன்.
  • அதாவது ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் 3 அடி நீளம் 2 1/2 அடி அகலம், 4 அடி ஆழத்துக்கு குழி எடுத்து அதில் 3 அடி உயரத்துக்கு ஜல்லி, ஜல்லிகற்களை நிரப்பி அதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு மணல் நிரப்பினார். மழைநீர் சேகரிப்பு தொட்டி தயாராகி விடும். இதன் மூலம் ஆழ்துளைக் கிணற்றின் நீர்மட்டம் உயரும். காலப்போக்கில் உப்புத்தன்மையும் குறைய வாய்ப்புகள் உள்ளன.
  • தவிர தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்வதால் அது மண்ணில் உள்ள உப்புத்தன்மைக் குறைக்கிறது.
  • நன்றாக விளைச்சல் கொடுக்கக்கூடிய திருச்சி1, திருச்சி 3 ஆகிய நெல் ரகங்களை சாகுபடி செய்யலாம்.
  • கூடவே இயற்கை உரங்களை நிறைய பயன்படுத்த வேண்டும். கேழ்வரகு, வரகு போன்ற உப்புத்தன்மையைத் தாங்கி வளரும்.சிறு தானியங்களையும் சாகுபடி செய்யலாம்.
  • பழமரங்களைப் பொறுத்தவரையில் கொய்யா, புளி, நாவல், நெல்லி போன்றவற்றை இந்த மாதிரியான நிலத்திற்கு ஏற்றதாக இருக்கும். 

சொட்டுநீர் பாசன டிப்ஸ் (Sottu Neer Pasanam Tips) - Tips for Drip Irrigation

“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:
  • சொட்டுநீர் பாசன முறை விவசாயிகள், நீர் பாய்ச்சுவதற்கு முன், டிஸ்க் வடிகட்டியை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • மெயின் பைப், சப்மெயின் பைப், பக்கவாட்டு குழாய்களை, 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
  • உபகரணத்தில் உள்ள வடிகட்டியின் இன்லெட் மற்றும் அவுட்லெட், சப்மெயின், பக்கவாட்டு குழாயின் இறுதியில் தேவையான அழுத்தம் உள்ளதா என பார்க்க வேண்டும்.
  • உபகரணத்தை மண்ணின் ஈரப்பதம் மற்றும் பயிரின் நீர் தேவைக்கேற்ப இயக்க வேண்டும்.
  • உப்பு மற்றும் பாசனத்தினால், டிரிப்பரில் அடைப்பு ஏற்படாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • நீண்ட நாட்கள் இயக்க தேவையில்லாத போதும் கூட உபகரணத்தை இயக்க வேண்டும்.
  • ஒவ்வொரு முறையும், உரம் மற்றும் அமில சிகிச்சை முடிந்து, 15 முதல், 30 நிமிடம் நீர் பாசனம் செய்ய வேண்டும்.
  • தண்ணீரில் கரையக்கூடிய உரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • மண்ணுக்கு அடியில் அமைக்கப்பட்ட சொட்டுநீர் பாசனமெனில், தினந்தோறும் குறிப்பிட்ட அழுத்தத்தில் இயக்க வேண்டும்.

Thursday, March 12, 2015

சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி

சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி செய்யும் பரப்பு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்துள்ளது.

சர்க்கரை நோய் மற்றும் வயிறு சம்மந்தமான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குனம் உள்ள பப்பாளி பழத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக மகாராஜகடை மற்றும் வரட்டனப்பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் வீரிய ஒட்டுரக பப்பாளி செடிகளை கடந்த, நான்கு ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகின்றனர்.

ஒரு விதை, 10 ரூபாயுக்கு வாங்கும் விவசாயிகள், ஒரு ஏக்கரி,ல் ஆயிரம் செடிகளை நட்டு வைத்து வளர்க்கின்றனர்.

ஆறு மாதத்திற்கு பிறகு அறுவடைக்கு வரும் பப்பாளி காய்களை மொத்த வியாபாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜூஸ் பாக்டரி மற்றும் சென்னை, கர்நாடகா மாநிலம் பெங்களூரு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.


