Tuesday, April 28, 2015

முப்போகம் பலன் தரும் திசு வாழை (Thisu Vaalai) - Effective Banana Tissue Culture


விவசாயத்தை பெரிதாக நினைத்து வாழ்ந்த விவசாயிகள் எல்லாம் அவற்றை பிளாட் போட்டு விற்று வருகின்றனர். விளை நிலத்தை சீரமைத்து வாழை விவசாயம் மூலம் வருமானத்தை பெருக்கி வருகிறார் காரைக்குடி, அரியக்குடி வளன் நகர் விவசாயியும் முன்னாள் ராணுவ வீரருமான ஆரோக்கியசாமி.

மொத்தமுள்ள 4 ஏக்கரில் ஒரு ஏக்கரில் வாழை, 1.5 ஏக்கரில் நெல், ஒரு ஏக்கரில் தென்னை விவசாயம் மேற்கொண்டுள்ளார். தினந்தோறும் வாழ்வாதாரத்தை வாரி வழங்கும் வெண்டை, கத்தரி விவசாயத்தை அரை ஏக்கரில் செய்து வருகிறார். திசுவாழை பயிரிட்டுள்ள இவர் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் லாபம் பார்த்து வருகிறார்.

அவர் கூறியது:
ஜி-9 வகை திசு வாழை தோட்டக்கலை துறை உதவி வேளாண் அலுவலர் மங்களசாமி மூலம் எனக்கு கிடைத்தது. கன்றுகள் நம்முடைய வாழை போன்று அல்லாமல் சிறிய செடி போல இருக்கும். 11 மாதத்தில் காய்ப்பு எடுக்க ஆரம்பித்து விடலாம். பச்சை பழ வாழை பயிரிட்டுள்ளேன். ஒரு தாரில் 135 முதல் 140 காய்கள் இருக்கும். தற்போதைய நிலையில் தார் ஒன்று ரூ.500 முதல் 600 வரை விற்பனையாகிறது.

ஒரு வாழை காய்த்து முடிந்தவுடன் அதை வெட்டிவிட்டு, அதன் பக்க கன்று மூலம் அடுத்த வாழை உருவாகிறது. ஒரு வாழை வைத்தால், மூன்று முறை மகசூல் பெற முடியும். ஆறு அடிக்கு ஒரு கன்று நட வேண்டும். 15-வது நாளில் ஒரு வாழைக்கு 5 கிலோ மாட்டு சாண உரம், 200 கிராம் டி.ஏ.பி., 200 கிராம் பொட்டாஷ் இட வேண்டும். 40-வது நாள் இதே அளவு உரம் இட வேண்டும்.


150-வது நாள் 10 கிலோ மாட்டு சாணம் மட்கியது வைக்க வேண்டும். திசு வாழையை பொறுத்தவரை நீர் சத்து அதிகம் தேவை. இதனால் சொட்டு நீர் பாசனம் சிறந்தது.

இந்த வாழை 6-வது மாதம் பூக்கும். 8-வது மாதம் காய்க்க துவங்கும். ஒரு ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் செலவாகும். ஆனால், வருமானமோ ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.4 லட்சம் லாபமாக கிடைக்கும். வாழையின் ஊடே காய்கறி விவசாயமும் மேற்கொள்ளலாம்.

அதே போல், நெல் விவசாயம் உரம் போடாமல் இயற்கை விவசாயம் மூலம் மேற்கொண்டு வருகிறேன். நெல் நடவுக்கு முன்பு, வேம்பு இலை, வாகை இலை ஆகியவற்றை நிலத்தில் போட்டு உழுது அதன்பிறகு நடவு பணி துவங்குகிறது. இதனால், இயற்கையான அரிசி நமக்கு கிடைக்கிறது, என்றார்.

இவரை தொடர்பு கொள்ள 09487413100.
டி.செந்தில்குமார், காரைக்குடி.

வாழையில் வாடல் நோய் (Vaalaiyil Vaadal Nhooi) - Banana wilt disease

வாழையில் ஏற்படும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார். 

