Monday, November 10, 2014

மீன் வளர்ப்பு

தண்ணீர் வளம் இருக்கு, மண் சரியில்ல; மண் நல்லாருக்கு, தண்ணியும் இருக்கு, ஆனா... வேலைக்கு ஆளுங்க கிடைக்கல - விவசாய நிலத்தை சும்மாவே போட்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் இப்படி ஒவ்வொரு காரணம் தயாரா இருப்பது இங்கே கண்கூடு!

இவர்களுக்கு நடுவே... ''தண்ணி வளமும், குறைஞ்ச ஆள் பலமும் இருந்தாலே போதும், மீன் வளர்ப்புல அருமையான லாபம் சம்பாதிக்க முடியும். இதுக்கு தினமும் அரை மணி நேரம் செலவழிச்சாலே போதும்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார்கள், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள திருஉடையான்பட்டி கணேசன்-சண்முகசுந்தரி தம்பதியர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுதில் இவர்களுடைய மீன் பண்ணையில் ஆஜரானோம். பரபரப்பாக மீன் விற்பனையிலிருந்தவர்களிடம் நாம், அறிமுகப்படுத்திக் கொள்ள... மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினர்.

''மொத்தம் எட்டரை ஏக்கர் நிலமிருக்கு. தென்னைதான் முக்கிய விவசாயம். வேளாண்மைப் பொறியியல் துறையைச் சேர்ந்தவங்க எங்க தோட்டத்துக்கு வந்து... 'தோட்டத்துல பண்ணைக்குட்டை வெட்டி, மீன் வளர்த்தா நல்ல வருமானம் கிடைக்கும். நிலத்தடி நீரும் அதிகரிக்கும். நாங்களே குட்டை எடுத்துத் தர்றோம்’னு சொன்னாங்க. நாங்க தலையாட்டினதும்... 40 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 5 அடி ஆழத்துல பண்ணைக்குட்டை வெட்டிக் கொடுத்தாங்க. அதுக்கப்பறம் குன்றக்குடி கே.வி.கே. மூலமா மீன் வளர்ப்புப் பயிற்சி எடுத்துக்கிட்டு, மீன் வளர்க்க ஆரம்பிச்சுட்டோம்.


ஆரம்பத்துல குட்டையில தண்ணியை நிரப்பினதும், தண்ணிய மண்ணு உறிஞ்சிக்கிட்டே இருந்துச்சு. குளத்துக்கரம்பை மண்ணைக் கொண்டு வந்து ஒரு அடி உயரத்துக்கு மெத்தினோம். அப்பறம்தான் தண்ணி நிலைச்சு நின்னுது. இப்ப ரெண்டு வருஷமா மீன் வளர்த்துக்கிட்டிருக்கோம். தீவனம் கொடுக்கறதைத் தவிர வேற எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. குளத்துல தண்ணி மட்டம் குறைஞ்சுடாமப் பாத்துக்கணும். மீனுங்க களவு போகாம பாத்துக்கணும், அவ்வளவுதான்'' என்று சண்முகசுந்தரி ஆரம்ப கதையைச் சொல்ல, அவரைத் தொடர்ந்தார், கணேசன்.

சராசரி 1,200 கிலோ!
'எந்தப் பிக்கல், பிடுங்கலும் இல்லாத அமைதியான, அதேநேரத்துல நல்ல வருமானமும் கொடுக்குற வேலை இது. போன ஆகஸ்ட் மாசம், 350 கெளுத்தி, 500 ரோகு, 500 கட்லா, 300 சில்வர் கெண்டை, 350 புல் கெண்டைனு மொத்தம் 2 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டிருந்தோம். மீன் தீவனத்தை கடைகள்ல வாங்கி போட்டோம். இப்போ ஒன்பது மாசம் ஆகுது. ஒவ்வொரு மீனும் கிட்டத்தட்ட முக்கால் கிலோ எடை வந்துருச்சு. 2 ஆயிரத்துல...

200 செத்திருந்தாலும் 1,800 மீன் வரைக்கும் தேறிடும். எப்படியும் எடை கணக்குல பார்த்தா... மொத்தமா 1,200 கிலோவுக்கு குறையாது. இப்போதான் பிடிச்சு விக்க ஆரம்பிச்சுருக்கோம்.


