Thursday, October 9, 2014

வெள்ளாடு தீவனம் அளித்தல் & மேலாண்மை

தீவனம் அளித்தலும் தீவன மேலாண்மையும்
வெள்ளாடுகளுக்குத் தீவனம் அளிப்பது. அவை உயிர்வாழ மட்டுமல்லாது. மனிதனுக்குப் பயனுள்ள இறைச்சிக்கும் பால் உற்பத்திக்காகவும் ஆகும். மற்ற உயிரினங்களைப் போன்றே ஆடுகளுக்குச் சக்தி அளிக்கும் மாவுப் பொருள், கொழுப்பு. உடல் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் தேவையான புரதம் மற்றும் தாது உப்புகள், வைட்டமின்கள் தேவை. உணவுப் பொருட்கள் செரிக்கவும். உடலில் ஏற்றுக் கொள்ளப்படவும் நீர் தேவை. உடலில் 20% நீர் குறைவுபட்டால் உயிர் வாழ முடியாது. நீர் சத்துப் பொருள் எனப்படாவிட்டாலும், அது உணவுடன் இன்றியமையாதது ஆகும். இது குறித்து முதலில் விவாதிக்கலாம்.
தண்ணீர்
ஆடுகளுக்குச் சுத்தமான நீர் எப்போதும் அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நலம். முடியாத நிலையில் 2, 3 முறை நீர் வழங்குவது நல்லது. ஆடுகள்தானே எனத் தூய்மையற்ற நீரைக் குடிக்கக் கொடுக்கக் கூடாது. பொதுவாக ஏழைகள் ஊறல் தண்ணீர் என்று புளித்த சமையல் கழிவு நீரைச் சேமித்து வைத்துக் குடிக்கக் கொடுப்பார்கள். இது சிறந்த முறையன்று. அரிசி, பருப்பு அலசிய நீரை உடனடியாகக் கொடுத்து விடுவதே சிறந்தது. மேலும், தூய்மையற்ற நீர் நிலைகளின் நீர் மூலம் தொற்று நோய்கள் பரவவும் வாய்ப்பு உள்ளது. சிறந்த ஆட்டுப் பண்ணை அமைக்க விரும்புபவர்கள், நமது குடிநீர் போன்ற தரமான நீர் ஆடுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆடுகளுக்கு எவ்வளவு நீர் தேவை? இது ஆடுகளின் வகை, வளர்க்கப்படும் முறை, வளர்க்கப்படும் பகுதியின் காலநிலை ஆகிய சூழ்நிலையின்படி மாறுபடும்.
எடுத்துக்காட்டாக, இராஜஸ்தான் பாலைப் பகுதியில் வெள்ளாடுகளுக்கு வாரம் மூன்று முறை மட்டும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்படுகின்றது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் எடுத்த ஓர் ஆய்வின்படி, கடா 136 மி.லி. நீர் ஒரு நாளில் குடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேய்ச்சலுக்கு அனுப்பினால் இவ்வளவு போதாது. ஒரு மலேசிய ஆய்வின்படி, 18 – 20 கிலோ வெள்ளாடு 680 மி.லி. நீர் குடித்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
அதிகப் பால் வழங்கும் வெளிநாட்டு ஆடுகள் தினம் சுமார் 25 லிட்டர் நீர் குடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது சூழ்நிலையில் வெள்ளாடு தனது தேவை அறிந்து தண்ணீர் குடிக்க ஏதுவாக அது குடிக்கும் அளவு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நான் வளர்த்த ஒரு வயது ஆடு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தது. பொதுவாக அது உண்ணும் தீவனத்தில் காய்வு நிலையில் நான்கு மடங்கு நீர் அருந்தும்.
