Tuesday, March 31, 2015

மனித சிறுநீரை உரமாக பயன் படுத்தலாமா – வேளாண் துறை ஆய்வு (Manitha Siruneer Uram) - Human Urine as Fertilizer


மனித சிறுநீர் எப்படி பின்லாந்த் ஸ்வீடன் போன்ற நாடுகளில் உரமாக பயன் படுத்தி காய்கறிகள் பயிர் இடுகிறார்கள் என்றும் முசிறியில் சிறுநீரை பயன் படுத்தி Struvite என்ற உரம் தயாரிப்பது பற்றியும் ஏற்கனவே படித்துள்ளோம்.
Struvite உரம் செய்முறை எப்படி என்று சுவிட்சர்லாந்த் நாடு விஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இப்போது தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் இதை பற்றி ஒரு ஆராய்ச்சி மேற் கொள்ள போவதாக செய்தி வந்துள்ளது:

கடலூர் : பெருகி வரும் மக்கள் தொகையால் உற்பத்தியாகும் மனித கழிவுகளை மேலாண்மை செய்வது என்பது வளரும் நாடுகளில் பெரிய சவாலாக மாறி வருகிறது. பொதுவாக மனித சிறுநீர் நச்சுத்தன்மையற்றது என்றாலும் அதில் உள்ள யூரியா, குளோரைடு மற்றும் சோடியம் உப்புகள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது.
மனித சிறுநீரை உரிய முறையில் பயன்படுத்தினால் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதன் பயன்கள் தமிழகத்திற்கும் கிடைக்கச் செய்ய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறை சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறையும் இங்கிலாந்தில் உள்ள தொண்டு நிறுவனமான வேர்எவர் நீட் இணைந்து வேளாண்மையில் மனித சிறுநீர் மற்றும் கழிவுகளை பயன்படுத்துவதால் உண்டாகும் சமூக பொருளாதார தாக்கத்தினை ஆய்வு செய்ய உள்ளன.


இத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படவுள்ளது. இதில் கடலூரில் உள்ள பிளஸ் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்படுத்தவுள்ளது. நெல், கத்தரி, மக்காச்சோளம் போன்ற பயிர்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இத்திட்டம் வாயிலாக மனிதக்கழிவுகள் மூலம் வேளாண்மைக்குத் தேவையான சத்துக்களை சுற்றுச்சூழல் மாசின்றி பெற வாய்ப்புள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராமநாதன், வேளாண்புல முதல்வர் முனைவர் வசந்தகுமார் முன்னிலையில் இத்திட்டத்திற்கான முதல் தவணையாக 2 லட்சம் ரூபாய் காசோலையாக கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வேர்எவர் நீட் உலகத் தலைவர் டேவிட் கிராஸ் வெல்லர் இந்திய இயக்குனர் பரமசிவம் மற்றும் பிளஸ் தொண்டு நிறுவனம் தலைவர் அந்தோணிசாமி பங்கேற்றனர்.

தெளிப்பு நீர் பாசனம் (Thelippu Neer Paasanam) - Sprinkler Irrigation

தெளிப்பு நீர் பாசன முறை பற்றி விவரிக்கும் விவசாயி ராஜேந்திரன்:

  • விழுப்புரம் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். பெரும்பாலும், சோளம், கம்பு, மணிலா போன்ற பயிர்களை தான் பயிரிடுவோம்.
  • கடந்த சில ஆண்டுகளாக, உரிய மழை இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகளும் வற்றின. அதனால், விவசாயம் செய்வதே, பெரும் சவாலாக இருந்தது.
  • இச்சூழலில், குறைந்த நீரில் தெளிப்பு நீர்ப்பாசனத்தின் மூலம், பயிர்களை சாகுபடி செய்து லாபம் பெறலாம் என்பதை, திண்டிவனம் வேளாண் பொறியியல் துறையின் வல்லுனர்கள் வாயிலாக அறிந்தேன்.
  • அதுமட்டுமின்றி, தெளிப்புநீர்ப் பாசனத்திற்கான கருவிகளை, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருவதும் தெரிந்தது.
  • இதற்காக விண்ணப்பித்த போது, 5 ஏக்கருக்கு மேல் எனக்கு நிலம் இருப்பதால், 75 சதவீத மானியத்தில், தெளிப்புநீர்ப் பாசனத்திற்கான ரெயின்கன் கருவியையும், 30 மீட்டர் நீளமுள்ள டியூப் பைப்பையும், வேளாண் பொறியியல் வல்லுனர்கள் வழங்கினர்; மேலும், கருவியை பொருத்துவது குறித்த பயிற்சியையும் அளித்தனர்.
  • வயலில் உள்ள மோட்டார் பைப்பில், டியூப் பைப்பை இணைத்து, அதனுடன் ரெயின் கன் கருவியின் பைப்பை இணைத்து, மோட்டாரை ஆன் செய்தால், நிலம் முழுவதும் சுழற்சி முறையில், 64 மீ., பரப்பளவிற்கு சாரல் மழை பொழிவது போன்று, நீர் தெளிக்கப்படும்.
  • ரெயின் கன் கருவியை, சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்பதால், அதிகபட்சமாக மூன்று முதல், நான்கு மணி நேரத்திற்குள், ஒரு ஏக்கரில் பயிர்களுக்கு நீர் அளித்து விடலாம்.
  • கடந்த பருவத்தில், உளுந்து மற்றும் எள் பயிரை தெளிப்பு நீர்ப் பாசனத்தில் பயிர் செய்திருந்த போது, அதிகபட்சமாக, நான்கு முறை மட்டுமே நீர் அளித்தேன்.
  • விதைப்புக்கு முன் ஒருமுறையும், அதன் பின், 15 நாட்கள் இடைவெளியிலும், பயிர்களுக்கு நீர் அளித்தேன்.
  • வழக்கமாக பெரும் மகசூலைவிட தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் பயிர் செய்தபோது, அதிக அளவில் மகசூல் கிடைத்தது.
  • மணிலா, உளுந்து, எள் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் மண், 2 அங்குலம் உயரத்திற்கு ஈரப்பதத்துடன் இருந்தால், பயிர்களைப் பாதுகாத்து விடலாம்.
  • தெளிப்பு நீர் பாசன முறையில், 5 எச்.பி., திறன் கொண்ட மோட்டார் மூலம், கருவியைப் பயன்படுத்தி, வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், விவசாயிகள் லாபம் பெறலாம்.