விற்பனைக்காக நாங்க எங்கயும் அலையறதில்ல. ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் பண்ணையிலயே நேரடி விற்பனை மூலமா எல்லாம் முடிஞ்சுடுது. அக்கம்பக்கத்துல இருக்குறவங்க தேடி வந்து வாங்கிக்குறாங்க. தேவையான அளவுக்கு அப்பப்போ பிடிச்சுக்குறோம். ஒரு கிலோ மீன் 80 ரூபாய்னு விக்குறோம். இதுவரை முன்னூறு கிலோ வித்துருக்கோம். மொத்தமா, 1,200 கிலோ மீன் கிடைக்கும்னு வெச்சுக்கிட்டா... 96 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, செலவுகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் போனாலும்... மீதி 66 ஆயிரம் ரூபாய் லாபம். எங்களைப் பொறுத்தவரை ஏக்கர் கணக்குல விவசாயமெல்லாம் செய்யத் தேவையில்லை. இந்த மாதிரி ரெண்டு குளம் இருந்தாலே... எந்தப்பாடும் இல்லாம ஒரு குடும்பத்துக்குத் தேவையான அளவுக்கு நிறைவா சம்பாதிச்சுட முடியும்'' என்று முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் படரச் சொன்னார்.  

விளையாத மண்ணுக்கு விரால்..! தொழில்
சிவகங்கை மாவட்டம், பாகனேரி பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.இ. வரதராஜன், தனது தோட்டத்தில் மண்வளம் சரியாக இல்லாததால்... மீன் வளர்த்து வருகிறார். தனது மீன் வளர்ப்பு அனுபவங்களை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டபோது, ''மொத்தம் 10 ஏக்கர் நிலமிருக்கு. அந்தக் காலத்து வட்டக் கிணறு எப்பவும் தண்ணி குறையாது. நல்ல தண்ணி வசதியிருந்தும், மண்ணு சரியில்லை. கிட்டத்தட்ட எந்தப் பயிரும் வராத ஈழக்களிமண் பூமி. ஓரளவு மண்ணு சுமாரா இருக்கற 6 ஏக்கர் நிலத்துல தென்னையை நட்டு இயற்கை முறையில விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன். குன்றக்குடி கே.வி.கே. ஆலோசனைப்படி சும்மா இருந்த இடத்துல இப்பத்தான் மீன் வளக்க ஆரம்பிச்சிருக்கேன்.


90 அடி நீளம், 35 அடி அகலம்ங்கிற கணக்குல 6 குளங்களை வெட்டியிருக்கேன். ரெண்டு குளத்துல விரால் வளர்க்க முடிவு பண்ணினேன். அதுக்காக நாலு மாசத்துக்கு முன்ன ஒரு குளத்துக்கு

400 ஜிலேபி கெண்டைனு ரெண்டு குளத்துலயும் விட்டேன். அதுக ஓரளவு வளந்துடுச்சு. போன மாசம், குளத்துக்கு 400 விரால் குஞ்சுனு ரெண்டு குளத்துலயும் 800 குஞ்சுகளை விட்டுருக்கேன். ஜிலேபி கெண்டை மீன், தன்னோட முட்டைகளை வாயிலயே அடைகாத்து, 18 முதல் 21 நாள் இடைவெளியில குஞ்சுகளா துப்பிக்கிட்டே இருக்கும். இந்த ஜிலேபி குஞ்சுகளை சாப்பிட்டே விரால் வளர்ந்துடும். இன்னும் 8 மாசம் கழிச்சுதான் எவ்வளவு விரால் கிடைக்கும்னு தெரியும்.

அந்த ரெண்டு குளம் போக, மத்த நாலு குளத்துலயும் மிர்கால், கட்லா, ரோகு மீன்களை ஒவ்வொரு குளத்துக்கும் 400 குஞ்சுகள்ன்ற கணக்குல விட்டுருக்கேன். தினமும் ஒரு மணி நேரம் தீவனம் வெச்சு, குளங்களை ஒரு சுத்து சுற்றி வருவேன். அவ்வளவுதான், வேற எந்த ஜோலியும் இல்லை. ஒவ்வொரு குளத்துக்கும் தினமும் ஒரு கிலோ தவிடு, அரை கிலோ கடலைப் பிண்ணாக்கு, 10 கிலோ சாணம் போடுறேன். கே.வி.கே. யிலிருந்து குருணைத் தீவனம் கொடுத்திருக்காங்க. டேஸ்டுக்காக அப்பப்ப அதையும் கொஞ்சம் சேத்துக்குவேன்.

கிலோ 250 ரூபாய்!

இப்ப வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாம நல்லா வளந்துட்டு வருது. விரால் மீனுக்கு நல்ல கிராக்கி இருக்கு. கிலோ 250 ரூபாய்க்கு வாங்குறாங்க. நான் குளத்துல விட்டிருக்குற 800 குஞ்சுகள்ல... இழப்பு போக, 300 கிலோ கிடைச்சாலும்... 75 ஆயிரம் ரூபாய்  வருமானம் கிடைக்கும். மத்த குளங்கள்ல கிடைக்குற வருமானம்... செலவு கணக்குல போனாலும்... விரால் மூலமா வர்ற வருமானம் மொத்தமும் லாபமா கிடைச்சுடும். எதுக்கும் உதவாத மண்ணை வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியலையேனு கஷ்டப்பட்ட எனக்கு... இப்படி வழி காட்டிய குன்றக்குடி கே.வி.கே.க்குத்தான் நன்றி சொல்லணும்'' என்று நெகிழ்கிறார் வரதராஜன்.

இப்படித்தான் அமைக்கணும் குளம்!
குன்றக்குடியில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கே.வி.கே. (வேளாண் அறிவியல் மையம்). மீன் வளர்ப்பு பற்றிய பயிற்சிகளோடு, தொடர் ஆலோசனைகளையும் கொடுத்து வருவது, இப்பகுதியில் மீன் வளர்ப்பவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. இங்கே, அனைவருக்கும் பயன்படும் வகையில், இம்மையத்தின் விஞ்ஞானி கணேசன், மீன் வளர்ப்பு முறைகளைப் பற்றி விளக்குகிறார்.

செவ்வக வடிவில் குளம்!
''ஆறு, குளம், ஏரி, ஓடை, கசிவுநீர்க் குட்டை மாதிரியான இடங்களுக்கு அருகில் உள்ள நிலங்கள் மீன் வளர்ப்புக்கு ஏற்றவை. அதிக தண்ணீர் வளம் இருந்து, விவசாயம் செய்ய முடியாத நிலங்களிலும் மீன் வளர்க்கலாம். களிமண், வண்டல் மண் சேர்ந்த நிலமாகவும், போக்குவரத்து வசதி உள்ள இடமாகவும் இருந்தால், நல்லது. களிமண் நிலமாக இருந்தால், தண்ணீர் கசிவு இருக்காது. மணல் அதிகமாக உள்ள மண்ணில் கசிவு இருக்கும். கசிவைத் தடுக்க, குளத்தின் தரைப்பகுதியில் ஒரு அடி உயரத்துக்கு களி மண்ணைப் பரப்பி மெத்தி விடவேண்டும். மீன்குளத்தை செவ்வக வடிவத்தில் அமைத்தால், கையாள்வது சுலபம். இருக்கும் இட வசதி, தண்ணீர் வசதி ஆகியவற்றைப் பொறுத்து, குளத்தின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால், ஆழம் ஐந்தடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.  

கரை... கவனம்!

குளத்தின் கரைகளை நீர்க்கசிவு இல்லாத அளவுக்கு பலமாக அமைக்க வேண்டும். வண்டல் மற்றும் மணல் ஆகியவற்றோடு, களி மண்ணையும் கலந்து கரை அமைக்கலாம். கரையின் மேல்புறம் ஒரு மீட்டர் அகலம் அளவுக்கு சமதளமாகவும், இரு புறங்களும் சரிவாகவும் இருக்க வேண்டும். நீர்மட்டத்துக்கு மேல் கால் மீட்டர் அளவுக்கு கரையின் உயரம் இருக்க வேண்டும். கரையின் வெளிப்புறத்தில், தென்னை, பப்பாளி... போன்ற அதிகம் வேர் விடாத மரங்களை நிழலுக்காக நடவு செய்யலாம்.  