அறிகுறிகள்
  • தாக்கப்பட்ட மரங்களின் அடி இலைகள் திடீரென முழுவதும் பழுத்து, தண்டுடன் சேரும் இடத்தில் சுற்றிலுமாக ஒடிந்து, மடிந்து வாழைத் தண்டைச் சுற்றிலும் துணி கட்டியதுபோல் காட்சியளிக்கும்.
  • பின் தண்டின் அடிப்பாகத்தில் மண்ணிலிருந்து மேல்நோக்கி நீள வாக்கில் வெடிப்பு ஏற்படும்.
  • கிழங்கினைக் குறுக்கே வெட்டிப்பார்த்தால், செம்பழுப்பு நிறத்தில் வட்ட வட்டமாக இப்பூஞ்சாணம் தாக்கி அழிந்துள்ள பகுதிகளைக் காணலாம்.
  • செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி மற்றும் பல உள்ளூர் ரகங்களை இந்நோய் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றது. நூற்புழு பாதிப்பு இருக்கும் தோட்டத்தில் வாடல் நோயின் அறிகுறிகள் அதிக அள வில் காணப்படுகின்றன.
  • வாடல் நோயின் வித்துக் கள் மண்ணில் பல ஆண்டுகள் உயிருடன் இருக்கும் தன்மையுடையது.
  • பூஞ்சாண வித்துக்கள் முளைத்து பக்க வேர்கள் மூலமாக கிழங்குப் பகுதியைத் தாக்கும். நோய் தாக்கிய கிழங்குகள் மூலமாகவும், பாசன நீர் மூலமாகவும் இந்நோய் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பரவுகிறது.
மேலாண்மை முறைகள்:
  • வாடல் நோய் அதிக அளவில் காணப்படும் நிலங்களில் இந்நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பூவன் (கதலி), ரொபஸ்டா, கை போன்ற வாழை ரகங்களைப் பயிரிடலாம்.
  • வாழைக் கன்றுகளை நோய் தாக்காத தோட்டங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். விதைக்கிழங்குகளைப் பரிசோதித்து செந்நிறப் பகுதிகள் இல்லாதவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
  • கிழங்குகளை நடுவதற்கு முன் களிமண் குழம்பில் நனைத்த கிழங்கின் மீது பத்து கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் பூசணக்கொல்லியினைச் சீராகத் தூவ வேண்டும்.
வாழை பனாமா வாடல் நோய் தடுக்க
  • ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 20 கிலோ உலர்ந்த சாண எரு அல்லது மணலுடன் கலந்து ஒவ்வொரு வாழைக்கும் தூர்ப் பகுதியைச் சுற்றிலும் இடவேண்டும்.
  • காப்சூல் எனப்படும் மாத்திரை குப்பிகளில் 50 மில்லி கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் நிரப்பி நட்ட ஐந்தாம் மற்றும் ஏழாம் மாதங்களில் கிழங்கினுள் செலுத்த வேண்டும்.
  • வாழைக்கிழங்கில் 45 டிகிரி சாய்வாக 10 செ.மீ. ஆழ துளையிட்டு உள்ளே செலுத்த வேண்டும். வாழைத்தண்டில் செலுத்தினால் பயன் இல்லை. குப்பியினைச் செலுத்தியபின் களிமண் உருண்டை கொண்டு துளை வாயிலை மூடிவிடவும்.
  • மாத்திரை குப்பி வைப்பதை தக்க ஆலோசனை பெற்று வைக்க வேண்டும். நோய் தாக்கிய மரங்களை கிழங்கோடு பிடுங்கி அழித்துவிட வேண்டும். அக்குழியில் போதிய அளவு சுண்ணாம்பு (குழிக்கு 1-2 கிலோ) இடவேண்டும்.

