Sunday, January 11, 2015

கோழிப்பண்ணையினை கட்டுதல்

கோழிப்பண்ணைக்கான தேவைகள்

  • பல்வேறு விதமான தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க
  • எளிதாகவும், பொருளாதார ரீதியாக குறைந்த செலவிலும் கோழிப்பண்ணையை நடத்த
  • அறிவியல் பூர்வமாகவும், கட்டுப்பாடான முறையிலும் கோழிகளுக்குத் தீவனமளிக்க
  • கோழிகளைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தில் முறையாகப் பேணுதல்
  • நோயினைக் கட்டுப்படுத்த
  • கோழிப்பண்ணையினை முறையாக மேலாண்மை செய்ய
கோழிப்பண்ணை அமைக்க இடத்தைத் தேர்வு செய்தல்
  • வசிப்பிடங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் கோழிப்பண்ணைகள் தொலைவில் இருக்கவேண்டும்.
  • கோழிப்பண்ணைக்கு நன்றாக சாலை வசதிகள் இருக்கவேண்டும்.
  • அடிப்படைத் தேவைகளான தண்ணீர், மின்சார வசதி போன்றவை இருக்கவேண்டும்.
  • குறைந்த கூலிக்கு பண்ணையாட்கள் கிடைக்கும் இடத்தில் பண்ணை அமைக்கவேண்டும்.
  • கோழிப்பண்ணை நல்ல மேடான இடத்தில் இருக்கவேண்டும். தண்ணீர் தேங்கும் இடத்தில் இருக்கக்கூடாது.
  • கோழிப்பண்ணை அமைக்கும் இடத்தில் நல்ல காற்றோட்டம் இருக்கவேண்டும்.

கோழிப்பண்ணையின் வடிவமைப்பு
                                         
ஒரே கொட்டகை மட்டுமே இருப்பதால் ஒரு சிறிய கோழிப்பண்ணைக்கென தனியான வடிவமைப்புகள் தேவைப்படாது. நடுத்தர மற்றும் பெரிய பண்ணைகளுக்கு பண்ணை வீடுகளை அமைப்பதில் சரியான வடிவமைப்பு தேவை. இதில் கடைபிடிக்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்களாவன.
  • பார்வையாளர்களையும், வெளியிலிருந்து வரும் வாகனங்களையும் கோழிகளுக்கு அருகில் அனுமதிக்காதவாறு பண்ணைகள் வடிவமைக்கப்படவேண்டும்.
  • தூய காற்று குஞ்சுக்கொட்டகையில் முதலில் நுழைந்து, பிறகு வளரும் கோழிக்கொட்டகையில் சென்று கடைசியாக முட்டைக்கோழி கொட்டகைக்குள் செல்லுமாறு கோழிப்பண்ணைக் கொட்டகைகள் வடிவமைக்கப்படவேண்டும். இதனால் முட்டைக்கோழிகளிடமிருந்து குஞ்சுக்கோழிகளுக்கு நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.
  • குஞ்சுக்கோழிக் கொட்டகைக்கும், வளரும் கோழிக்கொட்டகைக்கும் இடையில் குறைந்தது 50-100 அடி இடைவெளியும், வளரும் கோழிக் கொட்டகைக்கும் முட்டைக் கோழிக் கொட்டகைக்கும் இடையில் 100 மீட்டர் இடைவெளியும் இருக்கவேண்டும்.
  • முட்டை சேமிக்கும் அறை, அலுவலகம், தீவனம் சேமிக்கும் அறை போன்றவை பண்ணையில் நுழைவு வாயிலிலேயே அமைக்கப்படுவதால், கோழிப்பண்ணைகளைச் சுற்றி ஆட்கள் நடமாடுவதைத் தவிர்க்கலாம்.
  • இறந்த கோழிகளைப் புதைக்கும்குழி, மற்றும் நோய் பாதிக்கப்பட்ட கோழிகளைப் பராமரிக்கும் அறை போன்றவை பண்ணையின் ஒரு மூலையில் அமைக்கப்படவேண்டும்.

கோழிப்பண்ணையிலுள்ள பல்வேறு விதமான கோழிக்கொட்டகைகள்

  • குஞ்சுக் கொட்டகை-இக்கொட்டகை முட்டைக் கோழிக்குஞ்சுகளின் 0 முதல் 8 வார வயது வரை பராமரிக்க உபயோகிக்கப்படுகிறது.
  • வளரும் கோழிக் கொட்டகை-இக்கொட்டகை முட்டைக் கோழிகளின் 9-18 வார வயதில் பராமரிக்கப் பயன்படுகிறது.
  • குஞ்சுக் கோழி மற்றும் வளரும் கோழிக்கொட்டகை இக்கொட்டகையில் கோழிகளை 0-18 வார வயதில் வளர்க்கப் பயன்படுகிறன்றது.
  • முட்டைக்கோழிக் கொட்டகை-18 வார வயதிலிருந்து 72 வார வயது வரை முட்டைக் கோழிகளை வளர்க்க இக்கொட்டகை பயன்படுகிறது.
  • கறிக்கோழிக் கொட்டகை-இக்கொட்டகையில் கறிக்கோழிகளை 6 வார வயது வரை வளர்க்கப் பயன்படுகிறது.
  • இனப்பெருக்கக் கோழிக் கொட்டகை-இக்கொட்டகைகளில் பெட்டைக்கோழிகளும், சேவல்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வளர்க்கப் பயன்படுகிறது.
  • சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட கொட்டகை-இக்கொட்டகைகளில் கோழிகள் வளர்வதற்கேற்றவாறு கொட்டகையின் சுற்றுப்புற சூழ்நிலை கட்டுப்படுத்தப்படுகிறது.


