Saturday, October 4, 2014

ஒருங்கிணைந்தப் பண்ணை

ஆண்டுக்க ரூ.9 லட்சம் லாபம்.. 9 ஏக்கரில் உயர்ந்து நிற்கும்.ஓர் ஒருங்கிணைந்தப் பண்ணை!
கணக்குப் போட்டு காரியத்தில் இறங்கினால், எதிலுமே கணிசமான லாபம்தான்” என்று தெம்பாகப் பேசும் ஜெயராமன், ஒன்பது ஏக்கர் நிலத்தில்.. தென்னை , பாக்கு, வாழை, ஆடு, மாடு, கோழி, மீன், தேன்.. என ஒருங்கிணைந்தப் பண்ணை அமைத்து, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் வருமானத்தில்!
சேலம் மாவட்டம், புத்திரக்கவுண்டன் பாளையம். அபநவம் கிராமத்திலிருக்கும் பண்ணைக்குச் சென்ற நம்மை அன்புடன் வரவேற்ற ஜெயராமன், தன்னைப் பற்றிய அறிமுக உரையோடு ஆரம்பித்தார்.. “பி.எஸ்.சி. (வேதியியல்) படித்துவிட்டு, விவசாயம் பார்க்க வந்தவன் நான். 88-ம் வருடம் வந்த வறட்சியில் எங்க பகுதியில் ஓடிக்கிட்டிருந்த ‘வசிஷ்ட நதி’ வறண்டு போயிடுச்சு.பயிர்களெல்லாம் வாடத் தொடங்கி விட்டது, இதைச் சமாளிப்பதற்காக வேளாண்மைத் துறை அதிகாரிகள் போய் பார்த்த பொழுது, சொட்டு நீர்ப்பாசனத்தைப் பற்றிக் தெரிந்துக்கொண்டேன். விவசாயம், கால்நடை வளர்ப்பு சம்பந்தமான நிறையப் பயிற்சிகளில் கலந்துக்கிட்டப்ப.. ஆடு, மாடு, வளர்ப்பு எப்படி என்பதை புரிந்துகொண்டேன். விவசாயப் பயிற்சிகளுக்கு சென்ற பொழுது ஈ பண்ணை வடிவமைப்பு, தென்னை, வாழை, சாகுபடி பற்றியெல்லாம் தெரிந்துகொண்டேன்.
இது எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அமைத்துக் கொண்டால் நல்ல லாபம் கிடைக்கும் என்று எனக்குத் தோணிச்சு. அதனால்தனர் மூன்று வருடத்திற்கு முன் ஒன்பது ஏக்கரில் இந்த ‘ஒருங்கிணைந்தப் பண்ணை’யை அமைத்தேன். பண்ணைக்குள் கிடைக்கும் எந்தக் கழிவையும் வீணாக்காமல், உரமாக மாற்றி உபயோகப்படுத்திடுவேன். அதனால் இங்க ரசாயன உரங்களுக்கு வேலையே இல்லாமப் போயிடுச்சு. மொத்தத்தில் மனசுக்கு நிறைவான வருமானத்தோட பண்ணையம் செய்துகொண்டிருக்கிறேன்.



தென்னைக்கிடையில் வாழை, பாக்கு!

‘ஏழு ஏக்கர் நிலத்தில், 23x23 அடி இடைவெளியில் 15 வயதான தென்னை இருந்தது. அதற்கிடையில், 7x7 அடி இடைவெளியில் பாக்கு நடவு செய்தேன். அதற்கு இடையில் அதே இடைவெளியில் கதளி வாழையை நடவு செய்திருக்கிறேன். ஏக்கருக்கு 70 தென்னை, 900 பாக்க, 900 வாழை என்று எழு ஏக்கரிலும் சேர்த்து 490 தென்னை, 6,300 வாழை, 6,300 பாக்கு மரங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு இடையில் அரை அடி இடைவெளியில் கோ – 4 தீவனக் கரணைகளை நடவு செய்திருக்கிறேன்.

பறிப்பதற்கு முன்பே பணம்!

தென்னை, பாக்கு ஆகியவற்றை நடவு செய்த ஐந்தரை வருடங்களில் வருமானம் கிடைக்கத் தொடங்கி விடும். என்னுடைய தோப்பில் ஒரு தென்ளை மரத்தில் இருந்து வருடத்திற்கு சராசரியாக  150 காய்கள் வரைக்கும் கிடைக்கின்றன. ஆள் பற்றாக்குறையால், மரத்திற்கு வருடத்திற்கு 200 ரூபாய் என்று கணக்கிட்டு குத்தகைக்கு விட்டிருக்கிறேன்.  இதன் மூலமாக 490 மரங்களுக்கும் சேர்த்து வருடத்திற்கு 98,000 ரூபாய் கிடைக்கிறது. பாக்கு காய்ப்புக்கு வர இன்னமும் இரண்டரை வருடங்கள் ஆகும். ஒரு மரத்தில் இருந்து சராசரியாக இரண்டரை கிலோ அளவிற்கு பாக்கு கிடைக்கும். அதன் மூலம் ஒரு மரத்திற்கு வருடத்திற்கு 200 ரூபாய்க்கு குறையாமல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

வாழை தரும் வஞ்சமில்லா வருமானம்!

