Thursday, October 9, 2014

வெக்கை, பசு அம்மை நோய் தடுப்பு முறைகள்

மாடுகள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றன. அவைகளுக்கு வரும் நோய்களை தொற்று நோய், தொற்றாத நோய் என இருவகைகளாகப் பிரிக்கலாம்.
தொற்று நோய் என்பது நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிடம் இருந்து காற்று,தண்ணீர்,நேரிடைத் தொடர்பு, அல்லது மற்ற தொடர்புகள் மூலமாக இதர கால்நடைகளுக்கும் எளிதாகப் பரவும் நோயாகும். கால்நடைகளுக்கு வரும் வெக்கை நோய்,தொண்டை அடைப்பான்,கோமாரி (கால்கட்டு, வாய்ச் சப்பை) அம்மை நோய், சப்பை நோய் போன்ற நோய்கள் இந்த வகையைச் சேர்ந்தது.
ஒரு குறிப்பிட்ட மாட்டிற்கு மட்டும் நோய் வந்து அதன் அருகில் உள்ள மற்றவைகளுக்கு பரவாமல் இருந்தால் தொற்றாத நோய் என்கிறோம். பச்சை வாதம்,வயிற்றுப் பொருமல் போன்ற நோய்களை இதற்கு உதாரணம் கூறலாம்.
கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் வருவதால் நிறைய மாடுகள் இறந்து விடுகின்றன.இதனால் கால்நடைகளை வளர்ப்போருக்கும், நாட்டிற்கும் நஷ்டம் ஏற்படுகிறது.அநேகமாக மாடுகளுக்கு வரும் எல்லாத் தொற்று நோய்களையும், அறவே வராமல் தடுக்க முடியும். நோய் வந்தபின் வைத்தியம் செய்வதைவிட வருமுன் காப்பதே நல்லது.
வெக்கை நோய்: வெக்கை நோய் ஒரு கொடிய தொற்று நோய். ஒரு மாட்டிற்கு வந்தால் மற்ற மாடுகளுக்கும் விரைவில் பரவி பெரும் சேதத்தை விளைவிக்க வல்லது. எருமை பசுக்களை இந்நோய் அதிகம் தாக்குகிறது. செம்மறியாடு, வெள்ளாடுகளையும் சில சமயம் தாக்கும்.
அறிகுறிகள்:
  • முதலில் கடும் காய்ச்சல்(1600 F)இருக்கும்.தீனி சாப்பிடாது. வயிறு ஆரம்பத்தில் பொருமியிருக்கும்.கண்கள்,வாய்நாசி, இவற்றிலிருந்து தொடர்ந்து நீர் வடிந்து கொண்டிருக்கும்.உதடுகளின் உட்புறம்,ஈறுகள்,நாக்கின் அடிப்புறம் ஆகிய பகுதிகளில் புண்கள் உண்டாகும்.
  • கெட்ட நாற்றத்துடன் கூடிய கழிச்சல் வெகு தூரம்வரை பீச்சியடிக்கும்.எருமைகளுக்கு மார்பு, குண்டிக்காய் ஆகிய பகுதிகளில் தோல் வெடிப்பும், இரத்தக்கசிவும் ஏற்படும்.சினை மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்படலாம்.
  • 7 முதல் 10 நாட்களுக்குள் மாடுகள் இறந்துவிடும்.
தடுப்பு முறைகள்: எல்லா மாடுகளுக்கும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஒருமுறை தடுப்பு ஊசி போட்டால் மூன்று வருடங்களுக்கு நோய் வராது. கன்று போட்ட 6 மாதத்தில் முதல் ஊசி போட வேண்டும். பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டுக் கொள்ளலாம்.பொதுவான தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பசு அம்மை நோய்: பசு அம்மை நோய் ஒரு கொள்ளை நோய் அல்ல. ஆனால் எளிதில் பரவும் தொற்று நோய் ஆகும். அம்மைத் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாத கறவையாளர்களுக்கும் இந்நோய் மாடுகளிலிருந்து தொற்றிக்கொள்ளும். அதுபோல் சமீபத்தில் தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட கறவையாளர்களிடமிருந்து மாட்டுக்குத் தொற்றிக் கொள்ளும்.
அறிகுறிகள்: காய்ச்சல் ஏற்படும், மடியிலும், காம்புகளிலும், முதலில் நுண்ணிய சிவப்பு புள்ளிகள் தோன்றி விரைவில் அவை கொப்புளங்களாக மாறும். கவனிக்காவிட்டால் அவை நாளடைவில் புண்களாக மாறிவிடும்.
தடுப்பு முறைகள் : பொதுவான தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.புண்களை பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த நீரினால் கழுவி, பெரிக் ஏசிட்டை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பூசிவிட வேண்டும். பாலைக் காய்ச்சி உபயோகப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment