Sunday, January 11, 2015

கோழிகளை போல கூண்டுகளில் ஆடுகள் வளர்ப்பு

பல்லடம் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் கோழிப்பண்ணைகள் போல கூண்டுகளில் அடைத்து ஆடுகளை வளர்க்கும் தொழில் பிரபலமாகி வருகிறது. மேய்ச்ச லுக்கு திறந்த வெளியில் ஓட்டிச்செல்ல வேண்டியது இல்லை என்பதால் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்லடம் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழிலும் பிரதானமாக விளங்குகிறது. முன்பெல்லாம் ஆடுகளை காலையில் இருந்து மாலை வரை புல்வெளிகளில் மேயவிட்டு இரவானதும் அதற்கான பட்டிகளில் அடைத்து வளர்த்து வந்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாய் மேயும் ஆடுகளை பாதுகாக்க கால்கடுக்க ஒருவர் நின்றிருக்க வேண்டும். இவை ஓரளவு வளர்ந்த பிறகு அவை கறிக்காகவும், வளர்க்கவும் விற்பனை செய்யப்படுகிறது.


ஆனால், தற்போது ஆடு வளர்ப்பிலும் நவீனம் பரவி வருகிறது. பல்லடம் அருகே உள்ள கேத்தனூர், சித்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரண் மேல் ஆடு வளர்ப்பு என்னும் கொட்டில் முறை ஆடு வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. நிலத்தின் மேல் பரப்பில் அமைக்கப்படும் இந்த கொட்டிலில் பெட்டி பெட்டியாக அறைகள் இரும்பு கூண்டுகள் போல அமைத்து தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு குட்டிகள், கிடா மற்றும் ரக வாரியான ஆடுகள் வளர்க்கப் படுகிறது. நாட்டு ஆடுகளை தவிர சிரோகி, கரோலி, பீட்டல், தலச்சேரி, போயர் கிராஸ் போன்ற வெளி மாநில ஆடுகளும் வளர்க்கப்படுகிறது.

கறிக்கோழி வளர்ப்பு போல இந்த பரண் மேல் ஆடு வளர்ப்பு முறை பல விதங்களில் பயன் தருவதால் லாபகரமான தொழிலாக விளங்குவதால் விவசாயிகள் இப்போது ஆடு வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். பார்த்தேன், படித்தேன், வளர்க்கிறேன்... பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் உள்ள ஆட்டுப்பண்ணை உரிமையாளர் ஹரிகோபால் கூறியதாவது:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் திருப்பூரில் நடந்த கால்நடை வளர்ப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டபோது, பரண்மேல் ஆடு வளர்க்கும் முறையை கேட்டு தெரிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் சென்னை சென்று பரண்மேல் ஆடு வளர்க்கும் முறை பற்றி மேலும் பல தகவல்களை திரட்டி தற்போது இந்த பண்ணையை தொடங்கியுள்ளேன். பரண் மேல் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு தீவனம், தண்ணீர் போன்றவை தருவதற்கு அங்கேயே வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் இந்த முறை ஆடு வளர்ப்பதில் ஆட்கள் அதிகம் தேவையில்லை. தீவனப்புற்களை இயந்திரம் மூலம் சிறிது சிறிதாக நறுக்கி போடுவதால் தீவனங்கள் விரயமாவதில்லை. 

மேலும் பரண் மேல் ஆடுகளை வளர்ப்பதால் தொற்று பரவாமல் நோயின்றி வளர்கிறது. மேலும் வெட்ட வெளியில் மேயும் ஆடுகள் இனம் மாறி சேர்வதால் கலப்பின ஆடுகள் உருவாகி அது விற்பனையை பாதிக்கிறது. பரண் மேல் வளர்க்கப்படும் ஆடுகளை அதன் இன ஆடுகளோடு இன பெருக்கத்திற்கு விடப்படுவதால் ஆரோக்யமான தரமான குட்டிகள் கிடைக்கிறது.

இவ்வாறு  வளர்க்கப்படும் ஆடுகளை ஈரோடு, பொள்ளாச்சி, உடு மலை, கோவை போன்ற பகுதிகளைச்சேர்ந்த வியாபாரிகள் இறைச்சிக்காகவும், வளர்க்கவும் பண்ணைகளுக்கே வந்து வாங்கி செல்வதால் ஆடுகளை சந்தைப்படுத்துவதும் சுலபமாக உள்ளது. இதற்கும் மேலாக ஆடுகள் இடும் கழிவுகள் சேதமின்றி பரணுக்கு கீழேயே விழுவதால் குறிப்பிட்ட காலத்தில் கழிவுகளை டன் கணக்கில் விற்க ஏதுவாக உள்ளது என்றார். 

No comments:

Post a Comment