கறிக்கோழிகளை வளர்ப்பதற்கேற்ற சுற்றுப்புற சூழ்நிலைகள் 
வெப்பநிலை             - 22-300C (70-850F)
ஈரப்பதம்        - 30-60 %
அமோனியா அளவு - 25 ppmஐ விடக் குறைவு
ஆழ்கூளத்தின் ஈரப்பதம் - 15-25%
உட்செல்லும் காற்றின் அளவு - 10-30 மீட்டர்/நிமிடம்

கோழிப்பண்ணைகளை அமைக்கும் திசை
கோழிப்பண்ணைகளின் நீளவாக்குப் பகுதி கிழக்கு மேற்காக இருக்குமாறு அமைப்பதால் கோழிகளின் மீது சூரிய ஒளி நேரடியாக விழுவதைத் தடுக்கலாம்.

அளவு
ஆழ்கூள முறையில் வளர்க்கும் போது ஒவ்வொரு கறிக்கோழிக்கும் ஒரு சதுர அடி இட வசதியும், ஒரு முட்டைக் கோழிக்கும் 2 சதுர அடி இட அளவு தேவைப்படும். எனவே ஒரு கொட்டகையில் வளர்க்கப்படும் கோழிகளின் எண்ணிக்கைக்கேற்றவாறு கொட்டகையின் அளவு வேறுபடும்.

நீளம் 
கோழிப்பண்ணைக் கொட்டகையின் நீளம் எவ்வளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கோழிக்கொட்டகையின் நீளம் வேறுபடும்.

அகலம்
வெப்ப மண்டலப் பகுதிகளில் இரண்டு பக்கமும் திறந்தவாறு அமைக்கப்படும் கோழிப்பண்ணைகளின் அகலம் 22-25 அடிக்கு மேல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேற்கூறிய அகலத்துடன் கொட்டகைகளை அமைத்தால் தான் கோழிக் கொட்டகைகளின் மத்தியப் பகுதியில் போதுமான அளவு காற்றோட்டம் இருக்கும். மேற்கூறிய அளவை விட அதிக அகலமுடைய கொட்டகைகள் அமைத்தால் அவற்றில் வெப்பம் அதிகமுள்ள நேரத்தில் காற்றோட்டம் இருக்காது. கோழிக் கொட்டகைகளின் அகலம் 25 அடிக்கு மேல் இருந்தால் கூரையின் நடுப்பகுதியில் காற்றோட்டம் இருக்குமாறு அமைக்கவேண்டும். வெப்பமான, உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய வாயுக்கள் கூரையிலுள்ள ஜன்னல்கள் வழியாக வெளியேறிவிடும். சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட கோழிப்பண்ணைகளின் அகலம் 40 அடி அதற்கு மேலும் அமைக்கப்படுகிறது. ஏனெனில் இக்கொட்டகைகளில் காற்றோட்டம் எக்ஸாஸ்டர் காற்றாடிகள் மூலம் அளிக்கப்படுகிறது.

உயரம்
கொட்டகையின் பக்கவாட்டுப் பகுதி, கொட்டகையின் அஸ்திவாரத்திலிருந்து கூரை வரை 6-7 அடியும், மத்தியப் பகுதியில் 10-12 அடியும் இருக்கவேண்டும். கூண்டு முறையில் அமைக்கப்படும் கோழிப்பண்ணைகளில், கூண்டுகளின் அமைப்புக்கேற்றவாறு கொட்டகையின் உயரம் அமைக்கப்படவேண்டும்.

அஸ்திவாரம்
        கோழிப்பண்ணைகளின் உள்ளே தண்ணீர் புகாதவாறு பாதுகாப்பதற்கு நல்ல தரமான அஸ்திவாரம் மிகவும் அவசியமாகும். கொட்டகையின் அஸ்திவாரத்தை காங்கிரீட் உதவியால் 1-1.5 அடி உயரத்திற்கு நிலத்திற்கு அடியிலும், நில மட்டத்திற்கு மேல் 1-1.5 அடி உயரமும் இருக்குமாறு அமைக்கவேண்டும்.

கொட்டகையின் தரை 
        கொட்டகையின் தரை காங்கிரீட்டால் அமைக்கப்பட்டு, எலிகள் புகாதவாறும், ஈரமற்றதாகவும் இருக்குமாறு அமைக்கப்படவேண்டும். கொட்டகையின் தரை அதன் சுவற்றிலிருந்து 1.5 அடி நீண்டிருக்குமாறும் அமைப்பதால் எலி மற்றும் பாம்புத் தொல்லையிலிருந்து கோழிகளைக் காப்பாற்றலாம்.
கதவுகள்
ஆழ்கூள முறையில் அமைக்கப்படும் கோழிப்பண்ணைகளில் கதவுகள் வெளியே திறக்குமாறு அமைக்கப்பட வேண்டும். கதவின் அளவு 6 x .5அடி அளவில் அமைக்கப்படவேண்டும். கோழிப்பண்ணைக் கொட்டகையின் கதவுக்கு வெளியில் ஒரு சிறிய பள்ளம் அமைத்து கிருமி நாசினிக் கரைசல் ஊற்றி வைக்கவேண்டும்.

