Thursday, February 26, 2015

பூச்சிகளை விரட்டுவதற்கு சில இயற்கைக் கரைசல்கள்

உழவுத் தொழிலில் ஒரு சில பூச்சிகள் பயிர்களை அழித்து விடுகின்றது. இதனால் செயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தபடுகிறது இதனால் நாம் உண்ணும் உணவும் மெல்ல நஞ்சாகி விட்டது மற்றும் இயற்கை வளம் முழுமையாக அழிக்கபட்டு வருகிறது. ஆனால் இயற்கை உழவுத் தொழிலில் பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை முறையில் இயற்கை பூச்சி விரட்டி கையாளப்படுகிறது. இதனால் நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக உள்ளது மற்றும் இயற்கை வளம் முழுமையாக பாதுகாத்து வரப்படுகிறது.
பூச்சிகளை விரட்டுவதற்கு சில இயற்கைக் கரைசல்கள் பயன்படுகின்றன. இவற்றில் உள்ள அடிப்படையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்டால் நம்மால் எந்த ஒரு சூழ்நிலையிலும் நல்ல பூச்சி விரட்டியை தயார் செய்து கொள்ள முடியும். பூச்சிகளைக் கொல்வது நமது நோக்கம் கிடையாது. அவற்றை விரட்டுவதே நோக்கம். இயற்கை வேளாண்மையில் நமக்கு எல்லா உயிரிங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன.
பின்வரும் இலை தழைகள் பூச்சிகளை விரட்டப் பயன்படும் :
1. ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள்- ஆடுதொடா, நொச்சி போன்றவை
2. ஒடித்தால் பால் வரும் இலை தழைகள்- எருக்கு, ஊமத்தை போன்றவை
3. கசப்புச் சுவை மிக்க இலை தழைகள்- வேம்பு., சோற்றுக் கற்றாழை போன்றவை
4. உவர்ப்பு சுவை மிக்க இலை தழைகள்- காட்டாமணக்கு போன்றவை
5. கசப்பு உவர்ப்பு சுவைமிக்க விதைகள்- வேப்பங்கொட்டை. எட்டிக் கொட்டை
இந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன.

இந்தப் பூச்சி விரட்டிகள் ஒருவித ஓவ்வா மணத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக புழுக்கள் மணத்தைக் கொண்டுதான் பயிர்களைக் கண்டறிகின்றன. இதனால் மணம் பிடிபடாத காரணத்தால் அவற்றால் பயிர்களைத் தின்ன முடிவதில்லை. மூலிகைகளும். சாணம். சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை ஏற்படுத்துவதால் பூச்சிகளும். புழுக்களும் விலகிச் செல்கின்றன. பல பூச்சிகள் உண்ணாமல் பட்டினி கிடக்கின்றன. இன்னும் பூச்சிகள் தவறித் தின்றுவிட்டு வயிற்றுக்குள் தொல்லை ஏற்பட்டு இறந்துவிடுகின்றன. இதனால் முட்டை பொரிப்பது குறைச்து விடுகிறது. இனப்பெருக்கம் தடைப்பட்டு விடுகிறது. எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது. தப்பியவை ஊனமடைகின்றன. இவற்றைப் பறவைகள் எளிதில் கொத்திக் சென்று விடுகின்றன.
மாதிரி:
சோற்றுக் கற்றாழை அல்லது பிரண்டை
எருக்கு அல்லது ஊமத்தை
நொச்சி அல்லது பீச்சங்கு அல்லது சீதா இலை
வேம்பு அல்லது புங்கம்
உண்ணிச் செடி அல்லது காட்டாமணக்கு அல்லது ஆடாதொடை
மேலே சொன்ன தழைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ எடுத்துக் கொள்ளவும் ஆக 10 கிலோ இலைகளுடன் முதலில் சொன்ன விதைகளில் எதாவது ஒன்றை 100- 200 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இவற்றை கலந்து ஊறல் முறையிலும் வேகல் முறையிலும் பூச்சி விரட்டிகள் தயாரிக்கலாம்.

ஊறல் முறை :
இலைகளையும். விதைகளையும் 2 கிலோ வீதம் எடுத்துக் கொண்டு செய்து இடித்து இலை மூழ்கும் அளவிற்கு 12 லிட்டர் மாட்டச் சிறுநீர் 3 லிட்டர் சாணக் கரைசல் சேர்த்து 7 முதல் 15 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனால் இலைகள் கலந்து கூழாக மாறிவிடும். இவற்றை 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்த பயிர்களில் அடிக்கலாம்.
மூலிகை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை :
மூலிகை பூச்சி விரட்டி தயாரிக்க தேவையான தாவரங்கள் கசப்புத் தன்மையுள்ள இலைகள் (வேம்பு) ஒடித்தால் பால் வரக்கூடிய இலைகள் (காட்டாமணக்கு) ஆடுதிங்காத இலைகள் (ஆடாதோடை) எருக்கு, நொச்சி, போன்ற இலைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ வீதம் எடுத்துக் கொள்ளவும். அவற்றை இடித்து சிறு துகள்களாக எடுத்துக் கொண்டு ஒரு பிளாஸ்டிக் டிம்மில் போட்டு ஒரு கிலோ இலைகளுக்கு ஒரு லிட்டர் கோமியம் என்ன விகிதத்தில் சேர்த்து நன்கு கலக்கி இலைகள் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 3 நாட்களில் இக்கரைசல் தயாராகும். இவற்றை தினமும் காலை, மாலையில் குச்சி வைத்து நன்கு கலக்கி விட வேண்டும். பிறகு வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் கலந்த பயிர்களில் தெளித்தால் பூச்சிகள் நம்முடைய வயலுக்கு வராது. இவற்றை பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம். செலவும் குறைவு பயிர் பாதுகாப்பாகும்.
இயற்கை மூலிகை பூச்சி விரட்டி தயார் செய்வதற்காக ஆடு திங்காத தழைகள், ஒடித்தால் பால் வரக்கூடிய இலைகள், கசப்பு தன்மையுள்ள இலைகள் ( ஆட தோடை, வேப்பிலை, எருக்கம் இலை, காட்டாமணக்கு, ஆவாரம் இலை, நொச்சி இலை இவைகளில் தலா 5 வகையான இலைகளில் தேர்வு செய்து ஒவ்வொரு தலைகளிலும் 2 கிலோ வீதம் சேகரித்து அவற்றை இடித்து இலைகள் மூழ்கும் அளவு ( மாட்டு சிறு நீர் ) கோமியம் ஊற்றி வைக்க வேண்டும். பிறகு தினமும் நன்றாக 3 வேளையும் குச்சியை வச்சு எதிர் எதிர் திசையில் சுமார் 15 முறை நல்லா கலக்கி விட, 3 நாட்களில் இவை தயாராகிவிடும். 10 நாள் கழித்து 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் (500 மில்லி) இந்த மருந்தை கலந்து இதுகூட காதிசோப்பு இல்லாட்டி சோறு வடிச்ச கஞ்சி கலந்து பயிருக்கு தெளிக்க வேண்டும்.
இது பூச்சி கொல்லி அல்ல, பூச்சி விரட்டியாகதான் இந்த தாவரக் கரைசல் வேலை செய்யும். இதன் நாற்றம் தாங்கமுடியாமல் பூச்சியெல்லாம் ஓடிப்போயிடும்.

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete