Monday, May 5, 2014

செம்மறி ஆடு வளர்ப்பு

ஒரு வருடத்தில் 45 கிலோ எடை.
வருடத்துக்கு 450 குட்டிகள்.சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருந்தாலும் சரி... பெரு விவசாயிகளாக இருந்தாலும் சரி... அவர்களுக்கு ஆபத்து நேரங்களில் கை கொடுப்பது கால்நடை வளர்ப்புதான். அதிலும் குறைந்த முதலீடு, குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் ஈட்டிக் கொடுப்பது ஆடு வளர்ப்புதான். தற்போது விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் சுருங்கிக் கொண்டே வரும் சூழ்நிலையில், 'கொட்டில் முறை ஆடு வளர்ப்பு’ விவசாயிகளிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தலைச்சேரி மற்றும் போயர் ஆடுகளைக் கலப்பினம் செய்து, கொட்டில் முறையில் வளர்த்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், திருநந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்.


''எங்கப்பா, பால் பண்ணை வெச்சுருந்தார். அதனால, எனக்கு சின்ன வயசுல இருந்தே கால்நடை வளர்ப்புல ஈடுபாடு அதிகம். ஆனா, சூழ்நிலையால பிசியோதெரபி படிச்சுட்டு வேலைக்குச் சேர்ந்தேன். அதுல கிடைச்ச வருமானம்... திருப்தியா இல்லை. அதனால, தொழிலை மாத்தலாம்னு யோசிப்பதான், 'ஆடு வளக்கலாம்'னு தோணுச்சு. உடனே அது சம்பந்தமான விஷயங்களைத் தேடி அலைய ஆரம்பிச்சேன். அப்போதான் கொட்டில் முறை பத்தியும், கலப்பினங்களைப் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே ஆடு வளர்ப்புல இறங்கிட்டேன்' என்று உற்சாகமாக ஆரம்பித்த வெங்கடேசன், தொடர்ந்தார்.  


பிஸியோதெரபியிலிருந்து ஆடு வளர்ப்புக்கு!  
அதிக எடைக்கு போயர் ஆடுகள்!

'போயர் ரக ஆடுதான் சீக்கிரமாவே அதிக எடைக்கு வந்துடும்னு சொன்னாங்க. அதனால மகாராஷ்டிரா மாநிலத்துல இருந்து ஒரிஜினல் போயர் ரகத்துல 18 பெட்டைகளையும், 2 கிடா ஆடுகளையும் வாங்கிட்டு வந்தேன். அதோட தலைச்சேரி, சிரோஹி, கன்னியாடு, கொடியாடு ரக பெட்டைகளையும் வாங்கினேன். ஒவ்வொரு இனத்தோடயும் போயர் கிடாக்களைக் கலப்பு செஞ்சு பாத்ததுல, தலைச்சேரி இனத்தோட கலப்பு செஞ்சு பிறந்த குட்டிக மத்ததுகளவிட சாதுவாவும் ஆரோக்கியமாவும் இருந்துச்சு. அதோட ஒரே ஈத்துல மூணு குட்டிக வரைக்கும் பிறந்துச்சு. அதனால மத்த இனங்களையெல்லாம் ஒதுக்கிட்டு, 100 தலைச்சேரி பெட்டைகளை மட்டும் வாங்கினேன். இப்போ போயர் கிடா, தலைச்சேரி பெட்டைகளை மட்டும் கலந்து கலப்பினக் குட்டிகளை பெருக்கிட்டிருக்கேன். தனியா, சுத்தமான போயர் ரகத்தையும் பெருக்கிட்டிருக்கேன்.

Saturday, May 3, 2014

வெள்ளாடுகளுக்கு தீவனத் தேவை


வெள்ளாடுகள் உடல் எடையில் 4 முதல் 5% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும் என்று குறிப்பிட்டேன். நமது பகுதி ஆடுகள் சராசரி 25 கிலோ எடையே இருக்கின்றன. (பொலி கிடாக்கள் மற்றும் சமுனாபாரி போன்ற இன ஆடுகளின் எடை கூடுதலாக இருக்கும்.
ஆகவே, 25 கிலோ ஆட்டிற்கு 1 முதல் 1.25 கிலோ தீவனம் காய்வு நிலையில் தேவைப்படும். இதனைப் பசுந்தழை, உலர்ந்த தீவனம், கலப்புத் தீவனமாகக் கீழ் வருமாறு வழங்கலாம்.

