Friday, October 10, 2014

கொட்டிக்கொடுக்கும் கொட்டில்

ராஜ் டேனியல் (அலைபேசி 0451 2421057) பயிற்றுனர் ஆடு வளர்ப்பு பற்றி கூறுகையில் கால்நடை வளர்ப்பு என்பது இந்தக் காலத்தில் மிகவும் கடினமாகிக் கொண்டே வருகிறது. வெள்ளாடு உள்ளிட்டவைகளை கொட்டில் முறை ஆடு வளர்ப்பு மூலம் வளர்ப்பது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஆடுகளை வெளி இடங்களில் வளர்க்காமல், ஒரே இடத்திலேயே வைத்து வளர்ப்பது தான் கொட்டில் முறை.

கொட்டில் முறையில் வளர்க்கும் போது அலைச்சல் இல்லாததால் சீக்கிரம் உடல் பெருக்கும். தீவனத் தேவை குறையும்.

கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்க விரும்புறவங்க, முதல்ல ரெண்டு ஏக்கர் அளவுக்காவது தண்ணீர் வசதியுள்ள தோட்டத்தைத் தயார்படுத்திக்கணும். அகத்தி, சூபாபுல், வேலி மசால் இதையெல்லாம் வேலியா நடலாம். கம்பி வேலி அமைச்சாலும் ரொம்ப நல்லது. ஒரு ஏக்கர் அளவுல பசுந்தீவனங்களை கட்டாயம் பயிர் பண்ணனும். மீதி இடங்களை ஆடு வளர்ப்புக்குத் தயார் பண்ணிக்கலாம். பசுந்தீவனம் வளர்க்கற இடம், ஆடுகள் இருக்கற இடம் ரெண்டுக்கும் நடுவுலயும் வேலி அமைக்கணும்.

20 பெட்டை, ஒரு கிடா கொண்ட கூட்டத்தை ஒரு யூனிட்டுன்னு சொல்வோம். வளர்ந்த ஒரு பெட்டை ஆட்டுக்கு, பதினைந்து சதுர அடி இடம் தேவை. கிடா, சினை ஆடு, குட்டிப் போட்ட ஆடுகளுக்கு இருபது சதுர அடி தேவைப்படும். ஆக, ஒரு யூனிட்டுக்கு 20 வளர்ந்த பெட்டைகள், 1 கிடா, பத்து பதினைந்து குட்டிகள்ன்னு கணக்குப் போட்டா.. சுமாரா 650 சதுர அடியில செவ்வக வடிவமான கொட்டில் தேவைப்படும். வளர்ற குட்டிகளை வைக்கறதுக்கு 200 சதுர அடியில தனியா ரெண்டு கொட்டில், நோய் தாக்கின ஆடுகளுக்குன்னு 200 சதுர அடியில இரண்டு கொட்டில்களும் கட்டாயம் தேவைப்படும். மொத்தமா 1,450 சதுர அடி (3.32 சென்ட்) வேணும்.

தரையிலிருந்து உயரமாக பெரிய கொட்டில் மட்டும் தரையிலிருந்து 5 அடி உயரத்தில் இருக்குற மாதிரி பாத்துக்கணும். ஆடுங்க ஏறும் போது சறுக்காம இருக்குறதுக்கு மரத்துலயே படிகள் வைக்கலாம். கொட்டிலை உயரமா அமைக்கறதுக்கு கான்கிரீட் தூண், இல்லைன்னா பனை மரத்தைப் பயன்படுத்தலாம். உயரம் கம்மியா இருந்தா, ஆடுகளோட கழிவுல இருந்து வெளிய வர்ற வாயுக்களால ஆடுகளுக்கு மூச்சுத்திணறல் வரும். சுத்தம் செய்யுறதுக்கும் கஷ்டமாப் போயிடும்.  சின்னச்சின்ன கொட்டில்களை தரையிலயே வெச்சுக்கலாம். எத்தனை யூனிட் அமைச்சாலும் நாலு பக்கமும் முப்பதடி இடைவெளி விட்டு, கட்டாயம் வேலி இருக்கணும். இந்த இடைவெளியில் தினமும் காலை நேரத்துல வெயில் படுற மாதிரி, ஆடுகளை மேய விடலாம். நோய், நொடிகள் வரும் போது அவற்றைக் கவனித்து உரிய மருந்துகளைக் கொடுக்கவேண்டும்.

கொட்டிலுக்குக் கூரையா தென்னை, பனை ஓலைகளை வெச்சா, குளிர்ச்சியா இருக்கும். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்டா, வெப்பம் அதிகமா இருக்கும். எல்லாக் கொட்டில்களுக்குமே பக்கவாட்டு அடைப்புக்கு மூங்கில் தப்பைகளையே பயன்படுத்தலாம். அடிப்பாகத்துக்கு, சாதாரண மரப்பலகையே போதுமானது. வரிசையா மரப்பலகைகளை சீரான இடைவெளி விட்டு இணைச்சு ஆணி அடிக்கணும். பலகைகளோட இருந்தாத்தான் வளையாம இருக்கும் பலகைகளை சேக்குறதுக்கு முன்னாடி குரூட் ஆயில்ல ஊறவெச்சுட்டா.. சிறுநீர், கழிவுகளால பலகைக்கு பாதிப்பு வராது. ஊறவும் செய்யாது. இடைவெளி வழியாக் கழிவுகள் கீழே விழுந்திடும். அதனால கழிவுகளை சேகரிக்கிறதுக்கு சுலபமாயிடும்.

சுத்தம் சுகம் தரும் !
தினமும் காலையில கொட்டிலை சுத்தம் செய்யணும். ஒவ்வொரு கொட்டிலையும் சுத்தி சிமெண்ட் வாய்க்கால் எடுத்து ஒரு தொட்டிக் கட்டணும். ஆடுகளோட சிறுநீர், கொட்டிலைக் கழுவுற தண்ணியெல்லாம் அதன் மூலமா சேகரிச்சு தீவனப்பயிருக்கு உரமா உபயோகப்படுத்தலாம். கிடாவை தனியான தடுப்புல நீளமான கயித்துல கட்டி வைக்கணும். தீவனங்களை தரையில் போடாம பக்கவாட்டு மூங்கில்களில் கட்டி வெச்சுட்டா, தேவைப்படும் போது ஆடுங்க சாப்பிட்டுக்கும்.இந்தக் கொட்டில் அமைப்பு ரொம்பவும் செலவு கம்மியான முறை.

நாமக்கல் மாவட்டம், காளி செட்டிபட்டியில் கொட்டில் முறையில் தலைச்சேரி ஆடுகளை வளர்த்து வரும் ரகுநாதன் (அலைபேசி : 94426 25504) அதைப்பற்றிச் சொல்கிறார்.

“பத்து வருசமா ஆடு வளர்த்தாலும் மூன்றரை வருசமாத்தான் கொட்டில் அமைச்சு நல்ல முறையில வளக்க ஆரம்பிச்சிருக்கேன். நல்ல லாபம் கிடைக்குது. எண்ணூறு சதுர அடியில் தரையிலேயே சிமென்ட் போட்டக் கொட்டில் அமைச்சிருக்கேன். பக்க வாட்டுல கம்பி வலை போட்டிருக்கேன். மேல உயரமா ஆஸ்பெஸ்டாஸ் கூரையும் போட்டிருக்கேன். தனியே குட்டிகளுக்கு ஒரு அறை இருக்கு. என்கிட்ட இருக்கிற வளர்ந்த ஆடுகள் நாற்பதுக்கும், குட்டிகள் இருபதுக்கும் இதுவே போதுமானதாத்தான் இருக்கு. பசுந்தீவனமா வேலிமசால், கோ3 புல்லெல்லாம் தோட்டத்துலேயே வளர்த்திருக்கேன். அதோட சேத்துக் காய்ந்த தீவனத்துக்காக கடலைக் கொடி கொடுக்குறேன்.

தினமும் அடர் தீவனமும் கொடுத்தா நல்லா வளரும். மேய்ச்சல் முறையில்  வளர்க்கிறவ்பொ ஆறு மாசத்துக்கு பத்து, பதினோரு கிலோ வரை தான் எடை வரும். ஆனா, கொட்டில் முறையில் ஆறு மாசத்துக்குள்ள இருபது கிலோ வரை வந்துடும். நல்ல விலை கிடைக்கும். கிலோ 120 ரூபாய்ன்னு விலை வெச்சி ஆட்டைக் கொடுத்துடுவேன். 