வாழையில் வருடத்திற்கு 6,200 தார்களுக்குக் குறையாமல் கிடைக்கும். ஒரு தார் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. குறைந்தபட்ச விலையாக 100 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலெ, 6,20,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். பக்கக் கன்றுகளை நல்லபடியாகப் பராமரித்தால்.. தொடர்ந்து ஐந்தாண்டுகள் வரை, வாழையில் வருமானம் பார்க்கலாம்.
கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம்!

இடைவெளிகளில் நடவு செய்திருக்கும் கோ – 4 புல் மூலமாக வருடத்திற்கு கிட்டத்தட்ட 20 டன் தீவனம் கிடைக்கிறது. தனியாக ஒன்றரை ஏக்கரில் சவுண்டல் (சூபாபுல்), கோ – 4, கோ.எப்.எஸ்.ஹெச்.29.. போன்ற பசுந்தீவனங்களும், அசோலாவும் சாகுபடி செய்கிறேன். இந்தத் தீவனங்களை ஆதாரமாக வைத்துதான் 12 கறவை மாடுகளை வளர்க்கிறேன். இதில் எப்பொழுதுமே 8 மாடுகள் கறவையில் இருப்பதுபோல பராமரித்து வருவதால், வருடம் முழுவதும் பால் மூலமாக கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது.

பாலில் பொங்கும் வருமானம்!

தானியங்கள், மரவள்ளி, திப்பி (சேகோ), தவிடு, பிண்ணாக்கு, தாது உப்பு.. போன்றவற்றைக் கொண்டு அடர்தீவனம் தயாரித்து மாடுகளுக்குக் கொடுத்து வருகிறேன். ஒவ்வொரு மாட்டுக்கும் தினமும் 7 கிலோ அடர்தீவனம், 30 கிலோ பசுந்தீவனம் கொடுக்கிறேன். ஒரு மாட்டில் இருந்து தினமும் 10 முதல் 12 லிட்டர் வரை பால் கிடைக்கிறது. 8 மாடுகள் மூலமாக சராசரியாக தினமும் 80 லிட்டர் பால் கிடைக்கிறது. ஒரு லிட்டர் பால் 20 ரூபாய் என்று உள்ளூரிலேயே நேரடியாக விற்பனை செய்துவிடுகிறேன். பால் மூலமாக தினசரி 1,600 ரூபாய் என வருடத்திற்கு 5,84,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மாடுகளின் சாணம் மூலமாக எரிவாயுவையும் உற்பத்தி செய்த கொள்கிறேன்.

லெவில்லாமல் மீன்!

தோப்பின் ஓரத்தில் 100 அடி நீளம் மற்றும் அகலம், 5 அடி ஆழத்தில் மீன் குட்டை வெட்டியிருக்கிறேன். சாணத்தை இந்தக் குட்டையில் கலந்து விடும்பொழுது மீன்களுக்கான உணவு  இலவசமாக உற்பத்தியாகி விடுகிறது. இதிலிருந்து வருடத்திற்கு 1.300 கிலோ அளவில் மீன் கிடைக்கிறது. ஒரு கிலோ 70 ரூபாய்க்கு வற்பனையாகிறது. அதன் மூலமாக வருடத்திற்கு 91,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

மீதமாகும் சாணத்தில் மண்புழு உரம்!

சாண எரிவாயு, மீன் குட்டை ஆகியவற்றிற்குப் போக மீதமுள்ள சாணம் மற்றும் சாண எரிவாயுக் கலனில் இருந்து வெளிவரும் ‘சிலரி’ ஆகயிவற்றில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கிறேன். இதற்காக 4 அடி அகலம், 9 அடி நீளம், 5 அடி உயரத்தில் ஆறு தொட்டிகள் அமைத்திருக்கிறேன். 45 நாட்களுக்கு ஒரு முறை ஆறு தொட்டிகளில் இருந்தும் மொத்தம் 2,400 கிலோ மண்புழு உரம் கிடைக்கிறது. எனது தோட்டத்தில்  உள்ள பயிர்களுக்குப் பயன்படுத்தியத போக, வருடத்திற்கு 3,000 கிலோ வரை மண்புழு உரத்தை கிலோ 4 ரூபாய் என்று விற்பனையும் செய்து வருகிறேன். அதன் மூலமாக 12,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

கொட்டிக்கொடுக்கும் கோழிகள்!