காய்வு நிலையில்
பசுந்தழை / புல் 3 கிலோ காய்வு நிலையில்           0.75 கிலோ
உலர் தீவனம் 300 கிராம் காய்வு நிலையில்          0.25 கிலோ
கலப்புத் தீவனம் 250 கிராம்  காய்வு நிலையில்    0.24 கிலோ

காய்வு நிலையில் மொத்தம்   1.24 கிலோ
பொதுவாகத் தீவனம் அளிப்பது பற்றிக் குறிப்பிட்டோம். சிற்றூர்களில், பகுதிக்கு ஏற்றாற்போல், சாமானிய ஆடு வளர்ப்போர் பல்வேறு தீவனங்கள் அளிப்பார்கள். அது பற்றியும் சிறிது குறிப்பிடாவிட்டால், செய்திகள் பெரும் பண்ணை வைத்திருப்போருக்கு மட்டுமே என்றாகிவிடும்.

புளியங்கொட்டை
இது சிறந்த ஆட்டுத் தீவனம். தோல் நீக்கி, அரைத்துத் தீவனமாகக் கொடுக்கலாம். வீட்டில் உள்ள புளியங்கொட்டையை மலிவான விலைக்கு விற்றுவிட்டு, அதிக விலையில் ஆட்டுத் தீவனம் வாங்குவது சரியில்ல.

வேலிக் கருவை நெற்றுகள்
இதுவும் தானியத்திற்கு ஈடான சிறந்த ஆட்டுத் தீவனம். இதில் 15 / 25% சர்க்கரைப் பொருள் உள்ளதால், தினம் 100 / 200 கிராம் மட்டுமே கொடுக்கலாம். சாமானியர்கள் இந்நெற்றுகளை சேகரித்து வைத்து சிறிது சிறிதாகத் தீவனமாக அளிக்கலாம்.

எள்ளு பிண்ணாக்கு
இதுவும் சிறந்த பிண்ணாக்கு. கறவை மாடுகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. வெள்ளாடுகளுக்கும் ஏற்றது.

தேங்காய் பிண்ணாக்கு
இதில் புரதம் சற்றுக் குறைவே. மேலும் விரைவில் கெட்டுவிடும் தன்மை கொண்டது. இது பெருமளவில் கலப்புத் தீவனம் உற்பத்தி செய்வோருக்கு நேரடியாக எண்ணெய் ஆலையிலிருந்து அனுப்பப்பட்டு விடுகின்றது. எங்கும் தாராளமாகக் கிடைப்பதில்லை.