குறைந்த நீரில் அதிக விவசாயம் (Kuraintha Neeril Athiga Vivasayam) - Water Conservation Methods for Agriculture

காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் கொடுத்தால் தான் விளைச்சல் அபரிமிதமாக இருக்கும் எனக் கூறும், தமிழ்நாடு மண் மற்றும் நீர் ஆராய்ச்சி நிலைய நீர் மேலாண்மை வல்லுனர் முனைவர் பொற்பாவை:


  • நமக்குக் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி, அதற்குத் தகுந்த பயிர்களைத் தேர்வு செய்து, பயிர் செய்தால், நல்ல மகசூல் எடுக்க முடியும்.
  • உதாரணத்திற்கு, 1 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய தேவையான நீரை வைத்து, 3 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம். இதுபோல கிடைக்கும் தண்ணீருக்கு ஏற்ப திட்டமிட்டு விவசாயம் செய்யும்போது, விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும்.
  • மேலும், நமக்குக் கிடைக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி, அதற்கேற்ப நாம் நடவுமுறையைப் பயன்படுத்தலாம்.
  • திருந்திய நெல் சாகுபடியில் நடவு செய்யும்போது, நாற்றங்கால், நடவு போன்றவற்றில் பெருமளவு தண்ணீர் தேவை குறையும்; அதிக லாபமும் ஈட்ட முடியும்.
  • டெல்டா மாவட்டங்களில் எப்போதெல்லாம் தண்ணீர் குறைவாக வந்ததோ, அப்போதெல்லாம் விளைச்சல் அதிகமாக இருந்திருக்கிறது.நீர்க்கட்டு என்பதுதான், நெல்லுக்கு தாரக மந்திரம்.

  • நெல் நடவு செய்த வயலில் தூர் கட்டும் வரை, 2 முதல் 2.5 செ.மீ., உயரம் தண்ணீர் கட்டினால் போதும்.
  • தூர் கட்டும் பருவத்தில் நீரை வடிகட்ட வேண்டும்; அப்போதுதான் அதிக அளவில் தூர் வெடிக்கும்.
  • அதுபோல, பூ பூக்கும் சமயத்தில், பூ பூப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பும், பூத்த பின்பும், 5 செ.மீ., தண்ணீர் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல முறையில் பூக்கள் பூத்து, பால் வைக்கும்.
  • அதன் பின், தொடர்ச்சியாக, 2 செ.மீ., உயரம் தண்ணீர் இருந்தால் போதுமானது.
  • அதுபோல அவ்வப்போது தண்ணீரை வடித்து, வயலை நன்கு காயவிட்டு, பின் தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்; அப்போதுதான் அதிக அளவில் விளைச்சல் இருக்கும்.
  • தொடர்ச்சியாக வயலில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது, பயிரின் வேர்களுக்கு காற்றோட்டம் செல்வதில்லை.மேலும், தண்ணீரை வடித்து வடித்துக் கட்டும்போது, அதிக விளைச்சல் கிடைக்கும்.
 

  • தண்ணீர் சிக்கனத்திற்கு உளுந்து சிறந்த பயிராக உள்ளது; இது, 65 நாட்கள் பயிர் தான். இதற்கு, 300 மி.மீ., தண்ணீர் போதுமானது.
  • கரும்பு சாகுபடி செய்யும்போது, தண்ணீர் சிக்கனத்திற்காக சொட்டுநீர்ப் பாசனம் செய்யலாம்.
  • அதுபோல தென்னை, வாழை போன்ற நீண்ட காலப் பயிர்களுக்கும், சொட்டுநீர்ப் பாசன முறை சிறந்த பயன் தருகிறது.இதுபோல சிறு தானியங்கள், காய்கறிகள், பூ வகைகள் போன்றவற்றை மாற்றுப்பயிராக செய்யும்போது, குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு அதிக அளவில் விவசாயம் செய்ய முடியும்.

