Thursday, October 9, 2014

வெள்ளாடு இனவருத்தித் திட்டங்கள்

உள்இனச்சேர்க்கை (In Breeding)
மிக நெருங்கிய உறவு நிலையில், இனச் சேர்க்கை செய்வதாகும். இத்திட்டத்தின் மூலும் பர அடிப்படை ஆய்வுகள் மற்றும் உறவுள்ள குடும்பங்கள், புது இனங்கள் தோற்றுவுக்க உள் இனச் சேர்க்கை முறை பின்பற்றப்படுகின்றது. உயர்வினங்களில், புது இனங்கள் தோற்றுவிக்கப்படும்போது மட்டுமே ஆரம்பக் கட்டங்களில் உள் இனச் சேர்க்கை முறை கையாளப்படுகின்றது. ஆனால், கோழிகளில் கலப்பினக் குஞ்சுகள் உற்பத்திக்கும், ஆய்வுக்கூட எலிகள் , கினி, பன்றிகள், முயல் போன்றவை ஒரே மாதிரியாக இருப்பதற்காகவும் உள் இனச் சேர்க்கை முறை பின்பற்றப்படுகின்றது. சாதாரணப் பண்ணையாளர்கள் இந்த இனச் சேர்க்கை முறையைப் பின்பற்றலாகாது. இம்முறையில் குட்டிகளுக்கிடையேயும், குட்டிகள் அதன் தந்தை (Sire) -க்குமிடையேயும், தொடர்ந்து இனச் சேர்க்கை செய்து தேர்வு முறையில் நல் இனம் தோற்றுவிக்கப்படும்.
வெளி இனச் சேர்க்கை (Out Breeding)
இவ்வினச் சேர்க்கை முறையே சாதாரணப் பண்ணையாளர்கள் பின்பற்ற வேண்டியதாகும். பல வெள்ளாட்டுப் பண்ணையாளர்கள் ஒன்று அல்லது இரண்டு வெள்ளாட்டுக் கடாவைத் தொடர்ந்து இனவிருத்திக்குப் பயன்படுத்துவார்கள். இது பெரும் தீங்கை ஏற்படுத்திவிடும். வளர்ச்சி வீதம் குறைபடுதல், பால் உற்பத்தி குறைவு. இனவிருத்திப் பாதிப்பு ஆகிய கேடுகள் ஆடுகளைப் பாதிக்கும்.
பண்ணையில் உள் இனச் சேர்க்கையால் கேடுகள் வராமல் தவிர்ப்பது எப்படி
பண்ணையில் பொலி கடாக்களை அடிக்கடி மாற்றிவிட வேண்டும். பண்ணையாளர்கள் தங்களுக்கிடையே கடாக்களை மாற்றம் செய்து கொள்ளலாம். கடாவை அதனால் பிறந்த குட்டிகளுடன் இனச் சேர்க்கை செய்யக் கூடாது. அவ்வாறே பிறந்த குட்டிகளுக்கிடையேயும் இனவிருத்தி செய்ய அனுமதிக்கக் கூடாது.
ஓரிரு ஆடுகள் வைத்திருப்பவர்கள், பொலிகடா பராமரிப்பு கடினமானதாகும். இனவிருத்தியில் செயற்கை முறைக் கருவூட்டல் பல சிக்கல்களைத் தீர்க்கும்.
வெள்ளாடுகளில் செயற்கை முறைக் கருவூட்டல் 
பல வெளிநாடுகளில், வெள்ளாடுகளில் செயற்கை முறைக் கருவூட்டல் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. நமது நாட்டில், மாடுகளில் செயற்கை முறை
இனவிருத்தி மிக நல்ல முறையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகின்றது. அவ்வாறே உறைவிந்து மூலமும் கருவூட்டல் சிறப்பாக நடந்து வருகின்றது. வெள்ளாடுகளில் ஏன் இந்தச் சுணக்கம்? வெள்ளபட்டுக் கடா விந்து, விந்து கலக்கும் திரவத்துடன் பயன்படுத்தும் முட்டையின் மஞ்சள் கருவுடன் செயல்பட்டு, திரிந்து விடுகின்றது. ஆகவே, விந்து அணக்களை விந்தின் திரவத்திலிருந்தி பிரித்து அதன் பின் முட்டை மஞ்சள் மற்றும் திரவம், கிளிசரால் சேர்த்து மாட்டு விந்தைப் போல் உறை நிலையில் சேமிக்கும் நடைமுறை நமது நாட்டிற்கும் வந்துவிட்டது. பெய்ப் நிறுவனத்தில் இப்பணி நடைபெற்று வருவதைப் பார்த்துள்ளேன். செயன்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இப்பணி நடைபெற்று வருகின்றது. விரைவில் கருவூட்டல் நடைமுறைக்கு வரும்.
புதிய கலப்பினம் / இனம் தோற்றுவிக்கும் நோக்கில் இனச் சேர்க்கை செய்தல்.
நமது நாட்டு வெள்ளாடுகள் சிறியவை. பால் உற்பத்தி திறன் குறைந்தவை. வளர்ச்சி வீதமும் குறைவானவை. ஆனால் விரைவில் பருவம் எய்தி, ஆண்டுக்கு இருமுறை ஈனக் கூடியவை. இக்குண நலன்கள் இறைச்சி உற்பத்திக்கு ஏற்றவை.
வெளிநாட்டினங்கள், பெரியவை. பால் உற்பத்தித் திறன் உள்ளவை. ஆனால் ஆண்டிற்கு ஒருமுறைதான் குட்டி போடும். மேலும் குட்டி போட்ட 6 – 7 மாதம் கழிந்த பெட்டை ஆடுகள் முதல் முறையாக சினைப் பருவத்திற்கு வரும். ஆகவே ஆண்டு முழுவதும் சினைக்கு வந்து இருமுறை குட்டி போடும் நமது நாட்டினத்தின் குணமும். குட்டி போட்ட இரண்டு மாதத்தில் சினைக்குவரும் தன்மையும் காப்பாற்றப்பட்ட வேண்டும். அதே வேளையில், பெரிய உடலமைப்பும், பால் அதிகம் கொடுக்கும் குண நலனும், நமது நாட்டின் ஆட்டில் இணைக்கப்படும்படி ஒரு கலப்பினம் தோற்றுவிக்கப்பட வேண்டும்.