குறைந்தபட்ச லாபமே குஷியானது தான்
ஒவ்வொரு பெட்டையும் எட்டு மாசத்துக்கு ஒரு தடவை குறைந்தபட்சம் ரெண்டு குட்டி போடும். அந்தக் குட்டிக்கு அடுத்த எட்டு மாதத்தில் குட்டி போட ஆரம்பித்துவிடும். சரியாக கருத்தரிக்காத ஆடுகள், குட்டி ஈனாத ஆடுகளை உடனடியாக கழித்து விடவேண்டும். தேவைக்கு அதிகமான கிடாக்களையும் கழிக்க வேண்டியது அவசியம். சரியான முறையில் மருத்துவம் மற்றும் அடர்தீவனங்கள் மேற்பட்ட ஆடுகளை விற்பனை செய்ய முடியும். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விற்றாலே 8 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும். இருபது ஆடுகள் மற்றும் அதன் மூலம் குட்டிகள் ஆகியவற்றை வைத்து 40 மாதங்களில் கிடைக்கும் லாபக்கணக்கு இது. ஆண்டுக்கு கணக்கிட்டால், 2 லட்ச ரூபாய்க்கு மேல் வரும்படி கிடைக்கும். இளங்குட்டிகள் 200 எண்ணிக்கையில் நம்மிடம் இருக்குமாறு பராமரிக்கலாம்.

தரையிலிருந்து உயரமாக அமைக்கப்பட்ட மூங்கிலால் ஆன கொட்டில் போடுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். தரையிலேயே ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் அமைத்தால் 75 ஆயிரம் ரூபாய் செலவாகும். கொட்டில் அமைக்கும் பொருட்களைகப் பொறுத்து விலை வித்தியாசப்படும்.

அடர்தீவன தயாரிப்பு !
மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய தானியங்கள் 40 சதவிகிதம் கடலை, எள், தேங்காய், சூரியகாந்தி, பருத்தி மற்றும் சோயா ஆகிய புண்ணாக்குகள் 25 சதவிகிதம். அரிசி மற்றும் கோதுமை தவிடு 30 சதவிகிதம். தாது உப்பு 2 சதவிகிதம். உப்பு 2 சதவிகிதம். ஊட்டச்சத்து கலவை 1 சதவிகிதம் இந்த அளவில் எடுத்துக் கொண்டு மாவாக அரைத்து, தண்ணீரில் பிசைந்து தினமும் குறிப்பிட்ட விகிதத்தில் கொடுக்கவேண்டும். கர்ப்பிணி ஆடுகளுக்கு கொஞ்சம் அதிகப்படியாகக் கொடுக்கலாம். மேற்சொன்ன பொருட்களில் விலைக் குறைவாக கிடைப்பவற்றை கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக் கொண்டு, மற்றவற்றை குறைத்து சதவிகித அளவைப் பராமரிக்கலாம். அடர் தீவனம் கொடுக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. கொடுத்தால் ஆடுகளின் எடை சீக்கிரமே அதிகரித்து கூடுதல் லாபத்துக்கு வழிவகுக்கும்.

கொட்டில் முறை ஆடு வளர்ப்புக்கான செலவு - வரவுக் கணக்கு (முதல் 40 மாதங்களுக்கானது)
விவரம்
செலவுவரவு
நிலையான செலவு கொட்டில்கள் அமைக்க (சராசரி)
60,000 
பெட்டை ஆடுகள் 20
24,000 
கிடா 1
2,000 
நடைமுறைச் செலவுகள் தீவனம் (நாமே உற்பத்தி செய்வது)
10,000 
இன்சூரன்ஸ்
10,000 
மருத்துவச் செலவு
10,000 
அடர் தீவனம்
30,000 
இதரச் செலவுகள்
4,000 
800 ஆடுகள் விற்பனை மூலம் (குறைந்தபட்சம்)
 8,00,000
கழிவு விற்பனை முகாம்
50,000
மொத்தம்
1,50,000
8,50,000
நிகர லாபம்
7,00,000

No comments:

Post a Comment