உப்பு நீரை பாசனத்திற்கு பயன்படுத்துவது எப்படி? (Uppu Neerai Paasanthuku Yeatrapadi Maatrum Murai) - Process for the conversion of salt water for irrigation purposes

களரிப்பாக்கம் வேளாண் அறிவியல் மையம் உதவிப் பேராசிரியர் வேல்முருகன் தெரிவிக்கும் நுட்பங்கள்:

  • குறிப்பாக ஆழ்துளைக் கிணற்றிலிருந்து வரும் உப்புநீரை பாசனத்திற்கு  பயன்படுத்துவது எப்படி என்று கேள்வி. ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் மழைநீரைச் சேகரிக்க பண்ணைக்குட்டை அல்லது மழைநீர் சேகரிப்பு, தொட்டிகள் அமைக்கலாம் என்கிறார் பேராசிரியர் வேல்முருகன்.
  • அதாவது ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் 3 அடி நீளம் 2 1/2 அடி அகலம், 4 அடி ஆழத்துக்கு குழி எடுத்து அதில் 3 அடி உயரத்துக்கு ஜல்லி, ஜல்லிகற்களை நிரப்பி அதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு மணல் நிரப்பினார். மழைநீர் சேகரிப்பு தொட்டி தயாராகி விடும். இதன் மூலம் ஆழ்துளைக் கிணற்றின் நீர்மட்டம் உயரும். காலப்போக்கில் உப்புத்தன்மையும் குறைய வாய்ப்புகள் உள்ளன.
  • தவிர தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்வதால் அது மண்ணில் உள்ள உப்புத்தன்மைக் குறைக்கிறது.
  • நன்றாக விளைச்சல் கொடுக்கக்கூடிய திருச்சி1, திருச்சி 3 ஆகிய நெல் ரகங்களை சாகுபடி செய்யலாம்.
  • கூடவே இயற்கை உரங்களை நிறைய பயன்படுத்த வேண்டும். கேழ்வரகு, வரகு போன்ற உப்புத்தன்மையைத் தாங்கி வளரும்.சிறு தானியங்களையும் சாகுபடி செய்யலாம்.
  • பழமரங்களைப் பொறுத்தவரையில் கொய்யா, புளி, நாவல், நெல்லி போன்றவற்றை இந்த மாதிரியான நிலத்திற்கு ஏற்றதாக இருக்கும். 

சொட்டுநீர் பாசன டிப்ஸ் (Sottu Neer Pasanam Tips) - Tips for Drip Irrigation

“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:
  • சொட்டுநீர் பாசன முறை விவசாயிகள், நீர் பாய்ச்சுவதற்கு முன், டிஸ்க் வடிகட்டியை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • மெயின் பைப், சப்மெயின் பைப், பக்கவாட்டு குழாய்களை, 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
  • உபகரணத்தில் உள்ள வடிகட்டியின் இன்லெட் மற்றும் அவுட்லெட், சப்மெயின், பக்கவாட்டு குழாயின் இறுதியில் தேவையான அழுத்தம் உள்ளதா என பார்க்க வேண்டும்.
  • உபகரணத்தை மண்ணின் ஈரப்பதம் மற்றும் பயிரின் நீர் தேவைக்கேற்ப இயக்க வேண்டும்.
  • உப்பு மற்றும் பாசனத்தினால், டிரிப்பரில் அடைப்பு ஏற்படாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • நீண்ட நாட்கள் இயக்க தேவையில்லாத போதும் கூட உபகரணத்தை இயக்க வேண்டும்.
  • ஒவ்வொரு முறையும், உரம் மற்றும் அமில சிகிச்சை முடிந்து, 15 முதல், 30 நிமிடம் நீர் பாசனம் செய்ய வேண்டும்.
  • தண்ணீரில் கரையக்கூடிய உரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • மண்ணுக்கு அடியில் அமைக்கப்பட்ட சொட்டுநீர் பாசனமெனில், தினந்தோறும் குறிப்பிட்ட அழுத்தத்தில் இயக்க வேண்டும்.