பச்சை நிறமே... பச்சை நிறமே!
அடுத்து, குளத்தில் தாவர மிதவைகள் வளர்வதற்கான விஷயங்களைச் செய்ய வேண்டும். குளத்தில் ஒரு அடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்பி, நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை சாணத்தைப் போட வேண்டும். பச்சை சாணத்தை உடனடியாகப் போடாமல்... ஒரு நாள் வைத்திருந்துதான் போட வேண்டும். மழைநீரை நம்பி வெட்டப்படும் குளமாக இருந்தால்... தண்ணீர் நிரப்புவதற்கு முன்பே சாணத்தைப் போட்டு விடலாம். ஐந்து அல்லது ஆறு நாட்களில் சாணம் கரைக்கப்பட்ட தண்ணீர் பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். அந்த சமயத்தில் தண்ணீர் மட்டத்தை நான்கடி அளவுக்கு உயர்த்தி, மீண்டும் நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை அளவுக்கு சாணம் போட வேண்டும். அடுத்த பத்து நாட்களில் தாவர மிதவைகள் உருவாகி விடும். தண்ணீர் பச்சை நிறமாக மாறுவதை வைத்து, இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை மிதவைகள் உருவாகாவிட்டால், வேறு நீர் நிலைகளில் உள்ள பாசிகளை, எடுத்து வந்து போடலாம்.

தாவர மிதவைகள்... கவனம்!
தாவர மிதவைகள், குளத்தில் சரியான அளவுக்கு இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால், பிராண வாயுவின் அளவு குறைந்து மீன்கள் இறந்து விடும் வாய்ப்பும் உள்ளது. குறைவாக இருந்தால், இயற்கை உணவு பற்றாக்குறை ஏற்பட்டு மீன்களின் வளர்ச்சி குறைந்துவிடும். 'தாவர மிதவைகள் சரியான அளவுக்கு உருவாகியிருகின்றனவா?’ என்று பார்ப்பதற்கும் ஒரு வழி இருக்கிறது.

காலை பத்து மணி அளவில் குளத்தில் இறங்கி நின்று கொண்டு, முழங்கை வரை மடித்து, உள்ளங்கையை மேற்புறமாக திருப்பி வைத்துக் கொண்டு... கையைக் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீருக்குள் இறக்க வேண்டும். உள்ளங்கை கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்து மறையத் தொடங்கும். முழங்கைக்கும், தோள்பட்டைக்கும் இடைப்பட்ட புஜப்பகுதி பகுதி மூழ்கும்போது உள்ளங்கை முழுவதுமாக மறைந்தால்... தாவர மிதவைகள் சரியான அளவில் உள்ளன என்று அர்த்தம். தோள்பட்டை பகுதி வரை மூழ்கிய பிறகும், உள்ளங்கை பார்வையில் இருந்து மறையவில்லை என்றால், மிதவைகள் குறைவாக உள்ளன என்று அர்த்தம். முழங்கை மூழ்குவதற்கு முன்பே உள்ளங்கை பார்வையிலிருந்து மறைந்தால், மிதவைகள் அதிகமாக உள்ளன என்று அர்த்தம். இதை வைத்து சரியான அளவைப் பராமரிக்க முடியும்.

மிதவைகளின் அளவு குறைந்திருந்தால்... கொஞ்சம் சாணத்தைக் கொட்டுவதன் மூலம் அதன் அளவை சமப்படுத்திவிடலாம். மிதவைகளின் அளவு அதிகமாக இருந்தால், குளத்தின் நீரை கொஞ்சம் வெளியேற்றி, புது நீரை விட வேண்டும்.

பகுதிக்கேற்ற மீன் ரகங்கள்!
சரியான அளவில் தாவர மிதவைகள் உற்பத்தியான பிறகுதான் மீன் குஞ்சுகளை குளத்தில் விட வேண்டும். ஒரு ஏக்கர் குளத்தில், அதிகபட்சமாக 4 ஆயிரம் மீன்குஞ்சுகள் வரை விட்டு வளர்க்கலாம். மீன்குஞ்சுகளை விடும் முன்பாக, நமது பகுதியில் விற்பனை வாய்ப்பு, குளத்தின் அளவு, தண்ணீர் வசதி போன்றவற்றை வைத்து, வளர்க்க இருக்கும் ரகங்களை முடிவு செய்ய வேண்டும்.

பொதுவாக நமது பகுதியில், கெண்டை வகைகள், விரால், கெளுத்தி என்ற தேளி ஆகிய ரகங்கள்தான் வணிகரீதியாக லாபகரமாக இருக்கின்றன. பத்து மாதங்கள் வரை தொடர்ந்து குளத்தில் நீர் நிறுத்தும் வசதி இருந்தால், கெண்டை மீன்களையும்; ஆறு மாதங்கள் வரை நீர் நிறுத்தும் வசதி இருந்தால் கெளுத்தி மீன்களையும்; நான்கு மாதங்கள் வரை மட்டுமே நீர் நிறுத்தும் வசதி இருக்கும்பட்சத்தில், ஜிலேபி கெண்டை மீன்களையும் வளர்க்கலாம்.  