அடுத்து, சத்துப் பொருள்களான மாவுப் பொருள், கொழுப்பு மற்ற உயிரினங்கள் போல் ஆடுகளுக்குத் தேவைப்படும். அத்துடன் அசைபோடும் விலங்கினங்கள் அவற்றிற்குத் தேவையான எரி சக்திப் பொருனை நார்ப் பொருட்களிலிருந்தும் பெறுகின்றன. நார்ப் பொருட்கள் நுண்ணுயிர்களால் தாக்கப்பட்டு, அசிடிக், புரோப்பியோனிக் மற்றும் புயூட்ரிக் அமிலங்கள் பெறப்படுகின்றன. இவை இரத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு உடலுக்குத் தேவையான கொழுப்பு மற்றும் பாலில் உள்ள கொழுப்பு, சர்க்கரைப் பொருளாகவும் மாற்றப்படுகின்றது. ஆகவே பெரு வயிறு திறம்பட வேலை செய்ய வெள்ளாடுகளுக்கு நார்ப் பொருள் நிறைந்த தீவனமும் தேவைப்படுகின்றது. இவ்வாறாக நமது உணவுடன் போட்டியிடாமல் இலை, தழை, புல், பூண்டுகளை உண்டு வெள்ளாடுகளால் வாழ முடிகின்றது.

புரதம்
உடல் வளர்ச்சிக்கும் உடல் உறுப்புகளின் தேய்மானம் சுரப்பிகளின் நொதியம் மற்றும் ஆர்மோன்களுக்கும் பால் உற்பத்திக்கும் புரதம் இன்றியமையாதது. ஆகவே மற்ற உயிரினங்களைப் போன்று வெள்ளாடுகளுக்குப் புரதம் தேவைப்படுகின்றது. ஆனால் அகைபோடும் விலங்கினங்கள் சுத்தப் புரதம் தவிரப் புரதம் சார்ந்த பொருட்களிலிருந்தும் பெருவயிற்று நுண்ணுயிர் மூலமும் புரதம் பெறமுடிகின்றது. ஆகவே மனிதர்களுக்குத் தகுதியற்ற முரட்டுப் புரதங்களிலிருந்து தரமான புரதம் வெள்ளாடுகளால் பெற முடிகின்றது.
45.4 கிலோ எடைக்கு 41 கிராம் புரதம் உடலைப் பேணத் தேவைப்படுகின்றது. அத்துடன் 4.5 லிட்டர் பால் உற்பத்திக்கு 227 கிராம் புரதம் தேவைப்படுகின்றது. இந்த அடிப்படையில் சராசரி ஆட்டிற்குப் புரதத் தேவையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
தாதுஉப்புத் தேவை
வெள்ளாடுகள் பசுக்களைவிட, 50% அதிக உப்பைப் பாலில் சுரக்கின்றன. ஆகவே வெள்ளாடுகளின் உப்புத் தேவை அதிகம். ஆகவே கொடுக்கும் கலப்புத் தீவனத்தில் 1% சாதா உப்பு கொடுக்க வேண்டும். பிற தாது உப்புத் தேவையை நிறைவு செய்யத் தாது உப்புக் கலவையை தீவனத்தில் 2% கலந்து கொடுக்க வேண்டும். தாது உப்புக் கலவையிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ், எலும்பு வளர்ச்சிக்கும் அயோடின் உடல் வளர்ச்சிக்கும், குட்டி வளர்ச்சிக்கும், கோபால்ட் வைட்டமின் உற்பத்திக்கும் பயன்படுகின்றன.
வைட்டமின்கள் தேவை
அசைபோடும் விலங்கினங்களுக்கு மற்ற உயிரினங்களைப் போன்று எல்லாவித வைட்டமின்களும் உணவில் அளிக்கத் தேவை இல்லை. பெரு வயிற்றிலுள்ள நுண்ணுயிர்கள் வெள்ளாடுகளுக்கு வேண்டிய பி.காம்பிளக்ஸ் வைட்டமின்களைத் தயாரித்து விடுகின்றன. மேலும் பெரு வயிற்றுலுள்ள செல்கள் “சி” வைட்டமினை உற்பத்தி செய்து விடுகின்றன.
