Tuesday, January 13, 2015

ஒருங்கிணைந்த பண்ணையம் – பட்டுக்கோட்டை விவசாயி பற்றிய ஒரு கண்ணோட்டம்

ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து நண்பர்களிடமும் என் குடும்பத்தினரிடமும் சில முறை பேசியிருக்கிறேன். விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வமின்மையோ அல்லது என் மீது உள்ள அபரிமிதமான நம்பிக்கை(!)யோ யாரும் செவி மடுத்துக் கேட்பாரில்லை. ஏற்கனவே சிறிய அளவிளான ஒரு ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி தினமணி செய்தியை இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன் (மீன் குழி மற்றும் நெல்).
பசுமை விகடனின் இந்த பதிப்பில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நைனான் குளத்தைச் சேர்ந்த விவசாயி திரு வெங்கட்ராமன் செயல்படுத்தியிருக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று வந்துள்ளது.  பசு, எருமை, ஆடு மற்றும் கோழி முதலான கால்நடைகள், அவற்றிற்கான தீவனப் புல் வளர்ப்பு, குறுவை மற்றும் சம்பா நெல் அறுவடை, அத்துடன் மீன் குட்டை  அத்துடன் பண்ணையைச் சுற்றி ஆடாதொடை, நொச்சி என்று இயற்கை விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறார்.
திரும்ப கட்டுரையை மீள் பதிப்பு செய்ய இயலாது என்றாலும் அவர் கூறிய செயல்முறைகளையும் இயற்கை விவசாயம் வழியான பயன்களையும் சொல்ல விரும்புகிறேன்.
வெங்கட்ராமன் பண்ணையம்
பட்டுக்கோட்டை விவசாயி வெங்கட்ராமனின் ஒருங்கிணைந்த பண்ணையம்
நெல்
  • ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய 10 செண்டில் நாற்றங்கால் அமைத்து விதைகளைத் தூவவும்
  • 2 லி பஞ்சகவ்யத்துடன் 60 லிட்டர் தண்ணீரைக் கலந்து 7 மற்றும் 15ஆம் நாள் தெளிக்கவும்
  • விதைத்ததில் இருந்து 25ஆம் நாளுக்குள் நாற்றுகளைப் பறித்து வயலில் நடவும்
  • நடவில் இருந்து 30ஆம் நாள் – நாலரை லிட்டர் பஞ்ச கவ்யத்துடன் 180 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்
  • கழிவுநீர் குட்டை வழி பாசனம் செய்தால் வேறு எந்த ஒரு இயற்கை இடுபொருட்களும் தேவையில்லை. வாரம் ஒரு முறை பாய்ச்சவும்
  • சாதாரண நடவு முறையில் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி
  • மதிப்புக் கூட்டி அரிசியாக விற்பனை. தவிடு கால்நடைத் தீவனமாகிறது
பசு மற்றும் எருமை
  • ஆடு மாடுகளுக்கு தினமும் 5 மணிநேர மேய்ச்சல்
  • மேய்ச்சல் மூலம் போதுமான புல் கிடைக்காத நாட்களில் மட்டும் வைக்கோல் மற்றும் தீவனப்புல்
  • 30 சதம் அரிசித் தவிடு – 20 சதம் புண்ணாக்கு – 30 சதம் சோள குருணை – 10 சதம் பாசிப்பருப்பு உமி – 10 சதம் உளுந்து உமி அகியவற்றை ஒன்றாகக் கலந்து லேசாக ஈரம் இருக்கும் அளவுக்கு மட்டும் தண்ணீர் கலந்து புட்டு பக்குவத்தில் அடர் தீவனம் தயாரிக்கவேண்டும்
  • ஒரு மாட்டுக்கு காலை ஒண்ணே கால் கிலோ – மாலை ஒண்ணே கால் கிலோ
  • ஆடுகளுக்கு தனியே தீவனம் தேவையில்லை.
  • கோழிகளுக்கும் தேவையில்லை. குப்பை கூளங்கள் மற்றும் சிதறிய தீவனங்களும் இவைகளுக்குப் போதும்
  • பால் விற்பனையுடன் சாணத்தையும் சாணம் மற்றும் கழிவு நீர் கலந்து பஞ்ச கவ்யத்தையும் விற்றுவிடுகிறார். நெல்லுக்குக் கூட தொழுஉரம் போடுவதில்லை என்கிறார்.
  • சாணத்தின் ஒரு பகுதி இவருடைய பஞ்சகவ்ய தேவைக்கும் மீன் குட்டைக்கும் போய்விடுகிறது
  • மீன் குட்டைக்கும் வயலுக்கும் நீர் கழிவு நீர் குட்டையிலிருந்தே போகிறது.
  • கோழி குஞ்சுகள் மற்றும் கோழி விற்பனை, மீன் குளத்தின் மீன் விற்பனை என்று இவரது வருடாந்திர கல்லா லாபம் – என்னுடைய சம்பளத்தை விட அதிகம் :)
  • இயற்கை வழி வேளாண்மை என்பதால் நிறைய மண்புழுக்கள் தோன்றுகின்றன. வேர் பகுதி பூச்சிகளைத் தின்று அழிக்கின்றன.
  • கொக்குகள் வழி பயிரின் நடுப்பகுதி மேல்பகுதி பூச்சிகள் சம்ஹாரமடைகின்றன. அத்துடன் மாடுகளிடம் உள்ள ஒட்டுண்ணிகளைக் காலி செய்து விடுகின்றன.
  • பேன்கள், உன்னிகள், ஈக்கள் இல்லாமல் இருந்தாலே கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும்
விவசாயம் என்பது அனைவருக்கும் பார்முலா மாதிரி அமைவதில்லை. என்றாலும் இவருடைய இயற்கை வேளாண்மை மற்றும் சமயோஜிதம் அவருக்கு பயன்தந்திருக்கிறது.

No comments:

Post a Comment