Saturday, October 4, 2014

சில குறிப்புகள்

உங்க நிலத்து மண்ணு நல்ல மண்ணா... கெட்ட மண்ணா?

உங்க நிலத்து மண்ணு நல்ல மண்ணா... கெட்ட மண்ணா?னு கண்டுபிடிக்கறதுக்காக ஆராய்ச்சி நிலையத்துக்கெல்லாம் ஓடியாடி பணத்தைச் செலவழிக்கணும்கிறதுக்கு அவசியமே இல்ல. அதுக்கு சுலபமான ஒரு வழி சொல்லித் தாரேன். முதல்ல ஒரு பாத்திரத்துல பசுஞ்சாணம், இன்னொரு பாத்திரத்துல குறிப்பிட்ட நிலத்தோட மண்ணுனு தனித்தனியா கரைச்சிக்கோங்க. இது தண்ணியா இருக்கணும்கிற அவசியமில்ல.
முதல்ல சாணக் கரைசல்ல உங்க முழங்கை வரைக்கும் நனைச்சுக்கோங்க. பிறகு, நிழலான இடத்துல போய் நில்லுங்க. கையில ஒட்டியிருக்கற சாணக் கரைசல் உலர்ந்ததும், தண்ணி ஊத்தி கையைக் கழுவிடுங்க. இப்ப கையை முகர்ந்து பார்த்தா, சாண வாசம் வீசும். அடுத்து, அதே கையில மண் கரைசலை எடுத்துப் பூசிவிடுங்க. இது உலர்றதுக்கு கால் மணிநேரம் ஆகும். அதுக்குப் பிறகு தண்ணியை ஊத்தி, கையைக் கழுவுங்க.
இப்போ கையில சாண வாசம் அடிச்சா... மண்ணுல நல்லது செய்யற நுண்ணுயிரிங்க இல்லனு அர்த்தம். அதேசமயம், மண்வாசனை வீசினா... உசத்தியான மண்ணுனு அர்த்தம். அதாவது, மண்ணுல இருக்கிற நுண்ணுயிரிங்க, சாணக்கரைசல் மூலமா உங்க கையில ஒட்டியிருந்த நுண்ணுயிரிங்களைத் தின்னுடும். அதனாலதான் சாண வாசம் போய், மண்ணு வாசம் வீசும்.
இப்படி சோதிச்சி பார்த்தாலே போதும்... உங்க மண்ணுல பொன்னு விளையுமா... இல்லையானு தெரிஞ்சிக்கறதுக்கு. இதைவிட்டு, 'பி.ஹெச்... எம்.ஹெச்சுனு தனித்தனியா மண்டையைப் பிய்ச்சிக்கிட்டு நிக்காதீங்க.

எந்த இடத்தில் கிணறு தோண்டலாம்?