வெள்ளாடுகள் சூரிய ஒளி மூலம் தோலிலுள்ள கொழுப்புச் சார்ந்த பொருட்களைக் கொண்டு வைட்டமின் “டி” தயாரித்துக் கொள்கின்றன. அத்துடன் வெயிலில் காய்ந்த புல், தழைகள் மூலமும் இவ்வைட்டமினைப் பெற்றுக் கொள்ளுகின்றன.
வெள்ளாட்டுகளுக்கு மிகவும் தேவையான வைட்டமின், வைட்டமின் “ஏ” ஆகும். நன்கு பசுந்தழை, புல் உண்ணும் வெள்ளாடுகள் இச்சத்துகளினால் பாதிக்கப்படுவதில்லை.
சாதாரணமாக வெள்ளாடுகள் எவ்வளவு தீவனம் உண்ணும்? எவ்வகைத் தீவனத்தை எவ்வளவு, எவ்வாறு கொடுக்க வேண்டும்? என்பது குறித்து விவாதிக்கலாம். அதற்கு முன் வெள்ளாடு வளர்ப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது. வெள்ளாடுகளுக்குத் தீவனம் அளிப்பது ஓர் அறிவியல் மட்டுமல்ல. அது ஒரு கலை. ஆகவே இங்குத் தீவனம் அளிப்பது குறித்துத் தோராயமாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆடு வளர்ப்போர் தங்களது திறமையைப் பயன்படுத்தி ஆட்டின் தேவையை அறிந்து தீவனம் அளித்துப் பயன் பெற வேண்டும்.
வெள்ளாடுகளின் தீவனம் தேவை மிக அதிகமாகும். சாதாரணமாக மாட்டினம் தனது உடல் எடையில் 1.5 முதல் 2.0% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும். ஆனால் வெள்ளாடுகள் தனது உடல் எடையில் 2 முதல் 5% தீவனம் ஏற்கும். ஆகவே வெள்ளாடுகள் கடும்பசி கொண்ட விலங்கினமாகக் கொள்ளலாம். வெள்ளாடுகளுக்குச் செம்மறி ஆடுகளைவிட இரு மடங்கு கொண்ட பெரு வயிறு உள்ளது. இதன் காரணமாகவே, வெள்ளாடுகள் பசுந்தழை மற்றும் புல்லை மட்டும் உண்டு வளர்ச்சியடைந்து பாலும் கொடுக்க முடிகின்றது. மேலும், குளிர் நாட்டைச் சேர்ந்த வெள்ளாடுகள் அதிகத் தீவனம் ஏற்கும். வெப்ப நாடுகளில் உள்ள ஆடுகள் குறைவாகவே தீவனம் ஏற்கும். இதனட காரணமாகவே குளிர்ப் பகுதி ஆடுகளுக்கு அகன்ற உடம்பும், வெப்ப நாட்டு ஆடுகள் ஒடுங்கிய உடலமைப்பும் கொண்டுள்ளன.
அடுத்து வெள்ளாடுகளின் சுவை உணர்வு அலாதியானது. வெள்ளாடு தின்னாது ஒதுக்கும் பசுந்தீவனம் சில மட்டுமே. மேலும் ஆடுகளுக்கு ஒரே வகைத் தழையோ, புல்லோ தொடர்ந்து கொடுக்கக் கூடாது. சில வகையான தழைகளைக் கலந்து கொடுப்பதே சத்துக்குறைவைத் தீர்க்கச் சிறந்த வழியாகும். மேலும் புதுவகைத் தீவனங்கள் கொடுக்கும் போது, சிறிது சிறிதாகப் பழக்கப்படுத்திய பின் ஏற்ற அளவு கொடுக்க வேண்டும். பெரு வயிற்றிலுள்ள நுண்ணுயிர்கள், பொதுப்படையாகவே சில இனங்களைச் சார்ந்ததாயினும், அவற்றின் எண்ணிக்கை மற்றும் வகைகள் மாறுபட்ட நிலையில் இருக்கும். அப்பகுதியின் தீவனமும் இம்மாறுபாட்டிற்குக் காரணமாகும்.