  • கடலூர் மாவட்டத்தில், சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழையில் குறிப்பாக நாடு மற்றும் ஏலக்கி ரகங்களில் புதிய வகை வாடல் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
  • நோய் தாக்கப்பட்டு குலை தள்ளும் நிலையிலுள்ள வாழை மரங்களில் இலைகள் பழுத்து காணப்படும்.
  • வாழை மரத்தைத் தொட்டவுடன் இற்றுப்போய் சாய்ந்து விடும்.
  • தாக்கப்பட்ட மரங்களை வேருடன் அகற்றிவிட்டு குழிகளில் 50 கிராம் வீதம் பிளீச்சங் பவுடர் தூவ வேண்டும்.
  • அருகாமையிலுள்ள மரங்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பிளீச்சிங் பவுடர் என்ற அளவில் கலந்து மரத்தைச் சுற்றி ஊற்ற வேண்டும்.
  • இந்த நோய் விரைவில் பரவும் தன்மையுள்ளதால் வாழை விவசாயிகள் தனி கவனம் செலுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும்.
  • மேலும், விவரங்களுக்கு அருகாமையிலுள்ள தோட்டக்கலை துறை, வட்டார மையங்களில் களப்பணியாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • முனைவர்
    எஸ்.ஜெயராஜன் நெல்சன்,
    ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.

மக்காச்சோள விவசாயத்தில் மாநில சாதனை (Makka Chola Vivasayathil Maanila Saathanai) - The state record in maize agriculture

வறட்சியிலும் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி, மக்காச்சோளம் சாகுபடியில் ஒரு எக்டேருக்கு 12 டன்கள் (120 மூட்டைகள்) வரை மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார் பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி எஸ்.ராமசாமி. மாநிலஅளவில் முதலிடம் பிடித்த இவருக்கு வேளாண்மைத்துறை மூலம் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தனது சாதனை குறித்து ராமசாமி கூறியதாவது:
ஒரு எக்டேரில் சாகுபடி செய்வதற்கு உரம், வேலையாட்கள் கூலி, நீர் பாசனத்திற்காக ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்தேன்.


பொதுவாக ஒரு எக்டேருக்கு 8 டன்கள் தான் மகசூல் கிடைக்கும். வேளாண்மைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால், 12 டன்கள் வரை கிடைத்துள்ளது. தற்போது ஒரு மூடை ரூ.1,350 விற்பனையாகிறது. இதன் மூலம் ரூ.1.35 லட்சம் லாபம் கிடைத்துள்ளது.

பயிரிடும் முறை:
  • மக்காச்சோளத்தை ஐப்பசியில் பயிரிட்டேன். விதைப்பதற்கு முன்பாக நிலத்தில் கட்டிகள் இல்லாதவாறு தொடர்ந்து பலமுறை உழவு செய்ய வேண்டும்.
  • மண் பொலிவாக இருந்தால் தான் வேர் வெகுவாக கீழே செல்லும். மண் பரிசோதனைப்படி உரமிட்டால், உரம் வீணாவதை தவிர்க்கலாம். ஒரு எக்டேருக்கு அடியுரமாக 135 கிலோ டி.ஏ.பி.,- 30 கிலோ யூரியா, 85 கிலோ பொட்டாஷ் இட வேண்டும்.
  • தொடர்ந்து 12.5 கிலோ நுண்ணூட்ட சத்துகளை 20 கிலோ மண் கலந்து இட வேண்டும். நான், 52/11 என்ற வீரிய ரக விதைகளை பயன்படுத்தினேன். ஒரு எக்டேருக்கு 12.5 கிலோ வரை விதைவேண்டும்.
  • அஸ்சோஸ்பைரில்லம் மூலம் விதை நேர்த்தி செய்தால், வேருக்கு தேவையான தழைச்சத்தை பெற்று தரும். ஒரு கிலோ 10 கிராம் டிவிரிடி அஸ்சோடோமோனசில் பூஞ்சன விதை நேர்த்தி செய்தால், நோய் தாக்குதல் ஏற்படாது.
  • 60 X 20 செ.மீ., இடைவெளியில் விதைகள் நட வேண்டும். களைகொல்லி பயன்படுத்தினேன். களையெடுக்கும்போது, மேலுரமாக 150 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டும்.
  • பால் பிடிக்கும் தருணத்தில் 75 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டும். நான், கிணற்று பாசனம் மூலம் நீர் பாய்ச்சினேன். சொட்டுநீர் பாசனம் பயன்படுத்தினால், நீரை மிச்சப்படுத்தலாம். 15 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும், என்றார்.
இவருடன் பேச: 09362686204

இ.ஜெகநாதன், திண்டுக்கல்.