குஞ்சுகளுக்கு 50 நாள் வயது!
குஞ்சுகளை முடிவு செய்த உடன், 35 முதல் 50 நாட்கள் வயதுள்ள தரமானக் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட வேண்டும். இந்த வயதில் குஞ்சுகள் விரல் அளவுக்கு வளர்ந்திருக்கும். ஒரு குஞ்சு 1 ரூபாய் 50 காசு முதல் 3 ரூபாய் 50 காசு வரை ரகத்துக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. குளத்தின் அளவுக்கேற்ற எண்ணிக்கையில்தான் குஞ்சுகளை வளர்க்க வேண்டும்.


கெண்டை ரகங்களுக்கு ஒரு மீனுக்கு ஒரு சதுர அடி இடம் தேவை. ஒரு சதுர அடியில் 3 முதல் 4 கெளுத்தி மீன்களை வளர்க்கலாம். 25% கட்லா, 15% ரோகு, 20% மிர்கால்,
10% வெள்ளிக்கெண்டை, 10% புல் கெண்டை, சாதா கெண்டை 20% என்ற கணக்கில் கெண்டை மீன் ரகங்களைக் கலந்து வளர்க்கலாம்.

வழக்கத்தை மாற்றக்கூடாது!
மீன்களுக்கு குருணை வடிவிலான சரிவிகித உணவு, ஒரு கிலோ 22 ரூபாய் என்ற விலையில் கடைகளில் கிடைக்கிறது. தவிடு, பிண்ணாக்கைத் தீவனமாகக் கொடுப்பதைவிட இது செலவு குறைவாக இருக்கும். ஒரு மீனுக்கு அதன் உடல் எடையின் அளவில் 2 முதல் 5 சதவிகித அளவுக்கு தினமும் உணவு கொடுத்தால் போதும். மாதத்துக்கு ஒரு முறை கொஞ்சம் மீன்களை பிடித்து, அவற்றின் எடையைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாளுக்கான தீவனத்தை மொத்தமாகக் கொடுக்காமல், இரண்டாகப் பிரித்து காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் கொடுக்க வேண்டும்.

இடத்தையும் நேரத்தையும் மாற்றாமல் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தினமும் தீவனத்தை இட வேண்டும். மீனின் மொத்த எடை எவ்வளவோ... கிட்டத்தட்ட அந்த அளவு தீவனத்தைத்தான் அது சாப்பிட்டிருக்கும் என்பது ஒரு கணக்கு. இதை வைத்து செலவுக் கணக்கைச் சரிபார்த்துக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு கிலோ எடையுள்ள மீன், அதன் வாழ்நாளில் ஒரு கிலோ முதல் ஒன்றே கால் கிலோ அளவுக்கு தீவனம் சாப்பிட்டிருக்கும். தேளி மீன்கள் ஆறு மாதத்தில் விற்பனைக்கேற்ற வளர்ச்சியை எட்டி விடும். கெண்டை மீன்கள் எட்டு மாதங்களில் வளர்ச்சியை அடைந்து விடும். மீன்கள், முக்கால் கிலோ அளவு எடைக்கு வந்தவுடன் விற்பனையைத் தொடங்கலாம்' என்ற கணேசன் நிறைவாக.

நோய்கள் தாக்காது!
கெண்டை மீன்களைப் பெரும்பாலும் நோய்கள் தாக்குவதில்லை. நீர் மேலாண்மை, தீவன மேலாண்மையைச் சரியாகப் பராமரித்தாலே போதும். விராலுக்கு மட்டும் குளிர் காலத்தில் பூஞ்சண நோய் வரும். இந்நோய் தாக்கிய மீனின் உடம்பில் சாம்பல் பூசியதைப் போல வெண்மையான படலம் படிந்திருக்கும். நாளாக, நாளாக அது புண்ணாகி விடும். பிறகு பாதிக்கப்பட்ட மீன் கீழே இருக்க முடியாமல் நீர்மட்டத்துக்கு மேலே வந்து விடும். சோர்வாக இருக்கும், அப்படி பாதிக்கப்பட்ட மீன்களைப் பிடித்து தனியாக கொண்டு போய் புதைத்தோ அல்லது எரித்தோ விட வேண்டும்.