பொதுவாக நம் தமிழ்நாட்டிலுள்ள கொடி ஆடுகளுடன் சமுனா பாரி மற்றும் ஆங்கிலோறுபியன் இன ஆடுகளைக் கலப்பின உற்பத்தி செய்யப் பயன்படுத்தலாம்.
பள்ளை ஆடுகள் மற்றும் பல குட்டிகள் ஈனும் நாட்டு ஆடுகளுடன் தலைச்சேரி மற்றும் சானன் இன ஆடுகளைக் கலப்பின உற்பத்தி செய்யப் பயன்படுத்தலாம்.
மாட்டினத்தில் கலப்பின உற்பத்தி செய்வது போல 50% – 75% மற்றும் 62.5% கலப்பின உற்பத்தி செய்து, நமக்கு ஏற்ற குணங்கள் அதில் இருக்கும்படி தீவிரமாகத் தேர்வு மேற்கொண்டு தொடர்ந்து இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.
ஆர்வம் உள்ள தனிப் பண்ணையாளர் இவ்வகையில் பல தலைமுறையில் இனச்சேர்க்கை செய்து, ஒரு புது இனம் உண்டாக்கி விட முடியும்.
புது இனம் தோற்றுவிக்கும்போது, கடுமையாகத் தேர்வு செய்தும், தகுதியற்றனவற்றைக் கழித்தும், இனப் பெருக்கம் செய்ய வேண்டும்.
கீழ்க்காணும் குணநலன்கள் தேர்வின் போது கவனிக்கப்படல் வேண்டும்.
  1. தினசரி / மாதாந்திர எடை கூடும் அளவு
  2. அதிக பால் கொடுக்கும் திறனுடன் நன்கு குட்டிகளைக் காக்கும் குணமுடைய தன்மை
  3. குட்டி போட்ட ஆடுகள் தொடர்ந்து இரண்டு மாதத்திற்குள் சினைப் பருவத்திற்கு வருவது
  4. பல குட்டிகள் போடும் தன்மை போன்றவை.

No comments:

Post a Comment