கொட்டகையின் பக்கவாட்டுச் சுவர்கள் 
கொட்டகையின் பக்கவாட்டுச்சுவர் 1-1.5 அடி உயரமும், அதாவது கோழிகளின் முதுகுப்பகுதிக்கு இணையாக இருக்குமாறு அமைக்கப்படவேண்டும். இந்த பக்கவாட்டுச் சுவர் கோழிகளை வெயில், குளிர், மழையின்போதும் பாதுகாக்கிறது. இது மட்டுமன்றி பக்கவாட்டுச் சுவர் கோழிக்கொட்டகையில் போதுமான அளவு காற்றோட்டம் இருக்கவும் வழிவகை செய்கிறது. ஆனால் கூண்டு முறை அமைக்கப்படும் கொட்டகைகளில் பக்கவாட்டுச்சுவர் தேவையில்லை.

 கூரை
கோழிப்பண்ணைக் கொட்டகையின் கூரை ஓடு, தாவர நார்கள், ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள், காங்கிரீட் போன்றவற்றால் செலவிற்கேற்றவாறு அமைக்கலாம். பல்வேறு விதமான கூரைகளான கேபிள், பாதி மானிட்டர், முழு மானிட்டர், தட்டையான காங்கிரீட், கேம்ப்ரல், கோத்திக் போன்றவற்றை அமைக்கலாம். கேபிள் வடிவக் கூரை வெப்பமண்டலப் பகுதிகளான இந்தியா போன்ற நாட்களுக்கு ஏற்றது.

கூரையின் நீட்டியுள்ள பகுதி 
பண்ணைக் கொட்டகையின் சுவரை ஒட்டி நீட்டியிருக்கும் கூரைப் பகுதி 3.5 அடிக்கு குறையாமல் இருக்குமாறு அமைக்கவேண்டும். இவ்வாறு அமைப்பதால் மழை நீர் கொட்டகைக்குள் செல்வதையும் தடுக்கலாம்.

வெளிச்சம்
கோழிப்பண்ணைகளில் தரையிலிருந்து 7-8 அடி உயரத்தில் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இன்கேன்டசன்ட் விளக்குகளை உபயோகிக்கும்போது இரண்டு விளக்குகளுக்கும் இடையிலுள்ள இடைவெளி 10 அடியாக இருக்கவேண்டும். ஃபுளூரெசன்ட் விளக்குகளை அமைக்கும்போது அவற்றுக்கு இடையிலுள்ள இடைவெளி 15 அடியாக இருக்கவேண்டும்.

கோழிப்பண்ணைக் கொட்டகைகளை அமைக்கும் முறைகள்

கோழிகள் பல்வேறு முறைகளில் கொட்டகைகளை அமைத்து வளர்க்கலாம். ஆனால் பல்வேறு முறைகளில் கொட்டகைகள் அமைப்பதற்கு கீழ்க்கண்ட காரணிகளை அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.
  1. கிடைக்கும் நிலத்தின் அளவு
  2. நிலத்தின் விலை
  3. பண்ணை செயல்பாடுகளின் வகை
  4. தட்பவெப்பநிலை
  5. வேலையாட்கள் கிடைக்கும் நிலை
பொதுவாக கோழிகளுக்கு கொட்டகைகளை அமைப்பதற்கு கீழ்க்கண்ட மூன்று முறைகள் பின்பற்றப்படுகின்றன:
    1. திறந்த வெளி வீடமைப்பு
    2. பகுதியளவு தீவிர முறை வீடமைப்பு
    3. தீவிர முறை வளர்ப்பு
      1. ஆழ்கூள முறை
      2. சாய்வான தரை அமைப்பு
      3. சாய்வான தரையுடன் கூடிய ஆழ்கூள வீடமைப்பு
      4. கூண்டு முறை வளர்ப்பு
1) திறந்த வெளி வீடமைப்பு
இந்த வகை வீடமைப்பினைப் போதுமான அளவு இடவசதி இருந்தால் மட்டுமே அமைக்கமுடியும். மேலும் போதுமான எண்ணிக்கையிலான கோழிகளை அதிக அடர்த்தியின்றியும் வளர்ப்பதற்கு அதிக இடம் தேவைப்படும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 250 கோழிகளை வளர்க்கலாம். மேலும் இந்நிலத்தில் நிழல், பசுந்தீவனம், அடர் தீவனம் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இந்நிலத்திலுள்ள பசுந்தீவனம் கோழிகளுக்கு ஏற்ற தீவன ஆதாரமாக அமைகிறது. கோழிகளை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க ஒரு கொட்டகையினை தற்காலிகமான கூரைகளைக் கொண்டும், சாதாரண மரக்கம்புகளைக் கொண்டும் அமைக்கவேண்டும். நிலத்திலுள்ள வயல்களில் பயிர்களை அறுவடை செய்த பின்பு பயிறுக்கேற்றவாறு சுழற்சி முறையில் கோழிகளை வளர்க்க உபயோகப்படுத்தலாம். எல்லா விதமான கோழியினங்களையும் இந்த முறையில் வளர்க்கமுடியும். இம்முறை ஆர்கானிக் முட்டை உற்பத்திக்கு பொதுவாக உபயோகப்படுத்தப்படுகிறது.