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு


நெற்பயிரோடு மீன்வளர்ப்பு:
நெல் வயல்களில் நாற்று நட்டது முதல் அறுவடை வரை நெற்பயிரோடு மீன்வளர்த்தல் முறை, அறுவடைக்குப் பின் மழைக்காலங்களில் பெருமளவு நீர் வயல்களில் நிரம்புவதால் அவற்றில் மீன் வளர்த்தல் மற்றொரு முறை. பொதுவாக வயல்களில் நெல், உளுந்து, கேழ்வரகு என்ற பயிர் சுழற்சியையே நாம் அறிவோம். ஆனால் வெவ்வேறு இடங்களில் சூழ்நிலைக்கேற்ப ஒரு முறை நெல்லும் மறுமுறை மீனும் வளர்த்து நிலத்தையும் நீரையும் முழுமையாகப் பயன்படுத்துதல் ஒரு புதுமுறை சுழற்சி எனலாம். இம்முறை பயிர் – மீன் சுழற்சியால் அதிக பயன் அடைவதோடு பயிர்களை தாக்கும் பூச்சி, புழுக்களையும் களைகளையும் கட்டுப்படுத்தலாம்.
நெல்வயல்களில் வளரும் மீன்கள் நிலத்தை தொடர்ந்து கிளறிவிடுவதோடு, மீனின் கழிவில் நிறைந்துள்ள தழைச்சத்து பயிர்களுக்கு தொடர்ந்து கிடைக்கின்றது. நெல்மணியோடு விலை குறைந்த, புரதம் நிறைந்த மீனும் கிடைப்பதால் புரதப்பற்றாக்குறை நீங்குகிறது. நெல்லையும் மீனையும் சேர்த்து வளர்க்க, விளையும் வயல்களில் குறைந்தது நான்கைந்து மாதங்களாவது நீர் தேங்கியிருக்க வேண்டும். இவ்வகை வயல்களின் வரப்புகள் உறுதியாகவும் உயரமாகவும் இருப்பது அவசியம். வயலின் பள்ளமான பகுதிகளில் ஆழமான குளங்களும் அவற்றிலிருந்து பிரிந்து செல்லும் பல வாய்க்கால்களும் அமைத்தால் வயலின் நீர் குறைந்து தரைமட்டத்தை அடையும் காலங்களில் மீன்கள் மடிந்துபோகாமல் வாய்க்கால்கள் வழியாக குளத்தை வந்தடைந்து பிழைக்கக்கூடும். வாய்க்கால்கள் 50 செ.மீ. அகலமும், 30 செ.மீ. ஆழமும் கொண்டதாய் இருக்க வேண்டும். வயலுக்கு நீர் பாய்ச்சும் வழியின் மூலமாகவும், வெளியேறும் வழி மூலமாகவும் மீன்கள் தப்பிச்செல்வதை தடுக்க வலைகளைப் பொருத்த வேண்டும்.
மேற்கூறிய வசதிகளைக் கொண்ட வயல்களில் உறுதியான வேர்களுடன் குறைந்த வெப்பத்தையும் தேங்கி நிற்கும் நீரையும் தாங்கக்கூடிய காலப்பயிர்களை பயிரிடலாம். நெற்பயிரின் நடவுக்குப் பின் விரலளவு மீன் அல்லது அதற்கு மேல் வளர்ந்த மீன்களை நெல்வயல்களில் எக்டேருக்கு 2000 வரை இருப்பு செய்யலாம். இத்தகைய பயிர் வகைகளை பயிரிட்டால் நான்கைந்து மாதங்களில் எக்டர் ஒன்றுக்கு 500 கி.கி. மீன்கள் கிடைக்கிறது. இம்முறையில் நெற்பயிர்களுடன் சாதாக்கெண்டை, திலோப்பியா, விரால் போன்ற மீன் இனங்களையும் நன்னீர் இறால்களையும் வளர்த்தெடுக்கலாம்.
நிலவாழ் தாவரங்கள் – மீன்வளர்ப்பு: காய்கறி, பழமரங்கள், தென்னைமரம், புல் வகைகள் மற்றும் பூச்செடிகள் ஆகியவைகளை குளக்கரையின் மேல் வளர்க்கலாம். இப்பயிர் வகைகள் உணவாகவும், உரமாகவும் பயன்படுகிறது.

சிறிய குளத்தில் மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பலனடைந்துள்ளதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது. வேலூர் மாவட்டம் அண்ணாத்துரை அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் கட்டுரை தனியே ஒரு குளம் வெட்டி அவர் செய்துள்ள பணிகளைக் காட்டுகிறது.
குளங்களைக் குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து அனுபவம் பெற்ற இவர், விரால் வளர்ப்பில் இலாபம் உண்டு என்று கேள்விப்பட்டு கிணறு மற்றும் ஏரிகளில் வளர்த்து அதை உண்மை என்றும் அறிந்த இவர் தனது நிலத்தில் குளம் வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.

வளர்ப்பு முறை

ஐந்து சென்ட் நிலத்தில், எட்டு அடி ஆழ குளம் வெட்டி, இரண்டு டிராக்டர் களிமண் கொண்டு நிரப்பி… 5 அடி உயரத்துக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக நிறுத்தும்போது, வெயிலின் தாக்கம் குறைவாகவும், திருட்டுப் போகாமலும் இருக்கும். தண்ணீர் நிரப்பிய பிறகு 2,000 விரால் மீன்குஞ்சுகளைக் குளத்தில் விடவேண்டும். ஒரு மாத வயதுடைய குஞ்சுகளாகப் பார்த்து வாங்கி விடுவதுதான் நல்லது. அதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால்… சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். இல்லாவிட்டால், பெரியக் குஞ்சுகள், சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும். மீன்குஞ்சு விட்ட மறுநாள், தாமரை அல்லது அல்லிக் கிழங்குகளில் நான்கை ஏரிகளில் இருந்து எடுத்து வந்து, குளத்தின் நான்கு பகுதிகளிலும், கரையில் இருந்து ஐந்து அடி இடைவெளிவிட்டு, குளத்துக்குள் ஊன்றிவிட வேண்டும். கிழங்கு வளர்ந்து படர்ந்து விடும். அவற்றின் நிழல் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் நேரங்களில் மீன்கள் வந்து தங்கிக்கொள்ளும்.