Saturday, March 28, 2015

நாட்டு பசுவின் மகிமை (Naatu Pasuvin Magimai) - Benefits of Cow

அந்தக் குடுவைக்குள் பொன்னிறத் திரவம் நிறைந்திருந்தது. அதன் அடியில் தேங்கி நிற்கும் குருணைப் படலம். சுவை பார்த்த கையில் சில மணி நேரம் நீடிக்கும் நெய்யின் முறுகிய மணம்.
“வட இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நாட்டு பசுக்களின் பாலில் இருந்து உற்பத்தி செய்யட்ட நெய் இது. இதில் செயற்கையான நிறமூட்டிகள் மணமூட்டிகள், பதனப்பொருட்கள் என எதுவும் சேர்க்கப்படவில்லை’’ என்கிறார் அரியா (ARIA) பால் பண்ணையின் நிறுவனரும் மேலாண் இயக்குநருமான அஹ்மத். அப்படி இந்த மாடுகளில் என்ன சிறப்பு உள்ளது எனக் கேட்டதற்கு நீண்ட விளக்கம் அளித்தார்.
“பொதுவாக நமது நாட்டில் நாம் அருந்தும் பாலில் 60 சதவீதம் வரை ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்ஸி போன்ற பல இன பசுக்களிலிருந்து கிடைக்கும் பால் ஆகும். இந்த இறக்குமதி இன பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலில் புரதத் துணுக்கு (A1 beta-casein) இயற்கையான பாரம்பரிய மரபணுவைக் கொண்டது அல்ல. இது பிறழ்ந்த மரபணுவைக் கொண்டதாகும் .
இந்தப் பாலை அருந்தும்போது நமது உடலில் உள்ள நரம்பு மண்டலத்திலும் நாளமில்லா சுரப்பிகளிலும் நோய் தடுப்பு மண்டலத்திலும் பல உபாதைகள் ஏற்படுகின்றன. தமனியில் படலம் படிதல், தமனி அடைப்பு, இதய நோய், மனச்சிதைவு, மதி இறுக்கம், முதல் நிலை வகை நீரிழிவு போன்ற நோய்களையும், குழந்தை இறப்பையும் அத்துடன் மனித உடல் இயற்கையாகவே பெற்றுள்ள நோய் எதிர்ப்பு திறனில் குறைபாட்டையும் ஏற்படுத்து கின்றன. பசுவின் பாலுக்கு அமிர்தம் என்ற பெயருண்டு. அமிர்தத்திற்கு நஞ்சு போக்கும் பொருள் எனவும் பொருளுண்டு. ஆனால் நாம் அமிர்தம் என்ற பெயரில் நஞ்சை அருந்துகின்றோம்.
பிரச்சினைக்குரிய இந்த ஏ1 பிறழ்வு புரதம் இந்திய மண்ணுக்கே உரிய நாட்டு மாடுகளில் இருப்பதில்லை. மாறாக எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத ஏ2 இணை மரபணு புரதம் மட்டுமே காணப்படுகின்றது.
எனவேதான் எங்கள் பண்ணையில் உள் நாட்டு பசுவை மட்டும் வளர்க்கின்றோம். வட இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட 80 கறவை மாடுகள் உள்பட மொத்தம் 196 உயர் ரக மாடுகள் தற்போது எங்களிடம் உள்ளன. அவைகளுக்கு ஹார்மோன்கள் உட்பட எந்தவிதமான ஊக்க மருந்து ஊசிகளும் போடப்படுவதில்லை.
மாடுகளுக்கு நெல்லின் உமி, தவிடு, வைக்கோல், கோது மையின் உமி, தவிடு, கோ 4, வேலி மசாலா, சோளத்தட்டை, சோள மாவு, அகத்திக்கீரை, கடலைப் பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை பிண்ணாக்கு போன்ற இயற்கையான நல்ல தீவனங்களை கொடுப்பதன் வழியாக மட்டுமே பாலின் தரத்தை நாங்கள் மேம் படுத்துகின்றோம்.
எங்கள் பண்ணையில் கிடைக் கும் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.65-க்கு மேல் விற்பனை ஆகும் வகையில் பெரும் சந்தை வாய்ப்பு உள்ளது. பாலை அப்படியே விற்பனை செய்யாமல், நெய் போன்ற பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும்போது விவசாயிகள் இன்னும் அதிக லாபம் பெறலாம்.
ஒரு சராசரி நாட்டு மாட்டின் விலை ரூ.35,000. உயர் ரக நாட்டு மாட்டின் விலை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை ஆகிறது, என்கிறார்’’ அஹ்மத்.
திண்டிவனம் நகரின் அண்மையில் ஜி.எஸ்.டி, சாலை அருகே அமைந்துள்ள கீழ் பசார் கிராமத்தில் இவரின் ஒருங்கிணைந்த விவசாய பால் பண்ணை அமைந்துள்ளது . 200 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ள இந்த பண்ணையை 2011-ம் ஆண்டிலிருந்து நடத்தி வருகின்றார். மாடுகளிலிருந்து கிடைக்கும் சாணத்திலிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் கட்டமைப்பையும் தனது பண்ணையில் நிறுவி வருகின்றார்.
மீதமுள்ள ஏக்கரில் மாட்டுத் தீவனம், மேஞ்சியம் வெட்டு மரம், நெல்லி, மா, பப்பாளி, சாத்துக்குடி, நாவல், கொய்யா, சப்போட்டா, நாரத்தை, பம்பளிமாஸ் போன்ற வற்றை இயற்கை முறையில் பயிரிட்டுள்ளார். அஹ்மத் வைர வணிகம் செய்து வரும் குடும்ப பின்னணியைக் கொண்டவர். ஐ.டி. நிறுவனம், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்த இவர், தற்போது இயற்கை வேளாண்மை மற்றும் பால் பண்ணை தொழிலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் கூறும்போது, “முதலில் முழுக்க முழுக்க லாப நோக்கத்தில்தான் இந்த இயற்கை வேளாண்மையை தேர்ந்தெடுத்தேன். ஆனால் அது தொடர்பான ஆய்வில் ஈடுபடும் போது இயற்கை வேளாண்மை என்பது வணிகம் என்பதையும் தாண்டியது என்பது புரிந்தது. அது ஒரு தற்சார்பான நீடித்த தன்மை கொண்ட முழுமையான வாழ்க்கை முறையாக எழுச்சி கொண்டு என்னை கவர்ந்து கொண்டது’’ என்றார்.
நாட்டு பசுவின் மகிமையை நமக்கு   முதலில் சொல்லியவர் இயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வாரும் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை அறிமுக படுத்திய பாலகரும்  ஆவர். ஒரு விவசாயி, ஒரு நாடு பசுவை வைத்து கொண்டு முப்பது ஏகர் விவசாயம் செய்ய முடியும், ஒரு விதமான இடு பொருளும் வாங்காமல். கோமூத்திரம், சாணி, போன்றவையே போதும்
மேலும் விவரங்களுக்கு 09884166253 என்ற எண்ணிலும், ahmad@ariafarms.inஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