இம்முறையில் கோழி வளர்ப்பதன் நன்மைகள்
  • குறைந்த முதலீடு
  • அமைக்கத் தேவைப்படும் செலவு குறைவு.
  • கோழிகள் புல்தரையிலிருந்தே போதுமான அளவு தீவனத்தை உட்கொண்டு விடுவதால் அவற்றுக்குத் தேவைப்படும் தீவனத்தின் அளவு குறைவு.
  • மண்ணின் வளமும் பாதுகாக்கப்படுகிறது.
தீமைகள்
  • அறிவியல் ரீதியான மேலாண்மை முறைகளைப் பின்பற்ற முடியாது.
  • கோழிகள் முட்டைகளை அடர்த்தியான புல்வெளிகளில் இட்டுவிடுவதலால் கோழிகளுக்காக தனியான கூடுகள் அமைக்காத வரையில் முட்டைகளை சேகரிப்பது கடினம்.
  • மற்ற விலங்குகள் கோழிகளைத் தாக்குவதால் ஏற்படும் இழப்பு அதிகம்.
  • முறையாக கவனிக்காவிடில் வனப்பறவைகள் மூலம் நோய்கள் பரவுவது எளிது.
2) பகுதியளவு தீவிர முறை வளர்ப்பு
மேலே கூறியது போல கோழிகள் பாதி நேரம் கொட்டகைகளிலும், பாதி நேரம் மேய்ச்சல் தரைகளிலும் வளர்க்கப்படுகின்றன. அதாவது இரவு நேரங்களும், தேவைக்கேற்பவும், கொட்டகைகளில் அடைத்து விட்டு மீதி நேரம் முழுவதும் திறந்த வெளிகளில் கோழிகள் மேய அனுமதிக்கப்படுகின்றன. கொட்டகைகளின் தரை கடினமான தரையாகவும், மேய்ச்சல் நிலங்கள் திறந்த வெளிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இம்முறையின் மூலம் வெற்றிகரமாக கோழி வளர்ப்பது திறந்த வெளிகளை நோய்க்கிருமிகளால் அசுத்தமடையாமல் பராமரிப்பதைப் பொறுத்தது. திறந்த வெளி நிலங்கள் சுழற்சி முறையில் உபயோகப்படுத்தலாம். ஒரு ஹெக்டேர் நிலத்தில் இம்முறையில் 750 கோழிகளை வளர்க்கலாம். இம்முறை பொதுவாக வாத்துகள் வளர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. கோழிகளுக்குத் தீவனமும், தண்ணீரும் கொட்டகைகளில் அளிக்கப்படுகிறது.
நன்மைகள்
  • திறந்த வெளி வீடமைப்புடன் ஒப்பிடும்போது இம்முறையில் நிலங்களை நன்றாக உபயோகப்படுத்தலாம்.
  • பல்வேறு விதமான சுற்றுப்புற சூழ்நிலைகளிலிருந்து கோழிகளைப் பாதுகாக்கலாம்.
  • அறிவியல் முறையில் கோழிகளை வளர்ப்பது ஒரளவுக்கு இம்முறையில் சாத்தியம்.
தீமைகள்
  • வேலி போடுவதற்கு அதிக செலவாகும்
  • குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கொட்டகையினை சுத்தம் செய்து ஆழ்கூளத்தை அகற்ற வேண்டும்.
3) தீவிர முறை வளர்ப்பு 
இம்முறையில் கோழிகள் கொட்டகைகளில் முழுவதும் அடைத்து வளர்க்கப்படுகின்றன. கொட்டகைகளில் தரையிலோ அல்லது கம்பி வலைகளின் மீதோ அல்லது கூண்டுகளிலோ கோழிகளை வளர்க்கலாம். இம்முறை ஒரு சிறந்த, வசதியான, செலவு குறைந்த, அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்கும் நவீன முறையாகும்.
நன்மைகள்
  • பண்ணை அமைக்க குறைந்த இடமே தேவைப்படும்
  • சந்தைக்கு அருகிலேயே பண்ணைகளை அமைக்கலாம்.
  • தினந்தோறும் பண்ணையை மேலாண்மை செய்வது எளிது.
  • கோழிகளின் நடமாட்டம் தீவிர முறை வளர்ப்பில் குறைவாக இருப்பதால் கோழிகளின் உற்பத்தித் திறனும் அதிகரித்து, அதிக அளவு சக்தியும் சேமிக்கப்படுகிறது.
  • அறிவியல் முறையில் கோழிகளை வளர்க்கலாம். அதாவது இனப்பெருக்கம், தீவனமளித்தல், மருந்துகளை அளித்தல், கோழிகளைப் பண்ணையிலிருந்து நீக்குதல் போன்ற மேலாண்மை முறைகளை சுலபமாகவும், துல்லியமாகவும் செய்யலாம்.
  • நோயுற்ற கோழிகளை எளிதில் கண்டறிந்து தனியாகப் பிரித்து சிகிச்சை அளிக்கலாம்.
தீமைகள்
  • கோழிகளின் இயற்கையான குணநலன்களான இறக்கைகளை விரித்தல், தரையை கால்களால் பிரண்டுதல் போன்றவை பாதிக்கப்படுகிறது.
  • வெளிப்புற சூரிய ஒளி, தீவன ஆதாரங்கள் போன்றவை கோழிகளுக்குக் கிடைக்காததால் அவற்றுக்கு சரிவிகித தீவனத்தை அளிப்பதால் மட்டுமே அவற்றுக்கு சத்துப் பற்றாக்குறை நோய்களைத் தடுக்கலாம்.
  • நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம்.

