Saturday, May 3, 2014

வேலி மசால்

சவுண்டல் (அ) வேலிமசால்
சவுண்டல் (அ) வேலிமசால்

ஈரோடு – கரூர் சாலையில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக கால்நடை தீவனமான “வேலிமசால்’ பயிரிடப்பட்டுள்ளது. கால்நடை தீவனமாக புல்வகையை சேர்ந்த வேலிமசால் பயன்படுகிறது. இதற்கு டிவிடிவி, கூவாப்புல், வேலிபுல் என பல பெயர் உள்ளது. ஒரு ஏக்கர் தென்னை மரத்துக்கு இரண்டு கிலோ விதை தேவைப்படுகிறது. விதையை கொதிநீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து, ஒரு இரவு முழுவதும் குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும்.காலையில் அந்த விதையை தென்னை தோப்பு வைத்திருக்கும் விவசாயிகள் ஊடுபயிராக பயிரிடலாம்.
விதை விதைத்த நான்காவது நாளில் செடி துளிர்த்துவிடும். தென்னைக்கு காட்டும் தண்ணீரே காட்டினால் போதுமானது. விரைந்து வளரக்கூடிய இந்த புல் செடியை வெட்டி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.கால்நடைகளுக்கான தீவனம் குறைந்து வரும் இவ்வேளையில் இதுபோன்ற செடிகள் நல்ல லாபத்தை விவசாயிகளுக்கு ஈட்டித்தருகிறது. ஐந்தாண்டு வரை இந்த செடியிலிருந்து இலைகளை அறுக்கலாம். ஈரோடு – கரூர் செல்லும் வழியில் சாவடிப்பாளையம் புதூர் அருகே கேட்புதூர் பகுதியில் வேலிமசால் செடி அதிகளவு தென்னைகளுக்கு இடையே ஊடுபயிராக பயிரடப்பட்டுள்ளது. பார்க்க அழகாகவும், வருமானம் தரக்கூடியதாகவும் உள்ளது. செடியில் பச்சியம் சத்து அதிகளவு உள்ளதால், கால்நடைகளுக்கு மட்டுமல்ல தென்னை மரத்துக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். செடியின் ஒரு கிலோ விதை 650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன்மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். தென்னை, பாக்கு, வாழைகளுக்கு இடையே இதை ஊடுபயிராக பயிரிடலாம்.

பருவம் : இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் ஜூன், அக்டோபர் மாதங்களில் விதைக்கலாம்.

உழவு : இரும்பு கலப்பை கொண்டு 2 அல்லது 3 முறை உழவேண்டும். தொழு உரம் அல்லது கம்போஸ் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.
பார்கள் அமைத்தல் : 50 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.
உரமிடுதல் : மண் பரிசோதனையின்படி உரமிடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். விதைப்புக்கு முன் அடியுரமாக முழுஅளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இடவும்.
விதையளவு : எக்டருக்கு 20 கிலோ விதை என்ற அளவில் பார்களின் இருபுறமும் தொடர்ச்சியாக விதைக்கவும். 3 பாக்கெட்டுகள் [600 கிராம் ரைசோபியம் உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.
நீர் மேலாண்மை : விதைத்தவுடன் பாசனம் செய்ய வேண்டும் மற்றும் மூன்றாவது நாளில் உயிர்ப்பு நீர்ப்பாசனம் செய்யவேண்டும். பின்பு வாரம் ஒரு முறை பாசனம் அளிப்பது சிறந்தத்து.
களை நிர்வாகம் : தேவைப்படும் போது களை எடுக்கவும். அறுவடை விதைத்த 90 நாட்களுக்குப் பிறகு 50 செ.மீ. உயரத்தில் முதல் அறுவடை செய்யவேண்டும். அடுத்தடுத்த அறுவடைகள் 40 நாட்கள் இடைவெளியில் செய்யவேண்டும்.
எக்டருக்கு 125 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும்.
கலப்புப் பயிர் விதைத்த 60 நாட்களுக்குப் பிறகு முதல் அறுவடையும், அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியிலும் செய்யவேண்டும்.
குறிப்பு :
  • விதைகள் நன்றாக விதை நேர்த்தி செய்யவேண்டும். கொதித்த நீரை 3-4 நிமிடங்கள் கீழே வைத்து, பின் அதில் வேலிமசால் விதைகளைப் போடவேண்டும். 4 நிமிடங்கள் கழித்து நீரை வடித்துவிட்டு விதையை நிழலில் உலர வைத்து விதைத்தால் சுமார் 80 சதவீதம் முளைப்புத்திறன் கிடைக்கும்
  • வேலிமசால் விதைகளை கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லுடன் 1:3 என்ற விகிதத்தில் ஊடுபயிர் செய்யலாம்
தகவல் : இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் உழவியல் துறை, அடிப்படை அறிவியல் புலம், சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை- 600 007, தொலைபேசி: 044-25304000.

2 comments:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238

    ReplyDelete
  2. சவுண்டல், வேலிமசால் இரண்டும் ஒன்ற?

    ReplyDelete