Friday, April 17, 2015

இனிப்பு மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்பங்கள் (Enippu Makka Cholam Saagubadi) - Sweet Corn Cultivation



  • இனிப்பு மக்காச்சோளம்: இதன் வயது 90 நாட்கள். இதை அனைத்து மண் வகையுள்ள நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதி அவசியம். இதை அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.
  • ரோட்டோ வேட்டர் மூலம் ஓர் உழவும், கொக்கி கலப்பை மூலம் ஓர் உழவும் செய்து களைகளை அகற்றி, ஏக்கருக்கு 3 டிப்பர் என்ற அளவில் தொழுஉரம் கொட்டி கலைத்து விட வேண்டும். ஓர்அடி இடைவெளியில், ஓர் அடி அளவுக்கு பார் அணைத்து அதன் மையத்தில் ஓர் அடிக்கு ஒரு விதை வீதம் ஒரு அங்குல ஆழத்தில் நடவு செய்து தண்ணீர் கட்ட வேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும்.
  • விதைத்த 3ம் நாள் முளைக்க ஆரம்பிக்கும். அன்று ஒரு தடவை தண்ணீர் கட்ட வேண்டும். பின்னர் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் கட்டினால் போதும்.
  • 20ம் நாளில் களை எடுத்து பரிந்துரைக்கப்பட்ட உரம் வைக்க வேண்டும்.
  • தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசனத் தண்ணீரில் கலந்து விட வேண்டும். வேறு எந்த பராமரிப்பும் தேவையில்லை.
  • பெரும்பாலும் பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது.கதிர் வருவதற்கு முன்பாக பூச்சிகள் தாக்கினால் மூலிகை பூச்சி விரட்டி தெளிக்கலாம்.
  • 55ம் நாளில் ஆண் பூவெடுக்கும் 60-ம் நாளில் பெண் பூவெடுத்து, கதிர் உருவாகும். 75ம் நாளிலிருந்து கதிர்முற்ற ஆரம்பிக்கும். தொடர்ந்து 90ம் நாள் வரை தினம் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 6 டன் அளவிற்கு கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரும் அரை அடி நீளத்தில் இருக்கும். கிலோவுக்கு 3-4 கதிர்கள் நிற்கும்.
  • அனுபவ விவசாயி சேகர், திருவண்ணாமலை மாவட்டம், சு.கீழநாச்சிப்பட்டு கிராமம், தினமும் 200 கிலோவில் இருந்து 300 கிலோ அளவுக்கு அறுவடை செய்து 1 கிலோ 20 ரூபாய்க்கு உழவர் சந்தையில் விற்பனை செய்கிறார். 1 ஏக்கரில் கிடைக்கிற 6 டன் கதிர் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் எடுக்கிறார். 30 ஆயிரம் ரூபாய் செலவு போக 90 ஆயிரம்  ரூபாய் லாபம் கிடைக்கிறது. கமிஷன் கடைகளுக்கு அனுப்பினால் 50 ஆயிரம் ரூபாய் தான் லாபம் கிடைத்திருக்கும் என்கிறார். தொடர்புக்கு : சேகர், போன்: 09787600991.


  • Thursday, April 2, 2015

    நீர் பரிசோதனை அவசியம் (Neer Parisothanai Avasiyam) - Water Quality Testing is Necessary

    சிறந்த வேளாண்மைக்கு மண் பரிசோதனை எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு பாசன நீர் பரிசோதனையும் மிகவும் அவசியம்.