கீரையில் மாதம் ரூ.45 ஆயிரம் (Keerai) - Spinach

முன்னோர்களிடம் கீரையை உணவில் அதிகம் சேர்க்கும் பழக்கம் இருந்தது. இதற்காக, வீட்டு தோட்டங்களிலேயே முருங்கை, அகத்தி, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரைகளை பயிரிட்டனர். காலப்போக்கில், வீட்டு தோட்டங்கள் மறைந்து, உணவில் கீரை சேர்க்கும் பழக்கம் குறைந்தது. இதனால் உடலில் பாதிப்பு அதிகரித்தது. டாக்டர்களின் ஆலோசனைப்படி, இன்றைக்கு “வாக்கிங்’ செல்வோர், வீட்டிற்கு திரும்பும் போது, “கீரை கட்டுகளை’ வாங்கிச் செல்கின்றனர்.அதற்கேற்றார் போல், சிவகங்கை அருகே மேலசாலூரை சேர்ந்த விவசாயி பி.போஸ், தனது நிலத்தில் முற்றிலும் கீரை பயரிட்டு, லாபம் பார்த்து வருகிறார்.அவர் கூறியதாவது:

  • கடும் வறட்சிக்கு இடையே கிணற்றில் உள்ள தண்ணீரை வைத்து, கீரை பயிரிட்டு வருகிறேன். நான் மட்டுமின்றி, எனது சகோதரர்களும் சேர்ந்து, ஒட்டு மொத்தமாக 1.5 ஏக்கரில் கீரை நடவு செய்துள்ளோம்.
  • நான் மட்டுமே 50 சென்ட்டில்,200 பாத்தி அமைத்துள்ளேன்.
  • ஒரு பாத்திக்கு 50 கிராம் விதையை தூவ வேண்டும். விதை தூவிய பின், தினமும் தண்ணீர் பாய்ச்சுவதோடு, களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து தெளித்து,முறையாக கவனித்து வரவேண்டும்.
  • ஒரு மாதத்திற்கு பின் கீரை நன்கு வளர்ந்து, அறுவடைக்கு தயாராகும்.
  • இங்கு தண்டுகீரை, அரைக்கீரை, சிறு கீரை, பாலைக்கீரை, பருப்பு கீரை, வெந்தயகீரை, புளிச்சகீரை, பொன்னாங்கண்ணி கீரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை போன்று, மருத்துவ குணமுள்ள கீரைகளை அதிகளவில் பயிரிட்டுள்ளேன்.
மாதம் ரூ.45 ஆயிரம்
  • நாள் ஒன்றுக்கு, 300 முதல் 500 கட்டு (ஒரு கட்டு 250 கிராம்)அறுவடை செய்து விற்பேன். ஒரு கட்டு ரூ.5க்கு விற்கிறது. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு ரூ.2,500 வருவாய் கிடைக்கும். உரம், பூச்சி மருந்து, விவசாய கூலியாட்கள் சம்பளம் என்ற விகிதத்தில் ரூ.1,000 செலவு போக, தினமும் கீரை மூலம் ரூ.1,500 வீதமும், மாதம் ரூ.45 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். நல்ல மழை பெய்தால் இன்னும் அதிக நிலங்களில் கீரை பயிரிடலாம், என்றார்.

காலிபிளவர் சாகுபடி (Cauliflower Saagubadi) - Cauliflower Cultivation

காலிபிளவர் சாகுபடி மூலம், 80 நாள்களில் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும் என்கின்றனர் இதனை பயிர் செய்யும் விவசாயிகள்.
காலிபிளவர் அதிக சுவையுள்ள உணவுப் பொருள். காலிபிளவரில் கால்சியம் அதிகம் உள்ளது. இது நரம்பை பலமாக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இது நல்ல உணவு. எனவே இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

காலிபிளவர் கன்று ஒன்று 50 பைசாவுக்கு ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கின்றன. ஒரு ஏக்கர் நிலத்தில் 15 ஆயிரம் கன்றுகள்வரை வைக்கலாம். கன்றுகள் வைத்து முறையாக பராமரித்து வந்தால் 60 நாள்களில் பூக்கள் வர ஆரம்பிக்கும். 80 நாள்களில் பூக்களை அறுவடை செய்ய முடியும்.
காலிபிளவர் செடிகள் வாங்குவது மற்றும் உரங்கள், உழவுக் கூலி, களைச் செடிகள் எடுப்பது, பூச்சிக் கொல்லி மருந்துகள் என மொத்தம் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது.
காலிபிளவரின் ஒரு செடியில் இருந்து ஒரே ஒரு பூ மட்டுமே வரும். ஒரு ஏக்கரில் நடப்படும் 15 ஆயிரம் செடிகளில் 7,500 செடிகள் நல்ல முறையில் வளர்ந்து பூக்கள் வந்தால் கூட போதுமானது.
ஒரு காலிபிளவரின் விலை ரூ.20-க்கு விற்றால் 7,500 பூக்கள் மூலம் ரூ.1,50,000 ஆயிரம் கிடைக்கும். செலவுகள் போக 80 நாளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் எடுக்க முடியும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.திடீர் விலை குறைவு ஏற்பட்டு பாதி விலைக்கு விற்றால் கூட ரூ.50 ஆயிரத்துக்கும் அதிக அளவில் லாபம் கிடைகிறது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சிங்கனூர் கிராமத்தில், காலிபிளவர் சாகுபடி செய்யும், பண்ருட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயபால் கூறும்போது –
  • காலிபிளவர் நல்ல லாபம் தரும் பயிர். குறிப்பாக பனிக்காலங்களில் பயிர் செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். கார்த்திகை மாதத்துக்கு முன் பயிர் செய்து தை மாதத்துக்குள் மகசூல் எடுத்துவிட வேண்டும்.
  • முறையாக, பராமரித்தால் 80 நாள்களில் மகசூல் எடுக்கலாம். சில நேரங்களில் ஒரு பூவின் விலை ரூ.40-க்கு கூட விற்பனை ஆகும்.
  •  காலிபிளவர் சாகுபடி செய்யும் கால நிலைகளையும், மண்ணின் தன்மையையும், அறுவடை செய்யும்போது காலிபிளவர் பூக்களின் மார்க்கெட் நிலவரத்தையும் விவசாயிகள் தெரிந்து கொண்டு பயிர் செய்தால் அதிக லாபம் பெறமுடியும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்ணின் தன்மைக்கே காலிபிளவர் அதிகம் விளைகிறது. கண்டமங்கலம், திண்டிவனம் பகுதிகளில் காலிபிளவரை சிறப்பாக விளைவித்து காண்பித்துள்ளனர் விவசாயிகள்.