தீவனச் சேதத்தைக் குறைக்கும் தெர்மாக்கூல்!

மீன்குஞ்சுகளுக்கு, தீவனம் கொடுப்பதற்கு தெர்மாக்கூல் அட்டையை தண்ணீரோடு ஒட்டி இருப்பது போன்று நான்கு இடங்களில் வைக்க வேண்டும். குச்சிகளை நட்டு, அதன் மேல் தெர்மாக்கூல் அட்டையைக் குத்தி வைக்கலாம். தெர்மாக்கூல் மீது தீவனத்தைப் போட வேண்டும். மீன்கள் தெர்மாக்கூல் மீது ஏறி, தீவனத்தைச் சாப்பிடும். இதனால் தீவன சேதாரம் ஏற்படாது.
கடலைப் பிண்ணாக்குத் தூளை ஆரம்பத்திலிருந்து 20 நாட்கள் வரை 2 கிலோவும்; அடுத்த 10 நாட்களுக்கு 6 கிலோவும்; அடுத்த 15 நாட்களுக்கு 10 கிலோவும் இட வேண்டும். அதற்கு பிறகு, தீவனத்துக்காக 10 கிலோ ஜிலேபி மீனைக் குளத்துக்குள் விடவேண்டும். இவற்றிலிருந்து உற்பத்தியாகும் மீன்குஞ்சுகளை, விரால் மீன்கள் சாப்பிட்டுக் கொள்ளும்.

கூட்டு மீன் வளர்ப்பில் விரால்

மீன் வளர்ப்பு குளமொன்றில் குளத்தின் மேல் மட்டம் முதல் அடிமட்டம் வரையிலான பல்வேறு பகுதிகளிலும் பரவி அப்பகுதிகளில் இருக்கும் பலவகையான உணவினங்களை தமது உணவுப் பழக்கத்திற்கேற்ப உண்டு, இடத்திற்கும் உணவிற்கும் போட்டியில்லாமலும் சண்டையில்லாமலும் கூடி வாழ்ந்து நன்கு வளர்ந்து உயர்வான உற்பத்தியைத் தரக்கூடிய வேக வளர்ச்சிக் கெண்டைகளான கட்லா (நீரின் மேற்பரப்பு), வெள்ளிக்கெண்டை (நீரின் மேற்பரப்பு), ரோகு (நீரின் நடுமட்டம்), மிக்கால் (நீரின் அடிமட்டம்), சாதாக்கெண்டை (நீரின் அடிமட்டம்), புல்கெண்டை (குளத்தின் கரையோரப்பகுதி), வெள்ளிக்கெண்டை ஆகிய கெண்டைமீன்களை உயிரியல் சூழல் மற்றும் வளர்ப்பியலுக்கு உரிய இன விகிதாச்சாரப்படி சரியாக இருப்பு அடர்த்தியில் இருப்புச்செய்து வளர்ப்பது கூட்டுமீன் வளர்ப்பாகும்.
கூட்டுமீன் வளர்ப்புக் குளத்தில் புதிய மீன் இனங்களைச் சேர்த்து வளர்க்கையில் ஏற்கனவே உள்ள மீனினங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. கெண்டை, பால்மீன், நன்னீர் இரால் மற்றும் விரால் ஆகியவை கூடுதலாகச் சேர்த்து வளர்க்கலாம். புதிய மீன் இனங்களைச் சேர்க்கும்போது அவற்றுக்கு எவ்வளவு இடம் கொடுக்கலாம் என்பதை அதற்கான மீன்வளர்ப்பு அறிவியல் அறிஞரே வழிகாட்டவேண்டும்.
விரால்களைச் சேர்த்து வளர்ப்பதால் பல பலன்கள் உண்டு. விரால்களை வளர்ப்பதற்கு தனியான வசதி (குளம்) இல்லாதபோது கூட்டு மீன்வளர்ப்பு குளத்தில் விரால்களைக் கெண்டைகளோடு சேர்த்து வளர்த்து பயன்பெறலாம். விரால்கள் மற்ற வளர்ப்பு மீன்களுடன் உணவுக்காக போட்டியிடுவதில்லை. விரால்களுக்கு விசேட சுவாச உறுப்புகள் உண்டு. தோலாலும் சுவாசிக்கும். வெளிமடைக் காற்றையும் சுவாசிக்கும். சில பயனற்ற, சிறிய நாட்டுக்கெண்டைகள் மற்றும் களை மீன்களை விரால்மீன்கள் உண்டு அழித்துவிடும். எனவே களை மீன்களால் உணவு வீணாவது தடுக்கப்பட்டுக் கெண்டை மீன்களுக்கான தீனி, கெண்டைகளுக்கு முழுமையாகக் கிடைக்கும்.
கெண்டை மீன்களின் உற்பத்தியோடு விரால் மீனின் உற்பத்தியும் குளத்தின் உற்பத்தியாகச் சேர்ந்து கிடைப்பதால் குளத்தின் மொத்த மீன் உற்பத்தியும் லாபமும் அதிகமாக இருக்கும். கூட்டுமீன் வளர்ப்பில் இருப்புச் செய்யப்படும் மீன்களுள் 2-5 சதம் மட்டும்விரால் மீன்களை இருப்புச் செய்தால் போதுமானது.