    முற்றிலும் ஏரி, குளங்களில் தேக்கிய மழைநீரைக் கொண்டு விவசாயம் செய்த நிலை மாறி வருகிறது. ஆறுகள் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்களாலும், தொழிற்சாலைகளாலும் பெருமளவுக்கு மாசுபடுத்தப்படுகின்றன.
    தற்போது நாம் திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரைப் பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நீரின் தன்மை இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது. நிலம் வளமானதாக இருந்தாலும் பாசன நீரின் தன்மையால் நிலவளம் மாறுபடுகிறது. மோசமான நீர், வளமான நிலத்தையும் பயிரிடத் தகுதியற்றதாக மாற்றிவிடும்.
    இரு தன்மைகள்
    • திறந்த வெளிக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் புதிதாக அமைத்த உடனேயே நீரின் பண்புகளை ஆராய்ந்து அறிவது விவசாயத்துக்கு நல்லது. பாசன நீரில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை உவர் தன்மை, களர் தன்மை.
    • பாசன நீரில் கால்சியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களின் குளோரைடுகள், சல்பேட்டுகள் அதிகம் இருந்தால் உவர் தன்மை ஏற்படும்.
    • சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், மெக்னீஷியம் கார்பனேட் ஆகிய உப்புகள் அதிகம் இருந்தால் பாசன நீரில் களர் தன்மை ஏற்படும்.
    • பாசன நீரை ஆய்வு செய்யும் போது அந்த நீரால் பாசன வசதி பெறும் நிலத்தில் உள்ள மண்ணையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை பரிந்துரைக்கிறது.


    பரிசோதனை  செய்வது எப்படி
    • கிணற்றில் பம்புசெட் பொருத்தப்பட்டு இருந்தால், அரைமணி நேரம் மோட்டாரை ஓடவிட்டு பின்னர் கிடைக்கும் நீரை மாதிரியாகச் சுத்தமான பாட்டிலில் காற்றுக் குமிழிகள் இல்லாமல் சேகரிக்க வேண்டும்.
    • சேகரிக்கும் முன், அதே நீரைக் கொண்டு முதலில் பாட்டிலைக் கழுவ வேண்டும். தாமதம் இல்லாமல் விரைவில் ஆய்வுக் கூடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
    • பம்பு செட் இல்லாத கிணறாக இருந்தால், மேல்மட்ட நீரைச் சேகரிக்காமல் வாளியைக் கொண்டு, ஆழத்தில் உள்ள நீரைச் சேகரிக்க வேண்டும்.
    • கவலை பொருத்தப்பட்ட கிணற்றில், ஒரு மணி நேரம் நீரை இரைத்து விட்டு, பின்னர் நீர் மாதிரியைச் சேகரிக்க வேண்டும். பாசன நீர் மாதிரியுடன் விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் சர்வே எண், திறந்த வெளிக் கிணறா? ஆழ்குழாய்க் கிணறா? குளம் அல்லது ஆற்று நீரா? கிணற்றின் ஆழம் எவ்வளவு மண்ணின் விவரம் போன்றவற்றைத் தெரிவிக்க வேண்டும்.
    • பாசன நீரை ஆய்வு செய்து, உவர்நிலை, களர் நிலை, கார்பனேட், பை கார்பனேட், குளோரைடு, சல்பேட் ஆகியவற்றின் நிலை, கால்ஷியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் எஞ்சிய சோடியம் கார்பனேட் மற்றும் சோடியம் ஈர்ப்பு விகிதம், மெக்னீஷியம் கால்சியம் விகிதம், நீரின் ரசாயனத் தன்மை, ஆகிய விவரங்கள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கிப்படுகின்றன.
    • பாசன நீரை ஆய்வு செய்த பிறகு விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய உழவியல் முறைகள், தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப சாகுபடி முறைகள், உர நிர்வாகம், நீர் நிர்வாகம் ஆகியவைகளும் வேளாண் அலுவலர்களால் சிபாரிசு செய்யப்படுகின்றன.