வெள்ளாடுகள் தீவனத்தை அதிக அளவில் விரயம் செய்யும் குணமுடையவை. தொட்டியில் மற்றும் கூடையில், தழையைப் போடும் வேளையில் அவற்றை இழுத்துத் தரையில் வீசி உண்ணத் தொடங்கும். ஆனால், தரையில் விழுந்து மிதிபட்ட தீவனத்தை உண்ணாது வீணாக்கும். ஆகவே, தீவனத் தொட்டி அடைப்பு வைப்பது அவசியம். சிறிய அளவில், வளர்க்கும் போது தழையைக் கொட்டகைக்காலில் கட்டி வைக்க வேண்டும். இதனால், தீவனம் வீணாவது தவிர்க்கப்படும்.
மேலும் வெள்ளாடுகளுக்கு மூன்று முதல் ஐந்து முறையாக தீவனத்தைப் பிரித்துப் பல்வேறு வேளையில், கொடுத்தால் அதிகம் வீணாக்காமல் தின்னும். அடுத்த ஒருமுறையாவது, காய்ந்த தழை அல்லது புல் கொடுக்க வேண்டும் இவ்வாறாக வெள்ளாடுகளுக்குத் தீவனம் மூன்று வகையில் வழங்க வேண்டும். (1) பசுந்தழை மற்றும் புல் (2) காய்ந்த தழை மற்றும் புல் (3) கலப்புத் தீவனம் ஆகிய மூன்று வகையாக வழங்கலாம். பசுந்தழை மற்றும் புல் குறித்துத் தனியாக விவாதிக்கலாம்.
உலர்ந்த தீவனம்
நரிப்பயறு, சணப்பு, புல், குதிரை மசால், வேலி மசால் போன்றவற்றைக் காய வைத்துத் தீவனமாக அளிக்கலாம். ஆனால், பசுந்தீவனப்பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் இதை எல்லாராலும் நடைமுறைப்படுத்த முடியாது. நிறையப் பசுந்தீவனம் உற்பத்தி செய்பவர்கள் இதனைச் செய்யலாம். பொதுவாகப் பிற விவசாய உப பொருட்கள், உதிரும் இலை, சருகுகளைத் தீவனமாக அளிப்பதே சிறந்தது.
உளுந்துச் செடி மற்றும் தட்டைப்பயிற்றுச் செடி
நெல் அறுவடைக்குப்பின், தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிலும், உளுந்து விதைக்கப்படுகின்றது. பல இடங்களில் , உளுந்து நெற்றுகள் பிரிக்கப்பட்டு, அதன் செடிகள், நன்கு காயவைத்து வைக்கோல் போரின் இடையே சேமித்து வைக்கப்படுகின்றன. இது சிறந்த முறை, ஆனால், தஞ்சை போன்ற இடங்களில் உளுந்துச் செடி மொத்தமாகப் பிடுங்கப்பட்டு, உளுந்தைப் பிரித்தெடுக்க மாடுகட்டிப் போரடிக்கப்படுன்றது. இதன் காரணமாகச் சத்துமிகு இலைகள் உதிர்ந்து பொடியாகி விடுகின்றன. சுற்றுப் புறங்களில் தூசியை உண்டு பண்ணிச் சூழல் கேட்டையும் ஏற்படுத்துகின்றன. ஆகவே யாவரும் உளுந்து நேற்றைப் பிரித்து எடுத்துச் செடியை நன்கு காயவைத்துச் சேமித்து, ஆடு மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். முக்கியக் குறிப்பு நன்கு உலர வைக்காத செடிகளில் பூஞ்சைக் காளான் தாக்குதல் ஏற்பட்டுத் தீவனத்திற்குப் பயன்படாமல் போய்விடும்.