வேலி மசால்

சவுண்டல் (அ) வேலிமசால்
சவுண்டல் (அ) வேலிமசால்

ஈரோடு – கரூர் சாலையில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக கால்நடை தீவனமான “வேலிமசால்’ பயிரிடப்பட்டுள்ளது. கால்நடை தீவனமாக புல்வகையை சேர்ந்த வேலிமசால் பயன்படுகிறது. இதற்கு டிவிடிவி, கூவாப்புல், வேலிபுல் என பல பெயர் உள்ளது. ஒரு ஏக்கர் தென்னை மரத்துக்கு இரண்டு கிலோ விதை தேவைப்படுகிறது. விதையை கொதிநீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து, ஒரு இரவு முழுவதும் குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும்.காலையில் அந்த விதையை தென்னை தோப்பு வைத்திருக்கும் விவசாயிகள் ஊடுபயிராக பயிரிடலாம்.
விதை விதைத்த நான்காவது நாளில் செடி துளிர்த்துவிடும். தென்னைக்கு காட்டும் தண்ணீரே காட்டினால் போதுமானது. விரைந்து வளரக்கூடிய இந்த புல் செடியை வெட்டி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.கால்நடைகளுக்கான தீவனம் குறைந்து வரும் இவ்வேளையில் இதுபோன்ற செடிகள் நல்ல லாபத்தை விவசாயிகளுக்கு ஈட்டித்தருகிறது. ஐந்தாண்டு வரை இந்த செடியிலிருந்து இலைகளை அறுக்கலாம். ஈரோடு – கரூர் செல்லும் வழியில் சாவடிப்பாளையம் புதூர் அருகே கேட்புதூர் பகுதியில் வேலிமசால் செடி அதிகளவு தென்னைகளுக்கு இடையே ஊடுபயிராக பயிரடப்பட்டுள்ளது. பார்க்க அழகாகவும், வருமானம் தரக்கூடியதாகவும் உள்ளது. செடியில் பச்சியம் சத்து அதிகளவு உள்ளதால், கால்நடைகளுக்கு மட்டுமல்ல தென்னை மரத்துக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். செடியின் ஒரு கிலோ விதை 650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன்மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். தென்னை, பாக்கு, வாழைகளுக்கு இடையே இதை ஊடுபயிராக பயிரிடலாம்.

