Sunday, January 11, 2015

ஆட்டுக்குட்டி பராமரிப்பு


இன்றைய ஆட்டுக்குட்டியே வருங்கால உணவுத்தேவையைப் பூர்த்தி செய்யவும், வலிமையான சந்ததிகளை உருவாக்கும் தூண்களாகவும் இருக்கும். ஆகவே, இளம் குட்டிகளைக் கண்ணும் கருத்துமாகப் பண்ணையாளர்கள் பேணவேண்டும். சினை ஆடுகள் குட்டி போடும் நாள் நெருங்கும் பொழுது சுத்தமான தனிச் சூழ்நிலைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். அவை தங்கும் அறைகள் கிருமிநாசினி கொண்டு முதலிலேயே சுத்தம் செய்யப்பட்டு தனித்தனி அறைகளில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.


தொப்புள் கொடியை வெட்டுதல்:

குட்டி பிறந்தவுடன் வால் மற்றும் நாசி துவாரத்தில் காணப்படும் பிசுபிசுப்பான திரவத்தைச் சுத்தமான துணி கொண்டு துடைத்துவிட வேண்டும். சரியாக மூச்சுவிடாத குட்டிகளின் பின்கால்களை மேலே தூக்கி சுற்ற வேண்டும். குட்டிகள் பிறந்தவுடன் தொப்புள் கொடியை 2 செ.மீ. அளவு நீளம் விட்டு மெல்லிய நூலினால் கட்டியபிறகு அதற்குக் கீழே கத்தரிக்கோலால் கத்தரித்தபின் டிங்சர் அயோடின் மருந்துகொண்டு தடவ வேண்டும்.

சீம்பால்:

குட்டிகள் பிறந்து 30 நிமிடம் முதல் 45 நிமிடங்களுக்குள் எழுந்து தாயிடம் பால் குடிக்க முயற்சிக்கின்றன. அப்படி அவையாக எழுந்திருக்க முடியவில்லை என்றால் அவற்றுக்கு உதவ வேண்டும். சீம்பாலில் சாதாரண பாலைவிட ஏழுமடங்கு புரதச்சத்தும், இரண்டு பங்கு மொத்த திடப்பொருட்களும் உள்ளன. இதில் நோய் எதிர்ப்புசக்தி உள்ளது. இது குட்டிகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். பிறந்த ஒவ்வொரு குட்டியும் தனித்தனியாகக் கவனிக்கப்பட வேண்டும். குட்டிகளின் சிறுகுடல் சுவர்கள், நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்களை உட்கிரகிப்பதற்கு வசதியாக அமைந்திருக்கும். நேரம் செல்லச்செல்ல சிறுகுடலின் உட்கிரகிக்கும் திறன் குறைந்துவிடும். எனவே சீம்பாலைக் குட்டி பிறந்த உடனே 15 நிமிடங்களுக்குள் குட்டிகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டும்.

அடையாளக் குறியிடுதல்:

சிறந்த பராமரிப்புக்காகக் குட்டிகளுக்கு நிரந்தர அடையாளக் குறியிடவேண்டும். இதைக் காதில் உலோகக் (அலுமினியம்/பித்தளை) காதணிகளை அணி வித்துச் செயல்படுத்தலாம். கழுத்தில் அடையாளக் குறித்தகடுகளைச் சங்கிலிமூலம் தொங்கவிடலாம்.

எடை பார்த்தல்:

வளரும் பருவத்தில் குட்டிகளின் எடையைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். இது தீவன அளவைக் கட்டுப்படுத்திக் கொடுக்கவும் நோய் வருமுன் கண்டறியவும் உதவும்.

வெள்ளாட்டின் பொருளாதார குணாதிசயங்கள்:

பருவ வயது: 6-8 மாதங்கள்; இனப்பெருக்கத்திற்குத் தயாராகும் வயது: 9 மாதங்கள்; சினைக்குத் தயாராகும்பொழுது அடையும் எடை: 10-30 கிலோ; பருவ சுழற்சி: 19 நாட்கள்; சினைப்பருவக் காலம்: பருவச்சுழற்சி தொடங்கிய 24வது மணி நேரம்; சினைக்காலம்: 150 நாட்கள்; குட்டி ஈன்றபின் அடுத்த சினைப்பருவம்: 21 நாட்கள் கழித்து; இனப்பெருக்கக் காலம்: 6-10 ஆண்டுகள்; விற்பனை வயது: 6-9 மாதங்கள்; விற்பனை வயதில் எடை: 20-25 கிலோ.

No comments:

Post a Comment