Sunday, January 11, 2015

செம்மறி ஆடு வளர்ப்பில் நோய் தடுப்பு பராமரிப்பு



செம்மறி ஆட்டு இனங்கள் இறைச்சி உற்பத்திக்காகவும் கம்பளத்திற்காகவும் வளர்க்கப் படுகின்றன. இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆட்டு இனங்கள் உள்ளன. தமிழகத்தில் 8 வகையான செம்மறி ஆட்டு இனங்கள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை சிவப்பு, மேச்சேரி, ராமநாதபுரம் வெள்ளை, கடிக்கரைசல், வேம்பூர் போன்ற ரகங்கள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. கம்பள உற்பத்திக்காக கோயம்புத்தூர்குரும்பை, திருச்சி கருப்பு, நீலகிரி செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவை கம்பளத்திற்காக வளர்க்கப்பட்டாலும் இறைச்சியும் தருகின்றன.
ஆடுகளை மேய்க்கும்போது எல்லா ஆடுகளும் நன்கு மேய்கின்றதா என்று கண்காணிக்க வேண்டும். ஆரோக்கியமான ஆடுகள் மிகவும் ஆவலுடன் தீவனம் உட்கொள்ளும். மேய்ச்சல் தரையில் மேயாமல் நின்றால் அதை கவனிக்க வேண்டும். ஆடுகள் வயிறு நிரம்ப தின்றுவிட்டு மேயாமல் நிழலில் அசைபோட்டுக் கொண்டு நிற்கும். இத்தகைய ஆடுகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

செம்மறி ஆடு வளர்ப்பில் நோய் தடுப்பு பராமரிப்பு:

நச்சுயிரி நோய்களான ஆட்டம்மை, கால்வாய்க் கோமாரிகளைத் தடுப்பூசி போட்டு நோய் வராமல் காத்துவிடலாம். நுண்ணுயிர் நோய்களான துள்ளுமாரி அடைப்பான், சப்பை நோய், தொண்டை அடைப்பான் போன்ற நோய்களை அந்தந்த நோய்களுக்கான தடுப்பூசி போட்டு நோய்களிலிருந்து காத்துக்கொள்ளலாம்.
அக ஒட்டுண்ணி நோய்களுக்கு முறையான குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். ஆண்டிற்கு 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் குடற்புழு நீக்க மருந்துகளை மாற்றி கொடுக்க வேண்டும். புற ஒட்டுண்ணிகளை நீக்க மருந்து கலந்த நீரில் ஆடுகளை முக்கி எடுத்து நீக்கலாம். அல்லது மருந்து கலந்த நீரை ஆட்டின்மீது தெளித்து நீக்கலாம்.

ஊட்டச்சத்து குறைவு நோய்களை வைட்டமின் நிறைந்த தாது உப்பைக் கொடுத்து பராமரித்து கட்டுப்படுத்தலாம். செம்மறி ஆடுவளர்ப்பு பற்றி விபரங்களுக்கு சேலம் சந்தியூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை பராமரிப்பு உதவி பேராசிரியை அவர்களை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ (0427-242 2550) தொடர்பு கொள்ளலாம். (தகவல்: முனைவர் ப.சித்ரா, முனைவர் சே.மாணிக்கம், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர்-636 204. சேலம். 0427-242 2550)

No comments:

Post a Comment