    கட்டணம் எவ்வளவு?
    • பாசன நீரை ஆய்வு செய்வதற்கு மாதிரி ஒன்றுக்கு, 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  பாசன நீர் ஆய்வுக்காக, மாதிரிகளை சேகரித்து அந்தந்தப் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
    • அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் அளவிலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண் பல்கலைக்கழக கிளை அலுவலகங்களிலும், கூட்டுறவுத் துறை மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள வேளாண் சேவை மையங்களிலும் பாசன நீர் ஆய்வுக் கூடங்கள் உள்ளன.
    • நீரை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில், 1,700 ஆய்வு மையங்களை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.

    வறட்சிக்கு உதவும் தென்னை நார்க் கழிவுத்துகள் (Varatchiku Uthavum Thennai Naar Kalivugal) - Coconut Coir Helps in Drought

    கடும் வறட்சி காரணமாக தென்னைநார்க் கழிவுத்துகள்களின் தேவை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து முதன்முறையாக ஆப்பிரிக்காவுக்கு இக்கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    தென்னை நகரான பொள்ளாச்சிப் பகுதியில் சுமார் ஒரு கோடி தென்னை மரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்குப் பருவ மழைகள் பொய்த்து விட்டன.
    இதனால் பொள்ளாச்சிப் பகுதியில் மட்டும் 20 சதவீத தென்னை மரங்கள் முழுமையாகக் காய்ந்துவிட்டன. மேலும் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட மரங்கள் காய்க்கும் திறனை இழந்துவிட்டன.
    பொள்ளாச்சிப் பகுதியில் சில ஆண்டுகளாக தென்னை மட்டையில் இருந்து தயாரிக்கப்படும் நார் மற்றும் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டிகளின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
    இப்பகுதியில் மட்டும் சுமார் 500-க்கு மேற்பட்ட தென்னைநார்த் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
    நாளொன்றுக்கு ஒரு தொழிற்சாலைக்கு சுமார் 40 ஆயிரம் மட்டைகள் தேவைப்படுகின்றன. ஏற்றுமதி அதிகரிப்பதால் மட்டைகளின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    தேவை அதிகரித்ததால், கடந்த 6 மாதங்களுக்கு முன் 50 பைசாவுக்கு விற்ற தென்னை மட்டை இப்போது ரூ. 2-ஆக விலை உயர்ந்துள்ளது.
    இங்கு தென்னை மட்டை கிடைக்காத காரணத்தால், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தினமும் 20 லோடு முதல் 40 லோடு வரை தென்னை மட்டைகள் கொண்டு வரப்படுகின்றன.
    பொள்ளாச்சியில் இருந்து கொரியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிக அளவில் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    முதன்முறையாக இந்த ஆண்டு பொள்ளாச்சியில் இருந்து ஆப்பிரிக்காவுக்கும் கழிவுத்துகள் கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
    வீடுகளின் மாடிகளில் காய்கறித் தோட்டம் அமைக்குமாறு தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. வீடுகளின் மாடியில் தோட்டம் அமைக்கும் பகுதியில் கழிவுத்துகள் கட்டிகளை மண்ணுடன் கலந்து பயிரிடுவதால் மகசூல் அதிகரிப்பதுடன் தண்ணீரின் தேவையும் குறைகிறது.