ஆழ்கூள முறை வளர்ப்பு


இம்முறையில் கோழிகள் எப்போதும் கொட்டகையிலேயே வைத்து பராமரிக்கப்படுகின்றன. தீவனம், தண்ணீர் மற்றும் கூடுகள் போன்றவை கொட்டகையிலேயே அளிக்கப்படுகின்றன. கொட்டகையின் தரையில் கோழிகளுக்குத் தேவையான ஆழ்கூளத்தை 3 முதல் 5 இஞ்ச் உயரத்திற்கு இடவேண்டும். பொதுவாக நெல் உமி, மரத்தூள், கடலைப்பொட்டு, நறுக்கப்பட்ட வைக்கோல், போன்றவை ஆழ்கூளப்பொருட்களாகப் பயன்படுகிறது. இதனால் பண்ணையில் வேலையாட்கள் கோழிகளின் எச்சத்தை சுத்தம் செய்யும் நேரம் குறைவு. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஆழ்கூளப்பொருட்களை இரண்டு இஞ்ச் உயரத்திற்கு போடவேண்டும்.
 
நன்மைகள்
  • வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி 12 போன்றவை ஆழ்கூளத்தில் பாக்டீரியாக்களின் செயல்பாடு காரணமாக இயற்கையாக கோழிகளுக்கு கிடைக்கிறது.
  • கோழிகளின் நலன் ஓரளவு பாதுகாக்கப்படுகிறது.
  • கோழிக்கொட்டகையில் பயன்படுத்தப்பட்ட ஆழ்கூளம் ஒரு சிறந்த உரமாகப் பயன்படுகிறது.
  • கூண்டு வளர்ப்பு முறையினை விட இம்முறையில் ஈக்களின் மூலம் ஏற்படும் தொல்லை குறைவு.
தீமைகள்
  • கோழிகளுக்கும் ஆழ்கூளத்திற்கும் நேரடியாகத் தொடர்பு இருப்பதால் கோழிகளுக்கு பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களின் தாக்குதல் அதிகம்.
  • ஆழ்கூளத்திலிருந்து தூசுகள் வருவதால் கோழிகளுக்கு சுவாச மண்டலம் சார்ந்த கோளாறுகள் ஏற்படும்.
  • ஆழ்கூளத்திற்காக செய்யப்படும் செலவு ஒரு அதிகப்படியான செலவினமாகும்.
  • காற்றோட்டம் குறைவாக இருந்தால் கோழிகளுக்கு கூண்டு முறையில் ஏற்படும் பாதிப்புகளை விட ஆழ்கூள முறையில் ஏற்படும் பாதிப்பு மிகவும் அதிகம்.
சேர்ந்த ஆழ்கூளம்
கோழிகளின் எச்சமும், ஆழ்கூளமும் சேர்ந்து மக்கி உரமாக மாறுகிறது. இதன் அளவு கோழிக்கொட்டகையில் 8-12 இஞ்ச் உயரத்தை அதன் உண்மையான அளவான 3-5 இஞ்சிலிருந்து அதிகரிக்கும். ஆழ்கூளத்தின் மீது பாக்டீரியாக்களின் செயல்பாடு காரணமாக அவை மக்கி, வெப்பம் உற்பத்தியாகி ஆழ்கூளத்தை வெதுவெதுப்பாகவும், உலர்வாகவும் வைக்கிறது. கோழிகளின் எச்சம் கொட்டகையில் இடப்பட்ட ஆழ்கூளத்தின் அளவை விட அதிகரிக்கும்போது புதிதாக ஆழ்கூளத்தை சேர்ப்பதால் அதிலுள்ள எச்சத்தின் அளவைக் குறைக்க முடியும். கோழிக்கொட்டகையிலுள்ள ஆழ்கூளத்தை அடிக்கடி கிளறி விடுவதால் பாக்டீரியாக்களின் செயல்பாடு அதிகரித்து, ஆழ்கூளம் நன்றாக மக்கும். ஒரு வருடம் கழித்து ஆழ்கூளத்தை மாற்றி, மக்கிய ஆழ்கூளத்தை நல்ல உரமாக உபயோகிக்கலாம். நன்றாக உருவான ஆழ்கூளம் மற்றும் கோழி எச்சம் கலந்த உலர்வாகவும்,உடையக்கூடியதாகவும், விரும்பத்தகாத வாசனைகள் அற்றதாவும் இருக்கும்.

