விவசாயிகள் குளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் பட்டாணி பயிரைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும் என, தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ரகங்கள்:
- போனிவில்லி, புளுபேண்டம், அர்கெல், அலாஸ்கா லின்கோலின், அசாத் ரகங்கள் ஏற்றவை.
மண், தட்பவெப்பநிலை
- மணல்சாரியான செம்மண் பூமியிலும், களிமண் நிறைந்த நிலங்களிலும் வளர்ந்தாலும், வடிகால் வசதி கொண்ட பொல பொலப்பான இருபொறை மண் நிலங்களில் நன்கு வளரும். களர், உவர் நிலங்களில் வளராது. பட்டாணி குளிர்காலத்தில் சிறந்த வளர்ச்சியும், மகசூலும் தரவல்லது.
பருவம்:
- பிப்ரவரி – மார்ச், அக்டோபர் – நவம்பர் மாதங்கள் பயிரிட ஏற்ற பருவம்.
விதையளவு:
- ஹெக்டேருக்கு 100 கிலோ விதை போதும். 40-க்கு 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்:
- நிலத்தை 3 அல்லது 4 தடவை மடக்கி உழ வேண்டும். கடைசி உழவில் 20 டன் மக்கிய தொழு உரம் இட்டு உழவேண்டும். பின்பு 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.
விதை, விதைப்பு:
- விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது நான்கு கிராம் ட்ரைகோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். பின்பு 2 கிலோ பாஸ்போ பாக்டீரியத்தை மண்ணுடன் கலக்கவேண்டும். பார்களின் பக்கவாட்டில் விதைகளை 34 செமீ ஆழத்தில் ஊன்றவேண்டும். விதைக்கு விதை 10 செமீ இடைவெளி விட்டு விதையை ஊன்றவேண்டும்.
- ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: பார்களின் ஓரங்களில் தழைச்சத்து 60 கிலோ, சாம்பல் சத்து 70 கிலோ கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை அடியுரமாக இடவேண்டும்.
நீர் நிர்வாகம்:
- விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பின்னர் 3 நாள் கழித்து உயிர்த்தண்ணீரும் விடவேண்டும். பின்னர் மண்ணின் தன்மையை அனுசரித்து 5 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் கட்டவேண்டும். மலைகளில் பயிரிட்டால் பனிக்கட்டி தோன்றும் காலத்தில் நீர் கட்டவேண்டும்.

