Saturday, October 4, 2014

சினை மாடுகள் பராமரிப்பு


சினை மாடுகள் பராமரிப்பு என்பது மாடுகளின் சினைத்தருண அறிகுறிகளைக் கண்டு செயற்கைமுறை கருவூட்டல் செய்வதில்இருந்தே ஆரம்பமாகிறது.

சினையை உறுதிசெய்து கொள்ளும்
முறைகள்:

ஆசனவாயினுள் கையை செலுத்தி கருப்பையைப் பரிசோதனை செய்து உறுதி செய்தல்; ரத்தத்தில் அல்லது பாலில் உள்ள கணநீரான புரொஜஸ்டிரானை அறிவதன் மூலம் உறுதி செய்தல்; லேப்பராஸ்கோப் என்ற கருவியின் மூலம் உறுதிசெய்தல்; ஸ்கேன் மூலமாகவும் சினை உறுதி செய்தல்; சினை மாடுகளுக்கு கருவில் வளர்கின்ற கன்றின் வளர்ச்சிக்காக ஏழுமாத சினை முதல் உடல் பராமரிப்பும் பால் கொடுத்துக் கொண்டிருந்தால் அதற்கு கொடுக்கப்படும் தீவனக் கலவையுடன் 1 - ஒன்றரை கி.கிராம் தீவனமும் அதிகமாக கொடுத்தல் வேண்டும். சினையுற்ற மாடுகள் 7 மாதச்சினை வரை பால் கறப்பதால், சரியான, போதுமான தீவனம் அளிக்கப்பட வேண்டும். இப்பொழுது கருவளர்ச்சி மெதுவாகவே இருப்பதால் கருவளர்ச்சிக்காக அதிகமாகத் தீவனமும் தேவைப்படுவதில்லை. ஆனால் பால் வற்றியபின் கன்று ஈனும் வரை உள்ள இரண்டு அரை மாதச் சினைக் காலத்தில்தான் கரு வேகமாக வளர்கின்றது. ஏறக்குறைய மொத்த வளர்ச்சியில் 80 சதவீத வளர்ச்சி கடைசி இரண்டரை மாதத்தில் தான் நடைபெறு கின்றது. ஆதலின் கரு வளர்ச்சிக்கு அதிகமாக தீவனம் தேவைப்படுகின்றது. மேலும் அது முந்தைய கறவையில் இழந்த உடல் திசுக்களை புதுப்பித்துக் கொள்ள உதவுவதோடு கிடேரிகளில் எலும்பு வளர்ச்சி மாற்றத்திற்கும் இது மிகவும் அவசியமாகும்.
அவரையினத் தீவனம் இரண்டு பங்கு, புல்லினத் தீவனம் மூன்று பங்கு என்ற விகதத்தில் கலந்து மாடு தின்னும் அளவு அல்லது குறைந்தது நாளைக்கு ஒரு மாட்டுக்கு 25 கிலோ பசுந்தீவனம் அளிப்பதோடு அடர் தீவனத்தையும் அளிக்க வேண்டும். கடைசி 10 நாட்களில் கொடுக்கும் தீவனம் மலமிளக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒன்றரை கிலோ கோதுமைத்தவிடு கொடுப்பது நல்லது. அதிக கொள்ளளவு கொண்ட நார் தீவனங்களை அதிகமாகக் கொடுக்கக்கூடாது. குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுப்பது நல்லது. கன்று ஈனுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் 450 கிராம் எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி இஞ்சித்தூள் ஆகியவற்றை முக்கால் லிட்டர் தண்ணீரில் கலந்து உள்ளுக்குக் கொடுப்பது நல்லது.


சினை மாடுகளுக்குத் தேவைப்படும் சிறப்பான கவனிப்புகள்:

சினை ஊசி போட்ட நாளுடன் 280 நாளைக் கூட்டியோ அல்லது அட்டவணையைக் கொண்டோ தோராயமாக கன்று ஈனும் நாளை கண்டு அறிதல் வேண்டும். கன்று ஈனும் காலம் நெருங்கும்போது, சினை மாடுகளை மற்ற மாடுகளிலிருந்து பிரித்து தனியாகத் தூய்மையான காற்றோட்டமான, நல்ல வைக்கோல் பரப்பப்பட்ட கொட்டகையில் கட்டவேண்டும். பெரிய பண்ணையில் 12 ச.மீ. இடம் கொண்ட ஈனுதல் அறைகளைத் தனியாக கட்டி இதற்காகப் பயன்படுத்தலாம். தரையில் வைக்கோல் பரப்பி சினை மாட்டிற்கும் கன்றிற்கும் சேதம் ஏற்படாமல் அமைக்க வேண்டும். கருச்சிதைவு ஏற்பட்ட மாடுகளோடு கலவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாடுகள் அதிக தூரம் நடப்பதும் விரட்டப்படுவதும் பயமுறுத்தப் படுவதும், மேடு பள்ளம் நிறைந்த பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்புதலும் தவிர்க்கப்படல் வேண்டும். சினை மாடுகள் மேய்ச்சலுக்கு மேடு பள்ளத்தில் அனுப்பினால் கர்ப்பப்பை சுழற்சி ஏற்படும். சமமான மேய்ச்சல் பகுதியில் மேய்தலே போதுமான உடற் பயிற்சியை அளிக்கும். தனியாக கடுமையான உடற்பயிற்சி தேவையில்லை.
அதிக வெப்பம், அதிக குளிர் இவைகளிலிருந்து சினை மாடுகள் காக்கப்பட வேண்டும். கடைசி இரண்டு மாதங்களில் மாட்டின் எடை 60-80 கிலோ கூடி விலா எலும்புகள் தெரியா வண்ணம் இருக்க வேண்டும். கடைசி இரண்டு மாதங்களில் கலப்பினத் தீவனக் கலவையோடு தாது உப்புக் கலவையையும் சேர்த்து அளிக்க வேண்டும். மாடுகள் 7 மாதச்சினை காலம் நிறைவுற்ற பின்னும் தொடர்ந்து பால் கரந்து கொண்டிருக்குமானால் அவற்றின் கறவை நேரத்தைத் தள்ளிப்போடுதல், தீவனம், தண்ணீர் இவற்றைக் குறைத்தல் போன்றவைகளைக் கையாண்டு கறவையை வற்றச் செய்வது அவசியம். முந்தைய ஈற்றின்போது பால்ச்சுரம் வந்த மாடுகளுக்கு அவற்றைத் தடுக்கும் நோக்கில் கடைசி காலச்சினையில் கால்சியம் ஊசிகளை போடக்கூடாது.

No comments:

Post a Comment