சாய்வான தரை


இந்த வகை தரை அமைப்பில் இரும்பு உருளைகள், அல்லது மர ரீப்பர்கள் தரையினை அமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தரையிலிருந்து 2-3 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு, அவற்றுக்கிடையிலுள்ள ஓட்டைகளின் வழியாக கோழிகளின் எச்சம் கீழே விழுந்துவிடும். மர ரீப்பர்களும், இரும்பு உருளைகளும் 2 இஞ்ச் அளவு விட்டம் உடையதாக ஒவ்வொரு உருளைகளுக்கும் இடையில் ஒரு இஞ்ச் இடைவெளியும் இருக்கவேண்டும். 
நன்மைகள்
  • கடினமான தரை அமைப்பினை விட இதற்கு குறைவான இட வசதியே தேவைப்படும்.
  • கோழிகளுக்கு ஆழ்கூளமாகப் பயன்படுத்தப்படும் படுக்கைப் பொருட்கள் குறைந்த அளவே தேவைப்படும்.
  • கோழிகளின் எச்சத்தை கையால் எடுத்துக் கையாள்வது தடுக்கப்படுகிறது.
  • சுகாதாரமானது
  • வேலையாட்களின் அளவைக் குறைக்கிறது.
  • மண் மூலம் ஏற்படும் நோய்களின் தாக்கம் குறைவு
தீமைகள்
  • எப்போதும் அமைக்கப்படும் கடினமான தரை அமைப்புகளை விட அதிக முதலீடு தேவை.
  • ஒரு முறை வடிவமைத்த பிறகு மீண்டும் மாற்றி அமைக்கும் வாய்ப்பு குறைவு
  • சிந்தப்பட்ட தீவனம், உருளைகளுக்கு இடையிலுள்ள ஓட்டைகள் வழியாக கீழே விழுந்துவிடும்.
  • ஈக்களின் தொல்லை அதிகம்.

சாய்வான மற்றும் ஆழ்கூளத் தரை அமைப்பு


இம்முறையில் அடை வைக்க முட்டைகளை உற்பத்தி செய்யப் பயன்படும் கோழிகள், குறிப்பாக இறைச்சிக்கோழிகளை உற்பத்தி செய்யப் பயன்படும் இனப்பெருக்கக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கொட்டகை அமைப்பில் தரையின் ஒரு பகுதி சாய்வாக அமைக்கப்படுகிறது. பொதுவாக 60% தரை சாய்வாகவும், மீதம் உள்ள தரையில் ஆழ்கூளம் இடப்படுகிறது. தீவனத்தொட்டிகள் மற்றும் தண்ணீர்த் தொட்டிகள் சாய்வான தரை உள்ள பகுதிகளிலும், ஆழ்கூளம் உள்ள பகுதிகளிலும் அமைக்கப்படுகிறது. இனப்பெருக்கத்திற்கு பயன்படும் கோழிகளை வளர்க்கும்போது அவைகள் முட்டையிட பெட்டிகளும் வைக்கப்படுகின்றன.
நன்மைகள்
  • கடினமான தரை அமைப்பில் உற்பத்தி செய்வதை விட இந்த ஒரு குறிப்பிட்ட தரை அளவில் அதிகப்படியான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது.
  • சாய்வான தரை மட்டும் இருக்கும் கொட்டகைகளில் இருந்து கிடைக்கும் முட்டைகளை விட இந்த தரை அமைப்பில் வளர்க்கப்படும் கோழிகளிலிருந்து கிடைக்கும் முட்டைகளின் குஞ்சு பொரிப்புத் திறன் அதிகம்.
தீமைகள்
  • இந்த முறை தரை அமைப்பை அமைக்க மற்ற தரை அமைப்புகளை அமைப்பதை விட அதிகப்படியாக செலவாகும்.
  • ஈக்களின் தாக்குதலால் ஏற்படும் தொல்லைகள் மிகவும் அதிகம்.

கூண்டு முறை வளர்ப்பு


இந்த முறையில் கோழிகள் கம்பிகளால் அமைக்கப்பட்ட சிறிய கூண்டுகளில் வளர்க்கப்படுகின்றன. இந்த கூண்டுகள் கொட்டகையின் தரையிலிருந்து கம்பிகள் போன்ற தாங்கிகள் அமைக்கப்பட்டு அவற்றின் மீதோ அல்லது கூரையிலிருந்து நேரடியாக தொங்குமாறோ அமைக்கப்படுகின்றன. இந்த முறை கோழிகளை குஞ்சுப்பருவத்திலிருந்து அவற்றை பண்ணையிலிருந்து நீக்கும் வரை வளர்க்க ஒரு சிறந்த முறையாகும். உலகிலுள்ள வணிக ரீதியாக வளர்க்கப்படும் 75% முட்டைக்கோழிகள் இம்முறை மூலமே வளர்க்கப்படுகின்றன. தீவன மற்றும் தண்ணீர் உள்ள தொட்டிகள் போன்ற அமைப்புகள் கூண்டுகளின் வெளிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் நிப்பிள் எனப்படும் தண்ணீர் அளிக்கும் உபகரணம் மட்டும் கோழிகள் அவற்றிலிருந்து நேரடியாகத் தண்ணீர் குடிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. தானியங்கி தீவனத்தொட்டிகளும், முட்டை சேகரிக்கும் உபகரணங்களும் கூட கூண்டுகளுடன் இணைக்கப்பட்டு சில நேரங்களில் அமைக்கப்படுகின்றன.
 