மழைக்காலங்களில், புன்செய் மற்றும் மேட்டு நிலங்களில் தட்டைப் பயறு பயிரிடப்படுகின்றது. இதன் கொடியையும், பயற்றின் நெற்றைப் பிரித்தபின் காயவைத்துச் சேமித்து, ஆடு மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம். அத்துடன் உறுந்து, பயறு நெற்றுகளின் தோலையும் ஆடுகள் விரும்பி உண்ணும்.
இலைச் சருகுகள்
மா, பலா, மரங்களில் உதிர்ந்த சருகுகளை வெள்ளாடுகள் பல விரும்பி உண்ணும். ஆகவே இம்மரங்களின் உதிர்ந்த இலைகளை எரித்து வீணாக்கலாம், சாமானிய ஆடு வளர்ப்போருக்குக் கிடைக்குமாறு செய்வது நல்லது.
பனங்காய்
பனங்காய் சிறிதாகச் சீவப்பட்ட நுங்கும் வெள்ளாடுகளுக்குச் சிறந்த தீவனமாகின்றன.
பலாத்தோல் மற்றும் கொட்டை
பலாப்பழத் தோல் சிறிதாக நறுக்கப்பட்டு, வெள்ளாடுகளுக்குச் சிறந்த தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றார்கள். பொதுவாக வாழைப்பழம் விற்கும் பெட்டிக் கடைக்காரர்கள் வெள்ளாடு வளர்ப்பார்கள். பொதுவாகவே பழக் கடையில் பழத் தோலைப் போடக் கூடை ஒன்று வைத்திருப்பார்கள். வெள்ளாடுகள் வாழைப்பழத்தோலை விரும்பி உண்ணும்.
பண அடிப்படையில் தீவனத்தின் மதிப்பு
ஒவ்வொரு தானியமும் வெள்ளாட்டுத் தீவனமும் அவற்றின் விளைச்சல் அளவு, வெளியிடங்களிலிருந்து சந்தைக்கு வந்தது போன்ற காரணங்களினால், அவற்றின் விலையில் மாறுபடும். ஆனால், பண்ணையாளர்கள் தீவனங்களில் அடங்கிய புரதம் மற்றும் இதர சத்துகக்கள் அடிப்படையில் தீவனங்களுக்கு மதிப்பு அளித்துத் தீவனங்களை வாங்க வேண்டும். சந்தையில் அதிக வரத்துக் காரணமாக ஒரு சத்தான தீவனம் மலிவான விலையில் கிடைக்கலாம். அதே போல் சந்தை வரத்துக் குறைவு காரணமாகச் சத்து குறைந்த வேறொரு தீவனம் அதிக விலைக்கு விற்கப்படலாம். ஆகவே, சத்து அடிப்படையில் தீவனங்களை வாங்குவதே ஆதாயமான செய்கையாகும். வெள்ளாடுகளின் சுவை உணர்ச்சி மனிதர்களைப் போல் சிறப்பாக இல்லை. அவை இனிப்பு, புளிப்பு, உப்பு, சுவைகளை விரும்பும். கசப்புத் தன்மையை வெள்ளாடுகள் மற்ற கால்நடைகளை விட நன்கு ஏற்கும். மேலும் நம்மைப் போல் ஆடுகள் பல்வேறு சுவையை எண்ணி ஒருவிதமான தீவனத்தை மறுப்பதில்லை. இவற்றை அறிந்து ஏற்றிபடி வெள்ளாடுகளுக்குத் தீவனம் அளிக்க வேண்டும்.
துவரை மற்றும் உளுந்துப் பொட்டு
துவரம் பருப்பு, மற்றும் உளுந்தும் பருப்பு தயாரிக்கும் ஆலைகளிலிருந்து பொட்டு உப பொருளாகக் கிடைக்கின்றது. இதில் உமியுடன், குருத்து, நொறுங்கிய பருப்புகள் இருக்கும். இதன் சிறந்த வாசனை வெள்ளாடுகளைக் கலப்புத் தீவனத்தைத் தின்னத் தூண்டும்.

No comments:

Post a Comment