வீரிய வெள்ளரி சாகுபடியில் சாதனை (Veeriya Vellari Saagubadiyil Saathanai) - Hybrid cucumber cultivation

வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் வீரிய வெள்ளரி சாகுபடியில் செஞ்சி விவசாயிகள் சாதனை படைத்து வருகின்றனர்.
செம்மண் பூமியாக உள்ள மேல்மாம்பட்டு, தொரப்பாடி, ஈயகுணம், எய்யில், தாதங்குப்பம், தாயனூர், கண்டமநல்லூர், மேல் அருங்குணம், புத்தகரம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங் களில் வெளிநாடுகளுக்கு ஊறுகாய் தயாரித்து ஏற்றுமதி செய்யும் வீரிய வெள் ளரியை (மாத்திரை காய் ) சாகுபடி செய்கின்றனர்.
குறைந்த இடம்
வீரிய வெள்ளரியை 20 சென்ட் முதல் 1 ஏக்கர் வரை ஆடி, கார்த்திகை, சித்திரை என மூன்று பட்டத்தில் சாகுபடி செய்கின்றனர்.
விதைப்பு முதல் அறுவடை வரை தேவையான விதை, உரம், பூச்சி மருந்துகளை தனியார் நிறுவனங்கள் சப்ளை செய்கின்றன.
விதைப்பு, கொடிகள் படர வலைகள் அமைக்கின்றனர். விதைத்த பிறகு 30 வது நாள் முதல் அறுவடை துவங்கி விடும்.
50 சென்ட் சாகுபடி செய்த நிலத்தில் அறுவடை துவங்கியதும் தினம் நூறு கிலோவில் துவங்கி அதிகளவாக 600 கிலோ வரை மகசூல் உயர்ந்து பிறகு படிப்படியாக குறைகிறது.
சராசரியாக தினசரி 250 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.
காய்களை கொள்முதல் செய்யும் நிறுவனங் கள் உற்பத்தி செய்யும் இடத்திலேயே காய்களை வாங்கி செல்கின்றனர்.
50 சென்டில் சாகுபடி செய்யும் விவசாயி ஒரு முறை 15 ஆயிரம் கிலோ மகசூல் எடுக்கிறார்.
மூன்று வகை விலை
அளவில் சிறிதாக உள்ள பிஞ்சு காய்களுக்கு கிலோ ஒன்றுக்கு 22 ரூபாயும், அடுத்த ரகத்திற்கு 10 ரூபாய், முற்றிய பெரிய ரகத்திற்கு 3 ரூபாய் தருகின்றனர்.
சராசரியாக ஒரு கிலோ 12 முதல் 13 ரூபாய் வரை கிடைக்கிறது. இதன்படி 50 சென்ட் பயிரிடும் விவசாயி 1 லட்சத்து 50 ஆயிரம் முதல் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை பெறுகிறார்.
40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த தொகையை அறுவடை முடிந்த ஒருவாரத்தில் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தி விடுகின்றனர்.
சொட்டு நீர் பாசனம்
வீரிய வெள்ளரி பயிரிடுவதற்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது.
தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களிலும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன வசதிகளை வெள்ளரி காய்களை கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்கள் செய்து தருகின்றன.
சொட்டுநீர் பாசன வசதியை முறையாக பயன்படுத்தினால் 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.
இதற்கான தொகையை முதல் சாகுபடி தொகை வழங்கும் போது இந்நிறுவனத்தினர் பிடித்தம் செய்து விடுகின்றன.