நன்மைகள்
  • கோழிகளுக்கு குறைவான இடவசதியே தேவைப்படும்.
  • ஒரு கோழியிலிருந்து அதிகப்படியான முட்டைகள் பெறலாம்.
  • குறைந்த தீவன சேதாரம்
  • தீவன மாற்றுத்திறன் சிறப்பாக இருத்தல்
  • அக ஒட்டுண்ணிகள் மற்றும் மண் மூலம் பரவும் நோய்களிலிருந்து பாதுகாப்பு
  • சுத்தமான முட்டை உற்பத்தி
  • முட்டைகளைக் குடித்தல், கோழிகள் ஒன்றுடன் ஒன்று கொத்திக்கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் குறைவு
  • நோயுற்ற மற்றும் உற்பத்தி செய்யாத கோழிகளை கண்டறிந்து உடனே பண்ணையிலிருந்து நீக்கிவிடுவது எளிது.
  • கோழிகளின் அடைகாக்கும் குணநலன் குறைதல்
  • ஆழ்கூளம் தேவைப்படாமை
  • செயற்கை முறை கருவூட்டல் செய்வதும் சுலபம் அல்லது செயற்கை முறை கருவூட்டலைப் பின்பற்றலாம்.
தீமைகள்
  • அதிக முதலீடு தேவை
  • கோழிகளின் எச்சத்தை கையாளுவது சிரமம். பொதுவாக இம்முறை வீடமைப்பில் ஈக்களின் தொல்லை அதிகம்.
  • முட்டைகளிலில் இரத்தத் திட்டுகள் காணப்படுவது அதிகம்.
  • முட்டைக்கோழிகளை நீண்ட நேரம் கூண்டுகளில் வைத்திருப்பதால் அவற்றின் கால்களில் வலி ஏற்பட்டு நொண்டும். கோழிகளுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் குறைபாடால் இந்நிலை ஏற்படுகிறது என்று கருதப்பட்டாலும் இதற்கு பல காரணங்கள் உள்ளன. கூண்டு முறை வளர்ப்பில் கோழிகள் இந்த பாதிப்பிற்கு அதிகம் உள்ளாகின்றன.
  • கறிக்கோழிகள் கூண்டுகளில் வளர்க்கப்படும் போது அவற்றின் நெஞ்சுப்பகுதியில் கட்டிகள் ஏற்படும். குறிப்பாக கறிக்கோழிகளின் உடல் எடை 1.5 கிலோவிற்கு மேல் அதிகரிக்கும் போது இந்நிலை ஏற்படுகிறது.
கூண்டுகளின் வகைகள்
கூண்டுகளில் அடைக்கப்படும் கோழிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூண்டுகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
  • ஒரு கோழி மட்டும் வளர்க்கப்படும் கூண்டு
  • நிறைய கோழிகள் வளர்க்கப்படும் கூண்டு (2-10 கோழிகள் வரை, பொதுவாக ஒரு கூண்டில் 3-4 கோழிகளை வளர்க்கலாம்).
  • காலனி கூண்டுகள் (ஒரு கூண்டில் 11க்கும் மேற்பட்ட கோழிகள்).
வரிசைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கீழ்க்காணுமாறு கூண்டுகளை வகைப்படுத்தலாம்.
  • ஒரு அடுக்கு
  • இரு அடுக்கு
  • மூன்று அடுக்கு
  • நான்கு அடுக்கு
  • தட்டை அடுக்கு
கூண்டுகளின் வரிசை அமைப்புக்கேற்ப
1) படி போன்ற கூண்டு அமைப்பு
 
a) எம் வடிவ கூண்டுகள்
b) எல் வடிவக் கூண்டுகள்
2) பேட்டரி கூண்டுகள்
                         
வளர்க்கப்படும் கோழிகளின் வகையினைப் பொறுத்து
  1. குஞ்சுக்கோழிகளுக்கான கூண்டுகள்
  2. வளரும் கோழிகளுக்கான கூண்டுகள்
  3. இனப்பெருக்கத்திற்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கான கூண்டுகள்
  4. கறிக்கோழிகளுக்கான கூண்டுகள்

1) கோழிக்குஞ்சுகளுக்கான கூண்டுகள்
முன்னால் உள்ள தீவனமளிக்கும் பகுதி நீளம்    : 60 inch
முன் மற்றும் பின் உயரம் 12 இஞ்ச்
ஆழம் – 36 இஞ்ச்
கோழிக்குஞ்சுகளுக்கான கூண்டுகள் ஒரே வரிசையில் தட்டையாக ஒற்றை அடுக்கு அல்லது இரண்டு அடுக்குகளாக அமைக்கப்படவேண்டும். தீவனமளிக்கும் மற்றும் தண்ணீர் அளிக்கும் பகுதிகள் கூண்டுகளுக்கு வெளியே அமைக்கப்பட வேண்டும். தற்போது ஒரு நாள் வயதடைந்த குஞ்சுகளுக்குக் கூட நிப்பிள் முறை மூலம் தண்ணீர் அளிப்பது பின்பற்றப்படுகிறது. கூண்டுகளின் தரையில் முதல் 1-10 நாட்களுக்கு பழைய செய்தித்தாள்களை பரப்பி வைக்க வேண்டும். முதல் வார வயதில் மட்டும் கோழிக்குஞ்சுகளுக்கு தீவனத்தை கூண்டுகளின் உள்ளேயே அளிக்கவேண்டும்.