மஞ்சள், வேப்பிலை ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து, அரைத்துப் பொடித்து அவ்வப்போது குளத்தில் தூவி விட்டால்... இந்நோய் எட்டியே பார்க்காது. அதையும் தாண்டி வந்து விட்டால், ஒரு லிட்டர் ஃபார்மாலின்  திரவத்தை 40 லிட்டர் நீரில் கலந்து குளத்தில் தெளித்தால், சரியாகி விடும்'' என்றார்.


 
ஆறு ரகங்களும் இருக்க வேண்டும்!
கெண்டை மீன்களில் கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளி கெண்டை (சில்வர் கார்ப்), புல் கெண்டை, சாதா கெண்டை என ஆறு ரகங்கள் உள்ளன. இந்த ஆறு ரக மீன்களும் தண்ணீரில் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. கட்லா, வெள்ளிக் கெண்டை ஆகியவை குளத்தின் மேல்புறத்திலும், ரோகு, புல் கெண்டை ஆகியவை குளத்தின் நடுப்பகுதியிலும் சாதா கெண்டை, மிர்கால் ஆகியவை குளத்தின் அடிப்பகுதியிலும் வசிக்கும் பழக்கத்தைக் கொண்டவை. அனைத்துப் பகுதிகளிலும் மீன்கள் இருந்தால்தான் அதிக எண்ணிக்கையில் வளர்க்க முடியும்.  

தாவர மிதவைகளில் சில புழு, பூச்சிகளும் உருவாகும். இவற்றை விலங்கின மிதவைகள் என்று சொல்வார்கள். கட்லா மீன்கள் விலங்கின மிதவைகளையும், வெள்ளிக் கெண்டை மீன்கள் தாவர மிதவைகளையும் உணவாக எடுத்துக் கொள்கின்றன. ரோகு மீன்கள் இவை இரண்டையுமே உணவாக எடுத்துக் கொள்கின்றன. புல் கெண்டை மீன்கள் குளத்தில் உள்ள சிறு புற்களை அதிகமாக உண்டு, அவற்றில் செரிக்காதவற்றை வெளியே துப்பும் பழக்கம் கொண்டவை. இப்படி வெளியே துப்பப்படும் உணவை மிர்கால் மற்றும் சாதா கெண்டை மீன்கள் சாப்பிட்டு விடும். அதனால், இந்த ஆறு ரகங்களையும் கலந்து வளர்க்கும்போது தீவனம் வீணாகாமல் தடுக்கப்படும்.

 நாமளே தயாரிக்கலாம்...குருணைத் தீவனம்!
ஒரு கிலோ தீவனம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்: சோயாபீன்ஸ் மாவு-210 கிராம், கருவாட்டுத்தூள்-203 கிராம், இறால் கருவாட்டுத்தூள்-200 கிராம், சோளமாவு-173 கிராம், கோதுமை மாவு-200 கிராம், உப்பு-4 கிராம், வைட்டமின் பொடி-7 கிராம். இவை மொத்தம் 997 கிராம் எடை வரும். இவற்றை தண்ணீர் சேர்த்து தயாரிக்கும்போது ஒரு கிலோ எடைக்கு வந்து விடும்.

இந்தப் பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு... கலந்து வைத்துக் கொண்டு அதில், கொதிக்க வைத்து ஆறிய நீரை ஊற்றி 5 நிமிடம் கிளறி, குக்கரில்
5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு, வெந்தக் கலவையை உருண்டைகளாக்கி இடியாப்பம் பிழியும் குழாயில் இட்டு பிழிந்து காய வைத்தால், தீவனம் தயாராகி விடும். அதை கோணியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

 தேளிக்குத் தடையில்லை! 
தேளி மீனுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பற்றி பேசிய கணேசன், ''தேளியைத் தடை பண்ணிட்டதா பல பேரு தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க. 'ஆஃப்ரிக்கன் கேட் ஃபிஷ்’னு ஒரு ரக தேளி மீன் இருக்கு. இதோட முள் அதிக விஷத்தன்மை கொண்டது. அதனால் இந்த ரகத்துக்கு மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி கெளுத்தி வகையைச் சேர்ந்த தேளிகளுக்குத் தடையில்லை. இவற்றுக்கு அதிக இட வசதி தேவையில்லை என்பதால், தொட்டிகளில்கூட வளர்க்க முடியும். இது சுவை குறைந்து இருப்பதால், அதிக விலைக்கு விற்பனையாவதில்லை'' என்றார்.

No comments:

Post a Comment