ஆட்கள் தேவை
வீரிய வெள்ளரி பயிரிடுவதில் முதல் 30 நாட்கள் வரை விவசாயிகளின் குடும்பத்தினரே அனைத்து வேலைகளையும் செய்கின் றனர்.
காய் பறிக்க துவங்கிய பிறகு தினமும் 3 முதல் 6 ஆட்கள் வரை தேவைப்படுகிறது. இவர்களுக்கு அரை நாள் கூலியாக நூறு முதல் 120 ரூபாய் வரை வழங்குகின்றனர்.
வெளிநாட்டு வர்த்தகம்
வீரிய வெள்ளரிகளை கொண்டு பெங்களூரு நிறுவனங்கள் ஊறுகாய் தயாரிக்கின்றனர். இவை அமெரிக்க, ரஷ்யா நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
வெளிநாடுகளிள் இதை பயிர் செய்தாலும், சரியாக வளர்த்து தினமும் அறுவடை செய்ய ஆட்கள் இல்லை. எனவே ஒரே முறை மட்டும் சாகுபடி செய்து மொத்தமாக ஒரே நாளில் அறுவடையை முடித்து விடுகின்றனர்.இதனால் முதல் தரமான காய்கள் கிடைப்பதில்லை.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் ஊறுகாய்கள் முதல் தரமானது என்பதால் வெளிநாடுகளில் இந்திய ஊறுகாய்களுக்கு கிராக்கி உள்ளது.
தமிழகம் முதலிடம்
இந்த வகை வீரிய வெள் ளரிகளை உற்பத்தி செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இதில் செஞ்சி தாலுகா மேல்மாம்பட்டு கிராமத்தில் இருந்து ஆண்டுக்கு நான்காயிரம் டன் உற்பத்தி செய்கின்றனர். வறண்ட பகுதியான செஞ்சி பகுதியில் குறைந்த தண்ணீர் செலவில் நிறைந்த வருவாய் ஈட்டும் விவசாயிகள் சத்தமின்றி இந்தியாவிற்கு கணிசமான அன்னியச்செலானியை ஈட்டி தந்து வருகின்றனர்.

25 சென்ட் நிலத்தில் 60 நாளில் 8 டன் வெள்ளரி (Vellari) - Cucumber Cultivation

சுற்றிலும் வீடுகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த மதுரை வீரபாஞ்சான் பகுதியில் 25 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் அழகான பங்களா கட்டலாம் அல்லது குடோன் நடத்த வாடகைக்கு விடலாம். வேறென்ன செய்ய முடியும்? என கேட்கலாம்.


சிறிய அந்த இடத்தில் “பசுமை குடில்’ அமைத்து 60 நாட்களுக்கு ஒருமுறை 8 டன் வெள்ளரியை அள்ளுகிறார் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி லோகேஷ்,27, என்றால் நம்ப முடிகிறதா?
  • இஸ்ரேல் தொழில் நுட்ப உதவியுடன் வெள்ளரிக்காய் உற்பத்தி செய்கிறார். தோட்டக்கலைத்துறை 50 சதவீதம் மானியம் வழங்கியது. இஸ்ரேல் வெள்ளரி விதை ஒன்றின் விலை ரூ.7.
  • தனது 25 சென்ட் நிலத்தில் 1000 சதுர மீட்டர் அளவில் “பசுமை குடில்’ அமைத்தார். இதற்குள் 28 டிகிரி வெப்பம் நிலவ வேண்டும். தட்பவெப்ப நிலை வெப்பமானி மூலம் அறியப் படுகிறது. வெப்பம் கூடினால் தானியங்கி மூலம் தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்துகின்றனர்.
  • பசுமை குடிலில் 4,500 விதைப்பைகளில் தலா ஒரு விதை மூலம் வெள்ளரி செடி வளர்க்கப்படுகிறது. விதை பையில் மண்ணிற்கு பதில் தென்னை நார் மட்டுமே இருக்கும்.
  • பசுமை குடிலுக்குள் பூச்சிகள் நுழைய இயலாது.
  • சொட்டுநீர் பாசனம் மூலம் அனைத்து விதைப்பைகளுக்கும் சமச்சீராக தண்ணீர் பாய்ச்சப்படும்.
  • தேவைக்கு ஏற்ப “இயற்கை சத்து டானிக்’ தெளிக்கப்படுகிறது.
  • விதை விதைத்து 46வது நாளில் இருந்து தொடர்ந்து 60 நாட்களுக்கு பலன் கிடைக்கிறது.
  • நாள் ஒன்றுக்கு சராசரியாக 250 கிலோ வெள்ளரி கிடைக்கிறது.
  • ஏஜென்டுகள் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து அரபு நாடுகளுக்கு கிலோ ரூ.250 விலையில் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இன்ஜினியரிங் விவசாயி லோகேஷ் கூறியதாவது:
  • “ஏ.எஸ். பார்ம்’ என்ற பெயரில் “ஹைடெக் ஹார்ட்டிகல்சுரல்’ மூலம் வெள்ளரி உற்பத்தி செய்கிறேன். மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜெயசிங்ஞானதுரை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தேன்மொழி ஆகியோரின் வழிகாட்டுதல் தொடர்கிறது.
  • இரண்டரை ஏக்கர் நிலத்தில் விளையும் வெள்ளரியை வெறும் 25 சென்ட் நிலத்தில் விதைத்து லாபம் ஈட்டி வருகிறேன்.
  • பிஞ்சு இருக்காது; பழமும் வராது. வெள்ளரி ஒன்று தலா 110 கிராம் எடையில் இருக்கும். செடி ஒன்றுக்கு 60 நாட்களுக்கு 300 மில்லி தண்ணீர் மட்டும் போதும்.
  • காயின் தண்ணீர் சத்து குறித்து தினமும் ரசாயன முறையில் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப சத்துக்கள் செலுத்தப்படுகிறது. இதனால் சுவை, மணம், சத்து மாறாது. கடந்த முறை 7 டன் வெள்ளரி எடுத்தேன். இந்த முறை 8 டன் கிடைத்தது. பசுமை குடிலை இத்தாலி, இஸ்ரேல் விஞ்ஞானிகள் பார்வையிட்டுள்ளனர்.
  • அடுத்ததாக வெற்றிலை, இஞ்சி, மல்லியை உற்பத்தி செய்யவுள்ளேன். விதையை இங்கேயே உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார். 09362444441ல் தொடர்பு கொள்ளலாம்.
-கா.சுப்பிரமணியன், மதுரை.