குதிரை மசால்



குதிரை மசால் [மெடிக்காகோ சைட்டைவா] [ஏக்கருக்கு]

‘தீவனங்களின் அரசி’ என்று அழைக்கப்படுகின்ற இதில் 20 சதவீதம் புரதச்சத்தும், 2.30 சதவீதம் சுண்ணாம்பு சத்து 0.23 சதவீதம் பாஸ்பரஸ் சத்தும் உள்ளது. இதனை தினமும் கால்நடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுதான் கொடுக்கவேண்டும். இதன் அளவு அதிகமானால் “வயிறு உப்பல்” ஏற்பட வாய்ப்புள்ளது. இது குளிர்கால இறவைப் பயிராகும்.
பருவம் : புரட்டாசி மாதம் ஏற்ற தருணம்
நிலம் : வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான நிலம்
விதை : 8 கிலோ
இடைவெளி : வரிசைக்கு வரிசை 30 செ.மீ. வரிசையில் நெருக்கமாக விதைக்கவேண்டும்.
இரகம் : கோ-1
உரஅளவு அடியுரம் : தொழு உரம் – 10 டன்கள், தழைச்சத்து – 10 கிலோ மணிச்சத்து – 48 கிலோ, சாம்பல் சத்து -16 கிலோ
மேலுரம் : 50 சதவீதம் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும்
மகசூல் : 28-32 டன்கள் பசுந்தீவனம் கொடுக்கவேண்டும்
குறிப்பு : மூன்றாவதாண்டுப் பயிரின் மகசூல், முதலாண்டுப் பயிரின் மகசூலில் 60 சதவீதம் இருப்பதால், இப்பயிரை இரண்டாண்டுக்குப் பின் அழித்துவிட்டு புதிதாகப் பயிர் செய்ய வேண்டும்.
தகவல்: முனைவர் க.இராமகிருஷ்ணன், முனைவர் க.சிவக்குமர், முனைவர் வே.இரமேஷ் சரவணகுமார், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் – 637 002.

மழைக் காலங்களில் கால்நடைகளுக்கான நோய் தடுப்பு முறைகள்

மழைக் காலங்களில் மனிதர்களைப் போன்று கால்நடைகளுக்கும் பல்வேறு விதமான நோய்கள் பரவும் சூழல் உள்ளதால் அத்தகைய நோய்களிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது.
இது குறித்து திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரியின் முதல்வர் சே. பிரதாபன் கூறியது:
மழைக்காலங்களில் இளங்கன்றுகள், ஆட்டுக் குட்டிகள், பன்றிக் குட்டிகள், முயல் குட்டிகளை குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்புகளை அமைக்க வேண்டும்.
கால்நடைகள் வளர்க்கும் இடத்துக்கு தகுந்தபடி, இந்த பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
குளிர்ந்த காற்று கால்நடைகளைத் தாக்காத வகையில் பாதுகாக்க வேண்டும். மழையில் கால்நடைகள் நனைவதைத் தவிர்க்க வேண்டும்.
கால்நடை வளர்ப்புக் கொட்டகைகளை நல்ல காற்றோட்டமாகவும், தரையில் தண்ணீர் தேங்காத வகையில் உலர்ந்த நிலையிலும் வைத்திருக்க வேண்டும்.
ஆடுகளுக்கு போதுமான இட வசதி அளிக்க வேண்டும். சாணம் மற்றும் கோமியம் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த பண்ணைகளில் சுகாதாரத்தைப் பேண வேண்டும்.
கொட்டகை மற்றும் பண்ணைக் கருவிகள் அனைத்தையும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
2 சதவீதம் சோடியம் ஹைட்ராக்சைடு, 2 சதவீதம் பார்மால்டிஹைடு கரைசல், 4 சதவீதம் சோடியம் கார்பனேட், 5 சதவீத ஹைட்ரஜன் பெராக்சைடு, 10 சதவீத திரவ அமோனியா, பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி மருந்துகளை தகுந்த காலங்களில் கால்நடைகளுக்கு வழங்க வேண்டியது அவசியம்.
குறிப்பாக 6 மாத வயதுக்கு மேல் உள்ள கன்றுக்குட்டிகள், மாடுகளுக்கு சப்பை நோய், தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி போடப்பட வேண்டும்.
மூன்று வயதுள்ள வெள்ளாடு, செம்மறியாட்டுக் குட்டிகளுக்கும், பெரிய ஆடுகளுக்கும் தொண்டை அடைப்பான், துள்ளுமாரி நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும்.
ஆடுகளுக்கு குடற்புழுக்களை நீக்க மருந்துகளை வழங்க வேண்டும். கால்நடைகளை ஒரே இடத்தில் மேயவிடாமல் சுழற்சி முறையில் மேய்க்க செய்வதன் மூலம் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.
நோய் வந்த கால்நடைகளை இதர கால்நடைகளுடன் சேரமால் பிரித்து முறையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.