Wednesday, January 6, 2016

பண்ணைக் குட்டையின் அற்புத பலன்கள்

மழை இல்லாத கோடையிலும் விவசாயம்.

வறட்சி
எதிர்பாராத வறட்சி விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. வறட்சி வரும் என்பதை கணித்து அதில் இருந்து பயிர்களை தற்காத்துக் கொள்ள நமது முன்னோர்கள் பல உத்திகளை கையாண்டுள்ளனர். அதில் பண்ணைக் குட்டைகள் என்ற நீர் சேமிப்பு குழிகளும் ஒரு வகை உத்தி ஆகும்.

மழை காலத்திலும், கோடை மழை காலங்களிலும் பெய்யும் மழைநீரை பண்ணைகுட்டை எனப்படும் குழிகளில் தேக்கி வைத்தனர். வறட்சி காலத்தில் பயிர்களுக்கு இதில் சேமிக்கப்பட்டிருக்கும் நீரை பயன்படுத்தியுள்ளனர். சில நேரங்களில் இதே குழிகளில் விவசாய கழிவுகளை மக்க வைத்து உரமாக மாற்றி இயற்கை உரமாக பயிர்களுக்கு அளித்து நல்ல மகசூலையும் பெற்று வந்துள்ளனர்.


வேளாண்மையின் உயிர்நாடிகள்
போதிய நீரும், வளமான மண்ணும் வேளாண்மையின் உயிர் நாடி ஆகும். புவியியல் அமைப்பு அடிப்படையில் தமிழகம் மிகக் குறைந்த நிலத்தடி நீரை கொண்டதாக இருக்கிறது. மழைநீரை நம்பித்தான் பெரும்பாலான விவசாயிகள் பயிர் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. பொதுவாக, மானவாரி நிலங்களில் மழைநீரை சேமித்து பயிர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை.

மேலும், அதிக மழை பொழியும் காலங்களில் நிலத்தில் விழுந்து ஓடும் மழைநீரும் அதனால் ஏற்படும் மண் அரிமானமும் மண்ணின் வளத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி வழிந்து ஓடும் நீரை கட்டுப்படுத்த வயல் தோறும் ஒரு பண்ணைக்குட்டையை அமைக்கலாம். குறிப்பிட்ட நீள, அகல மற்றும் ஆழத்தில் அமைக்கப்படும் இந்த அமைப்பில் மழை நீரை சேமித்து வைப்பதன் மூலம் பயிரிடப்படும் நிலங்களில் மண் அரிப்பை தடுக்கலாம்.

எருக்குழி
மழை பெய்யும் போது, நிலத்தில் வழிந்தோடும் நீரால் பயிரிடப்படும் மண்ணில் உள்ள சத்துக்கள் நீரால் அரித்து செல்லப்படும். அப்போது அந்த மண்ணில் பயிரிட தேவையான சத்துக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். அப்போது, நிலத்தில் மக்கு மற்றும் தொழுஉரங்களை இட்டு மீண்டும் மண்ணில் பயிர் செய்வதற்கான போதிய சத்தை நிலைநிறுத்த வேண்டியுள்ளது.

பொதுவாக, இது போன்ற நிலைகளில் விவசாயிகள் அவசர நிலை கருதி நன்கு மக்காத எருவை வயலில் இடுவார்கள். அப்போது, அந்த மக்காத எருவில் இருக்கும் களைவிதைகளும் நிலத்தில் விழுந்து முளைக்க தொடங்குகின்றன. இந்த நிலையில் முக்கிய பயிரை சாகுபடி செய்யும் போது அதனுடன் சேர்ந்து நிலத்தில் முளைத்திருக்கும் களைகளும் உணவுக்கும், ஊட்டச்சத்திற்கும் போட்டி போடுகின்றன. இதனால் மகசூல் குறைகிறது.

இது போன்ற நிலையில் விவசாய கழிவுகளை மக்கிய உரமாக மாற்ற "வயல் தோறும் எருக்குழி" என்ற அமைப்பை நிறுவலாம். இது பயிர்களுக்கு தேவையான மக்கிய உரத்தை உற்பத்தி செய்யும் அமைப்பாக இருக்கிறது.

அருமையான பண்ணைக்குட்டைகள்
பயிரை விளைவிக்கும் போது அதற்கு தேவையான உரத்தை இடுவது மிகவும் முக்கியம். அதே போல் அந்த பயிருக்கு தேவையான நீரை குறைவில்லாமல் பாசனம் செய்வதும் அதை விட முக்கியம். இந்த இரண்டுக்கும் உதவுவதே பண்ணைக்குட்டைகள் என்ற அமைப்பு ஆகும்.