ஹாலந்து வெள்ளரி (Holland Vellari) - Holland Cucumber

தாண்டிக்குடி மலைப்பகுதியில் வெளிநாட்டு ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹாலந்து வெள்ளரி பசுமைக்குடிலில் விளைவிக்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் நிலவும் சீதோஷ்ண நிலை கொய்மலர் உற்பத்திக்கு சிறப்பாக இருக்கிறது. இருந்தபோதிலும் ஆய்வுக்காக பசுமைக்குடிலில் ஹாலாந்து நாட்டு வகையான பீட்-ஆல்பா வகை வெள்ளரியை பயிரிட்டுள்ளனர்.
நடவு செய்த 30 நாளில் பூக்கள் பூக்கும். தொடர்ந்து 45 வது நாள் முதல் காய்கள் அறுவடைக்கு தயாராகி 120 நாட்கள் பலனளிக்கும்.
ஒரு கொடியில் சாரசரியாக 10 கிலோ, காய் கிடைக்கும்.
9286
 ஓராண்டில் 3 முறை மகசூல் செய்து ஒரு மகசூலுக்கு ரூ. 2 லட்சம் செய்து ரூ.3 லட்சம் லாபம் ஈட்டலாம். தரணி பார்ம் நிறுவனர் மனோகரன் கூறியதாவது:
  • இங்கிலீஷ் குக்கும்பர் என அழைக்கப்படும் வெளிநாட்டு ரகம் அதிக மகசூல் தரக்கூடியது.
  • கால் ஏக்கரில் “பாலி ஹவுசி’ல் பயிரிட்டால் அதிகபட்சமாக 25 டன் கிடைக்கும்.
  • விலையை பொறுத்தமட்டில் கிலோ ரூ.20 முதல் 40 வரை கிடைக்கும்.
  • தேங்காய் நார் அமைத்து “குரோ பேக்’ மூலம் விதைகள் நடவு செய்து சொட்டு நீர் பாசனம் மூலம் பராமரிப்பு செய்யப்படுகிறது.
  • தண்ணீர் சத்து நிறைந்தும், நீரில் எளிதில் கலக்கும் நார்சத்தும் அதிகமுள்ளது. இதனால் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் தவிர்க்கப்படுகிறது.
  • ஐரோப்பிய நாடுகளில் இவ்வகைக்கு கிராக்கி உள்ளது. மேலும் சாலட், அழகு சாதன பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுகிறது.
  • பறிக்கப்படும் காய்களை கேரளாவிற்கு சப்ளை செய்கிறோம், என்றார்.

மண் பரிசோதனை ஆய்வகங்கள் (Man Parisothanai Aaivagangal) - Soil Testing Laboratories



இடம் முகவரி



கடலூர்
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
கரும்பு அராய்ச்சி நிலைய வளாகம் 
சேமமண்டலம்,
கடலூர் – 607 001.

காஞ்சிபுரம்முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
பஞ்சுபேட்டை 
காஞ்சிபுரம் -631 502.

வேலூர்முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
குடியாத்தம் TK
மேலலத்து 638 806
வேலூர் மாவட்டம்.

தர்மபுரி
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
வட்டாச்சியர் அலுவலக வளாகம் 
தர்மபுரி – 638 702.

சேலம்
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
35/37, B 11 ராஜாராம் நகர் க்ராஸ் 
வனியகலா கல்யாண மண்டபம் அருகில் 
சேலம் – 636 007.

கோயமுத்தூர்
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
லாலி ரோடு,
அரசு தொழில்நுட்பக் கல்லூரி அஞ்சல் 
கோயமுத்தூர் – 642 013.

புதுக்கோட்டை
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
குடுமியான்மலை – 622104
புதுக்கோட்டை மாவட்டம்.

ஈரோடு
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
41/74 பூங்குன்றனார் வீதி 
கருங்கல்பாளையம் 
ஈரோடு – 638 003.

திருச்சி
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
காஜாமலை 
திருச்சி – 620 020.

மதுரை
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
52/வடக்கு சித்திரை வீதி 
மதுரை -625 001.

ஆடுதுறை
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
ஆடுதுறை – 612101
தஞ்சாவூர் மாவட்டம்.

தேனிமுதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
136/2, 2வது வீதி,
சடயல் நகர் 
பங்களா மேடு (தெற்கு)
தேனி – 625 531
தேனி மாவட்டம்.

திண்டுக்கல்
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
3, கூட்டுறவு காலனி 
திண்டுக்கல் – 624 001.

சிவகங்கை
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
வேளாண் துணை அலுவலர் அலுவலகம் 
(TNSTC கிளை – அருகில்)
தோடி ரோடு 
சிவகங்கை – 630 561.

பரமகுடி
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
பரமகுடி – 623 707
இராமநாதபுரம் மாவட்டம்.

திருநெல்வேலி
முதுநிலை வேளாண் அலுவலர் 
மண் பரிசோதனை ஆய்வகம் 
எண்.37, சங்கர் காலனி 
பாளையங்கோட்டை, 
திருநெல்வேலி -2.