பண்ணையில் 200 நாட்டுக் கோழிகள், 30 வான்கோழிகள், 30 வாத்துகளும் உள்ளன. தினமும் 70 முதல் 80 நாட்டுக் கோழி முட்டைகள், 10 வான்கோழி முட்டைகள். 10 வாத்து முட்டைகள் கிடைக்கின்றன. வருடத்திற்கு 300 நாடடுக் கோழி முட்டைகளை அடை வைப்பதன் மூலமாக 200 குஞ்சுகள் கிடைக்கின்றன.
அடை வைத்தது போக மீதமுள்ள வான்கோழி முட்டைகளை தலா 15 ரூபாய்க்கும், நாட்டுக் கோழி மற்றும் வாத்து முட்டைகளை தலா 5 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன். முட்டைகள் மூலமாக தினமும் சராசரியாக 700 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. முட்டையிட்டு முடித்த நாட்டுக் கோழிகளை மட்டும் விற்பனை செய்து விடுவேன்.
இந்த வகையில் வருடத்திற்கு 150 நாட்டுக் கோழிகள் வரை விற்பனையாகின்றன. ஒவ்வொரு கோழியும் சராசரியாக இரண்டு கிலோ எடை இருக்கும். அவற்றை உயிர் எடைக்கு கிலோ 110 ரூபாய் என்று விற்பதன் மூலம் 300 கிலோவிற்கு 33,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. வருடத்திற்கு சராசரியாக 5 கிலோ எடை கொண்ட 15 வான்கோழிகளை உயிர் எடைக்கு கிலோ 185 ரூபாய் என விற்பதன் மூலம் 75 கிலோவிற்கு 13,875 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

தேன் தரும் தித்திக்கும் வருமானம்!

தோட்டம் முழுவதும் 40 இடங்களில் தேனீப் பெட்டிகளை வைத்திருக்கிறேன். இவற்றிற்க்காக தனியாக எந்தப் பராமரிப்பும் செய்வது கிடையாது. ஆனால், இவற்றின் மூலமாக அனைத்து தென்னை மரங்களிலும் நல்லபடியாக மகரந்தச்சேர்க்ககை நடைபெற்று மகசூல் கூடுகிறது. தவிர, ஒவ்வொரு பெட்டியில் இருந்தும் 50 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கிலோ தேன் கிடைக்கிறது. இதன் மூலமாக வருடத்திற்கு சராசரியாக 280 கிலோ தேன் கிடைக்கிறது. ஒரு கிலோ தேன் 140 ரூபாய் என விற்பதன் மூலமாக, ஆண்டிற்கு 39,200 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
ஆடு மூலம் அறுபதாயிரம்!

இரண்டு ஜமுனாபாரி கிடாக்கள், ஒரு தலைச் சேரி கிடா மற்றும் எட்டு பள்ளை ரகப் பெட்டை ஆடுகளையும் வளர்க்கிறேன். இதன் மூலமாக கலப்புக் குட்டிகளை உற்பத்தி செய்கிறேன். ஒரு பெட்டை ஆட்டில் இருந்து இரண்டு வருடத்தில் ஆறு குட்டிகள் கிடைக்கின்றன.
வருடத்திற்கு மூன்று குட்டிகள் என்று வைத்துக் கொண்டால், எட்டு ஆடுகளில் இருந்தும் வருடத்திற்கு 24 குட்டிகள் கிடைக்கும். எட்டு மாதம் வரை குட்டிகளை வளர்த்து விற்பனை செய்கிறேன். இளம் ஆடு ஒன்று 2,500  ரூபாய் முதல் 3,000 வரை விற்பனையாகிறது. அதன் மூலமாக வருடத்திற்குச் சராசரியாக 60,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.



9 ஏக்கரில் .. ரூ.9 லட்சம்!

தென்னை, வாழை, பால், முட்டை, கோழி, ஆடு, மீன்,தேன், மண்புழு உரம், சாணஎரிவாயு என்று மொத்தமாக 9 ஏக்கர் நிலத்தல் இருந்து வருடத்திற்கு 18 லட்சத்திற்கு 11 ஆயிரத்து 575 ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. பராமரிப்பு, தீவனம், மீன்குஞ்சு, வேலையாள் கூலி என்ற ஐம்பது சதவிகிதம் செலவானாலும்.. வருடத்திற்கு ஒன்பது லட்ச ரூபாய்க்கு குறைவில்லாமல் லாபம் கிடைக்கிறது.
9 ஏக்கரில் ஒருங்கிணைந்தப் பண்ணை மூலமாக கிடைக்கும் வருமானப் பட்டியல்
விவரம்வரவு
தென்னை98,000
வாழை6,20,000
பால்5,84,000
மீன்91,000
முட்டை2,55,500
நாட்டுக் கோழி, வான்கோழி46,875
ஆடு60,000
தேன்39,200
மண்புழு உரம்12,000
சாண எரிவாயு5,000
மொத்தம்18,11,575
இதில் பாதித்தொகையை செலவு என்று வைத்துக் கொண்டால், 9,05,787 ரூபாய் லாபம்.
தொடர்புக்கு

ஜெயராமன், அலைபேசி : 99424-43055.

No comments:

Post a Comment