வயல்வெளிகள் தோறும் விவசாயிகள் சிறிய பண்ணைக்குட்டை அமைப்பை ஏற்படுத்திக் கொண்டால் அதில் நீரையும் சேமிக்கலாம். அதையே சமயங்களில் விவசாயக் கழிவுகளை மக்க வைத்து பயன்படுத்தும் உரசேமிப்பு குழியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.



பண்ணைக் குட்டை அமைப்பு
ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்பளவில் 8 க்கு 5 மீட்டர் அல்லது 10 க்கு 4 மீட்டர் அளவில் 1 மீட்டர் ஆழத்திற்கு குழி வெட்ட வேண்டும். சமமான நிலங்களில் சாலை வசதி இருப்பின் சாலை ஒரங்களிலோ, அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு உள்ள நிலங்களில் தாழ்வான பகுதியில் இந்த குழி வெட்ட வேண்டும்.

இந்த குழிகளை தோண்டும் போது அந்த நிலத்தில் இருந்து எடுக்கப்படும் மண்ணில் பெரும்பகுதியை வயல்பரப்பினை பலப்படுத்தவும், தோண்டப்படும் பண்ணைக் குட்டையின் கரையை பலப்படுத்தவும் பயன்படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் பண்ணைக்குட்டையானது 40 ஆயிரம் லிட்டர் தேக்கி வைக்கும் அளவாக இருக்கும்.

கோடையில் மழை பெய்யும் போது, ஒரு ஏக்கர் பரப்பளவில் மண் கண்டம் நனைந்த பிறகு வழிந்தோடும் மழைநீர் தானாக இந்த குழிக்கு வந்து தேங்கும். இப்படி பண்ணைக்குட்டையில் தேக்கப்படும் நீரை தக்க சமயத்தில் எடுத்து பயன்படுத்தலாம். அதாவது, மானவாரி நிலங்களுக்கு முதல் போக சாகுபடியில் அதாவது ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் எருவிட வேண்டியது இருக்கும்.


அதனை கருத்தில் கொண்டு இந்த குழியில் ஜனவரியிலிருந்து ஜூன் வரை உள்ள காலத்தில் விவசாய கழிவுகளை சேமித்து மக்க வைத்து உரமாக மாற்றலாம். பின்னர் ஜுன் மாதவாக்கில் இந்த உரத்தை எடுத்து பயிர்களுக்கு அளிக்கலாம். அதே போல் ஜுலையிலிருந்து டிசம்பர் வரை மழை பெய்யும் காலத்தில் விழும் மழை நீரை இந்த பண்ணைக்குட்டையில் தேக்கி வைத்து பயன்படுத்தலாம்.

மழை பெய்ய உதவும்
ஒவ்வொரு வயலிலும் ஏற்படுத்தப்படும் இது போன்ற சிறிய பண்ணைக்குட்டைகள் ஒரு சிறிய நீர் தேக்கம் போலவே செயல்படும். பண்ணைக்குட்டையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீரால் மெல்ல கசிந்து நிலத்தடியில் இறங்குவதால், சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். நிலத்தின் மேற்பரப்பிலும், நிலத்தடியிலும் தேக்கப்படும் நீரால் வாயு குளிர்ந்து விடும். குளிர்ந்த மேகங்களால் மழை பொழிவு ஏற்படும்.

இந்த குழிகளின் நடுவிலும் இலந்தை, நெல்லி, மா, சப்போட்டா, தேக்கு, இலவு, கிளிசிரிடியா போன்ற மரங்களை நடலாம். புன்செய் நிலப்பகுதியில் எருக்குழி அமைப்பதில் ஒருங்கிணைந்து விவசாயிகள் செயல்படவேண்டும். அவ்வாறு செய்தால், அதிக மழை பெறும் நாட்களில் வழிந்தோடும் மழைநீரை சேமித்தும், அதனால் நிலத்தடி நீர் உயரவும், மக்கிய எரு தயாரிப்பும், சேமிப்பும் உறுதி செய்யப்படுகிறது.


தமிழ்நாட்டு விவசாயிகள் இப்படி வயலுக்குவயல் பண்ணைக்குட்டை மட்டும் எருக்குழி அமைத்தால் மழைநீர் வழிந்தோடி வீணாகாமல் காப்பாற்றப்படும். விலை மதிப்பில்லாத நன்னீர் சேமிப்பினால் வருங்கால சந்ததிகளின் நீர்த்தேவை பாதுகாக்கப்படும்.

ஆதாரம் : வேளாண்மை தரக்கட்டுப்பாடு, மதுரை.

No comments:

Post a Comment