Sunday, January 11, 2015

வெள்ளாட்டுக் கொட்டகை

நமது நாட்டின் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப உண்ணும் உணவில் புரதச்சத்தின் தேவையும் கூடிக் கொண்டே வருகிறது. இறைச்சி மற்றும் பால் உற்பத்தியை பெருக்குவதின் காரணமாக மக்களின் புரதத்தேவையை ஈடுசெய்ய முடியும். அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி உண்ணப்படும் வெள்ளாட்டு இறைச்சியினை கவனத்தில் கொண்டு பார்த்தால் வெள்ளாட்டினை எண்ணிக்கையில் பெருக்க இயலாது. ஆனால் ஒவ்வொரு வெள்ளாட்டிலிருந்து கிடைக்கக்கூடிய இறைச்சி மற்றும் பாலின் அளவைக் கூட்டி அதன் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகரிக்கச் செய்வதே நமது குறிக்கோளாகும். இதற்கு அறிவியல் பூர்வமான பராமரிப்பு உத்திகளைக் கையாள வேண்டும்.

இதில் முக்கியமான ஒன்று வெள்ளாடுகள் தங்குவதற்கு கொட்டகை அமைப்பது ஆகும். மேய்ச்சல் நிலங்களின் பரப்பளவு சுருங்கிவரும் நிலையில் கொட்டில் முறையில்தான் வெள்ளாடுகள் வளர்க்கும் நிலை நம்மை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. நல்ல முறையில் ஆட்டுக்கொட்டகை அமைத்தால் ஆடுகள் நலமாகவும் வளமாகவும் வளர்ந்து பெருகி நல்ல பலன் கொடுக்கும். இனி ஆட்டுக் கொட்டகையை அறிவியல் ரீதியாக எப்படி அமைப்பது என விரிவாக காண்போம்.



கொட்டகை அமைக்க இடம் தேர்வுசெய்தல்: கொட்டகையை மேடான இடத்தில் அமைக்க வேண்டும். மழைநீர் தேங்கிவிடாமல் வடிகால் உள்ள நிலமாக இருக்க வேண்டும். குடிநீர் வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும். மின்சார வசதி மற்றும் சாலை போக்குவரத்து இணைப்பு உள்ள இடமாக இருக்க வேண்டும். கொட்டகையை சுற்றி நிழல் தரும் மரங்கள் இருக்க வேண்டும். ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனப்பயிர் சாகுபடி செய்ய விளைநிலம் இருக்க வேண்டும்.


கொட்டகை அமைக்கும்போது கவனிக்க வேண்டியவை: கொட்டகையின் நீளவாக்கு கிழக்கு - மேற்கு திசையில் அமைய வேண்டும். இப்படி இருப்பதால் காலை - மாலை வேளையில் சூரியனின் இளங்கதிர் கொட்டகையினுள் விழும். உச்சி வெயிலின் வெப்பத்தாக்கம் இருக்காது.


பக்கவாட்டுச்சுவர்: கொட்டகையின் நான்கு பக்க சுவர்களும் ஒரு அடி உயரம் வரைதான் கல் கட்டுமானத்தில் இருக்க வேண்டும். இதற்கு மேல் கூரை கம்பி வலை அல்லது மூங்கில் தட்டிகளைக் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு பக்கவாட்டுச் சுவர் அமைப்பதினால் வெளிச்சமும் நல்ல காற்றோட்டமும் கொட்டகையின் உள்ளேஇருக்கும். மழை, குளிர் காலங்களில் குறிப்பாக இரவு நேரத்தில் பக்கவாட்டு திறந்தவெளியை பாலிதீன், கோணிப்பைகளை கொண்டு திரை அமைத்து மூடலாம்.


கூரை: சூரிய வெப்பத்தைக் குறைவாகக் கடத்தும் பொருட்களைக் கொண்டு கூரை வேயப்பட்டால் அதன் அடியில் உள்ள ஆடுகளுக்கு வெப்ப அழற்சி ஏற்படாது. மழைவரும் பொழுது ஆடுகள் மழையில் நனையாமலும் கூரைபாதுகாக்கும். சுட்ட களிமண் ஓடுகள், அலுமினியம் மற்றும் இரும்புத் தகடுகள், ஆஸ்பெஸ்டாஸ், லைட்ரூப், பனை மற்றும் தென்னை ஓலைபோன்றவை கொண்டு கூரை அமைக்கலாம். கூரையின் நடு உச்சி தரையிலிருந்து 3.50 மீட்டர் உயரமும் பக்கவாட்டில் 2.5 மீட்டர் உயரமும் இருக்க வேண்டும். கூரையின் விளிம்பு சுவரிலிருந்து 45-60செ.மீ. வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்.