2) வளரும் பருவம்
முன்னால் உள்ள தீவனமளிக்கும் பகுதியின் நீளம் – 30இஞ்ச்கள்
Front & Back height     : 15 inch
ஆழம் – 18 இஞ்ச்
ஒரு கூண்டில் வளர்க்கப்படவேண்டிய 8-10 வார வயதிலான கோழிகளின் எண்ணிக்கை – 10

3) முட்டையிடும் கோழிகளுக்கான கூண்டுகள்
இரண்டு விதமான முட்டையிடும் கோழிகளுக்கான கூண்டுகள் திறந்த வெளி கோழிப்பண்ணைகளில் அமைக்கப்படுகின்றன.
  1. எப்பொழுதும் அமைக்கக்கூடிய கூண்டுகள்
  2. ரிவர்ஸ் கூண்டுகள்
a).எப்போதும் அமைக்கக்கூடிய கூண்டுகள்
                        
முன்புறமுள்ள தீவனமளிக்கும் பகுதியின் நீளம் – 15 இஞ்ச்
முன்புற உயரம் – 18 இஞ்ச்
பின்புற உயரம் – 15 இஞ்ச்
ஆழம் – 18 இஞ்ச்

b).ரிவர்ஸ் கூண்டுகள் 
முன்புறமுள்ள தீவனமளிக்கும் பகுதியின் நீளம் – 18 இஞ்ச்
முன்புற உயரம் – 18 இஞ்ச்
பின்புற உயரம் – 15 இஞ்ச்
ஆழம் – 15 இஞ்ச்
இந்தக் கூண்டுகளில் 3 முதல் நான்கு கோழிகளை வளர்க்கலாம். இக்கூண்டுகள் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக வளர்க்கலாம். இவ்வாறு அடுக்குகளாக அமைக்கும்போது அவை 1/6 இஞ்ச் சரிவாக எப்போது அமைக்கப்படும் கூண்டுகளிலும், ரிவர்ஸ் கூண்டுகளில் 1/5 சரிவாகவும் இருக்குமாறு அமைக்கப்படவேண்டும்.

எப்போதும் அமைக்கப்படும் கூண்டுகளை விட ரிவர்ஸ் கூண்டுகளின் நன்மைகள்:
  1. ரிவர்ஸ் கூண்டுகளில் அதிகமான தீவனமளிக்கும் இடம் கிடைக்கும். எனவே கூண்டிலுள்ள அனைத்து நான்கு கோழிகளும் ஒரே சமயத்தில் தீவனம் எடுக்கமுடியும். ஆனால் எப்போதும் அமைக்கப்படும் கூண்டுகளில் ஒரே சமயத்தில் 3 கோழிகள் மட்டுமே தீவனம் எடுக்க முடியும். மற்றொரு கோழி பின்னால் காத்திருக்க நேரிடும்.
  2. முட்டைகள் உடையும் அளவு குறைவு
  3. ரிவர்ஸ் வகை கூண்டுகளில், எப்போதும் அமைக்கப்படும் கூண்டுகளை விட காற்றோட்டம் அதிகமாக இருக்கும்.
உயரத்தில் அமைக்கப்படும் கூண்டு முறை கொட்டகைகள் 
கொட்டகையின் உயரம் காங்கிரீட் தூண்களால் 6-7 அடி வரை உயர்த்தப்படுகிறது. இரண்டு காங்கிரீட் தூண்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி 10 அடிகளாகும்.மூன்று எம் வடிவத்தில் கூண்டுகள் அமைக்கப்பட்டால் நான்கு பிளாட்பார்ம்கள் தேவை. இரண்டு எம் , மற்றும் இரண்டு எல் வடிவ கூண்டுகள் அமைக்க வேண்டுமெனில் மூன்று பிளாட்பார்ம்கள் தேவை. பிளாட்பார்ம்களை கட்டும்போது இரும்பு உருளைகள் அல்லது ராட்கள் மூலம் கூண்டுகள் பொருத்தப்படும். இரண்டு பிளாட்பார்ம்களுக்கு நடுவில் உபயோகப்படுத்தப்படும் கூண்டுகளைப் பொருத்து 6-7 அடி வரை இடைவெளி இருக்கும். கொட்டகையின் மொத்த உயரம் 20-25 அடியாகவும், அகலம் 30-33 அடியாகவும் இருக்கும். வெப்பமண்டல நாடுகளில் இந்த வகைக் கொட்டகைகளை அமைப்பதால் போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்கிறது.
 
பல்வேறு விதமான கோழிகளுக்குத் தேவைப்படும் இட அளவு

கோழிகளின் வகை

வயது (வாரங்களில்)
ஆழ்கூளம் (சதுர அடிகளில்)
கூண்டுகள் (சதுர அடிகளில்)
முட்டைக்கோழிகள்
0-8
0.60
0.20
9-18
1.25
0.30
>18
1.50
0.50
இறைச்சிக் கோழிகள்
0-4
0.30
-
4-8
0.75
-

No comments:

Post a Comment