    இதனால் கழிவுத்துகள் கட்டிகளின் தேவை அதிகரித்துள்ளது.
    மேலும் வறட்சியால் வாடும் தென்னை மரங்களைக் காப்பாற்றுவதற்காக மரத்தைச் சுற்றிலும் இக்கழிவுத் துகள்களைப் பரப்புகின்றனர். இதனால், தினமும் தென்னை மரத்துக்குத் தண்ணீர் விடுவதற்குப் பதிலாக, 4 அல்லது 6 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதுமானதாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
    தண்ணீரைச் சேமிக்க வேண்டுமானால் கழிவுத்துகள் கட்டியைப் பயன்படுத்துங்கள் என்ற கோஷம், இப்போது புதிதாக பொள்ளாச்சியில் உள்ள கழிவுத்துகள் கட்டி உற்பத்தியாளர்களிடம் எழுந்துள்ளது.
    ஒரு கிலோ கழிவுத்துகள் கட்டி 8 கிலோ தண்ணீரைத் தன்னுள் தாங்கும். இதனால் தென்னை மரத்தைச் சுற்றிலும் ஈரம் இருந்து கொண்டே இருக்கும்.
    அதற்காகவே கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள், வறட்சியின்போது கழிவுத்துகள்களை தென்னை மரத்தின் வேரைச் சுற்றிலும் பரப்பி ஆயுள்காலப் பயிரான தென்னையைக் காப்பாற்றி வந்தனர்.
    பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து மட்டும் தென்னைநார்க் கழிவுத்துகள் கட்டி ரூ. 250 கோடிக்கு மேல் ஏற்றுமதியாவது குறிப்பிடத்தக்கது.

    நிலப்போர்வை அமைத்து விவசாயம் (Nilapporvai Amaithu Vivasayam) - Mulching in Agriculture

    கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலப்போர்வை எனப்படும் “மல்ச்சிங்’ முறையை விவசாயிகள் கடைபிடித்தால், அதிக மகசூல் பெற முடியும்.



    கோடை காலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பிரச்னை ஏற்படுவது இயற்கையே.

    மின்வெட்டு மற்றும் தண்ணீர் பிரச்னையை விவசாயிகள் கட்டாயம் சமாளித்தாக வேண்டும்.
    சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பகுதியில் உள்ள விவசாயிகள் நிலப்போர்வை முறையில் தர்ப்பூசணி, மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர்.



    சேலம் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இன்பராஜ் கூறியதாவது:

    • கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்.
    • பயிர்களை காப்பாற்ற நிலப்போர்வை (மல்ச்சிங்) (“Mulching“) அமைக்க வேண்டும்.
    • பிளாஸ்டிக் மல்ச்சிங், இயற்கை உர மல்ச்சிங் என்ற இரண்டு முறையின் மூலம் விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியும்.
    • பிளாஸ்டிக் மல்ச்சிங் முறை மூலம், நீர் ஈரப்பதம் பராமரிக்கப்படுவதால், பயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
    • மழை காலத்தில் செடியில் உள்ள வேரில் நீர் தேங்காமல் இருப்பதால், அழுகல் நோயிலிருந்தும் தப்பலாம்.
    • அசுவின் என்ற பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும் முடியும்.
    • “மல்ச்சிங்’ முறையை கடைபிடிப்பதன் மூலம் மூன்று நாட்களுக்கு முன்பாகவே மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
    • நிலப்போர்வை அமைக்க, தமிழக அரசு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது.
    • தேசிய தோட்டக்கலை திட்டத்தின் மூலம், நிலப்போர்வை வாங்க, 10 ஆயிரம் ரூபாய் மானியம் அளிக்கப்படுகிறது.
    • விவசாய பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் நிலப்போர்வை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
    • ஒரு போகம் முடிந்ததும், நிலத்தை மீண்டும் களைக்காமல், மற்றொரு போகம் பயிர் செய்ய முடியும்.
    • சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள விவசாயிகள் மிளகாய், தக்காளி, தர்ப்பூசணி போன்ற பயிர்களை நிலப்போர்வை மூலம் பயிரிட்டுள்ளனர்.
    • இந்த பகுதியில், 50 எக்டர் பரப்பளவில் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
    • நிலப்போர்வை முறையில், சொட்டு நீர் பாசனம் பயன்படுத்துவதால், தண்ணீர் செலவு குறைகிறது. மகசூல் அதிகம் கிடைக்கிறது.
    • விவசாயிகள் உரிய ஆவணங்களுடன், அந்தந்த வட்டார உதவி வேளாண் இயக்குனர்களை சந்தித்து, விண்ணப்பங்களை கொடுக்கலாம்.
      இவ்வாறு அவர் கூறினார்.