தரை: நமது தட்பவெப்பச் சூழலுக்கு செம்மண், சரளை மண் அல்லது கிணற்று மண் இதில் ஏதாவது ஒன்றை தரை மட்டத்திலிருந்து 45 செ.மீ. உரத்திற்குப் பரப்பி திமிசுக்கட்டையால் நன்கு இடித்து கடினமாக இறுகச் செய்யலாம். இவ்வாறு தரை இருப்பதனால் ஆடுகளின் சிறுநீரை உறிஞ்சிக் கொள்ளும். ஆட்டுப் புளுக்கையினை கூட்டிப்பெருக்கவும் எளிதாக இருக்கும். தரையை வருடத்திற்கு இரண்டுமுறை 15 செ.மீ. ஆழத்திற்கு சுரண்டி எடுத்துவிட்டு புதிய மண் கொட்டி பரப்பித் தரையை அமைக்க வேண்டும். கிருமிகள் மற்றும் உண்ணிகளை கட்டுப்படுத்த இது உதவும். மழை நாட்களில் வாரத்திற்கு இரண்டு முறை சுண்ணாம்புத்தூளை தரையில் தெளிக்க வேண்டும். தரையின் ஈரப்பதத்தை சுண்ணாம்பு ஈர்த்து உலரச் செய்வதோடு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.


மரச்சட்ட மேடை வடிவ தரை: ஆட்டுக்குட்டிகளை மண் தரையில் விட்டு வளர்த்தால் மண் நக்குதல் பழகி ரத்தக்கழிச்சல் நோயால் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பனி மற்றும் மழைக் காலத்தில் இரவு வேளையில் மண் தரை குளிர்வாக இருப்பதால் ஆட்டுக் குட்டிகள் குளிர் தாங்காமல் சளி பிடித்து இறந்துவிட வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஆட்டுக்குட்டிகளை தரையில் விடாமல் மூன்று மாத வயதுவரை மரச் சட்டங்களினால் ஆன பரண்மீது விட்டு வளர்ப்பது நன்று. இம்மரச்சட்ட பரண் தரையிலிருந்து 3 அடி உயரத்தில் இருக்க வேண்டும். இரு சட்டங்களுக்கு இடையே 1.5 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். இந்த சந்தில் அடியில் உள்ள எருவினை சேகரித்துக்கொள்ளலாம்.



மரச்சட்டங்களின் அகலம் மற்றும் தடிமண் (கனம்) முறையே 2-4 இன்ச்கள் மற்றும் 1-2 இன்ச் இருத்தல் நலம். தைல மரச்சட்டங்கள் பரண் அமைக்க ஏதுவானவை. தற்பொழுது நவீன முறையில் கொட்டகை அமைக்க மரச்சட்டங்களுக்கு மாற்றாக பிளாஸ்டிக்கினால் ஆன சட்டங்களைக் கொண்டும் ஆட்டுக்கொட்டகையில் தரை அமைக்கலாம். இவை சுத்தம் செய்ய எளிதாகவும் அதிக நாள் உழைக்கும் திறனும் கொண்டது.



தீவனப்பெட்டிகள்: அடர்தீவனம், உலர்தீவனம் மற்றும் பசுந்தீவனங்களை ஆடுகளுக்கு அளிக்கக்கூடிய வகையிலும் ஆடுகள் தின்னும்போது சேதாரம் இல்லாமல் இருக்க வேண்டியும் தீவனப்பெட்டிகள் இருக்க வேண்டும். மரப்பலகை, துத்தநாகத் தகடு, குறுக்கு வெட்டாக பிளக்கப்பட்ட பிளாஸ்டிக் டிரம்களைக்கொண்டு தீவனப்பெட்டிகளை உருவாக்கலாம். தீவனத்தைத் தரையில் போடக்கூடாது. ஆடுகள் குளம்புகள், சாணம், மூத்திரம் பட்ட தீவனத்தைச் சாப்பிடாது. எனவே தீவனங்களைத் தீவனப்பெட்டியில் போடவேண்டும்.



மருந்துக்குளியல் தொட்டி: ஒட்டுண்ணிகளின் தாக்கத்திலிருந்து ஆடுகளைப் பாதுகாக்க குளியல் செய்வது அவசியம். 1.2x1x0.5 மீட்டர் கொள்ளளவு உள்ள குளியல் தொட்டியினை சிமென்ட் கான்கிரீட்டினால் கட்டவேண்டும். கழிவுநீர் வடிய தொட்டியின் அடிப்புறத்தில் துளை இருக்க வேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய பண்ணைகள்: நித்தின் பார்ம் - 98422 18412, அம்பாள் ஆட்டுப்பண்ணை-99763 40337.

No comments:

Post a Comment