பப்பாளி சாகுபடியில் கூலி ஆட்கள் தேவை குறைவாக உள்ளது.

மேலும், மற்ற பயிர்களை போலவே பப்பாளியும் சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுவதால் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் உள்ளது.

பொதுவாக மாகாராஜகடை மற்றும் வரட்டனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் அனைத்து விவசாயிகளும் கிணற்று பாசனைத்தை மட்டுமே நம்பியுள்ளர்.

நெல், கரும்பு,வாழை, மஞ்சள் பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவாதல், குறைந்த அளவே தண்ணீர் வருமானம் கொடுக்கும் பப்பாளி சாகுபடிக் இப்பகுதி விவசாயிகள் மாறியுள்ளனர்.இதனால் பப்பாளி சாகுபடி செய்யப்படும் பரப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளது.

இந்த பகுதியில் கடந்த ஆண்டு, 200 ஏக்கரில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, 500 ஏக்கராக அதிகரித்துள்ளது.

ஒரு கிலே, ஐந்து ரூபாய் முதல், ஏழு ரூபாய் வரை மொத்த விற்பனையாளர்கள் தோட்டத்திலே வந்து காய்களை எடுத்து செல்கின்றனர்.

இதன் மூலம் வாரத்துக்கு ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. மற்ற பயிர்களை காட்டிலும் பப்பாளி சாகுபடிக்கு செலவு குறைவு என்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைத்து வருகிறது. பப்பாளி பயிரிடும் முறை கனிகளின் சிகரம் என்றும், ஏழைகளின் ஆப்பிள் என்றும் மருத்துவர்களால் வர்ணிக்கப்படுவது பப்பாளி.


தமிழ்நாட்டில் திண்டுக்கல், பொள்ளாச்சி, கோவை, தருமபுரி மாவட்டங்களில் வணிக ரீதியாகப் பயிரிடப்படுகின்றன.

பயிரிடும் முறை:
மிதவெப்ப மற்றும் வெப்பப் பிரதேசங்களில், சமவெளிகளில் களிமண் பூமியைத் தவிர மற்ற நிலங்களில் பப்பாளி நன்றாக வளரும்.

மலைப் பகுதிகளில், 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும் வடிகால் வசதி உள்ள நிலங்களிலும் பப்பாளி வளரும்.

ஆண்டு முழுவதும் பப்பாளியைப் பயிரிடலாம் என்றாலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி பயிரிடலாம் என்று வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

பப்பாளியின் வயது 24 முதல் 30 மாதங்கள்.

நடவுக் காலத்தில் அதிக மழை இருக்கக் கூடாது.

வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்கக் கூடாது. பப்பாளியில் கோ1, கோ2, கோ3, கோ4, கோ5, கோ6, கோ7 மற்றும் கூர்க்கனி டியூ, சூரியா போன்ற ரகங்கள் உள்ளன.

இவற்றில் கோ2, கோ5, கோ6 ஆகிய ரகங்கள் சாப்பிடச் சிறந்தவை. கோ2, கோ5 பால் எடுப்பதற்கு ஏற்ற ரகங்கள். பால் எடுத்த பிறகு பழங்களைச் சாப்பிடலாம்.

பப்பாளி நாற்று தயாரிக்க ஏக்கருக்கு 500 கிராம் விதை தேவை.

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் சேர்த்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

தொழுஉரம் மற்றும் மணல் நிரப்பி, பாலித்தீன் பைகளில் பை ஒன்றுக்கு 4 விதை வீதம் நட்டு நாற்று தயாரிக்கலாம்.

60 நாள்களில் நாற்று தயாராகிவிடும்.

பப்பாளி பயிரிட நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது, 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. 45 செ.மீ. 45 செ.மீ. அளவில் குழிகள் தோண்டி, மண் மற்றும் தொழுஉரமிட்டு நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்.

வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கக் கூடாது.