தொள்ளாயிரம் அடி போர் போட்டோம்.... ஆயிரம் அடி போர் போட்டோம்... ஆனா, தண்ணி கிடைக்கலை’ங்கறதுதான் எங்க பார்த்தாலும் பேச்சா இருக்கு. ஆனா, 'கிணறு வெட்டினோம். தண்ணி இல்லை’னு சொல்றதைக் கேட்கறது அரிதா இருக்கும். காரணம், போர் போடற மாதிரி, கிணறு வெட்டுற சமாச்சாரம் அத்தனை ஈஸியா இருக்காது. கிணறு வெட்டுற வேலை ஒரு கூட்டுமுயற்சி. மாசக்கணக்குல வேலை செய்யணும். பத்து பேருக்கு மேல வேலை செய்யணும். சின்ன தவறு நடந்தாலும், ஒட்டுமொத்த வேலையும், வீணாகிடும். அதனால, கிணறு வெட்டுறதுக்கு முன்ன பல முன்னேற்பாடுங்க நடக்கும்.
நம்ம முன்னோருங்க அதுக்கு பல சூத்திரங்களைச் சொல்லி வெச்சிருக்காங்க. அந்த சூத்திரப்படி கவனிச்சி கிணறு தோண்டினா... நிச்சயம் நல்ல கிணறு அமையும்னு சொல்றாங்க. இந்த வறட்சியான நேரத்துல, இப்படி ஒரு விஷயத்தை எல்லாரும் தெரிஞ்சி வெச்சிக்கிறது நல்லதுதானே!
கிணறு தோண்டறதுக்காக நீங்க தேர்வு செய்திருக்கிற இடத்துல பல வகையான பசுமையான புல்லுங்க முளைச்சிருந்தா... அந்த இடத்தை விட்டுப்புடாதீங்க. அதுதான் சரியான இடம். ஏன்னா, இப்படி பசுமையான புல் உள்ள இடத்துல குறைந்த ஆழத்துல தண்ணி கிடைக்குமாம். சரி, தண்ணி கிடைச்சிருது. நல்ல சுவையான தண்ணியா இருந்தாத்தானே, பயிரும் நல்லா வளரும். ஆடு, மாடுங்களுக்கும், மனுஷன்களுக்கும் தாகத்தைத் தணிக்கும்.
ஆக, 'சுவையான தண்ணி அந்த இடத்துல கிடைக்குமா?’னு பார்க்க அடுத்த கட்டமா ஒரு வேலை செய்யுங்க. அரை கிலோ நவதானியத்தை ரவை மாதிரி உடைச்சி, கிணறு தோண்டப்போற இடத்துல முதல் நாள் சாயங்காலம் தூவி விடுங்க. மறுநாள் காலையில பார்த்தா, அந்த இடத்துல எறும்புங்க மொய்ச்சிட்டு இருக்கும். அங்க சுவையான தண்ணி இருந்தா, எல்லா எறும்புகளும் அங்கயே புத்து உருவாக்கி, உள்ள போய் தானியத்தை சேகரிக்கும். அந்த இடத்துல கிணறு தோண்டிட வேண்டியதுதான். அங்க நல்ல தண்ணி இல்லைனா... நவதானிய ரவையை எடுத்துக்கிட்டு, தண்ணி இருக்கற இடம் நோக்கி, எறும்புங்க பயணம் செய்யும். அந்த இடத்தைக் கண்டுபிடிச்சி, அங்க கிணறு வெட்டலாம். இதெல்லாம் நம்ம முன்னோருங்க கடைப்பிடிச்ச தொழில்நுட்பங்கள்தான்.
சரி, நல்லத் தண்ணி கிடைச்சிடுச்சி, கோடை காலத்துலகூட வற்றாத தண்ணி அங்க கிடைக்குமா?
கிணறு தோண்ட முடிவு செஞ்ச இடத்துல பால் மாட்டை மேய விடுங்க. மாடு வெளியே வராதபடி, சுத்திலும் அடைச்சிடுங்க. கொஞ்ச நேரம் புல்லை மேஞ்சிட்டு, ஒரு இடத்துல படுத்து ஓய்வு எடுக்கும். எந்த இடத்துல, குளிர் நீரோட்டம் இருக்கோ, அங்கதான் மாடுங்க படுக்கும். மனுஷனைவிட மாடுங்களுக்கு இயற்கையைப் புரிஞ்சி நடக்குற பழக்கம் உண்டு. இப்படி ஐந்து நாளைக்கு தினமும், ஒரே இடத்துல பால் மாடு படுத்து, அசை போட்டுச்சினா... அந்த இடத்தைக் குறிச்சி வெச்சிடுங்க. அங்க கோடையிலும்கூட குறைவில்லாம தண்ணி கிடைக்குமாம்!
இந்த விஷயங்களை எல்லாம் கவனிச்சி செய்தா, நிச்சயம் வற்றாத நீருற்று உள்ள கிணறு அமைக்க முடியும்.
ஆடு, மாடுங்ககிட்ட இருந்து மனுஷங்க படிக்க வேண்டிய பாடம்... எவ்வளவோ இருக்கு. பெரிய பெரிய ஞானிங்கள்லாம்கூட இப்படி பாடம்படிச்சிதான் உருவாகியிருக்காங்க. ஒரு தடவை, இமயமலை அடிவாரத்துல இருக்கிற, ஆசிரமத்துக்குப் போயிருந்தேன். சகல வசதியோட இருந்த அந்த ஆசிரமத்துல, சுவையான உணவுகள இலையில பரிமாறியிருந்தாங்க. சாதாரண சாப்பாடு இல்ல... அறுசுவை விருந்து. அந்த ஆசிரம வழக்கப்படி, தலைமைச் சாமியார் வந்து சாப்பிட்ட பிறகுதான், எல்லாரும் சாப்பிடணும்னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துல வந்து சேர்ந்த சாமியார், 'இப்போது எல்லோரும், மனிதர்களைப் போல சாப்பிட போகிறீர்களா... அல்லது ஆடு, மாடுகளைப் போல சாப்பிட போகிறீர்களா?’னு கேட்டாரு.
பந்தியில இருந்த ஒருத்தர் எழுந்து, 'மனுஷங்க மாதிரிதானே சாப்பிடுவோம் சாமீ... இதுல கேக்கறதுக்கு என்ன இருக்கு?’னு சொன்னாரு.
'விஷயம் இருக்கிறது'னு சொன்ன சாமியார், 'ஆடு, மாடு... போன்ற விலங்குகள் எப்போதும் அளவுக்கு மீறி உண்பதில்லை. சுவையான மக்காச்சோளம் இருக்கிறது, அருமையான பசுந்தீவனம் இருக்கிறது என்று அவை ஒரு போதும், கூடுதலாக ஒருவாய்கூட சாப்பிடுவதில்லை. அதனால்தான், அவற்றுக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு..... என்று எந்த நோய் நொடியும் வருவதில்லை. ஆகையால், நாம் எல்லோரும் ஆடு, மாடுகளைப் போல சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்போம்’னு அருமையான வாழ்க்கைப் பாடத்தைச் சுட்டிக்காட்டினாரு.

மனுஷங்களுக்கு காய்ச்சல் வர்ற மாதிரி

மனுஷங்களுக்கு காய்ச்சல் வர்ற மாதிரி, மாடு-களுக்கும் வரும். மாட்டைத் தொட்டுப் பார்த்தா நெருப்பாக் கொதிக்கும். இந்த அறிகுறி இருந்தா... 'ஆர்னிகா', (Arnica) ரெகோஸ் டாக்ஸ்&30 இந்த ரெண்டு ஹோமியோபதி மருந்து கலந்த நாலு சர்க்கரை உருண்டை வீதம் தினமும் இரண்டு வேளை கொடுக்கணும். சர்க்கரை உருண்டையை அப்படியே கொடுக்கக் கூடாது. தூளாக்கி மாட்டு நாக்குல தடவி விட்டாதான் பலன் கிடைக்கும். இப்படி தொடர்ந்து மூணு நாளைக்குக் கொடுத்தா... எந்த காய்ச்சலா இருந்தாலும் பறந்துடும்!

No comments:

Post a Comment