    பழந்தமிழரின் அளவை முறைகள் (Palantamilarin Alavai Muraigal) - Ancient Tamils Measurement Methods


    முகத்தல் அளவைகள்
    ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
    ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
    ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
    ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
    ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
    ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
    ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
    ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
    ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

    முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
    ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
    இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
    இரண்டு உழக்கு = ஒரு உரி.
    இரண்டு உரி = ஒரு நாழி.
    எட்டு நாழி = ஒரு குறுணி.
    இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
    இரண்டு பதக்கு = ஒரு தூணி.
    மூன்று தூணி = ஒரு கலம்.



    நிறுத்தல் அளவைகள்
    மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
    முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
    பத்து விராகன் எடை = ஒரு பலம்.
    இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
    ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
    மூன்று தோலா = ஒரு பலம்.
    எட்டு பலம் = ஒரு சேர்.
    நாற்பது பலம் = ஒரு வீசை.
    ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
    இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

    ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
    ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
    ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
    ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
    ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
    ஒரு விராகன் = நான்கு கிராம்.

    நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும்.
    1. மணித்தராசு - இது இரத்தினம் முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறிய தராசு

    2. பொன் தராசு - தங்கம் போன்றவைகளை நிறுக்கும் சிறு தராசு

    3. உலோகத் தராசு - செம்பு, பித்தளை முதலியவற்றை நிறுக்கும் பெருந் தராசு

    4. பண்டத் தராசு - பலசரக்குகளை நிறுக்கும் தராசு

    5. கட்டைத் தராசு - விறகு அல்லது மூட்டைகளை நிறுக்கும் தராசு. இது இரு புறமும் சதுர மரப்பலகைகளைத் தட்டுக்களாகக் கொண்டிருக்கும்.

    6. தூக்கு - காய்கறிகளை நிறுக்கும் தராசு. இது மரக்கம்பாலான துலாக் கோலின் ஒரு பக்கத்தில் மட்டும் தொங்கும் கூடைத் தட்டால் ஆனது.



    நில அளவை

    100 ச.மீ - 1 ஏர்ஸ்
    100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்
    1 ச.மீ - 10 .764 ச அடி
    2400 ச.அடி - 1 மனை
    24 மனை - 1 காணி
    1 காணி - 1 .32 ஏக்கர்
    144 ச.அங்குலம் - 1 சதுர அடி
    435 . 6 சதுர அடி - 1 சென்ட்
    1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்
    100 சென்ட் - 1 ஏக்கர்
    1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்
    2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்
    1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )
    1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)
    100 சென்ட் = 4840 சதுர குழிகள்
    1 சென்ட் = 48.4 சதுர குழிகள்
    1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )
    1 ஏக்கர் = 43560 சதுர அடி
    1 குழி (Square Yard) = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)
    1 ச.மீ(Square Meter) = 1.190 குழி
    1 குழி = 9 சதுர அடி
    1 ச.மீ(Square Meter) = 10.76 சதுர அடி
    1 குந்தா (Guntha) = 121 குழி = 101.17 சதுர மீட்டர்
    1 குந்தா (Guntha) = 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி
    100 குழி = ஒரு மா
    20 மா = ஒரு வேலி
    3.5 மா = ஒரு ஏக்கர்
    6.17 ஏக்கர் = ஒரு வேலி
    16 சாண் = 1 கோல்
    18 கோல் = 1 குழி
    100 குழி = 1 மா
    240 குழி = 1 பாடகம்
    20 மா = 1 வேலி



    கால அளவுகள்
    இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
    இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
    மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
    அறுபது நாழிகை = ஒரு நாள்.
    ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
    ஒரு சாமம் = மூன்று மணி.
    எட்டு சாமம் = ஒரு நாள்.
    நான்கு சாமம் = ஒரு பொழுது.
    ரெண்டு பொழுது = ஒரு நாள்.
    பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
    ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
    ஆறு மாதம் = ஒரு அயனம்.
    ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
    அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.